ஜென்னி மார்க்ஸ்
காதல் ஒருவனைக் கைப்பிடித்து-அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து... மனைவியாக மட்டுமின்றி, மார்க்ஸ் மாமுனிவரை மார்க்சிஸ்ட் ஆக்கியதில் பெரும்பங்கு வகித்த உற்ற தோழியாகவும் வாழ்ந்தவர் ஜென்னி மார்க்ஸ்.
'தினமணி கதிர்' 09.01.2011 இதழில் 'முரண்சுவை' பகுதியில் ஜென்னி மார்க்ஸ் குறித்து திரைக் கலைஞர் ராஜேஷ் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு மறுபிரசுரம் ஆகிறது...
முரண்சுவை:
மார்க்ஸின் ஜென்னி!
"மூலதனம்' நூலை எழுதி "கம்யூனிஸத்தின் தந்தை' என்று பெயரெடுத்த கார்ல் மார்க்சின் மனைவியின் பெயர்தான் ஜென்னி. மார்க்சை அறிந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் அவரது மனைவி ஜென்னியைப் பற்றியும் அறிவர். அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று குறிப்பிட்டார் மார்க்ஸ். மார்க்சைவிட ஜென்னி 4 வயது மூத்தவர். ஜென்னியின் அழகு, அமைதியான பண்பு, சிறந்த கல்வி அறிவு ஆகியவை கார்ல் மார்க்சைப் பெரிதும் கவர்ந்தது.
மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனியிலிருந்தும், பிரான்சிலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் மாறி மாறி விரட்டப்பட்டனர். மனிதன் தன்னுடைய சக மனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும், பாடுபடுவதன் மூலமே அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான். பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. மிக அதிகமான அளவு மக்களை மகிழ்ச்சியடைச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது. மார்க்ஸின் புரட்சிகரமான பணிகளால் காவல்துறை ஜென்னியையும் கைது செய்தது. அவர் இருண்ட சிறைக்குள் தள்ளப்பட்டார். அந்தச் சிறையில் வீடற்ற பிச்சைக்காரர்கள், நாடோடிகள், நீசத்தனமான கெட்ட நடத்தை உள்ள பெண்கள் ஆகியோர் காவலில் வைக்கப்படும் இடத்தில் ஒரு நாள் இரவைக் கழித்தார்.
மார்க்சின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அதை யாரும் எளிதில் படிக்க முடியாது. அந்தக் கையெழுத்தைப் படித்து, அதைப் பிரதிகள் எடுக்க வேண்டிய வேலையையும் ஜென்னி செய்து வந்தார். அவருடைய கையெழுத்து மோசமாக இருந்ததால்தான், அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை.
மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி, தோல் வெடித்து விட்டது. அதனால் நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது என்று மனம் திறந்து குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஜென்னி குறிப்பிட்டார்.
ஒரு நேரத்தில் மார்க்ஸ் குடும்பம் உணவின்றித் தவிக்க ஆரம்பித்தது. மார்க்சின் கோட்டும் பேண்டும், அடகுக் கடைக்குப் போய்விட்டன. எனவே அவர் வெளியே வர முடியாமல் இருந்தார். கடிதம் எழுதுவதற்குக் கூட வெள்ளைத் தாள் வாங்க முடியாத நிலையில் இருந்தனர். வறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த இந்த நேரத்தில் அவர்களுடைய சின்னஞ்சிறு மகள் பிரான்சிஸ்கா மரணமடைந்தாள். அந்த மகளைப் புதைப்பதற்குக் கூட இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். அதுவும் கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையின்போதுதான் மரணமடைந்தாள்.
அந்த நேரத்தில் ஒரு பிரெஞ்சு அகதி ஒருவர் இங்கிலாந்தின் பணமான இரண்டு பவுண்டு கொடுத்து உதவினார். அந்தப் பணம் தான் சவப்பெட்டி வாங்குவதற்குப் பயன்பட்டது. அந்தக் குழந்தை பிறந்தபொழுது தொட்டில் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பணமில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் முடியவில்லை என்கிறார் ஜென்னி.
இதன்பிறகு எட்கர் என்ற பெயருடைய அவர்களுடைய எட்டு வயது மகன் ஒரு வருடம் நோயினால் அல்லல்பட்டு மரணமடைந்தார். உருக்கு போன்ற எதற்கும் கலங்காத நெஞ்சுரமுள்ள மார்க்சையே மகனின் மரணம் நிலைகுலையச் செய்துவிட்டது. 1880-ம் ஆண்டில் ஜென்னியை நுரையீரல் நோய் பாதித்தது. பிறகு அது ஈரல் புற்றுநோயாக மாறியது.
அந்தப் புற்றுநோயின் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி காலமானார். புற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட வேதனைகளையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜென்னியின் நகைச்சுவை குணம் ஒரு வினாடி கூட அவரைவிட்டு அகலவில்லை.
உயிர்போகும் கடைசி வினாடி வரை நல்ல நினைவுடன் இருந்தார். கடைசியாகத் தன் கணவர் மார்க்சிடம் என்னுடைய பலம் குறைந்து வருகிறது என்று கூறினார். ஜென்னி இறந்ததைக் கண்ட மார்க்சின் உயிர் நண்பர் ஏங்கல்ஸ், "மார்க்ஸ் செத்து விட்டார்' என்று குறிப்பிட்டார். டிசம்பர் 5-ம் தேதி லண்டனில் ஏழை, எளிய சாமான்ய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹைகேட் என்னுமிடத்திலுள்ள கல்லறையில் ஜென்னி மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.
1988-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் லண்டன் சென்ற சமயம், அந்தக் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். உயிருக்குயிராக நேசித்த மனைவியின் இறுதி ஊர்வலத்தில் மார்க்ஸ் கலந்து கொள்ள முடியாதபடி மிகவும் பலவீனமாக அதுவும், மயங்கிய நிலையில் இருந்தார்.
எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.
நன்றி: தினமணிகதிர்
09.01.2011
0 கருத்துரைகள்:
Post a Comment