Monday, May 28, 2012

நாடாளுமன்ற அமைப்புகளும் கம்யூனிஸ்டுகளும் மார்க்சீய சிற்பிகள் காட்டிய வழி என்ன?



அனில் ரஜிம்வாலே



(பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்ற அதிதீவிர இடதுசாரிகளின் கூக்குரல் ஒருபுறம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருமே ஊழல்பேர்வழிகள்; நாடாளத் தகுதியற்றவர்கள் எனும் அன்னா ஹசாரேக்களின் அவலக்குரல் மறுபுறம்; நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பதே தமது சொந்த நலன்களைப் பாதுகாத்துப் பெருக்கிக்கொள்ளத்தான் என்ற எண்ணம்கொண்ட சுயநல சக்திகள் இன்னொருபுறம்! நாடாளுமன்ற ஜனநாயகத்தின்மீது பல்முனைத் தாக்குதல் வருகின்றபோது பிரதான இடதுசாரிக் கட்சிகள் கொஞ்சம் அடக்கி வாசித்துவிடுகின்ற அவலமும் தொடர்கிறது. குறிப்பாக இதுபோன்ற சிக்கலான சந்தர்ப்பங்களில், கம்யூனிச இயக்கத்தின் சிற்பிகள் மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின் ஆகியோரின் மூல நூல்கள் என்றுமே சரியான வழிகாட்டும் ஒளிவிளக்குகள் என்பதை மீண்டும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது தோழர் அனில் ரஜிம்வாலே அவர்களின் இக்கட்டுரை. 'மெயின்ஸ்ட்ரீம்' (Mainstream) ஆங்கில வார இதழில் 'நாடாளுமன்ற அமைப்புகளைப் பயனுறக் கையாளுதல் குறித்து மார்க்சும் ஏங்கல்சும்' (Marx and Engels on the Use of Parliamenrary Institutions) என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே 'சஞ்சிகை' நண்பர்களுக்காகத் தரப்படுகிறது. தமிழில்: விதுரன்)

"வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கின்ற ஜனநாயகத்தை வென்றெடுப்பது போர்க்குணமிக்கப் பாட்டாளிவர்க்கத்தின் முழுமுதற்கடமைகளில் ஒன்று என்பதைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஏற்கனவே பிரகடனம் செய்துள்ளது. " (பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்னும் நூலுக்கு 1895-ல் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரை. 1973-ல் மாஸ்கோவில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலின் முதற்பகுதியில் 195-ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.)


வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான போராட்டத்தின்பால் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதுபற்றி ஏங்கல்ஸ் கூறிய வார்த்தைகள் இவை. வயதுவந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை பெறுவதற்காகப் போராடுவதை மட்டுமல்லாமல், அந்த வாக்குரிமையைக் கைக்கொண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதையும் ஆட்சியைக் கைப்பற்றுவதையும் கூட அவர் ஆதரித்து நின்றார் என்பதை இந்தப் பத்தி முழுவதிலும் அவர் எடுதுக்காட்டுகிறார். பொதுவாக ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தைப்பற்றியும் குறிப்பாக ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத்தைப்பற்றியும் அதில் விவாதிக்கிறார். கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்புதல், பாட்டாளிவர்க்கக் கட்சியின் செயல்பாடு ஆகிய இரண்டிலும் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும் என்கிற நிலைபாட்டை மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருமே கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும், வேறு நூல்களிலும் பல சந்தர்ப்பங்களில் இதனை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். வெளிப்படையாகச் செயல்படுவது என்பது கம்யூனிஸ்ட் லீீக்கை அமைக்கும்போது வரித்துக்கொண்ட முன் நிபந்தனைகளில் ஒன்றாகும். தடை எனும் நிலை திணிக்கப்படும்போதுதான் புரட்சியாளர்கள் ரகசியமாகச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.


அதே நேரத்தில், முழுமையான ஜனநாயக மற்றும் தேர்தல் உரிமைகளுக்காகப் போராடுதல் என்கிற கடமையை மார்க்சும் ஏங்கல்சும் தொடர்ந்து செய்துவந்தனர்; இது, சார்ட்டிஸ்ட் இயக்கம் குறித்தும், மற்ற பிற விஷயங்கள் குறித்தும் அவ்ர்கள் எழுதியவற்றிலிருந்து புலனாகிறது.


மார்க்ஸ்-ஏங்கல்ஸ் குறித்த தவறான சித்திரம்:


இதனைத் தொடர்ந்து வந்த தொழிலாளர் இயக்க வரலாற்றில், மார்க்ஸ்-ஏங்கல்ஸ் பற்றிய தவறான, பிழைமிகு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் தவறான சித்திரம் தீட்டப்பட்டதற்கு அவர்களின் எதிரிகளும் ஆதரவாளர்களுமே பொறுப்பாகும். வன்முறைவழிப் புரட்சிக்கு இட்டுச்செல்கின்ற வன்முறைசார் வர்க்கப்போராட்டங்களை அவர்கள் ஆதரித்ததாகச் சித்தரிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் என்றாலே மோசடி எனவும், அதனால்தான் அந்தத் தேர்தல் முறையையே புரட்சியாளர்கள் மார்க்சும் ஏங்கல்சும் எதிர்த்தது போன்றும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் என்பதே மோசடி-பம்மாத்து என்பதால், 'பலாத்காரம்' இன்றிப் பாட்டாளிவர்க்கம் அதிகாரத்துக்கு வரமுடியாது எனும் பிரச்சாரத்தை அதிதீவிர 'இடதுசாரிகளும்', மாவோயிஸ்டுகளும், பல பிரிவுகளைச் சார்ந்த அராஜகவாதிகளும் கட்டவிழ்த்துவிட்டார்கள்.


இவையெல்லாம், மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் என்றும் புனைந்து கூறப்பட்டன. இந்தக் காரணங்களால்தான் அவர்கள் 'புரட்சியாளர்களாக'க் கருதப்பட்டுவருவதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது!


புரட்சிவழியில் பயணம் மேற்கொண்ட அந்த மாபெரும் தத்துவாசிரியர்கள் குறித்துப் பன்னெடுங்காலமாக இத்தகைய தவறான தோற்றம் உருவாக்கபட்டது. இது முற்றிலும் பிழையான சித்திரமாகும்.


அமைதிபூர்வமான மாற்றம்பற்றி மார்க்ஸ்-ஏங்கல்ஸ்:


அமைதி வழியில் 'சோஷலிசத்திற்கு' மாறிச்செல்லுதலை பல சந்தர்ப்பங்களில் ஆதரித்த மார்க்சும் ஏங்கல்சும் அத்தகைய மாற்றம் சாத்தியமே என்றும் கண்டுணர்ந்தார்கள். இங்கிலாந்து, ஹாலந்து மற்றும் பெல்ஜியத்தில் அமைதி வழியில் புரட்சியின் சாத்தியப்பாடு குறித்து மார்க்ஸ் எழுதியது பிரசித்தம். ஜெர்மனி, ரஷ்யா போன்ற பிற பல நாடுகளிலும் தமது வாழ்நாளிலேயே அமைதிவழி மாற்றம் குறித்து அவரும் ஏங்கல்சும் ஆய்வு மேற்கொண்டார்கள்.


அனைவருக்கும் வாக்குரிமை-தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரம்:


வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது பாட்டாளிகளின் போராட்டத்தில் முற்றிலும் புதியதோர் வழிமுறை என்றும், அதைக் கையாள்வதன்மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவது மட்டுமல்லாமல், சோஷலிசத்தை எட்டுவதற்கும் வழிவகுக்கின்ற வல்லமை கொண்டது அது என்றும் ஏங்கல்ஸ் கருதினார்.


பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள் என்னும் மார்க்சின் நூலுக்கு (1895) எழுதிய முன்னுரையில், 1866-ல் தம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை எனும் முறையை ஜெர்மன் தொழிலாளர்கள் திறமையாகக் கையாண்டதன் விளைவாக, ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சி (SDP) வியத்தகு வளர்ச்சி கண்டது. அந்தக் கட்சி, தேர்தலில் பெற்ற வாக்குகளை நோக்கும்போது இது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும்: 1871-ல் 1,02,000 வாக்குகள் பெற்ற அந்தக் கட்சி, 1874-ல் 3, 52,000 வாக்குகளையும், 1877-ல் 4, 93,000 வாக்குகளையும் பெற்றது.1878-ஆம் ஆண்டு ஜெர்மனியில் சோஷலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சி அமைப்புகளும், தொழிலாளர் வெகுஜன அமைப்புகளும், தடை செய்யப்பட்டன; தொழிலாளர்களின் பத்திரிகைகள் பறிமுதலுக்காளாயின. வெகுதிரள் தொழிலாளர் இயக்கத்திடமிருந்து வந்த நிர்ப்பந்தத்தின் விளைவாக இந்த்ச் சட்டம், 1890-ல் திரும்பப் பெறப்பட்டது.1881-ல் ஏற்பட்ட பின்னடவுக்குப் பின்னால், இந்தச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், சமூக ஜனநாயகக் கட்சி, வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட்டது. 1884 தேர்தலில் அது 5, 50,000 வாக்குகளைப்பெற்றது; 1887-ல் இது 7, 63,000 வாக்குகளாகவும், 1890-ல் 14, 27,000 வாக்குகளாகவும் உயர்ந்தது. ஏங்க்ல்ஸ் வாழ்ந்த காலத்தில் (அவர், 1895-ஆம் ஆண்டு மறைந்தார்)அந்தக் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17, 87,000 என்ற நிலையை எட்டியது; இது பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் கால்வாசிக்கும் அதிகமாகும். ஜெர்மனியில் மிகவும் பலம்பெற்ற கட்சியாக சமூக ஜனநாயகக் கட்சி உருப்பெற்றது. 1898-ல் அது பெற்ற வாக்குகள், பதிவான மொத்த வாக்குகளில் 27.2 சதவீதமாகும் (அதாவது, முப்பது லட்சம் வாக்குகளுக்கும் அதிகம்); 1912-ல் இது 34.8 சதவீதமாக (நாற்பது லட்சம் வாக்குகளுக்கும் அதிகம்) உயர்ந்தது. ஜெர்மனியில் மாபெரும் அமைப்பாகவும் நாட்டின் ஆகப்பெரிய கட்சியாகவும் சமூக ஜனநாயகக் கட்சி வளர்ந்தோங்கி நின்றது.1907-ஆம் ஆண்டில் அந்தக் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களை நடத்தியது!


ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றிகள் குறித்த ஃப்ரெட்ரிக் ஏங்கல்சின் விமர்சனக் குறிப்புகளும் ஆய்வுகளும் ஆர்வத்தைத் தூண்டுபவை; ஆழமானவை. தேர்தல் வழிமுறை மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின்பால் மார்க்சீய கோட்பாடுகளை உருவாக்குபவையாகவும் அவை அமைந்துள்ளன.


வாக்குப் பெட்டி வழியை ஜெர்மானிய தொழிலாளர் வர்க்கம் கையாண்ட பாங்கினை ஏங்கல்ஸ் வெகுவாகப் புகழ்ந்துள்ளார். வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை எனும் அஸ்திரத்தை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியதன்மூலம் அனைத்து நாடுகளிலும் உள்ள அவர்தம் தோழர்களுக்குப் புதியதோர் ஆயுதத்தை, கூரிய ஆயுதங்களில் ஒன்றை ஜெர்மன் தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். "வாக்குரிமையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதன்மூலம், பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் முற்றிலும் புதியதோர் வழி நடைமுறைக்கு வந்தது." இந்த வழிமுறை விரைந்து மேலும் வளர்ச்சிபெற்றது. அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வாய்ப்புகளையும் ஆயுதங்களையும் தொழிலாளர் வர்க்கம் பெற்றது. 'டயட்ஸ்' எனப்படுகின்ற மாநில சட்டமன்றங்களில் குறிப்பிட்ட சிலவற்றுக்கும், நகர்மன்றங்களுக்கும், தொழில் நீதிமன்றங்களுக்கும் நடைபெற்ற தேர்தல்களில் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.தொழிலாளர் கட்சியின் சட்டத்திற்குப்புறம்பான நடவடிக்கைகளைக் காட்டிலும் சட்டபூர்வ செயல்பாடுகளைக் கண்டு, அதாவது, "கலக நடவடிக்கைகளைக் காட்டிலும் தேர்தல் முடிவுகளைக் கண்டு" பூர்ஷ்வா வர்க்கமும் அரசாங்கமும் அஞ்சி நடுநடுங்கலாயின.


பொதுவாக வீதியுத்தங்கள், தடுப்புகளை ஏற்படுத்தி நடத்தப்படும் முற்றுகை யுத்தங்கள் மற்றும் ஆயுதப்போராட்டங்கள் பற்றிய மாயைகளை விட்டொழிக்கவேண்டுமென ஏங்கல்ஸ் அழைப்புவிடுத்தார்.


"வலிமைமிக்க, சிறந்த கட்டுப்பாடுகொண்ட, மிக வேகமாக வளர்ந்துவரும் சோஷலிஸ்ட் கட்சியை" ஏங்கல்ஸ் உயர்வாகப் பாராட்டினார். ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும், ஆட்சியதிகாரத்தை நோக்கித் தளராது முன்னேற வேண்டிய விஷேசக் கடமை அதற்கு உண்டு என்றும் ஏங்கல்ஸ் கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியின் வாக்காளர்களை, உலகத் தொழிலாளர் இயக்கத்தின் 'அதிர்வு சக்தி' என வருணித்தார் ஏங்கல்ஸ். "அந்தக் கட்சிக்காக வாக்களித்த இருபது லட்சம் வாக்காளர்களும், வாக்காளர்களாக இல்லாவிடினும், அவர்களுடன் அணிசேர்ந்து நின்ற இளைஞர்களும் யுவதிகளும், எண்ணிக்கையில் அதிகமான ஒருங்குசேர்ந்த வெகுஜனங்களாவர்; சர்வதேசப் பாட்டாளிவர்க்கப் படையின் தீர்மானகரமான 'அதிர்வு சக்தி'யும் அவர்கள்தான்," என்கிறார் அவர். பதிவான வாக்குகளில் நான்கில் ஒரு பகுதியை ஏற்கனவே இந்த வெகுஜனங்கள் நல்கியுள்ளனர். ஜெர்மன் நாடாளுமன்றமான ரெய்ச்ஸ்டாக்கிற்கு நடந்த இடைத்தேர்தல்கள், மாநிலங்களில் நடைபெற்ற டயெட் தேர்தல்கள், கீீழ்மட்டத்தில் நடந்த பிற தேர்தல்களின் முடிவுகள், அந்த இயக்கம் தொடர்ந்து வளர்ச்சிபெற்று வந்ததைக் காட்டியது."தன்னெழுச்சியாக, நிதானமாக, தடுத்துநிறுத்த இயலாத அளவுக்கு, அதே நேரம் அமைதிபூர்வமாகவும், இயல்பாகவும் அதன் வளர்ச்சி நடந்தேறுகிறது" என்பார் அவர்.


மேலும் இதுகுறித்துக் கூறும்போது, [அந்தக் கட்சிக்கு எதிரான] அரசின் அனைத்துக் குறுக்கீடுகளும் செல்லுபடியாகாமல் போயின என்கிறார் ஏங்கல்ஸ். இந்த வளர்ச்சிப்போக்கு இதேபாணியில் தொடரும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில், "சமுதாயத்தின் நடுத்தட்டில் உள்ள பெரும்பகுதினரை, குட்டி பூர்ஷ்வாக்கள் மற்றும் சிறு விவசாயிகளை வென்றெடுத்து, இந்த நாட்டில் தீர்மானகரமான சக்தியாக நாம் வளர்ந்து விடுவோம்; இந்த சக்திக்கு முன்னால் மற்ற சக்திகள் அனைத்தும் அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலைவணங்க வேண்டியிருக்கும்" என்று (தனது முன்னுரையில்) குறிப்பிடுகிறார் ஏங்கல்ஸ். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தற்போதைய அமைப்புமுறையிலிருந்து உயர்நிலைக்கு மாறிச்செல்கிறவரை தடங்கல்கள் எதுவுமின்றி இந்த சக்தியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார் அவர். இந்த விஷயத்தில் அவரது அறிவுறுத்தல், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தடையற்ற இந்த வளர்ச்சிப்போக்கில் தடை ஏற்படுத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு: அதாவது, 1871-ல் பாரீஸ் நகரில் ரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்தது போன்று, ராணுவத்துடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபடுவதுதான் அந்த வழி" என்கிறார். எனவே, அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்க வேண்டாம் என்றும், தேவையற்ற, முன்யோசனையற்ற காரியத்தில் இறங்கவேண்டாமென்றும், ஆத்திரமூட்டலுக்கு இரையாகி ராணுவத்துடன் வீரசாகச மோதலில் ஈடுபடவேண்டாமென்றும் தொழிலாளி வர்க்கத்தையும் அதன் கட்சியையும் அவர் எச்சரிக்கிறார். வீதியுத்தங்களில் இறங்குகிற விபரீத ஆசைகள் வேண்டாமென்றும் அவர்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.


"உலக வரலாற்றின் விந்தை, அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது"-சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகள் மற்றும் கவிழ்ப்புகளைக் காட்டிலும் சட்டரீதியான வழிமுறைகளைக் கையாள்வதன்மூலம் புரட்சியாளர்களும், 'ஆட்சிக் கவிழ்ப்பாளர்களும்' தமது பணியில் முன்னேற்றம் காண்கிறார்கள் என்கிறார் ஏங்கல்ஸ்.


ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்ததற்குப்பின்னால், சோஷலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழிமுறையாக வாக்குப்பெட்டியை மார்க்சும்  ஏங்கல்சும் கருதினார்கள் என்பது தெளிவு.

Courtesy: MAINSTREAM, VOL L, No.21, MAY12, 2012
ANIL RAJIMWALE, MARX-ENGELS, BALLOT BOX

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP