Tuesday, April 22, 2014

பல்லாண்டு பல்லாண்டு-7:

பல்லாண்டு பல்லாண்டு-7:
சாப்ளினின் ‘லைம் லைட்’...
ஜே.கே. கண்களில் ஈரம்   
பி.ச.குப்புசாமி
        ருமுறை அவர் திருப்பத்தூருக்கு வந்து சென்ற பின்பு, நாங்கள் பலமுறை சென்னைக்குச் சென்று அவரைச் சந்தித்து வரும் படலங்கள் ஆரம்பமாயின.
          அப்பொழுதெல்லாம் நாங்கள் பெரும்பாலும் எழும்பூர் ஹை ரோட்டுக்குச் சென்று, அங்கே ஜெயகாந்தனின் வீட்டுக்கு மூன்று நான்கு கட்டிடங்கள் முன் கூட்டியே இருந்த கோவர்த்தன் சிமெண்ட் ஏஜென்ஸியில் அதிகாலையிலேயே போய் நின்று, தந்த சுத்தி ஸ்நானாதிய காரியங்களைச் செய்து கொள்வோம். அங்கு மேனேஜராயிருந்த, ஜெயகாந்தனையும் நன்று அறிந்த திரு.ஒய்.ஆர்.கே.சர்மா அவர்களால் எங்களுக்கு இத்தகைய பல சௌகரியங்கள் அமைந்தன.
          அதற்கப்புறம் ஜெயகாந்தனைப் பயபக்தியோடு சென்று பார்ப்போம். இந்தப் பயபக்தியில் என்ன ஒரு விசேஷம் என்றால், அது பல்லாண்டுகளுக்குப் பிறகும் இப்போதுதான் முதல் தடவை என்பது போல் அப்படியே ஒரு பதத்தில் இருப்பதுதான்.
          அவர் எங்களை வரவேற்று, அந்த வீட்டின் முன் பகுதிக்கு அழைத்து வருவார். அங்கே சுமார் மூன்றடி அகலத்துக்கு வராந்தா மாதிரி வழி இருக்கும். அதன் இருபுறமும் ஒன்றரை சாண் அகலமுள்ள ஒட்டுத் திண்ணைகள் உண்டு. எதிர்த்திண்ணையில் எங்களை உட்கார வைத்து விட்டு ஒரு திண்ணையில் தான் உட்கார்ந்து கொள்வார்.
          அப்படி ஓர் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டுதான் அவர் தமிழ் இலக்கிய உலகின் மிக உயரிய கோபுரங்களைக் கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்.
          வீட்டுக்கு எதிரே, அகலம் குறைந்த அந்தச் சாலையின் மறு புறத்தே காய்கறிக் கூடைக்காரிகளின் வரிசை ஒன்று இருந்தது. அவர்களையெல்லாம் எங்களுக்குக் காட்டினார். அவர்களுக்கிடையே சண்டை மூண்டுவிடும் போது அவர்களின் பாஷை அடைகிற உக்கிரத்தையெல்லாம் அவர் கவனிப்பாராம். அவர்களிடம் இருந்தும் நான் பாஷை கற்றேன்என்றார். அந்தக் காய்கறிக் கூடைக்காரிகள் எல்லாம் கூட ஏதோ அதிசயம் போல் தோன்றுமளவுக்கு அவர் இந்த வாழ்க்கையை எங்களுக்கு விண்டு காட்டினார்.
          சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பங்கஜா லாட்ஜ்என்று பெயர் கொண்டு நிற்கிற ஒரு சிறு ஹோட்டலுக்குப் போய் அங்கே காபி சாப்பிடுவோம்.
          ஒரு காலத்தில் சென்னையில் ஒரு ரூபாய் இருந்தால் என்னென்ன செய்யலாம் என்று பட்டியல் போட்டுச் சொல்லுவார். பிராட்வேயில் ஆரிய பவனில் ஒரு தோசை, வாசற்கடையிலேயே ஒரு பீடா, இரண்டு சிகரெட்டுகள், தீப்பெட்டி, ஏன் ஒரு வாழைப்பழமும் கூட என்று இப்படியெல்லாம் செலவழித்தும் காசு கொஞ்சம் எஞ்சி நிற்குமாம்.
          மறுபடியும் வந்து திண்ணையிலேயே உட்காருவோம். அந்திவேளை என்றால் எக்மோர் ஹைரோடின் முனைக்குப் போய், இன்று உலகப் பல்கலைக் கழக நிறுவனமாக நிற்கும் கட்டிடங்களைக் கட்டுவதற்காகக் கொட்டி வைத்திருக்கும் சுகமான மணல் பீடத்தின் மீது அமர்ந்து பேசுவோம்.
          இதற்கிடையில் 1961 ஆம் ஆண்டு நானும் நண்பர் வையவனும் அரசினர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தோம். அவருக்குக் காட்பாடி, எனக்குப் போளூர்.
          ஆசிரியப் பயிற்சியின் போது ஓர் ஆண்டுக்கு ஒரு மாதம் மெடிக்கல் லீவு தருவார்கள். அப்பொழுதும், காலாண்டு அரையாண்டு விடுமுறை நாட்களிலும் முடிந்த போது நாங்கள் சென்னைக்குச் செல்வதுண்டு.
          காட்பாடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்குத் திடீரென்று ஜெயகாந்தனே ஒரு நாள் வந்து நின்ற விந்தைகளெல்லாம் நிகழ்ந்த காலம் அது. அந்தப் பயிற்சிப் பள்ளியில் வையவனைத் தவிர்த்து இன்னொரு ஆத்மாவும் எங்களுக்காகக் காத்துக் கிடந்தது. அவர்தான், வெள்ளக்குட்டையைச் சேர்ந்தவரும் எங்கள் அரும்பேறுகளில் ஒருவருமான நண்பர் ஆறுமுகம்.
          நான் மட்டும் ஒருநாள் தனியாகச் சென்னை சென்று என் சிறிய பாட்டனார் வீட்டில் தங்கிக் கொண்டு, ஜெயகாந்தனைச் சென்று பார்த்தேன். சென்னையில் அதைவிட வேறு என்ன பெரிய லட்சியம் நமக்கு!
          அன்று ஞாயிற்றுக்கிழமையானதால், காலையில் ஒரு செய்தித்தாளை ஆய்ந்து கண்டுபிடித்து, காஸினோ தியேட்டரில் காலைக்காட்சியாகத் திரையிடப்பட்ட சார்லி சாப்ளினின் லைம் லைட்படத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். படத்தின் இடையே, சார்லி சாப்ளின் ஒரு ரோஜாப்பூவை எடுத்துப் பார்த்து அதை இரக்கமில்லாமல் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிற காட்சியின் போது, என்புறம் மெள்ளச் சாய்ந்து, “அந்த ரோஜாப்பூ கலையின் உருவகம்”! என்றார்.
          இன்னும் கொஞ்சம் பொறுத்து, படத்தை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று பார்க்கும் ஆவலில் நான் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்த போது ஒரு முறை, அந்தத் திரையின் மெல்லிய இருளில் அவர் கண்களின் ஈரம் மட்டும் பளபளப்பாய்த் தெரிந்தது.
          அப்புறம் ஒரு முறை பிராட்வே பக்கம் போன போது, “தாம்பத்யம்கதையின் களன் ஆகிய அந்த லோன்ஸ்குயர் பார்க்கைக் காட்டினார்.
          நான் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே கல்கியில் என்னுடைய பேசாத உறவுஎன்று ஒரு கதை பிரசுரமானது. அதன் பிறகு ஒரு முறை நான் ஜெயகாந்தனைப் பார்க்கச் சென்ற போது, திரைக்குப் பின்னால் படுத்திருந்த அவர் அப்படியே என்னைக்  கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டார். அவ்வளவு சௌஜன்யமாகி விட்டது எங்கள் நட்பு.
          படுத்திருந்தவாறே அவர், “உங்க பேசாத உறவு கதை நல்லா இருந்ததுஎன்று சொன்னார். நான் என்னமோ உடம்பு கூசுவது போல் நெளிந்தேன். ஆனா உங்ககிட்ட தாகூரின் பாதிப்பு அதிகமா இருக்குது. யார் பாதிப்பும் நம்ம கிட்ட இருக்கக் கூடாது. நம்மது தனியா இருக்கணும்!” என்றும் அவர் சொன்னார்.
          அவர் சொன்னதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். உண்மையில் நான் பாரதிக்கு முன்பாகவே தாகூரில்தான் அதிகம் தோய்ந்திருந்தேன். பாரதியிடம் வராமலேயே தாகூரிடம் போவது என்பது ஒரு தமிழ் இலக்கிய மாணாக்கன் செய்யும் பெரும்பிழை அல்லவா? எப்படியோ, வெகு சீக்கிரமாகவே பாரதியின் சொரூபம் எனக்குத் தெரிந்து விட்டது. அந்த அகண்ட ஜோதியில் ஐக்கியமான போது, தாகூரை ரசிக்கிற பழக்கம் கொஞ்சங் கொஞ்சமாக மங்கிப் போயிற்று. ஆனால் பாரதியார் மொழி பெயர்த்த தாகூர் சிறுகதைகளைப் படித்தால் இருவரையும் பிடித்துப் போகும்.
          1961 - 1963 ஆகிய இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் கழிந்தன. நாங்கள் சந்திப்பதற்கு மாதக் கணக்கில் இடைவெளி விழும் காலமாக இருந்தது அது.
          சந்தித்தபோது நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்போம்.
          விக்டோரியா ஹாலில் இருந்த ஓவியங்களை ஒரு நாள் பார்வையிட்டோம். ரவிவர்மாவின் சகுந்தலைஓவியம் அவருக்கும் பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.
          பழைய கடலையும் அவ்வப்பொழுது சென்று குசலம் விசாரிப்பதுண்டு.
          ஜெயகாந்தன் ஒவ்வொரு கதையாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பத்திரிகையும் அவரிடம் விரும்பிக் கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தன. தமிழ் இலக்கியக் கடற்கரையில் ஒவ்வொரு கதையும் ஒரு பெரிய அலைபோல் வந்து மோதின.
          நாங்கள் எங்கள் ஆசிரியப் பயிற்சிக் காலத்தை முடித்துவிட்டு, உத்தியோகம் பார்க்கும் காலத்தில் புகுந்தோம்!

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP