Friday, December 31, 2010

புத்தாண்டில் நமது பயணம்!

அன்பு நண்பர்களே, தோழர்களே!

வணக்கம். 2010-ஆம் ஆண்டு நமக்கு சவால்களையும், நம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் தந்து அவற்றை நாம் எப்படி சந்தித்தோம் என்பதைக்கண்டு, 2011-க்கு வழி தந்து விடை பெற்றிருக்கிறது.

சஞ்சிகையைப் பொறுத்தவரை சுதந்திரம், சமாதானம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்கான தனது போராட்டப்பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், உலகளாவிய பார்வையுடன் இந்தப் பயணத்தில் நண்பர்கள், தோழர்களையும் அரவணைத்து அழைத்துச்செல்லவும் இந்தப் புத்தாண்டில் சபதமேற்கிறது.

"பாரதி பிடித்த தேர்வடமும் நடு வீதி கிடக்கிறது-அதைப்
பற்றி இழுத்திட ஊர் கூடித் தவிக்கிறது.
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்!
நாம் நடந்தால் தேர் நடக்கும்-அன்றேல்
வெயில் மழையில் கிடக்கும்!" என்பது கவிஞர் பரினாமனின்
அறைகூவல் மட்டுமல்ல, எச்சரிக்கையும் கூட!

கவி வாக்குக்கு செவிசாய்த்துப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போமாக!

Read more...

Sunday, December 19, 2010

முகத்திரை கிழிகிறது


"It's the establishment vs the web" -- John Naughton



"மேலை நாடுகளின் அரசியல் ஆளும் வர்க்கங்கள் குழப்புவார்கள்,

மூடிமறைப்பார்கள், பொய்யுரைப்பார்கள், - அவர்களது ரகசிய முகத்திரை

கிழியும்போது செய்தியை எடுத்துச் செல்லும் தூதரையே கொல்ல

முயல்வார்கள்..."

உலகம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்க அரசாங்கத்துக்கு அனுப்பிய 2,51,287 ரகசியத் தந்திகளில் (கேபிள்கள்) அடங்கியுள்ள செய்திகளைக் கடந்த நவம்பர் 28-ஆம் தேதியில் இருந்து, 'விக்கிலீக்ஸ்' (WikiLeaks) புலனாய்வு இணையதளமும், அதனுடன் இணைந்து 'தி கார்டியன்', 'நியூயார்க் டைம்ஸ்', 'டெர் ஸ்பீகல்', 'லீ மாண்டே', 'எல் பைஸ்' ஆகிய உலகு தழுவிய 5 பெரும் நாளேடுகளும் நாள்தோறும் ரகசிய செய்திகள்21 நாட்களாகò தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. இது 'கேபிள்கேட்' என அழைக்கப்படுகிறது. அம்பலமாகி வரும் இந்த ரகசியத் தந்திகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன.
அரசாங்கத்தின் பொய்களை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் ரகசிய ஆவணங்கள் அம்பலமாவது இதுவே முதல் தடவை அல்ல. அதுபோல இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ரகசியங்கள் அம்பலமாவதை தடுக்க ஆளும் வர்க்கங்கள் தாக்குதல் தொடுப்பதும் இதுவே முதல் முறையல்ல. அதுபோல, இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக ரகசியத்
தகவல்களை ஆளும் வர்க்கங்கள் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றன. சட்டவிரோதப் போர்களில் ஈடுபடுவதற்காக, மனித உரிமைகளை மீறுவதற்காக, மக்களைக் கொன்று குவிப்பதற்காக, பூமியை மாசுபடுத்துவதற்காக அரசாங்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் மக்களின் பெயரால் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. இதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில், உண்மையை அறிந்து கொள்வது மக்களின் உரிமை. அந்த உரிமை இல்லாமல் ஜனநாயகம் நிலைத்துத் தழைக்க முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மீது இப்போது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், ஜனநாயகத்தை வெறுக்கும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைளுக்கு இன்னொரு உதாரணம்.

இத்தாக்குதலின் ஒரு பகுதியாக, விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டனில் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும், அதன் அடிப்படையில் அவரை நாடு கடக்தி சுவீடனுக்குக் கொண்டு செல்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் எந்த நேரத்தில், எந்தப் பின்னணியில் எடுக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அவை பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படுகின்றன என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆரம்ப விசாரணைக்குப் பிறகு கைவிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இப்போது மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு 'அமேசான்' (Amazon) நிறுவனம் வழங்கி வந்த இணையச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 'பேபால்' (PayPal), 'விசா' (Visa), 'மாஸ்டர்கார்டு' (Mastercard) போன்ற பணப் பரிவர்த்தனை வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணையதளப் பகுதியின் (domain) பெயர் மறுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் அதற்கு இருந்த வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இப்படி விக்கிலீக்ஸுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்தப் பின்ணியில்தான் ஜூலியன் அசாஞ்சின் கைது, பழிவாங்கும் நடவடிக்கை நடவடிக்கையே என்பது வெட்டவெளிச்சமாகிறது. விக்கிலீக்ஸுக்கு வாய்ப்பூட்டு போடும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்து வருகின்றன. அமெரிக்காவின் வலதுசாரி அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸைக் குறிவைத்துத் தாக்கிப் பேசி வருகின்றனர். ஜூலியன் அசாஞ்சைத் தீர்த்துக்கட்டவேண்டும் என்று கூட சிலர் கொக்கரித்து வருகின்றனர். அமெரிக்காவில் விக்கிலீக்ஸுக்கு எதிரான வன்முறை வெறிக்கூச்சல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சுக்கு ஆதரவாகத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி, பத்திரிகையாளர், எழுத்தாளர், இயக்குநரான ஜான் பில்ஜர், மனித உரிமை ஆர்வலர் ஜெமிமா கான் போன்ற புகழ்பெற்றவர்களும், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக, மனித உரிமை ஆர்வலர்களும் அணிதிரண்டுள்ளனர்.

கருத்து சுதந்திரத்துக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும், மெய்யான ஜனநாயகத்துக்கும், நீதிக்குமான இந்தப் போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் அனைவரும் செயல்துடிப்புடன் பங்கேற்க வேண்டியது காலத்தின் தேவை. எதிர்காலத்துக்கான ஜனநாயக ஊடகம், புதிய ஊடகம், மாற்று ஊடகம் என்று போற்றப்படும் இணையத்தின் எதிர்காலம் குறித்தும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துக்காட்டும் வகையில், "It's the establishment vs the web" என்னும் தலைப்பில், கார்டியன் பத்திரிகையில் ஜான் நாட்டன் (John Naughton) எழுதிய இந்தக் கட்டுரையை வெளியிடுவது காலப்பொருத்தம் உடையது என 'சஞ்சிகை' கருதுகிறது. 'இந்து' (THE HINDU) நாளிதழில், 2010 டிசம்பர் எட்டாம் நாள் இது வெளியானது.



ஆளும் வர்க்கத்துக்கும் இணையத்துக்கும் இடையிலான போர்


ஜான் நாட்டன்

''ஒரு முக்கியமான நெருக்கடியை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது'' என்பது அதிபர் தேர்தலின்போது ஒபாமா அணியின் முழக்கமாக இருந்தது. அந்த உணர்வின் அடிப்படையில் 'விக்கிலீக்ஸ்' அம்பலப்படுத்தி வரும் ரகசியங்கள் தொடர்பாக அரசாங்கங்கள் எடுத்துவரும் எதிர்நடவடிக்கைகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

நன்கு நிறுவப்பட்ட அரசு நிருவாகத்துக்கும் இணையக் கலாசாரத்துக்கும் இடையே முதன்முதலாக நடைபெறும் உண்மையான நீடித்த மோதலை இது பிரதிபலிக்கிறது என்பதுதான் மிகவும் கண்கூடான படிப்பினை. இதற்கு முன்பும் இந்த வகையில் பூசல்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இதுதான் உண்மையான ஒன்று.

முதலில் விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு இடமளிக்கும் இணையச் சேவை வழங்கும் அமைப்புகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 'அமேசான்', 'இபே', 'பேபால்' போன்ற நிறுவனங்கள், தங்கள் விதிமுறைகளும் நிபந்தனைகளும் 'விக்கிலீக்ஸு'க்கு சேவைகள் வழங்குவதைத் தடுப்பதாகத் திடீரெனக் 'கண்டுபிடித்து' அறிவித்தன. அதன் பிறகு 'பேஸ்புக்' இணைய தளத்தில் உடனுக்குடன் விக்கிலீக்ஸ் செய்திகளை வெளியிட்டு வந்த கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களை அமெரிக்க அரசு மிரட்டத் தொடங்கியது. இதுவரையில் அழகிய பனிமூட்டத்தால் மூடி மறைக்கப்பட்டிருந்தசகிப்புத்தன்மையின்மை பழைய்ழ குருடி கதவைத்திறடி எனும் பாணியில் இப்போது தலைகாட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய தீமைபயக்கும் தாக்குதல் விரிவாகத் திட்டமிடப்பட்டது. ஜனநாயகத்தின் மீதும், இணையத்தின் எதிர்காலம் குறித்தும் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இதில் கடினமான படிப்பினைகள் அடங்கியுள்ளன.

வேடிக்கை முரண்பாடு

'தாராள ஜனநாயக' நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்தான் இப்போது 'விக்கிலீக்ஸ் இணைய தளத்தை மூட வேண்டும் எனக் கூக்குரலிடுகின்றன என்பதுதான் இதில் உள்ள வேடிக்கை முரண்பாடு.

உதாரணமாக, ஓராண்டுக்குள் அமெரிக்க அரசு நிருவாகத்தின் கருத்துக்கள்தான் எப்படி மாறிவிட்டன என்பதைப் பார்ப்போம். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி வாஷிங்டன் நகரில் இணையத்தின் சுதந்திரம் குறித்து ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை பலராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. அது 'கூகிள்' (Google)இணையச் சேவை நிறுவனம் மீது சைபர்தாக்குதல் (cyberattack) நடத்தியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சீனாவுக்கு எதிரான கண்டனம் என்று பலரும் அதற்கு விளக்கம் அளித்தார்கள். ''தகவல் என்பது இதற்கு முன்பு ஒருபோதும் இந்த அளவுக்கு சுதந்திரமாக இருந்ததில்லை'' என்று ஹிலாரி கிளிண்டன் பிரகடனம் செய்தார். ''எதேச்சதிகார நாடுகளிலும் கூட, மக்கள் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்கும், அரசுகளை அதிகம் பொறுப்பேற்கச் செய்வதற்கும் தகவல் இணைய அமைப்புகள் உதவி வருகின்றன'' என்று அவர் முழங்கினார்.

கடந்த 2009 நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சீனாவுக்குச் சென்றிருந்தபோது, ''தடையின்றி எளிதில் தகவல்களைப் பெறுவதற்கான மக்களின் உரிமையை அவர் ஆதரித்துப் பேசினார். எந்த அளவுக்கு சுதந்திரமாகத் தகவல்கள் பரவுகின்றனவோ அந்த அளவுக்கு சமுதாயங்கள் வலுவடையும் என்று சொன்னார். செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவையாக அரசுகளை மாற்றுவதற்கு மக்களுக்கும், புதிய கருத்துக்கள் தோன்றுவதற்கும், படைப்பாற்றலுக்கு ஊக்கம் அளிப்பதற்கும் தகவல்களை எளிதில் பெறுதல் எந்த அளவுக்கு உதவி செய்கிறது" என்றெல்லாம் ஒபாமா பேசியதை ஹிலாரி கிளிண்டன் தனது பேச்சில் சுட்டிக் காட்டியிருந்தார். இப்போது நடப்பதை நாம் பார்க்கும்போது, ஹிலாரி கிளிண்டனின் பேச்சு ஒரு தலைசிறந்த நகைச்சுவையைப் படிப்பது போல இருக்கிறது.

ரகசியங்கள் வெளியாவது குறித்த அதிகார வர்க்கத்தின் வெறிக்கூச்சல், மேற்கத்திய ஜனநாயகங்களில் அரசியல் மேட்டுக் குடியினர் அவர்களது வாக்காளர்களை எந்த அளவுக்கு ஏமாற்றி வருகின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது.

சூட்சமம்தான் என்ன?

அமெரிக்க - ஆங்கிலேய - ஐரோப்பிய சாகசம் ஆப்கானில்தானில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை மட்டுமின்றி, மிக முக்கியமாக, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற வட அட்லாண்டிக் ஒப்பந்த (நேட்டோ) நாடுகளின் அரசுகள் அதைத் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கின்றன என்பதையும் 'விக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த மடமைத்தனத்துக்கு நிதி வழங்கும் வரி செலுத்துவோரான வாக்காளர்களை அவர்கள் எதிர்கொள்ள முடியாது என்பதும், அந்த மக்களிடம் அவர்கள் இதைச் சொல்ல முடியாது என்பதும்தான் பிரச்சினை. இப்போது வெளியாகி இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதர் அனுப்பிய ரகசியத் தந்திச் செய்திகள், 1970-களில் அமெரிக்கா ஆதரித்து வந்த தென் வியத்நாம் அரசைப் போன்ற ஊழல் அரசாக, தகுதியற்ற அரசாக ஆப்கானிஸ்தானின் கர்சாய் அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வியத்நாமில் எப்படி சிக்கிக் கொண்டிருந்ததோ அதே போல ஆப்கானில் அமெரிக்கா சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவை தெளிவாகக் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தானை ஒரு செயல்படும் ஜனநாயகமாக மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், குறைந்தது அதை ஒரு தகுதியான அரசாக மாற்றுவதற்குக் கூட உண்மையில் வாய்ப்பு இல்லை என்பதை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் உணர்ந்துள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் காட்டுகின்றன. ஒலிகானா இருட்குகையில் அந்த நாடுகள் சிக்குண்டு கிடப்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலபடுத்தியுள்ளது. ஆனால் இதை ஒப்புக் கொள்வதற்கு வாஷிங்டனிலும், லண்டனிலும், பிரஸ்ஸல்ஸிலும் உள்ள அரசியல் தலைமைகள் மறுக்கின்றன.

வியத்நாம் எப்படியோ அப்படி ஆப்கானிஸ்தானும் ஒரு புதை மணல்தான். கட்டாயப்படுத்தி ஆள் சேர்க்கப்படாத படைகளைக் கொண்டு இப்போது போர் நடத்தப்படுகிறது என்பதும், அப்பாவி மக்கள்மீது கண்மூடித்தனமாக குண்டு வீசுவதில்லை என்பதும்தான் இப்போது நடக்கும் போரில் ஒரே வேறுபாடு.

இணையச் சேவையினர் யார் பக்கம்?

இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் யார் பக்கம் இருக்கின்றன என்பது பற்றி விந்தையான கற்பனைகளைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் 'விக்கிலீக்ஸ்' மீதான தாக்குதல்கள் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாகும். இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் தங்கள் சர்வர்களில் உங்கள் விவரங்களை சேமித்து வைக்கிற அல்லது உங்கள் வலைப் பதிவுக்கு இடம் அளிக்கிற அல்லது இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் அமைந்துள்ள 'வர்ச்சுவல்' கம்ப்யூட்டர்களை நீங்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்வதற்கு வகை செய்கிற 'கூகிள்', 'பிளிக்கர்', 'பேஸ்புக்', 'மைஸ்பேஸ்', 'அமேசான்' போன்றவைதான் இந்த இணையச் சேவை நிறுவனங்கள். எந்த விதிமுறைகள், நிபந்தனைகளின் கீழ் இலவச சேவைகளையும், பணம் செலுத்தி பெறும் சேவைகளையும் வழங்குகின்றனவோ, அந்த விதிகளும் நிபந்தனைகளும் அவற்றின் நலனுக்கு அவசியம் என்றால் உங்களுக்கு வழங்கிவரும் சேவைகளை அவை கைவிடுவதற்கான காரணங்ளையும் அளிக்கின்றன. இணையச் சேவை நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள், ஒருநாள் அவை உங்கள் காலை வாரிவிடும் என்பதுதான் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நீதி.

நிலைமை சிக்கலான உடனே தனது சேவையில் இருந்து விக்கிலீக்ஸை கழற்றிவிட்ட அமேசான் நிறுவனத்தைப் பாருங்கள். இந்த விஷயத்தில் ஆணவம் தலைக்கேறித் திரியும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர் ஜோ லீபர்மேன் அமேசான் நிறுவனத்துக்கு நெருக்குதலும் தொல்லையும் கொடுத்ததாகத் தோன்றுகிறது. ''விக்கிலீக்ஸுடன் அதன் உறவு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அமேசான் நிறுவனத்தைக் கேட்கப் போவதாகவும், களவாடப்பட்ட ரகசியத் தகவல்களை வெளியிடுவதற்கு அவற்றின் சர்வர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் அமேசானும் பிற இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களும் என்ன செய்யப் போகின்றன என்று கேட்க இருப்பதாகவும்'' ஜோ லீபர்மேன் பின்னர் அறிவித்தார். அப்படியென்றால், ''ஒரு ரகசிய தகவல் செய்தியை வெளியிடுவதற்கு நாங்கள் ஏற்பாடுகளைச் செய்யும்போது, 'நியூயார்க்கர்' பத்திரிகையை அச்சிடும் அச்சகத்தை நடத்தும் நிறுவனத்தை அவரோ, வேறு செனட் உறுப்பினர்களொ தொலைபேசியில் அழைத்து, அதை வெளியிடாமல் எங்களைத் தடுத்து நிறுத்தும்படி அந்த நிறுவனத்திடம் சொல்ல முடியும் என்று லீபர்மேன் கருதுகிறாரா?'' என்று 'நியூயார்க்கர்' பத்திரிகையின் ஆமி டேவிட்சன் அண்மையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேற்கத்திய ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்கு ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் உண்மையிலேயே அம்பலப்படுத்தி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மேற்கத்திய அரசியல் மேட்டுக் குடியினர் (அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வங்கிகளை முறைப்படுத்தாமல்) செயல்திறமை அற்றவர்களாக, (ஆயுத வணிகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து அரசுகளும்) ஊழல் மலிந்தவர்களாக, (இராக்கில் அமெரிக்காவும், இங்கிலாந்தும்) போர்வெறி பிடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவை காட்டுகின்றன. இருந்தும்‌, எந்த வகையிலும் அவர்கள் எங்கேயும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதில்லை. மாறாக, குழப்புவதிலும், பொய்யுரைப்பதிலும, மூடி மறைப்பதிலும்‌ ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் ரகசியமெனும் முகத்திரை அகற்றப்படுகிறபோது, அவர்களுடைய எதிர்நடவடிக்கை என்பது செய்தியை எடுத்துச் செல்லும் தூதுவரையே கொல்லும் கொடுஞ்செயலாக இருக்கிறது.

ரகசியங்கள் வெளியாவது குளறுபடியானதாகவும், தார்மிக, சட்ட எல்லைக்கோடுகளைச் சோதிப்பதாகவும் இருக்கும். பெரும்பாலும் அது பொறுப்பற்றதாகவும், பொதுவாக இக்கட்டான நிலையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் முறைப்படுத்துவற்கு எதுவும் செய்யாதபோது, அரசியல்வாதிகள் அஞ்சுகிறபோது, வழக்கறிஞர்கள் வாய்மூடிக் கிடக்குமபோது, தணிக்கைமுறை கறை‌பட்டிருக்கும்போது--எஞ்சியிருப்பது எல்லாம் இதுதான் என்று 'கார்டியன்' ஏட்டில் சைமன் ஜென்கின்ஸ் அண்மையில் எழுதி இருந்தார். நமது ஜனநாயக அரசுகளின் அதிகாரவர்க்க நடவடிக்கையானது, இணையம் என்கிற கூறிய வாளால் ஆடைகள் கிழித்தெறியப்பட்ட கொடுங்கோல் சக்ரவர்த்திகளின் ஆங்காரக் குரலாத்தான் ஒலிக்கிறது.

இது நம்மை இந்த சர்ச்சையின் மிகப் பெரிய முக்கியத்துவத்தின்பால் இழுத்து வருகிறது. இணையம் என்பது எதேச்சதிகார ஆட்சிகளுக்கு மட்டுமின்றி தங்களுக்கும் கூட முள்ளாகத் தைக்கிறது என்பதை மேலைய ஜனநாயகங்களின்அரசியல் மேட்டுக்குடியினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களும் அவர்களது அதிகார அமைப்புகளும், அரைகுறை பார்வைகொண்ட, பைத்தியம் பிடித்த அரக்கர்கள், ஒரு உளவாளியைத் தாக்கி அழிக்க முற்படுவதுபோல இணையத்தை மிதித்து நசுக்குவதற்கு முயல்வதைப்பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அஞ்சி நடுங்கி அவர்கள் எண்ணத்துக்கு வளைந்து கொடுப்பதைப் பார்க்கும்போது ஆழந்த கவலை ஏற்படுகிறது. இதுவரையில் இதில் 'டுவிட்டர்' இணைய தளம் மட்டும்தான் விதிவிலக்காக இருக்கிறது.

ஆனால் அரசியல்வாதிகள் இப்போது எந்த நிலையை மேற்கொள்வது என்ற இக்கட்டான தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர். உளவாளிகளுக்கு எதிரான பழைய அணுகுமுறை இப்போது பயனளிக்காது. விக்கிலீக்ஸ் இணையதளம் இணையத் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கவில்லை. அந்த ரகசியத் தந்திகளின் - அதற்கு மேலும் வேறு இருக்கலாம் - ஆயிரக்கணக்கான பிரதிகள் பிட்டாரன்ட் (Bittorrent) போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. நமது ஆட்சியாளர்களுக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரகசியங்களை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் போன்ற இணைய தளங்கள் செயலாற்றும் உலகில் அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இணையத்தையே அவர்கள் மூடிவிட வேண்டும். இதில் அவர்கள் எதைச் செய்யப்போகிறார்கள் என்பது அவர்கள் கையில்!

தமிழில்: ஜெயநடராஜன்

Cartoon: Courtesy THE HINDU (08-12-2010)

Read more...

Monday, December 13, 2010

பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது: மதுரையில் ஜெயகாந்தன் பேச்சு





மதுரை, டிச. 13-

பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்.

மீனாட்சி புத்தக நிலையத்தின் பொன்விழா மதுரையில் 12ம்தேதி [12.12.2010] நடைபெற்றது. இதில் பொன்விழா மலரை வெளியிட்டு ஜெயகாந்தன் பேசுகையில் கூறியதாவது:

தமிழில் பிழைதிருத்தவே நான் அச்சகத்தில் பணிபுரிந்தேன். அங்கேதான் எனக்கு மீனாட்சி புத்தக நிலையத்தின் செல்லப்பன் அறிமுகமானார். நான் திருத்தம் செய்த புத்தகத்தில் பிழைகளே இருக்காது. ஆகவே, ஏராளமான பதிப்பகத்தார் என்னை பிழைதிருத்த நாடினர்.

மதுரையில் 1953ல் எனது ஆசான் எஸ்.ராமகிருஷ்ணன் தந்த ஊக்கத்தால், அவரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே எழுத ஆரம்பித்தேன்.

எனது எழுத்தைப் படித்தவர்கள் அதை மறப்பதில்லை. அவர்கள் வேறு எழுத்தாளரைத் தேடிப் போவதில்லை. என்னை அளவுகோலாக வைத்தே மற்றவர்களது எழுத்தைப் பார்க்கிறார்கள். நான் இப்போது நிறைய படிக்கிறேன். இப்போது படிக்கையில் சங்க இலக்கியம் புரிகிறது. பிறமொழி மீதுவெறுப்புக் கொள்வதன் மூலம் தமிழார்வம் ஏற்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழறிவு ஒருவரைக் குறையுள்ளவராக, தற்புகழ்ச்சிக்காரராக ஆக்குவதில் எனக்கு சம்மதமில்லை.

இப்போது எழுதுகிறவர்கள் அதிகம் இருப்பதைப் போல, எழுத்தைப் படிப்பவர்கள் அந்த அளவுக்கு அதிகம் இல்லை என்பதில் வருத்தமாக உள்ளது. உண்மையில், எழுதுகிறவர்கள் மெஜாரிட்டியாகவும், படிப்போர் மைனாரிட்டியாகவும் உள்ளனர்.

தம்மொழி மீது அன்பு கொண்டவர்களுக்குப் பிற மொழி மீது வெறுப்பு வராது. மற்றமொழிகளிலேயே தமிழ்தான் சிறப்பானது என்று ஆராய்ந்து கூறுவதற்கும், அன்பு உணர்வால் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. எனக்குத் தமிழ் மீது அபிமானம் உள்ளது; பற்று இல்லை. பற்றானது விடுபடு வது, விட்டுப்போவதாகும். ஆனால், அபிமானம் விட முடியாதது. இது வடமொழிச் சொல்லாக இருப்பதில் எனக்கு வருத்தம்தான்.

தமிழில் பல வார்த்தைகள் இல்லாமல் இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. அதைச் சேர்த்துக்கொள்ளலாம். தொல்காப்பியர்கூட, திசைச்சொல், வடசொல் எனக் கூறியுள்ளார். வடமொழிக்கும், தமிழுக்கும் மரபார்ந்த சொந்தம் உள்ளது.

வலிந்து தமிழாக்கம் செய்வது சரியல்ல. மாறுபட்ட அர்த்தத்தைத்தரும் போது மொழி கடன் வாங்குகிறது. தேசமே கடன் வாங்கும்போது மொழி வாங்கு வது சரியானதே. கம்பன் அதுபோல நிறையச்சொற்களைப் பயன்படுத்துகிறார்.

இதுபோல கூறுவதால், எனது தமிழார்வத்தில் பலருக்கும் ஐயம் ஏற்படுகிறது. இதைப் பாரதியாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது. தமிழில் சிறப்பு ‘ழ’ கரம் உள்ளது போல் வேறு மொழிகளில் இல்லை. ஆனால், இதை மாவட்டத்துக்கு மாவட்டம் தங்களுக்கு ஏற்பவே உச்சரிக்கிறார்கள்.

தமிழ், குறைவில்லாதது. வால்மீகி ராமாயணம் ராமரை சிறந்த அரசராகக் காட்டியது. கம்பராமாயணம் ராமரை சிறந்த மனிதராகக் காட்டியது. காப்பி யங்களும், புராணங்களும் வடமொழியில்தான் உள்ளன . அவற்றைக் கற்றால் தான் தமிழின் பெருமை விளங்கும். பிறமொழிகளைத் தெரிந்தாலே தமிழின் பெருமை விளங்கும்.

மில்டனைவிட கம்பன் சிறந்தவன் என எஸ்.ராம கிருஷ்ணன் கூறுவார். பிற மொழியைக் கற்பதால் நமது பெருமை குறையாது. நாம் யாருக்கும் அடிமை யாகமாட்டோம். பெருமையுடையோரைப் பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜெயகாந்தன் பேசினார்.


நன்றி: தீக்கதிர் (13.12.2010)

Read more...

Sunday, December 12, 2010

இந்தியா உலகுக்கு அளிக்கிறது...



சுதந்திர பர்மாவின் தந்தை ஆங்க் சன் அவர்களின் தவப்புதல்வியும் பர்மாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவரும், 1989 முதல் 2010 வரையுள்ள 21 ஆண்டுக்காலத்தில், 15 வருடங்கள், வீட்டுச்சிறையில் முடக்கிவைக்கப்பட்டவருமான ஆங் சன் சூக்கி, கடந்த நவம்பர் 13-ல் விடுதலை செய்யப்பட்டார். காரக்கிருகவாசமும், ராணுவ ஆட்சியின் அடக்குமுறையும் அவரது மன உறுதியைக் குலைக்கவில்லை. அவர் நிறுவிய தேசிய ஜனநாயக லீக், 1990 பர்மிய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 59 சதவீத வாக்குகளையும், 81 சதவீத இடங்களையும் பெற்று வெற்றிவாகை சூடியபோதிலும், அது ஆட்சியை அமைக்க அனுமதிக்கவில்லை ராணுவ ஆதிக்க ஆளவந்தார்கள். இந்தியாவில், தனது பள்ளிக்கல்விக் காலம் முதலே நம் நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்த சூக்கி அவர்கள், பாரதத்திருநாட்டின் மீது தனி மதிப்பும் மரியாதையும் கொண்டவர். தியாக வேள்வியில் புடம்போட்டெடுக்கப்பட்ட அந்த 65-வயது வீராங்கனையைத் தேடிவந்த விருதுகளும், சிறப்புகளும் ஏராளம். 1993-ஆம் ஆண்டு, சர்வதேசப் புரிந்துணர்வுக்கான நேரு விருது அவருக்கு அளித்து கவுரவித்தது இந்தியா. விருதினை ஏற்று சூக்கி ஆற்றிய உரையின் தமிழாக்கம் இதோ:






குடியரசுத் தலைவர் அவர்களே, குடியரசுத் துணைத் தலைவர் அவர்களே, பிரதமர் அவர்களே, மாட்சிமைமிகு தூதர்களே,நேரு விருதுக் கமிட்டியின் உறுப்பினர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, அன்பு நண்பர்களே!




எண்ணக் கலவைகள் பிரவகிக்கும் நிகழ்ச்சி இது. உறுதியான நட்புறவுகள், மனமொத்த அரசியல் லட்சியங்கள், எண்ணற்ற இந்திய மக்களுடன் என்னைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. இந்தியாவைப் பற்றியோ, "பண்டிட்ஜி" என்று எப்போதுமே எங்கள் குடும்பத்தில் குறிப்பிடுவோமே அந்த பண்டிட் நேரு அவர்களையோ நான் அறிந்திராத காலம் எதுவும் என் நினைவில் இல்லை. சர்வதேசப் புரிந்துணர்வுக்காக அவர் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விருது வழங்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.




அதே நேரத்தில், தனிநபருக்காக வழங்கப்படுவதாக இல்லாமல், பர்மிய ஜனநாயக இயக்கத்தின் பிரதிநிதி என்கிற வகையில்தான் இந்த விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளேன். உலகமுழுவதிலும் மனித கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக அளப்பரிய பணியற்றியமைக்காக வழங்கப்படும் விருதுகளுக்காக நான் தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் ஏற்படுவதைப்போலவே இப்போதும் பணிவும் நன்றியுணர்வும் என்னை ஆட்கொள்கின்றன. எங்கள் நாட்டின் மக்கள் பாதுகாப்பாகவும் கவுரவத்துடனும் வாழவேண்டும் என்பதை உத்திரவாதப்படுத்துகின்ற கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் உரிமைகளுக்காகத் தினம் தினம் தங்கள் உயிரையே பணயம் வைத்துச் செயல்படும் எண்ணற்ற ஆண்களும் பெண்களும் எனது சொந்த நாட்டில் உள்ளனர்; அவர்களுக்கு எந்தவிதமான சர்வதேச அங்கீகாரமென்கிற பாதுகாப்பும் இல்லாமலேயே இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். அந்த வீரர்கள், வீீராங்கனைகளின் போராட்டத்தை நினைவுகூர்வதற்கும், அவர்களின் பெயரால் நேரு நினைவுப் பரிசைப் பணிவுடன் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்புக்கு நன்றி.




சுதந்திர, ஜனநாயகபூர்வமான நாடாக பர்மா மலர்வதற்கு அளப்பரிய தியாகம் புரிந்தவர்களுக்குப் புகழ்மாலை சூட்டுவதற்கும், இந்தியாவுடன் எனது உறவுகளைப் புதிப்பித்து நேர் செய்வதற்கும்--சூழ்நிலை அனுமதிக்கும்பட்சத்தில் நேரில் வந்து விருதினைப் பெற்றுக்கொள்ளவே விழைந்தேன். ஆனால் அது வாய்க்காததால், ஐக்கிய நாடுகள் சபையில் முதல் பர்மிய உறுப்பினர் என்னும் பெருமைக்குரியவரும், சர்வதேசப் புரிந்துணர்வு தேவை என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்துவருபவருமான எமது அன்புக்குரிய குடும்ப நண்பர், அத்தையென எங்களால் போற்றப்படுபவரை எனது பிரதிநிதியாக இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளத் தேர்வு செய்துள்ளேன். இந்த நிகழ்ச்சியின் மகத்துவம், கவுரவத்துக்கேற்ப எனது சார்பில் விருதினை அவர் ஏற்பார்.




சர்வதேசப் புரிந்துணர்வுக்காக நேரு ஆற்றிய பங்களிப்பு, வேறுபட்ட கலாசாரங்கள், மாறுபட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றுக்கு நடுவிலான இடைவெளியைக் குறைப்பதற்காக உலக அரங்கில் தன் வாழ்நாளில் செய்த அரும்பணிகளையும் கடந்து செல்கிறது. பொருளாயத சக்தியின்பால் மென்மேலும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் இந்த உலகில் அனைவருக்கும் மனிதப்பண்புகளை உரித்தாக்கும்பொருட்டு போராடும் மக்களை நாடிச்செல்வதற்கு அவரது ஆன்மா வழிகாட்டும்.



எனது காரக்கிருகவாசத்தின்போது, மகாத்மா காந்தி, பண்டிட் நேரு ஆகியோரின் மணிவாசகங்களும், எழுத்துக்களும் எப்போதும் உத்வேகமும் ஆதரவும் அளிக்கிற ஊற்றுக்கண்களாகத் திகழ்ந்தன. எனது மரியாதைக்குரிய வழிகாட்டிகள், ஆசான்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இந்த இரு மகத்தான இந்தியர்களும் உண்டு.



வெளியுலகத்துடன் எனது தொடர்புகள் துண்டிக்கப்பட்ட ஆறாண்டுக்காலம் முழுவதிலும் எனது வீட்டின் தாழ்வாரத்தில் ஒரு காகிதச் சுருளைத் தொங்கவிட்டிருந்தேன். பண்டிட்ஜி அவர்களின் சுயசரிதையிலிருந்து காலத்தால் அழியாத அவரது வார்த்தைகளை அதில் எழுதிவைத்திருந்தேன். எனது மனதில் பதிந்துவிட்ட அந்தப் பகுதியை அப்படியே இங்கே தருகிறேன்:




"சட்டமும் ஒழுங்கும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்று என நமக்குச் சொல்லப்பட்டது. இயல்பாகவே சட்டம் ஒழுங்கை முழுமையாக ஆதரிக்கும் தன்மை கொண்டவன் நான். வாழ்வில் கட்டுப்பாட்டை விரும்பும் நான், அராஜகம், ஒழுங்கின்மை, செயல்திறன் இல்லாமை ஆகியவற்றை விரும்புவதில்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் மக்கள்மீது திணிக்கின்ற சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் மதிப்பு குறித்து சந்தேகம் கொள்ள வைத்தன. சிலசமயம் அதற்காக நாம் கொடுக்கின்ற விலையோ மிக அதிகம். அதாவது, சட்டம் என்று சொல்லப்படுவது ஆதிக்கப் பிரிவின் விருப்பத்தையும், ஒழுங்கு என்பது சர்வவியாபகமான அச்ச உணர்வையும் பிரதிபலிப்பதாக ஆகிவிடுகிறது. சொல்லப்போனால், சில சமயம் இத்தகைய சட்டம் ஒழுங்கு என்று சொல்லப்படும் நிலைமையை, சட்டம் ஒழுங்கின்மை என்று அழைப்பதே சாலப்பொருத்தம். எங்கும் நிறை அச்சத்தின் அடிப்படையில் சாதிக்கப்படும் எதுவும் விரும்பத்தக்கதாக இருக்காது. அரசு நிர்ப்பந்தத்தின் மூலமாக அல்லது அதுபோன்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் தாக்குப்பிடிக்காது என்னும் ரீதியில் ஏற்படுத்தப்படும் ஒழுங்கு, ராணுவ ஆட்சியைப்போன்றதாக இருக்குமேயல்லாமல், மக்களின் ஆட்சியாக இருக்காது. கவிஞர் கல்ஹனாவின் ஆயிரம் ஆண்டு பழைமைவாந்த காஷ்மீரத்துக் காவியமான ராஜதரங்கிணியில், சட்டம் ஒழுங்கைக் குறிக்கும் வகையில் ஒரு சொற்றொடர் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது. தர்மம், அ-பயம்--அதாவது நேர்மையையும் பயமின்மையையும் பேணிக்காப்பது அரசனின், ஆட்சியின் கடைமை என்று அது கூறுகிறது. சட்டம் என்பது வெறுமனே சட்டதிட்டங்களைக் குறிப்பிடுவதாக அல்லாமல், மேலும் பொருள் பொதிந்ததாக உள்ளது ; ஒழுங்கு என்பது மக்களின் அச்சமின்மையே. அச்சம் கொண்டு கலங்கிப்போயிருக்கும் மக்களின்மீது 'ஒழுங்கை'த் திணிப்பதைக்காட்டிலும், அச்சமின்மையை மக்களின் மனதில் இருத்தச்செய்வது எவ்வளவு விரும்பத்தக்க விஷயம்!"




மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்தியில் பண்டிட் நேரு அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் என் மனத்திலும் நிறைந்துள்ளன. பல விஷயங்களில் நாங்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறேன்; எனது அன்னையுடன் இந்தியாவில் நான் இருந்த காலத்தில், அவரை நன்கு அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேனே என்பதை நினைத்து வருந்துவதுண்டு. அந்த காலகட்டத்தில், எனது பெற்றோரின் நண்பராகத்தான் அவரைப் பார்த்தேனேதவிர, எனது நண்பராகவே அவரைக் கருதிப் பார்க்கும் காலம் ஒருநாள் வரும் என்று கற்பனைசெய்துகூடப் பார்க்கவேயில்லை.




இத்தகைய ஆழ்ந்த மனிதநேயத்தின்மூலம்தான் பண்டிட் நேரு அவர்கள், பலமுறை இனம், தலைமுறை என்னும் தடைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி உயர்ந்து நின்றார். பர்மாவின் சுதந்திரம்குறித்த பேச்சுவார்த்தைக்காக லண்டன் செல்லும் வழியில், பண்டிட் நேருவையும் இதர இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதற்காக டெல்லிக்கு வந்தார் என் தந்தை. தன்னைக்காட்டிலும் இருபத்தாறு வயது இளையவரான அவரிடம், ஒரு தந்தையைப் போன்ற பரிவைக்காட்டினார் பண்டிட்ஜி. மோசமான நிலையில் இருந்த அந்த இளைஞரின் பருத்தி யூனிஃபார்ம் மீது அவரது விமர்சனபூர்வமான ஆனால் கரிசனமான பார்வை விழுந்தது; அந்த ஆடை அவருக்குச் சரிவராது என்ற முடிவுக்கு வந்தார். அவர், தனது தையற்கலைஞர்களை வரவழைத்து, பல நேர்த்தியான, குளிருக்கேற்ற கம்பளி யூனிஃபார்ம்களை துரிதகதியில் தைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இங்கிலாந்து, என்றைக்கும் இல்லாத அளவு மோசமான பனிக்காலத்தில் உழல்வதுகுறித்துக் கேள்விப்பட்ட பண்டிட்ஜி, ஒரு பெரிய 'கோட்'டையும் வரவழைத்தார். அளவு மிகவும் பெரிதான அந்த 'கோட்டு'க்குள் எனது தந்தை தத்தளிப்பதுபோன்ற பிரசித்திபெற்ற புகைப்படமொன்று உண்டு.




1960-ல் எனது தாய் இந்தியாவுக்கான பர்மாவின் தூதுவராக நியமிக்கப்பட்டபோது, ஆழ்ந்த நட்புறவின்மூலம் பாதுகாப்பளித்தவர் பண்டிட் நேரு அவர்கள்; பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சமயங்களில், அவரிடம் குறிப்பாக நலம் விசாரித்துக் கொள்வார். அதுபோன்ற சீரிய மனிதத்தன்மையின்மூலம்தான் எல்லா இனங்கள்,மதங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களையும் வென்றார் பண்டிட் நேரு. ஜனநாயகம் மற்றும் சர்வதேசியம்குறித்த அவரது கொள்கைபூர்வமான ஆதரவு நிலைகளை ஏற்காதவர்கள்கூட, அவரது ஞானத்தையும் நேர்மையையும் மதிக்கலாயினர்.




முறையற்ற நமது உலகைச் சுற்றிச் சூழ்ந்துள்ள எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஜனநாயகபூர்வமான அரசியல் அமைப்புதான் சிறந்த தீர்வை அளிக்கிறது என்பதில் நம்பிக்கைகொண்ட நம்மைப்போன்றவர்களுக்கு பண்டிட் நேருவின், இந்தியாவின் சாதனைகள் வலிமைமிகு உத்வேகமளிக்கின்றன. பல இனங்கள், மொழிகள், மதநம்பிக்கைகள் நிலவுகின்ற இந்தத்துணைக்கண்டம்தான், பயங்கரமான வகுப்புவாதக் கலவரங்கள், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றின் தாக்குதலால் சீரழிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கம்பீரமாய் மீண்டும் எழுந்துநின்று புதிய எதிர்காலத்தை வசப்படுத்த முன்னோக்கி நடைபோடத்தொடங்கிய இந்தத் தேசம்தான், உலகின் இந்த மாபெரும் ஜனநாயக நாடுதான், மனிதனின் உள்ளார்ந்த கண்ணியத்தை மதிக்கின்ற, சுதந்திரம் மற்றும் சுய ஆட்சிக்குத் தகுதியானவனாக மனிதனை கவுரவப்படுத்துகின்ற ஆட்சிமுறையால் கட்டுக்குள் கொண்டுவரமுடியாத பிரச்சனையென்று எதுவுமில்லை என்பதை நிரூபிக்கத் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. எங்கள் நாடும்கூட மக்களின் விருப்பத்தால் வழிநடத்தப்படுகின்ற, தர்மத்தாலும், அ-பயத்தாலும் ஆளப்படுகின்ற ஜனநாயக நாடாக மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது மிகப்பெரும்பாலான பர்மிய மக்களின் நெஞ்சார்ந்த நம்பிக்கையாகும்.




பொது எல்லைப்பகுதிக்கும் அப்பால், இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே பொதுவான விஷயங்கள் பலவுண்டு. பர்மிய கலாசாரத்தின் முதுகெலும்பான புத்தமதம், இந்திய மண்ணில் முகிழ்த்ததாகும். நமது யுகத்தின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியினால் சிறுத்தும் சிக்கலாகியும், ஆபத்துமிகுந்துபோயுமிருக்கிற உலகில், புத்தமதம் போதிக்கின்ற பண்புகளான சகிப்புத்தன்மை, நேசமிகு அன்பு, தயாளகுணம், சுயகட்டுப்பாடு ஆகியவை விலைமதிப்பற்றவை.




இந்தியா தனது மகத்தான தலைவர்களின் பாரம்பர்யத்தில் தொடர்ந்து பயணிக்கிறது. எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான தேசத்திடமிருந்து சர்வதேச புரிந்துணர்வுக்காக விருதொன்றினைப் பெறுவது கவுரவத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.




குடியரசுத் தலைவர் அவர்களே, நேரு விருதுக் கமிட்டியின் உறுப்பினர்களே, எனது நாட்டுக்கும், எனது மக்களுக்கும், எனக்கும் நீங்கள் செய்துள்ள கவுரவத்திற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




நன்றி!




தமிழில்: விதுரன்

Read more...

Wednesday, December 8, 2010

11th INTERNATIONAL COMMUNIST MEET, NEW DELHI

சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின்
புதுடெல்லி மாநாடு:
எனது மனப்பதிவுகளும்,
ஆலோசனைகளும்
சதுரானன் மிஷ்ரா



[இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் சதுரானன் மிஷ்ரா. 1996 முதல் 1998வரை மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணி அரசில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் பொறுப்பு வகித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) தலைவராகவும் விளங்கியவர். புது டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு குறித்து 'மெயின்ஸ்ட்ரீம்' வார ஏட்டில் (5.12.2009) அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அப்படியே தரப்படுகிறது.]



ம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு 2009-ஆம் ஆண்டு நவம்பர் 20-22 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்றது. மாநாட்டின் முடிவில் டெல்லி மாவ்லங்கர் அரங்கில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் மக்களின் வரவேற்பாக அது வடிவெடுத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!" என்னும் முழக்கம் திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நான், எனது இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நண்பர்களிடம், "....ஆனால் இந்தியத் தொழிலாளர்கள் மட்டும் பிளவுபட்டே இருக்கவேண்டுமோ!" என அங்கலாய்த்தேன்.

உலகளாவிய இயக்கம்

இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்த்து முறியடிக்க உலகுதழுவிய இயக்கம் நடத்துவதற்கு இந்த சர்வதேச மாநாடு எந்த அறைகூவலையும் விடுக்கவில்லை. உண்மையில், பொருளாதார நெருக்கடி ஆரம்பமானவுடனேயே இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்க வேண்டும். மாநாட்டின் இறுதியில் மண்டபத்தில் கூட்டம் நடத்தியதற்குபதிலாக மாபெரும் மக்கள் பேரணியை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், அது, நமது மக்களையும், உலகப்பிரதிநிதிகளையும் உத்வேகப்படுத்தியிருக்கும். கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இத்தகைய சர்வதேச மாநாடு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுவதால் இது அவசியமாகிறது.

பொதுக்கூட்டமாகவும், மக்களின் வரவேற்பாகவும் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், சர்வதேச மாநாட்டின் முடிவுகள் சம்பந்தமான முக்கிய அம்சங்களை அறிவார்ந்த இந்தியத் தோழர் ஒருவர் எடுத்துரைத்தார். பிறந்த சிசுவானது எவ்வாறு மீண்டும் கருவறைக்குள் நுழையமுடியாதோ அதைப் போலவே 1917 ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சியில் ஜனித்த சோஷலிசமானது எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் ஜீவித்திருக்கும் என்றும், முதலாளித்துவ நெருக்கடிக்கு சோஷலிசம்தான் ஒரே தீர்வு என்றும் முழங்கினார். ஆனால், எழுபதுவயதையும் தாண்டிய சோஷலிசக் குழந்தையானது முதலாளித்துவக் கருவறைக்குள் ஏற்கனவே புகுந்துகொண்டது என்பதை அந்தத் தோழர் மறந்துவிட்டார் போலும்!

உலகமுழுவதிலும் சோஷலிசப் பேரரணாக விளங்கிய சோவியத் யூனியனின் வீழ்ச்சியால் சோஷலிசத்தின்பால் ஏற்பட்ட பெரும் அவநம்பிக்கையையும், ஆர்வமின்மையையும் இந்த சர்வதேச மாநாட்டின் முடிவுகள் போக்கத் தவறிவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.


சோஷலிசம் யாருக்கு?

இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே தனக்குச் சாதகமாக இருந்தபோதிலும், எந்த ஒரு நாட்டிலும் ஆட்சியை நடத்திச் செல்லும் அரசியல் ரீதியான ஆற்றலைத் தொழிலாளிவர்க்கம் பெற்றிருக்கவில்லை என்பதால், அந்த வர்க்கத்தை மட்டுமல்லாது,பொதுவான மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் சோஷலிசம் என்பதற்குத் தகுந்த மறுவரையறுப்பு தேவைப்படுகிறது. சோவியத் யூனியனிலும்கூடத் தொழிலாளிவர்க்கத்தின் தொழிற்சாலைகளை முதலாளிகள் கைப்பற்றி எடுத்துக்கொண்டபோது தொழிலாளர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதானே நின்றனர்?

சோஷலிசத்திற்கான புதிய வரையறுப்புகுறித்து நாம் யோசிக்கும் வேளையில், இன்றைய செக் நாட்டின் குடியரசுத்தலைவரும், 'ஊதா புரட்சி'யின் நாயகரும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளருமான வாக்லேவ் ஹாவல், "நியூஸ்வீக்" வார ஏட்டின் 2009 செப்டம்பர் 9-ஆம் தேதிய இதழில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

"நியூஸ்வீக்" நிருபர்: பெர்லின் சுவர் தகர்ந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதிலும், கிழக்கு ஐரோப்பா முழுவதும் முந்தைய சோவியத் ஆட்சிக்காலம் பற்றிய நினைவுகள் மேலோங்கி நிற்கின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஹாவல்: அந்தக்காலத்தில்தான் இன்றைய பெரியவர்கள் முதன் முதலில் தம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கண்டார்கள்; அதுவே இன்றைய அவர்தம் நினைவுகளின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. இந்த நினைவலைகள் நிலைகொண்டிருப்பதற்கு நியாயமான காரணங்களும் உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு தனிநபரின் நல்வாழ்விலும் கம்யூனிஸ்டுகள் எடுத்துக்கொண்ட அக்கரைதான் அது. இன்று அதுபோன்ற அக்கரை [முதலாளித்துவத்தின் கீழ்] மறைந்து மண்ணாகிப்போனது.

ஹாவலின் கூற்று உணர்த்துவதென்ன? சோஷலிசம் ஒவ்வொரு குடிமகனின் நலனையும் காத்து நிற்கிறது என்பதைத்தானே? எனவே, (தொழிலாளிவர்க்கம் மட்டுமல்லாது) அனைத்து பிரஜைகளும் இதனை உணர்ந்து ஏற்கச்செய்து, சோஷலிசத்திற்கு அணிதிரளச்செய்ய வேண்டும். இத்தகைய அணுகுமுறை இன்றைய காலத்தின் தேவை.

'சர்வாம்ச வளர்ச்சி' எனச்சொல்லப்படுகிற அம்சம் உத்திரவாதப்படுத்தப்படவேண்டும் என்கிற கருத்து உலகம் முழுவதும் வலுத்துவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்டிக்லிட்ஸ் கமிட்டி(Stiglitz Committee) யும் சர்வாம்ச வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. நமது திட்டக்குழுவும் இந்தக் கருத்தையே ஆதரிக்கிறது. எனவே, கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு தனி நபரின் நலனையும் காத்துநிற்கிற அமைப்பு முறைமைக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டிய கடமையும், அத்தகைய முறைமையை ஏற்குமாறு அரசை நிர்ப்பந்திக்க மக்களைத் திரட்டவேண்டிய பொறுப்பும் நமக்குள்ளது.


ஜனநாயக வழி

இந்த சர்வதேச மாநாடு கவனம் செலுத்தியிருக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஜனநாயகம் சம்பந்தமானதாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது போல, (எதிர்க்கட்சிகளை அமைப்பதற்கான உரிமை, அரசியல் அரங்கில் எதிர்க்கட்சிகள் இயங்குவதற்கான உரிமை, ஊடகச் சுதந்திர உரிமை, சுதந்திரமான நீதித்துறைக்கான உரிமை உள்ளிட்ட) ஜனநாயகத்தை இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் ஏற்கிறோம் எனப் பிரகடனப் படுத்தியிருக்க வேண்டும்.வெகுஜன அமைப்புகள், கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கமாட்டா என்கிற தெளிவான புரிதலுடன் மக்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்ப்பதற்கு இத்தகைய பிரகடனம் வழிவகுத்திருக்கும்.

சீனத்தின் நிலைபாடு

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உலகுதழுவிய இயக்கத்தைக் கட்டி வளர்க்க அரும்பாடுபட்டதைப் போல இன்று சீனத் தொழிற்சங்கங்களும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்பட வில்லை என்பதை இந்த மாநாடு சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. பாரக் ஒபாமா, ஹூ ஜின்டோ ஆகியோருக்கு இடையே அண்மையில் நடைபெற்ற சந்திப்பு அமெரிக்கா சீனத்தை நெருங்குவதற்கு வழிகோலியுள்ளது. அமெரிக்காவின் காப்புப்பத்திரங்களைப் பெருமளவில் வாங்கிவைத்துள்ளதன்மூலம் உலக நாணயப் பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் மீண்டும் வலுப்பெற சீனா உதவியுள்ளது. அமெரிக்கா இன்று சீனத்தின் மிகப்பெரிய கடனாளியாகியுள்ளது. இந்த அம்சத்தின் பரிமாணங்கள்குறித்து சர்வதேச மாநாடு விவாதிக்கவில்லை. இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில், இந்தியாவைக்காட்டிலும் பாகிஸ்தானும் சீனாவும்தான் அமெரிக்காவுக்குத் தேவைப் படுகிறது என்பதுதான் உண்மை. "ஆப்கனிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பது, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து, பாகிஸ்தானின் எதிர்வினைச் செயல்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துவிடும்" என்று ஆப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் கூறியதை நாம் அலட்சியப் படுத்திவிடலாகாது.

அதேபோல, ஆப்கனிஸ்தானில் தலிபான் வெற்றி பெற்றுவிடின் அல்லது அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டபின், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் தலிபான் ஆகியவை கைகோர்த்துக் கொண்டு காஷ்மீரத்தைத் தாக்கும்பட்சத்தில் அது இந்தியாவுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துவிடும்.


கிளிப்பிள்ளைகளா நாம்?

முதலாளிகள், தம்மைக் காத்துக்கொள்ள இறுதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்குமுன்னால், தாம் எடுத்துவைக்க இருக்கும் அடியை மீண்டும் மீண்டும் ஆழமாகச் சிந்தித்து முடிவெடுப்பார்கள்; ஆனால் கம்யூனிஸ்டுகளோ கிளிப்பிள்ளையப் போல பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பார்கள் என்று ஒருமுறை ஹென்றி கிசிங்கர் கூறினார்.

உலகக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடுபற்றி எனது எண்ணங்களை எடுத்துரைக்கும்போது, சில ஆலோசனைகளையும் முன்வைக்கவே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். இதுபற்றித் தவறாகப் பொருள்கொள்ளவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது வேறுவிதமாகவோ எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று நம்புகிறேன்.

தமிழில்: மு.ப.
(MAINSTREAM, VOL XLVII, No 51, DECEMBER 5, 2009).



Read more...

Monday, December 6, 2010

கம்பம் பீர் முஹம்மது

தேசபக்த வேள்வியில் குதித்த போலீஸ்காரர்!

( 'பாடகராக போராளியாக மாறிய போலீஸ்காரர் ' என்னும் தலைப்பில் தீக்கதிர் நாளிதழில் ஜனவரி 24 , 2010 - இல் வெளிவந்த கட்டுரையின் மறுபிரசுரம் கீழே :)

“கலெக்டரும் கடவுளல்ல!
அடிமைப்போலீஸ்கான்ஸ்டபிள் எமனுமல்ல!
அல்லாஹ்! ரசூலுல்லாஹ்!
இத்தொல்லைகள் தொலைவது மெந்நாளோ?
இப்பொல்லாத பேய்க ளெல்லாம் இங்கிலாந்து போவதுமெந்நாளோ?”

போலீசை விமர்சித்தாலோ தாக்கிப் பேசினாலோ, பொதுவாக மக்களிடம் வரவேற்பு பெறும். ஏனெனில், போலீஸ் காரர்களின் அராஜகத்தைக் கண்டு மனம் நொந்திருக்கிற மக்கள் யாராவது எதிர்த்துக் குரல் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்திருப்பார் கள்.இன்றைக்கே அந்த நிலைமை எனில், வெள்ளைக் காரர் ஆட்சி காலத்தில் எப்படி இருந்திருக்கும்? ‘இம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம் என்கிற அந்தக் கால கட்டத்தில் மக்கள் எப்படி வேதனையோடு இருந்திருப் பார்கள் என்று எண்ணிப்பார் க்க வேண்டும். எல்லாவற்றை யும்விட அன்றைக்கு இப்படி அதிகார வர்க்கத்தை தாக்கி கவிதை பாட சொல்லொண்ணா மன உறுதி வேண்டும். அத் தகைய மனஉறுதியும் விடுதலை போராட்ட லட்சிய வெறியும் இருந்த கம்பம் பீர் முகமது பாவலர் தான் இந்தப் பாடலை பாடினார்.

இதுபோல் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் கம்பம் வட்டார மக்களை விடு தலைப் போரில் கிளர்ந்தெழச்செய்தது. 1888ம் ஆண்டு கம்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை கம்பத்திலும் உயர்கல்வியை திருச்சியிலும் பயின்றவர். பிச்சை இபுராகீம் புலவரிடம் தமிழும் கற்றார். விளையாட் டிலும் ஆர்வம் உள்ளவர். நல்ல உயரமும் சிறந்த உடற்கட்டும் உடையவர். கால்பந்தாட்ட வீரர். இவருடைய தோற்றமும் திறமையும் பிரிட்டிஷ் அதி காரியை ஈர்க்க, இவருக்கு சப் இன்ஸ் பெக்டர் வேலை கிடைத்தது.1920ம் ஆண்டு மதுரையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்ட ராக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகள் களவாடப்பட்டுவிட்டன. இவர் தன்னுடைய கடும் உழைப் பால் குற்றவாளிகளை பிடித்துக் கூண்டிலேற்றியதுடன் நகைகளையும் எந்தச் சேதார மும் இல்லாமல் மீட்டு கோயிலில் ஒப்படைத்து மதுரை மக்களின் அன்புக்குரியவரானார்.

அரசு உத்தியோகம் என் பது மேலதிகாரிகளின் மெட் டுக்கு நடனமாடுகிற போலி வாழ்க்கை என்பதை தன் அனு பவத்தில் உணர்ந்தார். காவல் துறை வேலை அவருக்கு கசந்தது. 1923ம் ஆண்டு ஒருவழி யாக போலீஸ் வேலையை உதறி விட்டு சிவகங்கை ஜமீனில் உதவி தாசில்தாராக பொறுப் பேற்றார். அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. விடுதலை போராட்டமே ஈர்த்தது.

இவர் பணியில் இருக்கும் போதே எழுதிய ‘முத்தண்ணா’ என்ற நாவலில் தன்னையே கதாபாத்திரமாக்கி இந்த சம் பவங்களையெல்லாம் விவரித் துள்ளார். அதன்பின்னர் தாசில்தார் பதவியையும் உதறிவிட்டு விடுதலை போரில் முழுமையாக ஈடுபட்டார். அப்போது அவர் எழுதிய ‘காந்தி மாலிகை’ என்ற நூலுக்கு அன்றைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி செய லாளராக இருந்த பெரியார் எழுதிய முன்னுரையில் குறிப் பிடுகிறார்,“எனது நண்பர் ஜனாப் பீர் முகமது பாவலர் அவர்களை நான் நன்கு அறிவேன். அவர் சில காலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். பின்னர் சிவகங்கை ஜமீனில் ஒரு உதவி தாசில்தாராக இருந் திருக்கிறார். தாய் நாட்டிற்குத் தாம் செய்ய வேண்டிய கட மையை செய்வதற்காக தமது தாசில்தார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்காலம் தேசத் தொண்டு புரியும் உண் மைத் தொண்டர்களில் ஒருவ ராய் திகழ்கிறார்.”

இவர் ‘காந்தி மாலிகை’ நூலில் காங்கிரஸ் இயக்கத்தின் உயர்வு, இந்து, முஸ்லிம் ஒற்று மையின் அவசியம், நாட்டுப் பற்று மற்றும் முன்னணித் தலைவர்கள் ஹக்கீம் அஜ்மல் கான், பண்டித மோதிலால் நேரு, சித்தரஞ்ன் தாஸ், ராஜாஜி, பெரியார், மதுரை மௌலானா, மடப்பாரை வெங்கட்ராம் ஐயர் உட்பட பலரை புகழ்ந்து எழுதியுள்ளார். ‘பாசமஞ்சரி’ என்ற நூலி லும் இதுபோல் தேசபக்த பாடல்களையும் கதர் பாடல் களையும் தேசத் தலைவர்கள் பற்றிய பாடல்களையும் எழுதியுள்ளார்.எழுதியதோடு இல்லாமல் வீதிவீதியாக அப்பாடல்களை உரக்கப்பாடி மக்களை விடுத லைப் போருக்கு தூண்டியுள்ளார்.

“செல்வோம் சிறைக் கூடமே!
தேசத் தொண்டுக் காகச்செல்வோம் சிறைக் கூடமே!
தேசபக்தர் தம்மை இடர் செய்யும்
அதிகார வர்க்கம்மோசம் போவது உண்மை!
அதன் முன் இறந்தால் வீரசொர்க்கம்”

வெறும் பேச்சும் எழுத்தும் மட்டுமல்ல செயலும் அப் படித்தான். முறுக்கு மீசையும் கதர் ஜிப்பாவும் கணீர் குரலில் பாடல்களும் கையில் கம்பும் தாங்கி வீதி நெடுக பாடிய தோடு அந்நியத் துணியை எரிக்கும் போரில் ஈடுபட்டார். காங்கிரஸ் விடுத்த அழைப்புகளை ஏற்று போர்க்களம் புகுந்தார். 1941ம் ஆண்டு சிறை யிலடைக்கப்பட்டார். சிறையி லும் இவரது பாடல்கள் சக கைதிகளுக்கு தேசபக்த டானிக்கானது.

1928லேயே கம்பம் பேரூ ராட்சியில் இவர் ஒரு வாசகசாலையை அமைத்தார். புத்தகங்களை வாசிப்பதோடு மக்களை வாசிக்கச் செய்வதிலும் இவருக்கு இருந்த ஈடுபாட்டின் சாட்சி அது.1941ம் ஆண்டு உணவு பஞ்சம் வந்தபோது அதற்கு எதிராக இவர் பாடிய பாடல்கள் மக்களிடம் பேருணர்ச்சியை வீறிட்டெழச் செய்தது.நேர்மையில் நாட்டம் மிகுந்த பாவலர் பீர்முகமது, நேர்மை தவறுகிற அதிகார வர்க்கத்தை எதிர்த்து பேசுவதிலும் பாடுவதிலும் நெஞ்சுறுதி யோடு கடைசிவரை இருந்தார். உத்தமபாளையத்தில் ஒரு தாசில்தார் மிகவும் மோசமானவராக லஞ்சப் பேர்வழியாக மக்களை வதைப்பவராக இருந்தபோது, பொது இடத் தில் அவரை நிற்கவைத்து கடுமையானச் சொற்களால் விமர்சித்தார். இவருடைய இந்தக் கடும் விமர்சனத்தால் மனமுடைந்த தாசில்தார் வெகுசீக்கிரத்திலேயே இறந்து விட்ட செய்தி அப்போது எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது.

1945ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி குமரி மாவட்ட பாவலர் செய்குத் தம்பியும் இவரும் ஒன்றாக கம்பத்தில் நடை பெற்ற மீலாத் விழாவில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் பேசுகிறபோது தன் உடல் நலன் சீர்கெட்டிருப்பதை சுட் டிக்காட்டி, “ஆவி அகத்தோ புறத்தோ என்று அல்லலுற்றி ருக்கும் இவ்வேளையிலே நான் பேச முற்படுகின்றேன். அநேகமாக இதுதான் எனது இறுதிப் பேச்சாக இருக் குமோ என ஐயுறுகிறேன்" எனக் கூறினார்.ஆம் அதுவே அவரது கடைசிப் பேச்சானது. 1945ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் உயிர் நீத்தார்.

கம்பம் பள்ளத்தாக்குகளி லும் மலைமுகடுகளிலும் காற் றோடு இவரது தேசபக்த கணீர் பாடல்களும் நிறைந் துள்ளன. எனில் மிகையாகுமோ?இப்படிப் பாடினால், யாருக்குத்தான் வீரம் வராது?

நன்றி: தீக்கதிர்
Labels: cumbum peer mohammed, theekkathir

Read more...

Friday, December 3, 2010

சிவப்பு உலகில் இரு முக்கிய நிகழ்வுகள்:



* கம்யூனிஸ்ட் மற்றும்

தொழிலாளர் கட்சிகளின்

12-வது சர்வதேச மாநாடு

* * *

*ஐரோப்பிய இடதுசாரிகளின் மூன்றாவது காங்கிரஸ்



"தன்னலம் கருதா செம்படை இங்கே சமுத்திர அலையாய் சீறட்டும்!
சரித்திர நெடுநாள் சூழ்ச்சியின் அடிமை சங்கிலி உடைந்து நொறுங்கட்டும் !!
* * * * *
போர்வெறி கொண்ட ஏகாதிபத்திய சதிகளை வென்றிடும் நம்படைகள்!
பூமியின் ஐந்து கண்டங்கள் எங்கும் பறக்குது நமது செங்கொடிகள்!!"



கவிஞர்
பரிணாமன், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உலகளாவிய தாக்கத்தை விதந்தோதும் வகையில் இந்தப் பாடலை எழுதி முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில்தான் உலகில் எத்தனை மாற்றங்கள்!


சோவியத் யூனியனின் வீழ்ச்சி, சோஷலிச முகாமின் தகர்வு, ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் உலகம், நடுநிலை நாடுகளின் நிலைகுலைவு, ஐக்கிய நாடுகள் சபை உரிய பங்காற்ற இயலாத நிலை, உலக வர்த்தக முறைமையில் அதிரடி நிகழ்வுகள் என எண்ணற்ற மாற்றங்கள் உலக அரங்கில்...



அதுமட்டுமா? அதுகாறும் சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், மார்க்சீயவதிகள் என்றெல்லாம் தம்மைக் கருதியும், நம்பியும், கூறியும் வந்தவர்கள் கூடத் தம்மை சோஷலிச ஜனநாயகவாதிகள் என அடையாளம் காட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். இது சோஷலிச முகாமைச் சேர்ந்த சில கட்சிகளுக்கும் பொருந்தும்.



ஆனால்
, உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த முற்போக்காளர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்தனர் : வீழ்ந்தது சோஷலிசமும் அல்ல; வென்றது முதலாளித்துவமும் அல்ல என்பதை!



சோஷலிசம் என்ற பெயரால் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்; மார்க்சீய வழிமுறைகளிலிருந்து விலகிச்சென்றதால் நேர்ந்த சறுக்கல்கள்; சகல அதிகாரங்களும் மக்களுக்கே என்பதை மறந்து கட்சியினரின் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்ற அலங்கோலங்கள்; நண்பர்கள் யார்-பகைவர்கள் எவர் என்பதை மறந்து மாயா உலகில் செய்த சஞ்சாரங்கள்!-- இவையும், இவைபோன்ற இன்னபிற காரணங்களும் தான் சோஷலிச முகாமின் பின்னடைவுகளுக்கும், அதற்கு நேர்ந்த விபரீத விளைவுகளுக்கும் வழிகோலின என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.



வென்றது
முதலாளித்துவமாக இருக்கும் பட்சத்தில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு முதலாளித்துவ உலகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடிக்குக் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்லும் சமாதானம் என்ன? கம்யூனிச எதிர்ப்பாளர்களின் சொர்க்க பூமியாக எப்போதும் போற்றிப் புகழ்மாலை சூட்டப்படுகின்ற அமெரிக்கா இன்று வரலாறு காணாத அளவில் அடுக்கடுக்காகப் பிரச்சனைகளை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதற்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார்கள்?



புரையோடிப்போன
சுரண்டல் கொடுமைகளுக்கு முடிவுகட்டி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சுபிட்சம் கொணர்வதுதான் சோஷலிசம். வரலாற்றின் போதனையை ஏற்று, சோஷலிசத்தின் பெயரால் நிகழ்ந்த அக்கிரமங்களுக்கு முடிவுகட்டி, மெய்யான சோஷலிசப் பாதையில் பயணத்தைத் தொடர்வதன் மூலம் உலகைக் காத்து, மனித குலத்தின் சர்வாம்ச வளர்ச்சிக்கு வழிவகுப்பதுதான் கம்யூனிஸ்டுகளுக்குக் காலம் இட்டிருக்கும் கட்டளை!



தனிமரம்
தோப்பாகாது; உதிரிச்செயல்பாடுகள் முன்னேற்றத்துக்கு உதவாது என்பதை உலகுக்கு உணர்த்திக்காடியவர்கள் கம்யூனிஸ்டுகள். இருந்தபோதிலும், இந்த உண்மைகளையெல்லாம் மறந்துவிட்டு, தன்போக்கில், உதிரிகளாகச் செயல்பட்டதும்கூட சோஷலிச முகாம் சந்தித்த பின்னடைவுகளுக்குக் காரணம் எனில் மிகையில்லை.



உலகக்
கம்யூனிச இயக்கத்தில், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்கிற அணுகுமுறையின் தேவை உணரப்பட்டபோதிலும், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடையே நிலவும் பகையற்ற முரண்பாடுகளின் விளைவாகக் கூடிப் பேசுவதும், அனுபவப்பகிர்வும் இயல்பாகவே அவர்களுக்கு வாய்த்துவிட்ட நல்வழி. இடையில் இது மறக்கப்பட்டது துரதிருஷ்டம். இனிமேலும் இதனை அலட்சியம் செய்வது மடைமை என்பதை உணர்ந்ததால்தான் இத்தகைய சர்வதேச மாநாடுகள்!



கம்யூனிஸ்ட்
மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பன்னிரண்டாவது சர்வதேச மாநாடு, நிறவெறி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி முற்போக்கு ஜனநாயக திசைவழியில் பயணித்துக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்காவில்!



பாட்டாளிகளின்
முதல் புரட்சியின் களமாகவும் இன்னும்கூட ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடுக்கும் ஆற்றல் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் தாயகமாகவும் விளங்குகின்ற பாரீஸ் நகரில் ஐரோப்பிய இடதுசாரிகளின் மூன்றாவது மாநாடு!



இந்த
இரண்டு வரலாற்று நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் என்பது நம் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதாவது, டிசம்பர் மூன்று முதல் ஐந்து வரை!



மாநாட்டு
நிகழ்வுகள்,
முடிவுகள், பிரகடனங்கள் தொடர்ந்து சஞ்சிகையில் வெளியாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்! --விதுரன்

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP