Saturday, April 13, 2013

பல்லாண்டு பல்லாண்டு!




பல்லாண்டு பல்லாண்டு!

பி..குப்புசாமி

ன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் நண்பர்களாகிய நாங்கள், ஜெயகாந்தன் அவர்களைச் சந்தித்து, கடந்த 2010 செப்டம்பருடன் ஐம்பது ஆண்டுகள் ஆயின.


அதுகுறித்து, அந்த செப்டம்பரில் ஒரு கூட்டம் போட்டுக் கொண்டாட வேண்டும் என்னும் என் நெடுநாள் ஆசை நிறைவேறவில்லை. அந்தக் கூட்டம் திருப்பத்தூரில் மட்டும்தானே நடக்கும்? அதுவும்கூட காற்றில் கலந்த ஓர் ஓசையாகத்தானே போகும்? 'சஞ்சிகை'யில் அந்த நினைவுகளைக் கொண்டாடுவது நிலைபேறுடையதொரு காரியம்தானே? இதனால் இத்தொடரை எழுத ஆரம்பிக்கிறேன்...

அந்தக் காலத்தில், எங்கள் ஊரில் 'இளங்கோ இலக்கிய மன்றம்' என்று ஒன்று இருந்தது. அதில் எல்லாக் கட்சியினருமே ஒற்றுமையாக அங்கம் வகித்தனர். பெரியார், ஜீவா, ம.பொ.சி. என்றெல்லாம் வந்து பேசுவர்.


இந்த வரிசையில், 1960-ஆம் ஆண்டு செப்டம்பரில், பாரதி விழாவில் பேசுவதற்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தோம்.


அப்பொழுதெல்லாம் இந்தக் கூட்டங்களை நடத்தும் செலவுக்கு நாங்கள் நன்கொடைக்குக் கிளம்புவோம். ஒவ்வொருவரிடமும் போய், ஐந்து ரூபாய்-பத்து ரூபாய் நன்கொடைக்காக நயந்து பேசி, வாங்கி, போதாக்குறைக்குக் கையிலிருந்து போட்டு, நாங்களே கூழ் காய்ச்சி, விழாவிற்கான சுவரொட்டிகளை இரவெல்லாம் ஒட்டி, கூட்ட நாளன்று மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகளைத்தூக்கிப் போட்டு, எங்களில் ஒருவரே தலைவராய் அமர்ந்து, அந்தப் பிரபலங்கள் பேசுகிற கூட்டங்களை நடத்தினோமே, இன்று ஏன் நமது ஜெயகாந்தனுடனான சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு விழாவை அரங்கேற்ற முடியவில்லை? இது, ஒரு வகையான நாணமும் கையறு நிலையில் தோன்றும் அவமானமும் கொள்ளவைக்கிறது.



ஐம்பதாண்டுகளின் கால மாற்றத்தை அனைவரும் எளிதில் ஊகிக்கலாம். கூட்டத்துக்குப் பிரதானமானவர்கள் அன்று பெஞ்சு தூக்கிப் போட்டார்கள். இன்று ஒரு கூட்டத்தில் பெஞ்சு தூக்கிப் போடுவதற்கே பிரதானமாக செலவு செய்ய வேண்டும். அன்றிருந்த தோழர்களில் பலர் இன்று இல்லை. இருக்கின்ற தோழர்களும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ இருக்கிறோம். அருகருகே இருந்து அடிக்கடி சந்தித்துக் கொள்கிற ஓரிரு நண்பர்களும்கூட ஒரு கூட்டம் போட்டுப் பார்ப்பதில் உள்ள பயன் குறைவால் உத்வேகமற்று உள்ளோம். நாங்கள், ஜெயகாந்தனை அவ்வப்பொழுது நேர்முகமாகச் சந்தித்துப் பேசும் சந்தோஷத்திலேயே சொக்கிவிடுவதால், மேற்கொண்டு செயல்புரியத் தோன்றுவதில்லை.


கூட்டம்போட்டுப் பேசுவதைவிடவும், ஏதோ ஒரு ரூபத்தில் எழுதிவைத்தால், அது என்றைக்காவது , எதற்காவது, யாருக்காவது பயன்படும் என்று தோன்றுகிறது. எதிர்காலத்தில் அவரை ஆராய வருகிற ஏராளமான சந்ததியினர்க்கு இதிலிருந்து கொஞ்சமாவது விஷயங்கள் கிடைக்கலாம்.


கூட்டம் கூட, அந்தக் கூட்டத்தைக் கேட்டு ஒரு நபரேனும் உருவானால், உயர்வாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். மலைப்பிரசங்கம் ஒரு மகாத்மாவை உருவாக்கியதாய் அறிகிறோம்! அந்த மகாத்மாவின் சின்னஞ்சிறு உரைகள், ஒரு தேசத்தையே திரள வைத்துவிட்டன.


இங்கே கூட்டம் என்பது அதன் பௌதீக லட்சணங்களை இழந்து, காலந்தோறும் நிகழ்கிற ஓர் ஆன்மீகச் சஞ்சாரத்தின் அடையாளமாகிவிடுகிறது!


காலதேச வர்த்தமானத்தில் கூட்டங்கள் என்பவை இன்றுள்ள கருத்துப்பரிமாற்ற ஊடகங்களென உருமாற்றம் கொண்டுள்ளன. அவ்வகையில், ஜெயகாந்தன் அவர்களை திருப்பத்தூர் நண்பர்கள் முதலில் சந்தித்ததன் அரை நூற்றாண்டையொட்டிய விழாவெனக் கருதி அவரைச் சந்தித்ததிலும், அவரோடு நாடெங்கும் சஞ்சரித்ததிலும் அமைந்த அனுபவங்களை 'சஞ்சிகை'யில் தொடர்ந்து எழுத விழைகிறேன்.


எல்லாம் யோசிக்கும் வேளையில், நடந்ததும், திரிந்ததும், கிடந்ததும், பேசியும் பாடியும் களித்ததும், சற்றே உண்டதும், உறங்கியதுமாகக் கழிந்த அந்த வாழ்க்கையில் என்னதான் கண்டோம்?


எல்லாமும் கண்டோம். இறந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் எனும் திரிகாலமும் கண்டோம். கவிதை கருத்தரிக்கிற கணங்களையும், மழையினூடே ஆலங்கட்டிகள்போல் புதிய புதிய சொற்கள் சரேல் சரேல் என விழுவதையும் கண்ணெதிரே கண்டோம். உள்ளூர்ச் சாதிகளின் வரலாறு முதற்கொண்டு உலக வரலாறுவரைக்கும் எங்கள்முன் ஓடின. விதவிதமான வினாக்களும் விடைகளும் உதிக்கும் இலக்கியப் பட்டறைகளைச் செவிமடுத்தோம். போதிப்பது அறியாதவாறு போதிக்கப்பட்டோம்! உலகிய இலக்கிய சாம்ராட்டுகளை எங்கள் உற்ற நண்பர்களைப்போல் உற்று கவனிக்கக் கற்றோம். கண்டறியாதன கண்டோம் என்கிற வாக்கியம் எங்களுக்கு முன்பிறந்து, எங்களுக்குக் கைலாகு கொடுக்கக் காத்துக்கொண்டிருந்ததைக் கண்டோம்.

மனித மனக் கற்பனைகள், நேரடியான நிஜம் என்கிற ஈரம் பட்டவுடன் எப்படி உறைந்திருந்த உயிர் கொஞ்சம் ஊறி, வீரியம் பெற்று, தம்மை மூடிய மண் பிளந்து வெளிக்கிளம்பி, பூதங்கள் ஐந்தும் பொருந்தியிருக்கவே தளிர்விட்டு, தழைத்துக்கொடியோடி, எண்ணமுடியாத அரும்புகள் எடுத்துப் பூச்சொரிகின்றன என்பதற்கு எங்களின் இந்த சொந்த அனுபவங்கள் சாட்சியாக அமையுமானால், அதுவே பயனுள்ள ஒன்று என்று நம்புகிறேன்; நம்பி எழுதுகிறேன்!

ஒருகாலத்தில், அவரோடு பயணப்பட்டுப் பழகிக் களித்த இந்த விவரங்களையெல்லாம், நான் ஒரு நோட்டுப்புத்தகம் வைத்துக் குறித்துக்கொண்டுதான் வந்தேன். அதனால், குப்புசாமியாகிய எனக்குக் "குறிப்புச்சாமி" என்கிற ஒரு பட்டப்பெயரும் கிடைத்தது.

எதனாலோ அப்புறம் அந்தப் பழக்கம் எனக்கு விட்டுப்போயிற்று. ஆனால், மனம் அந்தப் பயணங்களை மறந்துவிடாமல், இன்றளவும் அவற்றை நினைவுகூர்ந்து, காலச்சுழற்சியில் எங்களிடம் உண்டாகும் தன்னிரக்கச் சுழல்களில் நாங்கள் அடித்துச் செல்லப்பட்டு, அதல பாதாளத்தில் வீழாவண்ணம் எப்பேர்ப்பட்ட ராஜ வாழ்க்கை நாம் வாழ்ந்திருக்கிறோம் நண்பர்களே என்கிற பெருமிதச் சிகரங்களில் எங்களை ஏற்றுகின்றன.

அசைபோடுதல் என்ற ஒன்று உண்டு. அவசரகதியாக உட்கொண்டவற்றையெல்லாம், அலைச்சல் ஓய்ந்தபின், ஆழத்திலிருந்து கொண்டுவந்து, மென்று மென்று அனுபவித்து ருசித்துப் பசியை மேலும் மேலும் ஆற்றிக்கொள்கிற அந்தப் பண்பு மாந்தரிடத்தும் இல்லையா என்ன?

ஒரு புல்லே அசைபோடத்தக்கது எனில், நாங்கள் போதமுற்ற போதினிலே பொங்கிவந்த தீஞ்சுவையை அசைபோடாதிருப்பது எங்ஙனம்? (தொடர்வோம்...)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP