Sunday, January 31, 2010

மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பதில் மகத்தான பங்கு வகித்தவர் ஜோதிபாசு



[சரித்திரத்தை உருவாக்குகிறவர்கள் மக்கள்தான். ஆனால், சரித்திரத்தில் தனிநபர் வகிக்கும் பாத்திரம், குறிப்பாக அரசியல் துணிவும், சித்தாந்த வலிமையும், தேசபக்தியும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களின் பங்களிப்பு அலட்சியப்படுத்த முடியாதது. அந்த வகையில், இந்தியாவில் மதச்சார்பின்மையைக் கட்டிக்காப்பதில், மிக இக்கட்டான காலகட்டத்தில் பெரும்பணியாற்றி அண்மையில் மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜோதிபாசு பற்றிய தன் கருத்தை இங்கே வெளிப்படுத்துகிறார் பத்திரிகையாளர் கரிமலா சுப்ரமணியம் அவர்கள்.]
=====================================================
இந்தியாவின் மிகவுயர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜோதிபாசு ஆற்றிய அரும்பணிகளுக்காக அவரது தாய் ஸ்தாபனமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ம், மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் களும் புகழாரம் சூடியுள்ளனர்.

ஆனால், நாட்டில் மதச்சார்பின்மையைக் கட்டிக் காப்பதில் அவர் எடுத்த சமரசமற்ற நிலையும், அந்த நோக்கத்தை அடைவதற்காக அவர் மேற்கொண்ட எதார்த்தமான அரசியல் உடன்பாடுகளும், எல்லாவற்றுக்கும் மேலாக முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசைத் தோற்றுவிப்பதில் அவரது பங்களிப்பும், பாசுவை சராசரி இந்திய மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கச் செய்தன.

தேசப் பிரிவினையின்போது ரத்தக் களரியைச் சந்தித்த மேற்கு வங்க மாநிலத்தை, 1984-இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு நாட்டின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராகப் படுகொலைகள் நடத்தப் பட்ட நேரத்திலும், சமூக அமைதி மற்றும் சகவாழ்விற்கான பாலைவனச் சோலையாக மாற்றிய பெருமைக்குரிய அவரால், நாட்டில் ஏற்பட்ட நிகழ்வுகளை வாய்மூடி மவுனியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா?

நாடு முழுவதும் நீரூபூத்த நெருப்பாக மதவெறி அரசியல் அணிசேர்க்கைகள் 1990களில் தோன்றி, அதன் உச்சகட்டமாக பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நேரத்திலும், 2001-இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் குண்டுகளால் தரைமட்டமாக்கப் பட்டதன் பின்னணியில் பாசிச மற்றும் நவீன பழமைவாத சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் விளைவாக அது மேலும் பற்றிப்பரவி, குஜராத்தில், நரேந்திர மோடி அரசின் சார்பில் நிகழ்த்தப்பட்ட வகுப்புவாதக் கொடூரப் படுகொலைகளில் அது எதிரொலித்த போதும் ஜோதிபாசு அவ்வாறு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, பாரதீய ஜன சங்கத்தின் இன்றைய அவதாரமான பாரதீய ஜனதாக் கட்சி, 1996 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமில்லாத அளவுக்கு 160 இடங்களைப் பெற்றுத் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. சாதாரண பெரும்பான்மையுடன் அரசு அமைக்க மேலும் 100 இடங்களுக்குமேல் தேவைப்பட்ட போதிலும், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையில் முயன்று 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் நீடித்தது.

ஆனால், அதிதீவிர வலதுசாரிசக்திகளின் அரசியல் முன்னேற்றத்திற்கு பதிலடியாக, அந்த சிறிய கட்சிகள் ஐக்கிய முன்னணியின்கீழ் அணிசேர்ந்து, அப்போது ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கான முனைப்புடன், அந்தக் கூட்டணி அரசையும், தேசத்தையும் வழநடத்த வாருங்கள் என ஜோதிபாசுவுக்கு அழைப்பு விடுத்தன. அந்த அரசில் நேரிடையாகப் பங்கேற்பதில்லை என்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் நிலைபாட்டால், அந்த முயற்சி ஈடேறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.


தனது கட்சி, ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகிப்பதில்லை என்று எடுத்த முடிவு ஒரு "சரித்திரத் தவறு" எனத் தனக்கேஉரிய அச்சமற்ற பாணியில் 1997-இல் அறிவித்ததன் மூலம், அகில இந்திய அளவில் சலனத்தை ஏற்படுத்திவிட்டார் ஜோதிபாசு. தீர்க்க தரிசனமாக அவர் செய்த துயரப் பிரகடனம் மெய்யாகப் போகிறது என்பதை மிகச் சிலரே அனுமானித்திருக்க முடியும்: உதயமான இரண்டு ஆண்டுகளிலேயே அந்த நடுக்கம் கண்ட கூட்டணியாட்சி முடிவுக்கு வந்தது; 1998 தேர்தலுக்குப் பின், பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக அணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது; ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த பல கட்சிகள், சித்தாந்த ரீதியில் இல்லாவிட்டாலும், அரசியல் ரீதியாக பாரதீய ஜனதாக் கட்சியின் திட்டத்திற்குத் துணைபோக உறுதியளித்தன.


பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தியவாறு, "சரித்திரத் தவறு" எனும் பாசுவின் பிரகடனம், காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் சமதூரத்தில் விலகி நிற்பது என்கிற நிலை சரியானதுதானா என்பதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கக் காரணமாயிற்று. 1997-க்குப்பின், இது போன்ற மாற்றம் தேவை எனும் கருத்தை பாசுவே இரண்டுமுறை வெளிப்படுத்தினார். இதில் முதலாவது, 1998 நவம்பர் 13-ஆம் நாள், 'இந்தியாவும், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சவால்களும்' என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய 30-வது ஜவகர்லால் நேரு நினைவுப் பேருரை. பெரும்பான்மை மதத்தினரின் பெயரால் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை மற்றும் கொடூரத்தாக்குதல் குறித்து உரையின் தொடக்கத்தில் கவலை தெரிவிக்கும் அவர், இந்த விஷத்தை முறிப்பதற்கு, தற்போதுள்ள அரசியல் உறவுநிலையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார்.

அவர் தனது உரையில், "1980-களிலிருந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் சரியான எண்ணம் கொண்ட அனைத்து சக்திகளுக்கும் பெருங்கவலை அளிப்பதாக உள்ளன. 1992-இல் மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட வெறுத்தொதுக்கத்தக்க காரியமான பாபர் மசூதி இடிப்பும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களும் இந்தியாவின் மாண்புக்கு மாசு ஏற்படுத்திவிட்டன. பா.ஜ.க.வினால் தலைமை தாங்கப்பட்ட அரசானது, மெய்யான மதசார்பின்மையைக் காப்பாற்றப்போவதாகப் பிரகடனம் செய்துள்ளபோதிலும், உண்மையில் அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட மதசார்பின்மைக் கருத்தை மாற்றுவதற்கான அறைகூவலாகும். மதசார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதித்தல் எனும் பொருள்கொண்டது; ஆனால், பா.ஜ.க.வின் செயல்பாடுகள், மதசார்பின்மையின் அடிப்படைக் கோட்பாடுகளை அப்பட்டமாக மீறுபவையாகும். இந்தியாவில் நீண்டகாலமாகப் போற்றிப் பாதுகாத்துவரும் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், சகிப்புத்தன்மை ஆகிய மரபுகளைக் குலைக்கும் விதத்தில் வகுப்புவாத, செக்டேரியன் அரசியல் போக்கு அச்சுறுத்திவருவது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இந்து மதத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது பா.ஜ.க. இந்து மதபோதகர்கள், பிற மதங்களின்பால் வெறுப்பு கொள்ளவதையோ, அவர்களது வழிபாட்டுத் தலங்களை நிர்மூலமாக்குவதையோ ஆதரித்ததில்லை" என்று குறிப்பிடுகிறார்.

மேலும், "சங்பரிவார் அமைப்புகள் நெடுங்காலமாகவே முஸ்லிம்கள் மீது கோபக்கனலைக் கக்கிவருகின்றன; அண்மைக் காலமாக அவை கிறித்துவ மதத்தினர் மீதும் தமது ஆத்திரத்தைத் திருப்பியுள்ளன. இத்தகைய செயல்கள் எந்த ஒரு நாகரிகமான சமுதாயத்தின் நியதிகளுக்கும் உட்படாதவை. ரவீந்திர நாத் தாகூரால் போற்றிப் புகழப்பட்ட 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் லட்சியத்தை புறந்தள்ளி, அந்த இடத்தில், இந்து தேசியவாதம் என்கிற போலியான ஒரு கருத்தைத் திணிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. இந்த நடவடிக்கையானது, நிச்சயம் இந்திய ஒற்றுமையைத் தகர்த்துப் பொடியாக்கிவிடும்" என்றும் கூறுகிறார்.

அவரது உரையில் மிகவும் முக்கியமான பகுதி இதுதான்: "இந்தியா ஒரு தேசமாக நிலைத்திருக்க வேண்டுமானால், செக்டேரியன் அரசியலை நாம் முழுமூச்சுடன் எதிர்கொண்டு முறியடித்தேயாக வேண்டும். அரசியல் களம் மென்மேலும் கூர்மையாகப் பிளவுபடுகின்ற இந்த சூழலில், பழைய உறவுநிலைகளில் தீவிரமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன; புதியததோர் கருத்தொற்றுமையும் உருவாகிக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சிகளாக இருந்தாலும், மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் அவை மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், முக்கியமான கொள்கைகள் மற்றும் பிரச்சனைகளில் முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்."

இந்த விஷயத்தில் அவர் கொண்டிருந்த கவலைகள், 2002 மே மாதம் 18-ஆம் தேதி அவர் நிகழ்த்திய ஏழாவது ஜி.வி. மாவ்லங்கர் நினைவுப் பேருரையிலும் எதிரொலித்தன. "எனக்கு வருத்தமாகவும், அவமானமாகவும் இருக்கிறது, கோபம்கூட வருகிறது; ஆனால் இருட்டு சக்திகளால் வீழ்த்தப்படுவதற்கு நான் உடன்பட மறுக்கிறேன். கோத்ராவில், சில குற்றவாளிகளால், கரசேவகர்களின்மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதலையடுத்து, மாநில பா.ஜ.க. அரசின் துணையுடனும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஒப்புதலுடனும் முஸ்லிம் மக்கள் அனைவரின்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடுமுழுதும் கருத்தொற்றுமை ஏற்பட்டுவருவது வரவேற்கத்தக்கதாகும். ஜனநாயகமும் நாகரிகமும் நிலைக்கும்" என்று அவர் தன் உரையில் குறிப்பிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகள், முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு அமைக்க வழிவகுத்ததில் வியப்பொன்றுமில்லை. தற்போதுள்ள இரண்டாம் ஐ.மு.மு. அரசுக்கு இடதுசாரிகளின் சித்தாந்த ஆதரவும் இல்லை; குறைந்தபட்சப் பொதுத்திட்டமும் இல்லை. அதிதீவிர வலதுசாரிகள் சந்தித்துவரும் அரசியல்/தேர்தல் சரிவுகளைத்தான் (சமூக-கலாசார வீழ்ச்சியல்ல) மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியினை மத்தியத்துவ சக்திகள் மட்டுமே செய்து முடிக்க இயலும் என்று எதிர்பார்ப்பது மிகவும் சாத்தியமில்லாத விஷயமாகும். இந்த வகையில், தோழர் ஜோதிபாசுவையும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் நாம் இழந்து நிற்கிறோம்!

(cartoon/ courtesy: THE HINDU)


Read more...

Friday, January 29, 2010

ஜே. கே.




ஜெயகாந்தன் விழா:

"மனதிற்குப் பிடித்த இரண்டு சிறுகதைகள்"
-எஸ்.ராமகிருஷ்ணன்-




ன்று சென்னைச் சங்கமத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற தமிழ் சங்கம விழாவில் ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். நிகழ்விற்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். மேடையில் அவரது அருகாமையில் அமர்ந்திருந்தது மிக சந்தோஷமாக இருந்தது.

ஜெயகாந்தன் இன்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அந்த மௌனமான அவதானிப்பு மற்றும் பேச்சை கூர்ந்து கேட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. காலை அமர்வு என்பதால் அதிக கூட்டமில்லை.நூறு பேருக்கும் குறைவாகவே இருக்ககூடும். ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி பேசுவதற்காக நான் அவரது இரண்டு கதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன்.

இரண்டு குழந்தைகள் என்ற அவரது கதை. பஞ்சம் பிழைப்பதற்காக ராமநாதபுரத்திலிருந்து தஞ்சை பூமிக்கு வந்த ஒரு பெண் மற்றும் அவளது குழந்தையின் கதை. சிவப்பி என்ற பெண் பஞ்சகாலத்தில் தஞ்சை பகுதி கிராமத்திற்கு வந்து கடுமையாக உழைக்கிறாள். அவளுக்கு நாலைந்து வயதில் ஒரு பையன். அந்த பையனை எப்போதும் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டே அலைகிறாள்.

தினசரி ஒரு ஐயர் வீட்டு மதிய நேரம் வடித்த கஞ்சி வாங்கி குடிப்பது அவளது வழக்கம். அந்த வீட்டின் ஐயருக்கு அவளை பிடிப்பதேயில்லை. அவளுக்கு ஊற்றப்படும் கஞ்சியில் ஒரு பருக்கை தவறிவிழுந்தவிட்டால் கூட அவர் கத்துகிறார். வெறும்கஞ்சியை மட்டுமே குடித்து அவள் எவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறாள் பாரு என்று சொல்லி காட்டுகிறார். அத்துடன் இனிமேல் சாதத்தை வடிக்காதே பொங்கிவிடு என்று ஆலோசனை வேறு சொல்கிறார்.

சிவப்பி கடுமையான உழைப்பாளி. ஒரு நாள் ஐயர் வீட்டில் விருந்து நடக்கிறது. பசியில் கஞ்சிக்காக காத்திருக்கிறாள் சிவப்பி. விருந்தில் அவளை கவனிக்கவேயில்லை. பிறகு மாமி அவளை அழைத்து கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்ற சொல்கிறாள். அவள் மாங்குமாங்கென வேலை செய்கிறாள். அவளது மகன் வெளியே உட்கார்ந்து பசியோடு வீட்டையே பார்த்து கொண்டிருக்கிறான். விருந்து சாப்பிட்டு முடித்த ஐயரின் பேத்தி வெளியே வந்து காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறாள்.

அந்த சிறுமிக்கு இந்த வேலைக்காரியின் மகனை விளையாட்டு பொம்மை போல காட்டி கேலி செய்கிறார் ஐயர். அவளுக்கு அழுகை அடங்கவில்லை. அந்த பிள்ளையை பார்த்து வேலைக்காரி மகன் சிரிக்கவே அவருக்கு ஆத்திரம் வருகிறது. அந்த சிறுவனை அவமானப்படுத்த துடிக்கிறார். முடிவில் அவனை எச்சில் இலையில் தூக்கி எறியப்பட்ட ஜாங்கிரியை எடுத்துச் சாப்பிட வைக்கிறார்.

அதை கண்ட சிவப்பி மகன் கையிலிருந்த ஜாங்கிரியை பிடுங்கி எறிந்து நான் உழைச்சி சாப்பாடு போடுறனே எதுக்குடா பிச்சை எடுக்குறே என்று அடிக்கிறாள். இதற்கு காரணம் அந்த ஐயர் என்று தெரிந்து அவரை முறைத்தபடியே வெளியேறி போகிறாள். அதன்பிறகு அவள் அந்த வீட்டுபக்கமே வரவில்லை என்று கதை முடிகிறது

இந்த கதை பஞ்சம் பிழைக்க போனவர்களை பற்றிய நினைவுகளை தூண்டிவிட்டது. எனது பால்யத்தில் தஞ்சை பஞ்சம் பிழைக்க போன பலரை தெரியும். அவர்கள் மறுபடியும் ஊர் திரும்பவேயில்லை. இன்னொரு பக்கம் பிழைக்கப்போன இடத்தில் பட்ட அவமானங்களை மறைத்து கொண்டு வாழ முயன்று தோற்றுபோய். அவர்கள் கடைசிபுகலிடமாக சென்னை வந்து சேர்ந்து இன்றும் நடைபாதை வாசிகளாகவே வாழ்கிறார்கள்.

இக்கதையில் வரும் சிவப்பி பஞ்சத்திலும் உழைத்து வாழ நினைக்கிறாள். வாழ்க்கையை பயமற்று எதிர்கொள்கிறாள். அவளது மகன் ஒரு அற்புதமான கதாபாத்திரம். ஜெயகாந்தன் கதைகளில் வரும் குழந்தைகள் அற்புதமானவர்கள். குழந்தைகளின் மீதான ஏக்கம் பிரிவு அவர் கதைகளில் திரும்ப திரும்ப வருகிறது. இக்கதையில் வரும் சிவப்பியின் மகன் இன்னமும் சரியாக பேச்சு வராதவன். அவன் கையில் ஒரு முறுக்கை வைத்து கொண்டு தாயின் இடுப்பில் தொங்கியபடியே வரும் காட்சி தத்ருபமாக கண்ணில் தெரிகிறது.

இந்த கதையை வாசித்த உடனே நினைவிற்கு வந்த கதை கு. அழகிரிசாமியின் திரிபுரம். அதுவும் பஞ்சம் பிழைக்க போன இடத்தில் தாயும் மகளும் அடையும் அவமானம் பற்றியதே. அது போலவே இந்த கதை புதுமைபித்தனின் கதையில் வரும் குழந்தைகளை அதிகம் நினைவூட்டுகிறது.

குரலை உரத்தாமல் சீராக கதை சொல்லும் முறை. குழந்தையை கூட பேதம் பார்க்க சொல்லும் பெரிய மனிதனின் அற்பமனது, அவரது மனைவியின் கதாபாத்திரம் என்று கதை மனதில் தொடர்ந்து அலைகளை உருவாக்கியபடியே இருந்தது. இந்த கதை மூன்று தளங்கள் கொண்டது. பஞ்சம்பிழைக்க போன பெண் அவளை பிரிந்த கணவன் அவர்களது போராட்டமிக்க தினசரி வாழ்க்கை. இரண்டாவது. ஐயர் மற்றும் வசதியில்லாத வீட்டில் பிறந்து வந்தவள் என்று குற்றம் சொல்லிக்காட்டப்படும் அவரது மனைவி. மூன்றாவது சம வயதுள்ள இரண்டு குழந்தைகள். இந்த தளங்கள் ஒன்றையொன்று வெட்டி ஊடுருவுகின்றன.

இன்னொரு கதை நான் ஐன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன். திருமணம் ஆகாத பெண் ஒருத்தி வீட்டு ஜன்னல் வழியே உலகை காண்பதை பற்றியது. இக்கதையில் வரும் ஜன்னல் நூற்றாண்டுகளாக பெண்கள் மீதான கலாச்சார ஒடுக்குமுறையின் அடையாளம் போலவே வருகிறது. அந்த பெண் நேரடியாக பேசுவது போன்ற கதை சொல்லும் முறை.

கதையின் வழியே அவர் காட்டும் வெளிஉலகின்காட்சிகள். அதிலிருந்து உருவாகும் அவளது ஆசைகள், நிராசைகள். அந்த பெண் கதையின் முடிவில் ஏன் பாட்டி ஜன்னல்கிட்டயே உட்கார்ந்திருக்கே என்று குரல் கேட்டு திடுக்கிடும் போது வாசகனாக நாமும் திடுக்கிடவே செய்கிறோம். வயதை மறந்து உட்கார்ந்திருந்த அந்த பெண் முகம் ஒரு நிமிசம் மனதில் தோன்றி மறைகிறது. கல்லாக உறைந்து போன அகலிகை போல அது நினைவூட்டுகிறது.

மாக்சிம் கார்க்கி கதைகளில் வரும் சிறுவர்கள் அசலானவர்கள். அவரை போன்ற சதையும் ரத்தமும் கொண்ட குழந்தைகளை புதுமைப்பித்தனிலும் ஜெயகாந்தனிலும் காணமுடிகிறது.

ஜெயகாந்தன் கதைகள் வழியாக தமிழ் கதைமரபு எப்படி மறுஉருவாக்கம் பெற்றது மற்றும் தமிழ் எழுத்தாளர்களின் சமூக அக்கறைகள் பற்றி பேசினேன். அதன் ஒளிவடிவம் வெளியாகும் என்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் வெவ்வேறு சிறுகதைகள் வேறுவேறுசந்தர்பங்களில் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன என்பதே வாசிப்பில் நான் கண்ட உண்மை , இந்த முறை ஜேகேயை வாசித்த போது மற்றகதைகளை விட இந்த இரண்டும் என் மனதிற்கு மிக நெருக்கமாக மறுபடி மறுபடி வாசிக்கும்படியாக இருந்தன.

ஜெயகாந்தனின் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் மூன்று தொகுதியாக இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் இந்த இணைப்பிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


Read more...

Thursday, January 21, 2010

இலங்கை நிலவரம்

மோதல்கள் முடிந்தன!


முன்னோக்கி நடைபோடுவோம்!!




இலங்கை கம்யூனிஸ்ட் தலைவரின் அறைகூவல்!!




(இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. இ. டபிள்யூ. குணசேகரா, அந்த நாட்டின் அரசியல் சட்ட இலாகாவின் அமைச்சராகவும் உள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் பணியாற்றும் அவர், இந்த ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் யாழ்ப்பாணம் நகரில் ஒரு கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவரது சிந்தனையைத் தூண்டும் உரையின் தமிழாக்கம் இங்கே. படித்துப் பயன் பெறுவோமாக! தமிழில்: விதுரன் )





பெருமதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே,



ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குமுன், 1982-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஹெக்டர் கொப்பெகடுவாவுக்கு ஆதரவு திரட்டும்பொருட்டு வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்ததற்குப் பின்னால் இப்போது தோழர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மன அமைதியோடும், உணர்ச்சிபூர்வமாகவும் மகிழ்ச்சிப்பெருக்குடனும் உரையாற்றுகிறேன்.



அன்று கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஹெக்டர் கொப்பெகடுவாவை ஆதரித்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜே.ஆர். ஜெயவர்தெனாவும் இதர வேட்பாளர்களான குமார் பொன்னம்பலம், டாக்டர் கொல்வின் ஆர். தெ சில்வா, வாசுதேவ நாணயக்காரா மற்றும் ரோஹனா விஜெவீரா களத்தில் நின்றனர்.



இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது--எப்படி வடக்குப்பகுதி (யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச்சேர்ந்த) மக்கள் எமது அறைகூவலை ஏற்று மிக உயர் விருப்ப வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவாவுக்கு 1,00,521 வாக்குககளை அளித்தார்கள் என்பது. இந்தத் தேர்தலில் குமார் பொன்னம்பலம் 98,784 வாக்குகளும், ஜே.ஆர்.ஜெயவர்தெனா 77, 614 வாக்குகளும் பெற்றார்கள். வடக்குப்பகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 67 சதவீதம் வாக்குகள் சிங்கள வேட்பாளர்களுக்கு ஆதரவானவை. அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் தேச ஒற்றுமை மேலோங்கி இருந்த காலம் அது. மக்கள் மத்தியில் தேச ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் உச்சநிலையில் மேவிநின்றன. 1983-ஆம் வருடத்தில் நிகழ்ந்த கறுப்பு ஜூலை இந்த ஒற்றுமையை நிர்மூலமாக்கிவிட்டது. கட்ந்த 26 ஆண்டுகளில் ஸ்ரீலங்காவில் எத்தனையோ நிகழ்ந்துவிட்டது.



துக்ககரமான நினைவுகளுடன், ஆனால் முழு நம்பிக்கையுடன் இன்று மீண்டும் வடக்குப் பகுதியில் நாம் அரசியல் பிரவேசம் செய்திருக்கிறோம். அந்த மனவருத்தமளிக்கின்ற, துன்பகரமான கடந்த காலத்தை மனப்புண்கள் ஆறுகின்ற, மனச்சாந்தி நிகழ்கின்ற இத்தருணத்தில் நினைவுக்குக் கொண்டுவர நான் விரும்பவில்லை.



தோழர்களே, நண்பர்களே, வடக்குப்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிர்மாணித்த, மிகச்சிறந்த தலைவர்களைத் தொடக்கத்திலேயே மதிப்பு, மரியாதையுடன் நினைவுகூர விரும்புகிறேன். தோழர்கள் டி.துரைசிங்கம், எ.வைத்தியலிங்கம், பி.கந்தையா, எஸ்.ஜெயசிங்கம், என்.சண்முகதாசன், எ.அரியநாயகம், வி.பொன்னம்பலம், எம்.கார்த்திகேசு, எஸ்.பி.நடராஜா, எம்.சி.சுப்ரமணியம் உள்ளிட்ட தலைவர்கள், வடக்குப்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிக்காத்து வளர்த்தவர்கள். முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான கே.சி.நித்யானந்தன், சி.குமாரசாமி, எஸ்.செல்லையா, எஸ்.கதிர்வேல், கே.நவரத்னம், எஸ்.விஜயானந்தன் ஆகியோர் இடதுசாரி இயக்கத்துடன் இணந்து பணியாற்றியவர்கள்.



வடக்குப்பகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இடதுசாரி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்--வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பேர் --பி.கந்தையா, எம்.சி.சுப்ரமணியம் மற்றும் கே.நவரத்னம் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.



இருப்பினும், இங்கே இடதுசாரி இயக்கத்தின் தோற்றம் இன்னும் பழைமையானது; அது 1920களில் வேர் பிடித்தது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க கண்டங்களில் தேசிய விடுதலை இயக்கத்திற்கான போராட்ட சகாப்தம் தொடங்குவதற்குக் காரணியாக அமைந்த 1917-ஆம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நிகழ்வை மக்கள் அறியச்செய்த முதல் இலங்கைப் பிரஜை பொன்னம்பலம் அருணாசலம்தான் என்பதை மிகச்சிலரே அறிவர்.



இந்தப் பின்னணியில்தான், 1924-இல் ஒரு தீவிர செயல்திட்டத்துடன் ஜனித்தன ஹண்டி பேரின்பநாயகம் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட யாழ் மாணவர் காங்கிரசும், அதனைத் தொடர்ந்து யாழ் இளைஞர் காங்கிரசும். 1931-இல் உருவான அனைத்து இலங்கை இளைஞர் காங்கிரசும், 1933-இல் தோற்றுவிக்கப்பட்ட சூரியமால் இயக்கமும் பரிபூரண சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வளர்ச்சிப்போக்குகளாக அமைந்தன. எமது கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்கே இந்த இரு இயக்கங்களின் தலைவராகவும் விளங்கினார்.



1935-இல் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியும் பின்பு 1943-இல் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த இயக்கத்திலிருந்து இன்னும் உறுதியான சித்தாந்த வடிவுடன் கிளைத்தவையே.



இருபத்தாறு ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்ததற்குப்பின்னால் இப்போது நாம் யாழ்ப்பாணத்தில் கூடியிருக்கிறோம். பயங்கரவாதம் 30 ஆண்டுகள் தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றுக்காக யாரும் மகிழ்ச்சி அடைய முடியாது. இன்னுயிர்களின் இழப்பு, உடைமைகள் நாசம், பொருளாதாரம் பாழ், மக்கள்- குறிப்பாக சமுதாயத்தின் அடித்தளத்து மக்களின் நீடித்த துயரம், பண்பாட்டுச் சீரழிவு, வன்முறைக்கலாசாரத்தின் தோற்றம், நல்லாட்சியின் வீழ்ச்சி, தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு சர்வநாசம், நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் இனவெறியின் தலைதூக்கல், சட்டவிரோதக் கும்பல்களின் தோற்றம்--இவை அனைத்தும் இதனைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகளாகும்.



எந்த ஒரு சமூகத்தின் மறைந்த தலைவரையோ அல்லது நமது நாடாம் ஸ்ரீலன்ங்காவை வழிநடத்திய ஆட்சியாளர்களையோ நான் இழித்துப் பேச விரும்பவில்லை. இது மனப்புண்களை ஆற்றுகின்ற மனச்சாந்தி ஏற்படுத்துகின்ற தருணம். பழைய, துரதிருஷ்டவசமான சம்பவங்களை மீண்டும் கிளரிவிட நான் விரும்பவில்லை. ஆனால், (நாம் மன்னித்தால் கூட) வரலாற்று உண்மைகளை நாம் மறந்துவிட முடியாது; அதுமட்டுமன்றி, இந்தப் பேரழிவிலிருந்து மீண்டு, நாம் முன்னோக்கி நடைபோடவேண்டுமெனில் இவற்றிலிருந்து தேவையான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.



வரலாற்று மாணவன் என்கிற வகையில் திரும்பிப் பார்க்கின்ற போது ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டு அதை வெளியில் சொல்லியாகத்தான் வேண்டும்-அதாவது, நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து, தேசக்கட்டுமானப் பணியில் தலைமையேற்க நமது தேசியத் தலைவர்கள் தவறி விட்டார்கள் என்பதுதான் அது. வரலாறு நமக்குப் பல சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தது: ஆனால் அவை அனைத்தையும் நாம் தவற விட்டுவிட்டோம்.



தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்படாததுதான் இன்றுவரை நம் தோல்விக்குப் பிரதான காரணமாக உள்ளது.



இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இ.ந்த தேசியப் பிரச்சனையை அதன் கருவிலிருந்தே இனம் கண்டுகொண்டோம். உண்மையில் சொல்லப்போனால், (இன்றைய சூழலில் அதிகாரப் பரவல் என்று சொல்லப்படுகிற) பிரதேச சுயாட்சி என்னும் கருத்தை நாட்டின் நவ அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதே நமது கட்சிதான். இது, சமூக-பொருளாதார-கலாசார உண்மைகளை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், சர்வதேச அனுபவத்தின் அடிப்படையிலும், உருவானது.



நாட்டு விடுதலைக்குப் பின்னர் தொடங்கி, ஆட்சியிலிருந்த பூர்ஷ்வா அரசியல் கட்சிகள் இந்த எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டன; மேலும், குறுகிய அரசியல் ஆதாயங்களால் அவை ஈர்க்கப்படலாயின. தேசக் கட்டுமானத்தில் தமக்குள்ள சரித்திரபூர்வமான பொறுப்பினைக் கைவிடலாயின.



நாட்டின் வடக்குப் பகுதியில் (தமிழ் காங்கிரஸ் மற்றும் ஃபெடரல் கட்சி இரண்டையும் சேரந்த) பூர்ஷ்வா வர்க்கத் தமிழர் தலைவர்களுக்கும் இது பொருந்தும். அரசியலில் பத்தாம்பசலியான அல்லது பிற்போக்கான பாத்திரம் வகித்த இவர்கள், தமது குறுகிய வர்கக நலன்களுக்கேற்ப த்மது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டனர்.



இயல்பாகவே, அவர்கள், பிற்போக்கு பத்தாம்பசலி அரசியல் நிலைபாடுகளுடன் இணைத்துக் காணப்பட்டனர்; முற்போக்கான அனைத்தையும் எதிர்த்து நின்ற அவர்கள், தெற்குப்பகுதி மக்களிடமிருந்து தம்மை விலக்கியே வைத்துக் கொண்டனர்.



தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காணத்தவறியதன் விளைவாகத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு, 1980களில் அது பூர்ஷ்வா வர்க்கத் தலைமையிலிருந்து குட்டி பூர்ஷ்வா வர்க்க்கத்தின் கைகளுக்குச் சென்றது.



துரதிருஷ்டவசமாகக் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் வலதுசாரிகள், தலைமையைக் கைப்பற்றி, பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் தாம்தான் என்று தம்பட்டம் அடிக்கலாயினர். வன்முறை, பயங்கரவாதம், அதிதீவிர தேசிய இனவாத அடிப்படையிலான பிரிவினைவாதம், இன்னும் சொல்லப்போனால் இனவெறி எனும் பாதையில் அவர்களின் பயணம் தொடங்கியது.



தேச ஒற்றுமை, ஜனநாயகப் பாதையிலான வளர்ச்சி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணுதல் என்னும் கருத்துக்களை முன்வைத்து செயல்பட்ட இடதுசாரி கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன, இல்லாமல் ஆக்கப்பட்டன அல்லது நிர்மூலமாக்கப்பட்டன. மிதவாத பூர்ஷ்வா தலைவர்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை. மக்கள் மட்டத்திலும், முற்போக்கு சக்திகள் மட்டத்திலும், நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் உறவுப் பாலங்கள் அனைத்தும் தகர்ந்துபோயின. தோன்றிய காலம் தொட்டு தேசிய சிறுபான்மையினரின் நலனுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், 13-ஆம் அரசியல் சட்டத் திருத்ததிற்காகவும் தம் இன்னுயிரை ஈந்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜக் கட்சிகளைக் கொண்ட இடதுசாரி இயக்கத்தினரான நாங்களும் விட்டுவைக்கப் படவில்லை. பல்வேறு பொறுப்புகளில் பல துறைகளில் செயலாற்றிக் கொண்டிருந்த 54 தலைவர்கள் ஜனதா விமுக்தி பெரமுனையாலும், எல்.டி.டி.யாலும் படுகொலை செய்யப்பட்டனர்.



அகுரெஸ்ஸாவில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் விடுதலைப் புலிகளால் கொலையுண்ட கடைசி ஐந்து பேர் எமது கட்சியின் இளம் மாவட்டத் தலைவர்கள்; அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்.



இதில் ஆச்சரியத்துக்குரியதும், புரியாத புதிராக இருப்பதுவும் என்னவென்றால், தமிழர்களுக்கு எதிராக, இந்தியாவுக்கு எதிராக, விடுதலைப்புலிகளுக்கும் எதிராக விஷத்தைக் கக்குகிற அரசியல் நிலைபாட்டினை மேற்கொள்ளும் ஜே.வி.பி.ஐத் தொட்டதாக எல்.டி.டி.யின் வரலாற்றில் சான்றுகளே இல்லை என்பதுதான்.



கடந்த 30 ஆண்டுகளில், இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகளை வீழ்த்துவதன் மூலமே தெற்கில் சிங்கள இனவெறியும், வடக்கில் தமிழ் இன வெறியும் நீடித்து, நிலைத்து வளர்ச்சி பெற்றன. இதன் விளைவு: நாடு எங்கே போவது என்ற திசைவழி தெரியாமல் நின்றது; இடித்துரைக்க ஆளில்லாமல் போயிற்று; சரியான நிலை எடுக்க வழியற்றுப் போனது; நல்லிணக்கமின்றித் தவித்தது; ஒற்றுமை உணர்வும் இல்லாமல் போனது.



ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பயங்கரவாதத்தையோ அல்லது வன்முறையையோ எமது கட்சி ஒருபோதும் தழுவியதில்லை. எமது நோக்கங்களை நிறைவேற்ற தடித்தன அடாவடி, அச்சுறுத்திப் பணியவைத்தல், வன்முறை ஆகியவற்றில் நாங்கள் இறங்கியதே இல்லை. எங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்ததுமில்லை.



எமது கட்சி என்றுமே தேசபக்தி கொண்டது. அதற்கு இணையாக சர்வதேசியத்தில் நம்பிக்கை கொண்டது. தேசபக்தியும், சர்வதேசியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-ஏனெனில் நாங்கள் மனிதநேயத்திற்காக நிற்பவர்கள்.



இந்த நாட்டிற்கு சோஷலிசக் கருத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். இதேபோல் மற்றொரு உண்மை என்னவெனில், சோஷலிச நாடுகளை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்ததும் எமது கட்சிதான். நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டல் அமைப்பான சாதிய முறையை எதிர்த்து தெற்கிலும் வடக்கிலும் போராட்டங்களைத் தொடங்கியதும் எமது கட்சிதான்.



மக்களின் மனங்களிலிருந்து கட்டுக்கதைகளையும், வினோதமான நம்பிக்கைகளையும், மூட எண்ணங்களையும் அகற்றி, அவர்களுக்கு மேலும் அறிவொளியூட்டினோம் நாங்கள்.



இப்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேச ஒற்றுமைக்காகப் போராடுவதற்கு, பாகுபாடுகளையும் அநீதியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, சமத்துவம், சமூக நீதி, சமுதாய வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப் படுத்துவதற்கு வரலாறு மேலும் ஒரு வாய்ப்பை-பொன்னான சந்தர்ப்பத்தை-நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.



போரின் முடிவில், ஒட்டுமொத்த தேசியப் பொருளாதார வளர்ச்சியில், வடக்கின் பங்கு 2.9. சதவீதம்தான். போர் நடைபெற்ற பகுதியை அடுத்திருந்த வட மத்திய மற்றும் உவா மாகாணங்களின் பங்கோ வெறும் 4 சதம்தான். போரின் தாக்கம் வடக்கு-கிழக்குடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதே நேரத்தில், தேசியப் பொருளாதார வளர்ச்சியில் மேற்கு மாகாணத்தின் பங்களிப்பு 51 சதவீதமாகும். இது யுத்தத்தின் விளைவு மட்டுமல்ல; ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகம் செய்த புதிய தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவுமாகும்.



கடந்த நான்கு ஆண்டுக்காலத்தில் கொள்கை மாற்றங்களின் மூலம், கிராமப் பொருளாதார விரிவாக்கம், பிரதேச வளர்ச்சி, உள்கட்டுமான வளர்ச்சி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி என இந்த நிலையில் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.



இதன் காரணமாகவே வடக்கிலும் கிழக்கிலும் உள்கட்டுமான வளர்ச்சிக்கு நாங்கள் மிக உயரிய முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருக்கிறோம். இங்கு அரசு சேவை நிர்வாகம் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அடிப்படையான நிர்வாக அமைப்புகளில் மக்கள் தம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.



தமிழை அதிகாரபூர்வ மொழியாகச் செயல்படுத்துவதில் எமது அரசு துணிச்சலான, தீர்மானகரமான நடவடிக்கைகளைக் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் எடுத்துள்ளது என்பதை அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக இருப்பவன் என்கிற வகையில் தெரிவிக்க விரும்புகிறேன். இப்பொழுது அது இன்னும் வேகத்துடன் செயல்படுத்தப் பட்டுவருகிறது.



நீடித்த அரசியல் தீர்வுக்கான நமது தேடல்களுக்கு வசதியாக நல்ல சூழலை இத்தகைய நடவடிக்கைகள் உருவாக்கிக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிடையே பெரிய இடைவெளி உள்ளது என்பது உண்மைதான். மக்கள் மட்டத்தில் இந்த இடைவெளியைப் போக்கவேண்டும். பரஸ்பர அச்சம், அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவை நீக்கப்பட வேண்டும். பாதுகாப்பு சம்பந்தமான கவலைகள் இருந்தபோதிலும், போர் தீவிரமடைந்த காலத்திலும்கூட தமிழ் பேசும் ம்க்களில் 61 சதவீதம்பேர் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்ந்துவந்தனர் என்பதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது.



அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். இந்த 13-வது அரசியல் சட்டத் திருத்தம், (1) தமிழை ஆட்சிமொழியாக்குவது, (2) அதிகாரப் பரவலாக்கம் செய்தல் என்கிற இரண்டு அம்சங்களைக் கொண்டது.



இந்த 13-வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கும் மேலாகச் செல்ல வேண்டும் என்பதுதான் எமது கட்சியின் நிலை. இதை நாங்கள் பற்றி நிற்போம்; இதில் உறுதியாக இருக்கிறோம்.



அரசு சேவையில் புதிதாக சேர்பவர்களுக்குத் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றாக்குவதில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே துணிச்சலாக முடிவெடுத்திருக்கிறார். இந்த விஷயத்தில், அவருக்கு முன்னால் பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் இதனை செயல்படுத்தத் தவறிவிட்டனர் அல்லது செயல்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று.



தமிழை ஆட்சிமொழியாக்கும் விஷயத்தில் மூன்றாண்டுக் காலத்தில் எந்த ஜனாதிபதியும் அல்லது பிரதமரும் இந்த அளவுக்குச் செய்ததில்லை.தற்போது அமல்படுத்தப் பட்டுவரும் குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுக்கும்பட்சத்தில் மொழிப் பிரச்சனை என்பதே இல்லாமல் போய்விடும். 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை விரைந்தும், முழுவதுமாகச் செயல் படுத்துவதற்குத் தற்போது நல்ல சூழல் நிலவுகிறது.



எல்லா சமூகத்தவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் நாம் தேசிய இனப்பிரச்சனைக்கு நீடித்த தீர்வைக் காண்பதற்கு நல்ல சூழல் நிலவுவதாக நான் நம்புகிறேன்.



யாரை நம்புவது-மகிந்தா ராஜபக்சாவையா அல்லது தளபதி சரத் பொன்செகாவையா?



மகிந்தா ராஜபக்சா ஏற்கனவே நாம் கண்ட, சோதித்துப் பார்க்கப்பட்ட தலைவர். 40 நாட்கள் மட்டுமே அரசியல் அனுபவம் கொண்ட ஒரு ராணுத் தலைவரை நீங்கள் நம்ப முடியுமா?



அரசியலை ராணுவ மயமாக்குதல் மட்டுமல்லாமல், ராணுவத்தில் அரசியலைக் கலத்தல் என்னும் புதிய பரிமாணம் தளபதி பொன்செகாவின் அரசியல் பிரவேசத்தால் நமது அரசியலுக்கு வந்துள்ளது.



தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி, முற்போக்கு, தீவிரக்கொள்கைப்பற்றுள்ள சக்திகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம்தான் நாம் விரும்புகின்ற தேசஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. பயங்கரவாதமும், யுத்தமும் இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களை பலவீனப்படுத்திவிட்டன.



சர்வதேச அரங்கில் நிகழ்ந்துவரும் பெரிய மாற்றங்களைப் பற்றி இந்த சந்தர்ப்பத்தில் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன்.



இருபது வருடங்களுக்கு முன்னால், அதாவது, 1989-இல் பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பின்னர் (அதாவது, சோஷலிச கிழக்கு ஜெர்மனி வீழ்ந்ததற்குப்பின்), இதையடுத்து சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப் பின்பு, சோஷலிசம் முடிவுக்கு வரப்போகிறது என்று பூர்ஷ்வா தலைவர்கள் ஆருடம் கூறினார்கள்.



சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார சக்திகளாகத் தலையெடுத்ததையடுத்து நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலக அரங்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மேற்கத்திய சக்திகள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தியதற்குப் பின்னர் இப்போது உலகப் பொருளாதாரத்தின் மையம் ஆசியா கண்டத்திற்கு மாறியுள்ளது.



உலகப் பொருளாதார நெருக்கடி மோசமானதன் விளைவாக உலக முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் நொறுங்கி விழுந்துள்ளன.



லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சி 13 இடதுசாரி மற்றும் இடது ஆதரவுக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. அமெரிக்க கண்டத்தில் சக்திகளின் பலாபல நிலைமைகளை இது மாற்றியுள்ளது.



லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆசியாவில் சீனா, இந்தியாவுடன் யுரேஷியாவில் ரஷ்யா எனப் புதிய பொருளாதார மையங்கள் உலகப் பொருளாதார சக்திகளின் பலாபல நிலையை முழுவதுமாக மாற்றியுள்ளது.



டாலரின் சக்தி குறைந்துள்ளது. உலகின் அந்நிய செலாவணி இருப்பில் 75 சதவீதம் இன்று வளர்முக நாடுகளைச் சேர்ந்தது. உலகில் அந்நிய செலாவணி இருப்பில் மூன்றில் ஒரு பங்கு சீனாவுக்குச் சொந்தம்.



உலகின் வளர்ச்சிகளில் இவை புதிய எதார்த்தங்கள். இலங்கை சம்பந்தமாக அண்மையில் நடைபெற்ற அமர்வுகளில் தங்கள் இஷ்டப்படி மேற்கத்திய நாடுகள் நடந்து கொள்ள முடியாமல் போனதற்கு இதுதான் காரணம்.



உலக இடதுசாரி இயக்கமும் புனருத்தாரணம் பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே ஒருமைப்பாடு என்பது இன்று உலகமயமாகியுள்ளது.



சிங்கள இனவெறி, இந்தியாவின் மண்ணாதிக்கம் என்கிற பொய்ப்பிரச்சாரம் ஆகிய அலைகளால் உந்தித் தள்ளப்பட்டு உச்சாணிக்கொம்பில் இருந்தது ஜே.வி.பி. இயக்கம்.



அந்தப் போக்கு தற்போது இறங்கு முகத்தில் உள்ளது. ஜே.வி.பி.யில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளால் அது பல பிளவுகளைச் ச்ந்தித்துள்ளது. ஒரு ராணுவத் தலைவரின் தலைமையின்கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இப்போது அணிசேர்ந்துள்ளது அந்த இயக்கம்.



மகிந்தா ராஜபக்சாவுக்கு ஆதரவாக நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி சக்திகள் இணைந்து குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. உலக சக்திகளின் பலாபல நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், இலங்கையின் அரசியல் மற்றும் சமூக சக்திகளின் பலாபல நிலை, கடந்த நான்காண்டு காலத்தில் மஹிந்தா ராஜபக்சா அரசின் செயல்பாடுகள், தளபதி பொன்செகாவின் பிரவேசத்தால் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள், இலங்கையின் விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தலையிடுதல், தெற்கு-வடக்குப்பகுதிகளைத் தழுவிய ஒன்றுபட்ட இடதுசாரி இயக்கத்துக்கான வளர்ந்துவரும் தேவை--எனப் புறவய எதார்த்த நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இதற்கு மாற்று எதுவும் இல்லை.



நாட்டிற்கு அதி அவசியத் தேவையான தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கு வடக்கில் உள்ள மக்கள், தெற்கில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு இந்த சந்தர்ப்பத்தில் அறைகூவி அழைக்கின்றேன்.



நமது நாட்டின் இடதுசாரி இயக்கத்தை மீண்டும் கட்டி, மீண்டும் ஒன்றிணைக்க முன்வருமாறு வடக்கில் உள்ள நமது தோழர்களையும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து சக்திகளையும் தோழமையுடன் அழைக்கிறேன். இது ஒரு தீர்மானகரமான அம்சமாகும்.



உறுதியான நிலையில் நின்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மறுசிந்தனையில் இறங்கியுள்ளனர். ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாய்ப்பைக் கைக்கொண்டு செயல்படுவோமாக!



நன்றி!



Read more...

Thursday, January 14, 2010






தைபிறந்தது வழியும் பிறந்தது:
"இனிமேல் எழுதலாம், பேசலாம்..."
தோழர் ஜெயகாந்தனின் ஜெய முழக்கம்!



தோழர் ஜெயகாந்தன் என்றுமே தனிமனிதரல்ல; அவர் ஒரு இயக்கம். சமூக அவலங்களைக் கண்டு இயல்பாகவே கொதித்துப்போன ஜே.கே. தனது பேனா, நா என்னும் வலிமைகொண்ட ஆயுதங்களைச் சுழற்றிச் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சமரசமற்ற வீரச்சமர் புரிந்துவருபவர். வெற்றி-தோல்விகளையெல்லாம் பற்றிக் கவலைப்படாதது அவரது போராட்டம்; லாப-நஷ்ட கணக்கு பார்க்காதது அவரது லட்சிய வாழ்க்கை; தன்னுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை அந்த வாழும் பாரதியின் முன்னோக்கிய பயணம்!

சிந்தையில் ஆயிரம் கொண்ட அவர், மாகவி அலெக்சாண்டர் புஷ்கினைப்போன்று, "கிட்ட வராதீர் என்னிடம்; ஒட்டுமில்லை உறவுமில்லை உம்மோடு!" என்று எதிர்மறை சக்திகளுக்குப் பிரகடனம் செய்து தனது ஆயுதங்களைச் சிலகாலம் உறையில் போட்டிருந்தது உண்மைதான். இதனைக் கண்டு விமர்சனம் செய்தவர்களும் உண்டு; ஏக்கம் கொண்டவர்களும் உண்டு.

அவர் எழுதி வைத்தவற்றைப் படித்தாலே ஏழேழு தலைமுறை ஞானம் பெறும் என்பது பலரும் அறிந்த விஷயம்.

இருப்பினும், விமர்சனங்களையும் நலம் பாராட்டல்களையும் எப்போதுமே ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பவர் தோழர் ஜே.கே. அதனால்தான், இரு சாராருமே மகிழும் வண்ணம், தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் நல்லதோர் அறிவிப்பைச் செய்திருக்கிறார் அவர்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்ச் சங்கமத்தின், "ஜெயகாந்தன் என்ற தமிழ் ஆளுமை" என்னும் தலைப்பில் ஜனவரி 13, 2010௦-இல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றிய அவர், குறளைப் போன்று சுருக்கமாக, 'நச்' என்று மனதில் பதியுமாறு சொன்னது இதுதான்:

"இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிற போது பயந்து கொண்டே இருந்தேன்-எங்கே இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை எனக் கேட்டுவிடுவார்களோ என்று. நல்ல வேளையாக யாரும் அப்படிக் கேட்கவில்லை. எனக்கே தெரியும்-இப்போதெல்லாம் நான் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. ஆனால், இனிமேல் பேசலாம், எழுதலாம் என்ற நம்பிக்கை மறுபடி வருகிறது!"


அரங்கத்திலிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி இதனை வரவேற்றார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா! உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா!! என்று தோழர் ஜே.கே. யை என்றும் போல் வரவேற்கிறது தமிழ் கூறும் நல்லுலகு! இந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியா நிற்போம் நாம்?-- விதுரன்.

Read more...

Wednesday, January 13, 2010

மகலனோபிஸ்

b



இந்தியாவின் வளர்ச்சிக்கோலத்துக்குப்



புள்ளிவைத்தவர்




கலனோபிஸ் என்ற பெயரைக்கேட்டாலே நம் நினைவுக்கு வருவது அவர் நிறுவிய உலகப் புகழ்பெற்ற இந்திய புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகம்; அடுத்து நினைவுக்குவருவது சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்; பிலாய், ரூர்கேலா, பொக்காரோ போன்ற உருக்காலைத் திட்டங்கள்!

அவர் நிறுவிய புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகம்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட, அன்றிருந்த சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்து தொகுத்துத் தந்தது.

நமது நாட்டின் பிறப்பு-இறப்பு, நோய்நொடி என்னென்ன என்று விரிவாகப் பகுப்பாய்வு செய்து கொடுத்தது இந்தக் கழகம்தான்.

இந்தியக் குடும்பங்கள், அவற்றின் வரவு-செலவு, தனிமனித செலவு, குடும்பத்தில் உணவு, உடை, மருந்துகளுக்கு ஆகும் செலவுகள் என்ன என்பது பற்றியெல்லாம் ஆதியோடந்தமாகச் சேகரித்துக் கொடுத்தது.

யார் அந்த மகலனோபிஸ்?

1893 ஜூன் 29-ஆம் தேதி வங்கத்தில் இருந்த அறிவார்ந்த குடும்பத்தில் பிறந்தார் பிரச்சந்த சந்திர மகலனோபிஸ். இவரது தாத்தா குருசரண் மகலனோபிஸ், ராஜாராம் மோகன்ராய் வழியில் அக்காலத்திலேயே ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டவர். குருசரணுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சுபோத் சந்திர மகலனோபிஸ். இவர் மருத்துவம் படித்து இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று, மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆய்வுகள் நடத்தி அங்குள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் உடல்கூறு இயல் துறையின் தலைவரானார். பின்னர் கல்கத்தா வந்து பிரசிடென்சி கல்லூரியில் அந்தத் துறையை நிறுவினார்.

குருசரண் மகலனோசின் இரண்டாவது மகன் பிரயோக் சந்திர மகலனோபிஸ், தனது தந்தையின் மின்சாதன விற்பனைக் கூடத்தில் பணியாற்றிவிட்டுத் தனியாக கிராமஃபோன் இசைத்தட்டுக்களை விற்பனை செய்யும் நிலையத்தை நிறுவினார். பின்னர் கல்கத்தாவிலேயே பெரிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இசைத்தட்டுக்கள் விற்பனை நிலையமாக அதை உருவாக்கிச் சிறந்த விற்பனையாளராகத் திகழ்ந்தார்.

இவரது கம்பெனி மூலமாகத்தான் ரவீந்திரநாத் தாகூரின் உலகப்புகழ்பெற்ற பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்தன. இவரது பிள்ளைதான் பிரச்சந்த் சந்திர மகலனோபிஸ்.

தனது தாத்தா குருசரண் நிறுவிய பள்ளியிலேயே படித்த பி.சி.மகலனோபிஸ், கல்லூரிவரை கல்கத்தாவில் படித்துப் பட்டம் பெற்று, மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சுற்றுலா சென்ற மகலனோபிஸ், அங்கே உள்ள கிங்ஸ் கல்லூரியில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

கணிதம், இயற்கை விஞ்ஞானம், இயற்பியல் இவர் எடுத்துக்கொண்ட பாடங்கள். இவர் அக்கல்லூரியில் சேர்ந்து ஓராண்டுக்குப்பின் தமிழ் நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ராமானுஜம் அக்கல்லூரிக்குக் கணிதம் கற்கச்சென்று மகலனோபிசின் நெருங்கிய நண்பரானார்.

மகலனோபிஸ், இயற்பியலில் முதல் வகுப்பில் தேறி, அனைவரது பாராட்டையும் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் அவருக்குப் புள்ளிவிவரத் தொகுப்பியலைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

நாடு திரும்பிய பி.சி. மகலனோபிஸ், தனது பெரிய தந்தையின் மூலம் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக 33 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் அக்கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியப் புள்ளிவிபரத் தொகுப்பியல் கழகத்தை நிறுவி உலகப் பிரசித்தி பெற்றார்.

பிரபல கல்வியாளரும், கல்கத்தா சிட்டி கல்லூரியின் முதல்வருமான ஹெரம்ப சந்திர மொய்த்ரா அவர்களின் புதல்வி ராணி என்கிற நிர்மல் குமாரி மொய்த்ராவை மணந்தார்.

கவியரசருடன்...

சதாரன் பிரம்மோ சமாஜ் என்கிற அமைப்பில் ரவீந்திரநாத் தாகூரை உறுப்பினராக்கும் விஷயத்தில் ராணியின் தந்தைக்கும் மகலனோபிஸ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மகலனோபிசைக் கரம் பிடிக்க ராணிக்கு ஏழு ஆண்டுகளாயிற்று.

தாகூரை சமாஜ் உறுப்பினராக்குவதில் வெற்றியடைந்த மகலனோபிஸ், கவியரசரிடம் நெருக்கமான உறவு கொண்டார்.

தாகூர் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்தபொழுது, மகலனோபிசும் ராணியும் சேர்ந்து சென்று இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்து வந்தனர்.

பின்னர், அமெரிக்கா, சோவியத் யூனியன், ஸ்வீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று தாகூரைப்பற்றி பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார் மகலனோபிஸ். பல ஆண்டுகள் தாகூருடன் சேர்ந்து வசித்தனர் மகலனோபிஸ் தம்பதியினர்.

'அம்ரபாலி' என்ற தமது புது இல்லத்தில் தாகூர் வந்து தங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் வீடு கட்டி முடியுமுன்னே தாகூர் காலமாகிவிட்டார்.

புள்ளிவிவரத் தொகுப்பியலில் மூழ்கியிருந்த மகலனோபிஸ், இந்தியாவில் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச்செய்ய முனைந்தார். 1922-இல் வடக்கு வங்கத்திலும், 1926-இல் ஒரிசாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, வெள்ளத்தடுப்புக்கு வழிவகை காண மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். வங்காளத்திலும், ஒரிசாவிலும் மழை எந்த அளவு பெய்கிறது; வெள்ளப்பெருக்கு எப்படி ஏற்படுகிறது என்பதைக்காண 60 ஆண்டுகளாக ஏற்பட்ட மழை-வெள்ள அளவுகளைக் கணக்கிட்டார். பின்னர் அவர் கொடுத்த தீர்வின் அடிப்படையில்தான் இரண்டு நீர்மின் நிலயங்கள் மற்றும் பாசன வசதி தரக்கூடிய தாமோதர் பள்ளத்தாக்கு, ஹராடுட் நீர்த்தேக்கத் திட்டங்கள் வந்தன.

1927-இல் இங்கிலாந்து ரொனால்டு அய்ல்மேன் பிஷர் என்னும் அறிஞருடன் சேர்ந்து புள்ளிவிவரத் தொகுப்பியல் ஆய்வில் பல முன்னேற்றங்களைக் கண்டறிந்தார் மகலனோபிஸ். அதையொட்டி விவசாயம் சம்பந்தமான விவரங்களைச் சேகரித்தார்.

இதன் தொடர்ச்சியாகப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தைத் தொடங்கினார்.

இந்திய சணல் தொழில் மையம் உருவானபோது, சணல் பயிர் விளைச்சல் பற்றி சர்வே செய்து புள்ளிவிவரங்ககளைச் சேகரித்துக் கொடுத்தார் மகலனோபிஸ். அரசாங்க அதிகாரிகளுக்கே புலப்படாத பல விஷயங்களைக் கண்டறிந்து கூறினார்.

1942-இல் இந்திய விஞ்ஞான மாநாடு நடந்தபோது, அதில் கணிதத்துக்கும், புள்ளிவிவரத் தொகுப்பியலுக்கும் தனிப்பிரிவுகள் அமைக்க வலியுறுத்தி வெற்றிகண்டார் மகலனோபிஸ். அப்பிரிவுகளுக்குத் தலைமை ஏற்கவும் ஒப்புக்கொண்டார்.

இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தின் வளர்ச்சியை முன்கொண்டுசெல்ல ஒரு பத்திரிகை அவசியம் எனக்கருதினார். 'சங்கயா' எனப்பெயரிடப்பட்ட அந்தப் பத்திரிகை, புள்ளிவிவரங்கள் பற்றிய பல்வேறுவித நடைமுறைகளை உருவாக்கிக் கொடுத்தது. முதலில் ஒரு அச்சகத்தினரின் உதவியுடன் வெளிவந்த அந்த சஞ்சிகை, பின் அதற்கென ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் வெளிவந்தது..

அந்த அமைப்புதான் புள்ளிவிவரவியல் கழகம். இது, இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தின் இணை அமைப்பாக விளங்கியது. பின்னர் அந்தப் பதிப்புக்கழகம் ஒரு அச்சகத்தையே தனக்கென நிறுவ வேண்டியதாயிற்று.

நேருவின் நட்பு-சோவியத்துடன் உறவு

இதன் வளர்சியே பின்னர் 1967 அக்டோபரில் சோவியத் யூனியன் விஞ்ஞானக் கல்வியகத்துக்கும், இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்புக் கழகத்தின் பதிப்பகத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு ஒரு அச்சகம் நிறுவப்படக் காரணமாயிற்று. இதற்கு சோவியத் யூனியன் அன்பளிப்பாக அச்சக இயந்திரங்களைக் கொடுத்தது. சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் வெளியான விஞ்ஞானக் குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிருந்து வெளியிடப்பட்டன.

1946-இல் மகலனோபிஸ், .நா. சபையின் புள்ளிவிவர இயல் துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றார். அதன்பிறகு உலகத்தின் பல நாடுகளுக்கும் விஜயம் செய்தார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பண்டித நேரு அவர்கள் ரவீந்திரநாத் தாகூரைப் பார்க்கச்சென்ற போதெல்லாம் பலமுறை நேருவை மகலனோபிஸ் சந்தித்தித்தார்.

1940-இல்தான் நேருவின் இல்லத்தில் ஒரு நாள் தங்கி அவருடன் பல்வேறு விஷயங்களை விவதிக்கும் வாய்ப்பு மகலனோபிசுக்குக் கிடைத்தது. புள்ளிவிவரங்களுடன் திட்டமிடுதலின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது. 1938-இல் பண்டித நேரு தலைமையில் தேசிய திட்டக்குழுக் கூட்டத்தில் புள்ளிவிவரத் தொகுப்பியல் பற்றிப் பேசப்பட்டு, இதுகுறித்து ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

1946-இல் தேர்தல் பணிக்காக ஒரு வாரகாலம் பண்டித நேரு கல்கத்தாவில் தங்கியிருந்தார். மகலனோபிஸ் செயலாளராக இருந்த இந்திய விஞ்ஞானக் காங்கிரசுக்கு நேரு தலைமை வகித்தார். அந்த ஒரு வாரமும் அவருக்கு நிற்க நேரம் இல்லாமல் இருந்ததால், மகலனோபிஸ் விவாதிக்க என்ன செய்வது என்று யோசித்து, அவரது வீட்டுக்கே வந்து சேர்வதாக நேரு கூறினார். மகலனோபிசுக்குக் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி!

தன் வீட்டுக்கு வந்த நேருவை வரவேற்று, அவருக்கு இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தைச் சுற்றிக்காட்டினார். அங்கு நடைபெற்ற பணிகளை எடுத்துரைத்து இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்குப் புள்ளிவிவரத் தொகுப்பியல் எவ்வளவு முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது என்று எடுத்துரைத்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு திறமை மிக்க மாணவர்களை அனுப்பி வையுங்கள்; அவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்து அனுப்புகிறேன் என்றார் மகலனோபிஸ்.

இதனை ஏற்று, பீதாம்பர் பந்த் என்கிற தனது செயலாளரை அனுப்பிவைத்தார் நேரு. 1946 அக்டோபரில் அமெரிக்காவுக்குச் செல்லும்போது பீதாம்பர் பந்த் அவர்களும் உடன் சென்றார். அன்றிலிருந்து சுமார் 20 ஆண்டுக்காலம் பீதாம்பர் பந்த் மகலனோபிசுடன் பணிபுரிந்தார். பின்னர் அவர் திட்டக்குழுவின் தொலைநோக்குத் திட்டப்பிரிவுக்குத் தலைவராகச் செயல்பட்டார்.

1947 ஆகஸ்டில், நாடு சுதந்திரம் அடைந்தபோது, பொருளாதார செயல் திட்டக்குழு ஒன்றை நேரு தலைமையில் அமைத்தது காங்கிரஸ் கட்சி. 1948 ஜனவரியில் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி நிரந்தரத் திட்டக்குழு ஒன்று நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதலாவது ஐந்தாண்டுத்திட்டம் உருவாயிற்று. இத்திட்டத்தில், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

உருக்குப்பற்றாக்குறை நிலவிய காலம் அது. அதன் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிடப்பட்டது. இதே நேரத்தில், மத்திய அரசின் ஆலோசகராக மகலனோபிஸ் நியமிக்கப்பட்டார். மத்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் குழுத் தலைவராகவும் தேசிய வருமானக்குழுவின் தலைவராகவும் மகலனோபிஸ் நியமிக்கப்பட்டார்.

நேருவின் விருப்பப்படி நாடு முழுவதும் ஆண்டுதோறும் சமூக-பொருளாதார நிலை, பிறப்பு-இறப்பு, நோய்கள் பற்றியப் புள்ளி விவரங்கள் கணக்கிடப்பட்டன. உலகத்திலேயே பிரம்மாண்டமானதொரு செயல்பாடு இது.

தேசிய வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்; வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்; வேலையின்மைக்குத் தீர்வு காண வேண்டும்; ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும் என்பன போன்ற தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடுதல் நடைபெற்றது. இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தை மகலனோபிஸ் உருவாக்கினார். தேசிய வருமானத்தை 5 சதவீதம் உயர்த்துவது, சுமார் ஒரு கோடிபேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது என்ற அடிப்படையில் இத்திட்டம் இருந்தது.

உருக்கு, இரும்பு அல்லாத உலோகங்கள், கனரக இரசாயனங்கள், கனரக இயந்திரங்கள், உரங்கள் போன்ற அடிப்படைத் தொழிற்சாலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டது. அவைபோக, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் சிறு தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலிமிருந்து பொருளாதார நிபுணர்களை அழைத்து இது குறித்தெல்லாம் விவாதித்தார் மகனலோபிஸ்.

முதல் ஐந்தாண்டுத்திட்ட இறுதியில் இருந்த பல பிரச்சனைகளை மகலனோபிஸ் அறிந்திருந்தார். மக்கள் தொகைப்பெருக்கம் ஆண்டுக்கு 45 லட்சமாக இருந்தது. பெருமளவு வேலையின்மை இருந்தது. வேலையில் இருப்பவர்களில் ஆண்டில் பாதி நாட்கள் வேலை இல்லாமல் இருப்பவர்களும் இருந்தார்கள். குறைந்த பட்சம் ஆண்டுக்கு 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளையாவது உருவாக்க வேண்டியிருந்தது. வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருந்தது. நல்ல வீடு, உடல் நலம், கல்வி கற்க வாய்ப்பு போன்றவை ஏழை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டியிருந்தது. குறுகிய காலத்திலேயே இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று மகலனோபிஸ் விரும்பினார்.

எனவே, பல்வேறு தரப்பினருடன் இதுபற்றி விவாதித்தார். சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். எல்லோரும் எதார்த்த நிலைமையையும் திட்டங்களையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

ஒரு குடும்பத்தின் வரவு-செலவு, குறிப்பிட்ட காலத்தில் தனிநபரின் செலவு, உணவு, உடை, மருந்து ஆகியவற்றுக்கு ஆகும் செலவு என ஒவ்வொரு கீழ்மட்ட அளவிலும் புள்ளி விவரங்களைக் கணக்கிட விரும்பினார் மகலனோபிஸ். மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துத் துறைகளையும் அவர் ஆராய்ந்து முடிவு காண முயன்றார்.

இவர் நிறுவிய இந்தியப் புள்ளி விவரத் தொகுப்பியல் கழகத்தில் பயிற்சி பெற உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து 885 பேர் வந்து பயிற்சி பெற்றுச் சென்றார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் விருதுகள் இவரைத் தேடி வந்தன.

சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த மகலனோபிஸ், தனது 79-ஆவது வயதின் இறுதி நாளன்று 1972 ஜூன் 28-ஆம் நாள் கல்கத்தாவில் காலமானார்.

தமிழில்: மு..

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP