Sunday, November 17, 2013

மோடியெனும் மாயவலை

Top of Form
மோடியெனும் மாயவலை!
ஏ.பி.பரதன்
[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் ஏ.பி.பரதன், அண்மையில் (அக்டோபர் 19, 2013) மெயின்ஸ்ட்ரீம் ஆங்கில வார ஏட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் தந்திரம், மோடியைத் தனது பிரதமர் வேட்பாளராக அக்கட்சி நியமித்ததன் சூட்சுமத்தையும் அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மதவெறியில் ஊறித்திளைக்கும் பி.ஜே.பி.க்கும், மதச்சார்பற்ற இயக்கமாக விளங்கும் காங்கிரசுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டையும், நாட்டை இன்று சூழ்ந்துள்ள அபாயத்தை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டியதன் அவசியத்தையும் இக்கட்டுரையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் தோழர் பரதன். தமிழாக்கம்: விதுரன்]
  
வகுப்புக் கலவரங்களும் சங் பரிவாரமும்:
  
  பிரதமர் பதவிக்கான தனது வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்து முடித்ததில் புண்ணாகிப்போன பாரதீய ஜனதாக் கட்சி, அவரது தோற்றத்தை பிரம்மாண்டப்படுத்திக் காட்டுவதற்காக ஓர் அதிரடிப் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சிக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக் காட்டியவர்கள், அதிருப்தியாளர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்கச் செய்யும்பொருட்டு, ஆர்.எஸ்.எஸ். தனது தண்டத்தைப் பிரயோகிக்க வேண்டியதாயிற்று. [இந்த விஷயத்தில்] அவர்கள் தமது எண்ணங்களைத் தம்மோடு வைத்துக்கொண்டு, வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்று பணிக்கப்பட்டார்கள். அந்தக் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிகூட அவருக்குரிய இடத்தில் வைக்கப்பட்டுவிட்டார்.
  மோடியிடம் அனைத்துவிதமான அற்புத குணங்கள், திறமைகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, உலகெங்கிலும் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. ‘வளர்ச்சிக்கான மனிதர்’ (விகாஸ் புருஷ்); சிறந்த நிர்வாகி; வலுவற்ற பிரதமரை நீக்கி அந்த ஆசனத்தில் அமரக்கூடிய சக்திமிக்கவர்; சுருங்கச் சொன்னால், காலம் அருளிய நாயகன்என்றெல்லாம் மோடிக்குப் புகழாரம் சூட்டப்படுகின்றது.
  பிரச்சார இயக்கத்தை முடுக்கிவிடுவதில் பாரதீய ஜனதாக் கட்சி, அதன் முன்னோடியான ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் திறமையையும், திறனையும் யாரும் மறுக்கமுடியாது. இந்து-முஸ்லிம் வகுப்புக்களைச் சேர்ந்த இரண்டு தனிநபர்கள் அல்லது குழுக்களிடையே ஏற்படும் சின்னத் தகறாறைக்கூட முழு அளவிலான பெரிய கலவரமாக மாற்றவல்லவை அவை. பதற்றத்தை உருவாக்கி, ஒரு சிறிய தீப்பொறி பட்டால்போதும் வெடித்துக் கிளம்பி கொழுந்துவிட்டெரியும் பெரும் தீயாக மாற்றுமளவுக்கு அதனைக் கொதிநிலையில் வைத்திருக்கும் வல்லமையும் அவற்றுக்கு உண்டு. நடந்தேறிய கலவரங்களை ஆராய்ந்து பார்க்கையில் இதனை நிரூபிக்கும் எடுத்துக்காட்டுகள் ஏராளம்-ஏராளம். இதற்கான சமீபத்திய உதாரணங்கள் முசாஃபர்நகரில் நடந்த கலவரமும், அதற்கு முன்னதாகவும், அதனைத் தொடர்ந்தும் ஏற்பட்ட கவரங்களுமாகும்.
மோடியெனும் மாயவலை:
  நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்க நெருங்க, மோடியெனும் மாயவலையை வீசத்தொடங்கியது பாரதீய ஜனதாக் கட்சி. மோடியின் பெரிய கட்-அவுட்டுகள், மோடியின் லட்சக்கணக்கான சுவரொட்டிகள், மோடியின் முகமூடிகள் இத்யாதி, இத்யாதி என நாடெங்கிலும் நகரங்கள், கிராமங்களிலுள்ள சதுக்கங்கள், சாலைகளில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றன. மோடியை நட்சத்திரப் பேச்சாளராகக்கொண்ட தொடர் கூட்டங்களும் பேரணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்காக செலவிடப்படும் தொகையோ மலைப்பூட்டுவதாக உள்ளது; ஆனால் அதுகுறித்துக் கேள்விகள் எதுவும் எழுப்பப்படுவதில்லை. இருப்பினும், இந்தப் பிரச்சாரப் படோடாபங்கள் அனைத்துக்கும் பின்புலமாக இருக்கும் சக்திகள் எவை என்பதில் இனியும் ஒளிவுமறைவில்லை. பெரிய தொழில் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் தமது பணமூட்டைகளை அகலத் திறந்துவைத்துள்ளன. மோடி விஷயத்தில் அவர்களுக்கு சுயநலமுண்டு. இந்தப் பேரணிகளுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பரவலான பகுதிகளிலிருந்தும் கூட்டம் திரட்டிவரப்படுகிறது. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் மேடைகள் புதிய தொழில்நுட்பவசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.  முஸ்லிம் குழுக்களும்கூட இந்தப் பேரணிகளில் பங்குகொள்வதாகக் காட்டும்பொருட்டு, வட்டக்குல்லாய் அணிந்த ஆண்களும், புர்க்கா அணிந்த பெண்களும் அல்லது குறைந்தபட்சம் முக்காடிட்டு (‘hijab’) முகம் மறைத்தவர்களும் கூட்டத்தில் இடம்பெற விசேஷ முயற்சிகள் செய்யப்படுகின்றன. கிரிக்கெட் போட்டிகளின்போது குதூகலித்து ஆடுகின்ற பெண்களின் குழு (cheer-girls) போன்று பார்வையாளர் அரங்கில் அமர்ந்துகொண்டு, மகிழ்ச்சிக் கரகோஷம் செய்யவும், கூட்டம் நடைபெறுகையில் மோடி!’ ‘மோடி!என்று கதறவும் இளைஞர் குழுக்கள் அமரச்செய்யப்படுகின்றன.
  உண்மையில் தமது நெடுநாள் பாசிஸ்ட் நண்பர்களிடமிருந்து கோயபல்சின் பொய்ப்பிரச்சாரக் கலையைக் கற்றுத் தேர்ந்துள்ளது சங்பரிவாரம். இந்தப் பிரச்சார யந்திரம் கிளப்புகிற களேபரத்தில், குஜராத்தில் மோடி அரசாங்கத்தால் 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட போலி என்கவுன்டர் கொலைகள் ஆகியவற்றின் எதிரொலிகள் அமிழ்ந்து அடங்கிப்போகும்; மறக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறது பி.ஜே.பி. 
  மோடியின் செய்தியைப் பரந்துவிரிந்த அளவில் கொண்டுசெல்வதில் கார்ப்பொரேட் செய்தி ஊடகங்களான அச்சு மற்றும் மின்னணு செய்தி நிறுவனங்களில் சில பகுதியினரும், சமூக ஊடகங்களும் தம் பங்குக்குப் பிரம்மப்பிரயத்தனம் செய்கின்றன.
   மனக் கிளர்ச்சியூட்டும் இந்த நிகழ்வுகளை நுணுகி ஆராயவேண்டியுள்ளது.
குஜராத் முன்மாதிரியாம்:
  ‘குஜராத் மாடல் வளர்ச்சியின் சிற்பி மோடி என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா? தனிச்சிறப்புவாய்ந்த வளர்ச்சி முன்மாதிரியை குஜராத் கொண்டிருப்பதுபோன்று ஒரு மாயை பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. குஜராத் உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் காணப்படும் வளர்ச்சியின் (ஆக்கபூர்வமான மற்றும் எதிர்மறையான) அனுபவங்களில் கற்கவேண்டிய சில அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், குஜராத் விஷயத்தில் ஏதோ தனிச்சிறப்பு இருப்பதாகத் தம்பட்டமடித்துக் கொள்வது உண்மையோடு விளையாடுவதாகும். மற்ற பலரோடு ஒப்பிடுகையில், குஜராத்திகள் எப்போதுமே வணிகம் சார்ந்த, தொழில்முனைப்பு காட்டும் சமூகத்தினராகவே அறியப்பட்டுள்ளனர். இதற்குக் காரணகர்த்தா மோடி அல்ல. வளர்ச்சியின் அனைத்து அலகுகளிலும் முன்னணி இடத்தில் எங்குமே குஜராத் இல்லை. எந்தவொரு பொருளாதார ஆய்வு அறிக்கையிலும் இதனைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
  நாட்டின் பிற மாநிலங்களில் தலைகாட்டுவதைப்போன்றே பொருளாதார வளர்ச்சியின் அனைத்து நெருக்கடிகளாலும் இன்றைய குஜராத் பாதிக்கப்படுகிறது. அங்கு, நல்ல நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள், செயல்பணிகள் ஏட்டளவில் பார்க்கும்போது மிகச்சிறந்தவையாகத் தோன்றியபோதிலும் நடைமுறையில் அவை முடங்கிக்கிடக்கின்றன என்பதற்குப் பல உதாரணங்களுண்டு. எடுத்துக்காட்டாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பான மகப்பேறு என்பதற்கான சிரஞ்சீவி யோஜனா போன்ற திட்டங்களைக் கூறலாம். புள்ளிவிபரங்களைச் சீரழித்தல், கசப்பான விஷயங்களை மறைத்தல், சாதனைகளை அதீதமாகத் தம்பட்டமடித்தல் ஆகியவை இன்றைய சகல துறைகளையும் தழுவிய மன அழுத்தத்திலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடுவதற்கான வழியை மக்களுக்குக் காட்டுவதாகாது. மோடி, தனது பகட்டான மேடைப்பிரசங்கங்களில் காங்கிரசுக்கு எதிராகக் கக்குகிற ஏகடியம்-காங்கிரஸ் தலைவரின் குடும்பத்தைக் குறிவைத்துச் செய்யப்படுகிற ஏளனம், பரிகாசங்கள்-குறிப்பிட்ட பகுதியினர் காங்கிரஸ்மீது கொண்டுள்ள வெறுப்பை மேலும் தூண்டுவிடுவதாக அமையுமேயொழிய பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிகாட்டுவதாக அவை அமையாது. அடிக்கடி நிகழ்த்தும் பிரசங்கங்கள் ஒன்றிலேனும், மாற்றுக் கொள்கை அல்லது மாற்றுத் திட்டத்தை பி.ஜே.பி. பின்பற்றும் என ஒருபோதும் மோடி அறிவித்ததில்லை. நாடு அனுபவிக்கின்ற பிரச்சனைகளுக்கு அவர் எந்தத் தீர்வையும் முன்மொழிந்ததுமில்லை.
  அவரால் எப்படி முடியும்? ஏனெனில், பொருளாதாரக் கொள்கைகளிலும், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளிலும் பி.ஜே.பி.யும் காங்கிரசும் ஒரேமாதிரியான அணுகுமுறையைத்தான் கொண்டுள்ளன. ஊழல் எனும் புற்றுநோயிலிருந்து இருகட்சிகளுமே விடுபட்டவையல்ல. ஒரு கட்சி ஆட்சியில் மற்றது எதிர்க்கட்சி வரிசையில் என்பதுதான் இருக்கின்ற வித்தியாசம். அந்த வகையில், அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட ஆனால் தமக்குகந்த ஓசையை எழுப்புகின்றன.
காங்கிரஸ்-பி.ஜே.பி. பெரிய வேறுபாடு:
  ஆனால், ஒரு பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. பி.ஜே.பி. மூர்க்கத்தனமான மதவெறிக்கொள்கை கொண்டுள்ளது; காங்கிரசோ, எப்போதேனும் மதச்சார்பின்மை எனும் பாதையிலிருந்து விலகிச்சென்றாலும், மதச்சார்பற்ற கொள்கைகொண்டதாக விளங்குகிறது. (அவரே ஒப்புக்கொண்டதைப்போல) இறுகிப்போன இந்து தேசியவாதியாக இருக்கும் மோடி, பிரதமர் எனும் உயர் பொறுப்புக்கு வருவது பி.ஜே.பி.யின் ‘இந்துத்வா திட்டத்திற்குமேலும் உசுப்பேற்றுவதாகவே அமையும்.
  ஊழலை எதிர்த்துப் போராடுதல் என்று பேசும்போது, குஜராத்தில் மோடி ஆட்சியிலிருக்கும் இத்தனை ஆண்டுகளில் ‘லோக் ஆயுக்தாசட்டத்தை நிறைவேற்றக்கூட முடியவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பழைய சட்டத்தை நிச்சயமற்ற நிலையில் இருத்திவிட்டு, பெயரளவிலானதொரு லோக் ஆயுக்தா மசோதா, மோடி அரசாங்கத்துக்கும், அதற்கு அங்கீகாரம் அளிக்கமுடியாத நிலையில் இருக்கும் அந்த மாநில ஆளுநருக்குமிடையே முன்னும் பின்னுமாக ஊசலாடச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  காங்கிரஸ் ஆட்சியின்கீழ் நிலவுகிற ஊழலை எதிர்த்துப்போராடத் துடிக்கின்றார் மோடி; ஆனால், தனது புறக்கடையில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக விசாரணைநடத்த முனைந்தால்,கை வைக்காதேஎன்கிறார் அவர். ஜன் லோக்பால் மசோதா வேண்டுமெனக்கோரி அன்னா ஹசாரே நடத்திய இயக்கத்தின்பின்னே சென்று, இப்போது மோடியை ஆதரிக்க ஓடோடிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் அந்தப் பகுதியிடம் ஒரு விஷயத்தைக் கேட்பது நல்லது. உண்மையில் அவர்கள் எதற்காக நிற்கிறார்கள்? ஊழலுக்கு எதிரான அவர்களின் போராட்டம் என்னவாகும்?
பி.ஜே.பி.யின் யுத்த தந்திரம்:
  ஒரேயொரு திட்டத்தைமட்டும் வைத்துச் செயல்படுவதில் பி.ஜே.பி.க்கு நம்பிக்கையில்லை. ‘வளர்ச்சியின் நாயகன்என்று வர்ணிக்கப்படும் மோடியெனும் மாயவலையை வீசுகின்ற அதே நேரத்தில், வேறு இரண்டு யுத்த தந்திரங்களையும் அது வார்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் சிறிதும் பெரிதுமாகக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் வகையில் பல மாநிலங்களில் வகுப்புரீதியிலான பதற்றத்தீயை அவர்கள் எவ்வாறு பற்றவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமது ஹிந்து வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில், மக்களைப் பிளவுபடுத்தி, சமூகத்தினரை மதரீதியில் எதிரும் புதிருமாக நிறுத்துவதுதான் அவர்களின் நோக்கம்.
  ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமராகசித்தரித்து, அப்படிப்பட்ட பலவீனமான பிரதமருக்கு பதிலாக மோடி போன்ற வலுவான, உறுதியான செயல்பாடுடைய ஆட்சியாளரைக் கொண்டுவரவேண்டிய அவசியம் இருப்பதாகப் பிரச்சாரம் செய்வது இரண்டாவது யுத்த தந்திரமாகும். வலுவான ஆட்சியாளர், திறன்மிகு நிர்வாகி என்பவர் அதேசமயம் கட்டாயம் ஜனநாயகவாதியாகவும் இருக்கமுடியும் என்றாலும், அப்படித்தான் இருப்பார் என்பது நிச்சயமில்லை அல்லவா? எப்படியிருப்பினும், மோடியைப் பொறுத்தவரை, அவர் ஒரு எதேச்சாதிகார ஆட்சியாளராகத்தான் இருப்பார். இது அவரது குணாதிசயத்துடன் இரண்டறக்கலந்தது. அவர் சர்வாதிகாரியாக இருப்பதோடு, பிளவுபடுத்தும் தன்மை கொண்டவராகவும் உள்ளார். தன்னுடன் ஒத்துப்போகாத தனிநபர்களையும், வகுப்பினரையும் அழுத்திக் கீழேதள்ளிவிடும் கலையை நன்கு கற்றுத்தேர்ந்தவர் அவர்.
   அவர் தேர்தல்கள்மூலம் வெற்றிபெற்றவர்; ஒருமுறையல்ல-உண்மையில் மூன்றுமுறை ஆள்வதற்கு ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவராயிற்றே என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய நிலையில்தான் நாம் இருக்க நேரிடும். தேர்தல்கள்மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் சிலர் ஜனநாயகமாக செயல்படாததை வரலாற்றில் காணமுடியும். உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தைக் கொலைதான் செய்தார்கள்.
   “உலக வரலாற்றில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களும் புகழ்மிகு மனிதர்களும் இரண்டுமுறை தோன்றுவதைக் காண இயலும் என்று எங்கோ ஹெகல் குறிப்பிடுகிறார். ஆனால், முதலில் அது துயரகரமானதாகவும், இரண்டாவதாக அசட்டுத்தனமிகு மோசடியாகவும் நிகழ்கிறது என்பதை அவர் சொல்ல மறந்துவிட்டார்என மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டுகிறார். வரலாறு, ஹிட்லரின் வடிவில் துயரத்தைக் கண்டு துடித்துவிட்டது. நரேந்திர மோடியின் மோசடியை அது இன்னும் கண்டு அனுபவிக்கவில்லை.
   பி.ஜே.பி.யும் மோடியும் தவறாகக் கணக்குப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெல்லிக்கு அவர்களை இட்டுச் செல்லும் நேரான காவி சாலை இங்கில்லை. சரித்திரத்தில் சொல்வதுபோல்,டெல்லி இருப்பதோ தொலைதூரத்தில்! இத்தகைய வகுப்புவெறியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், சக்திகளும், தனிநபர்களும் கங்கணம் கட்டிச் செயல்பட்டாக வேண்டும்.
Courtesy: Mainstream, VOL LI No 44, October 19, 2013

Read more...

Monday, November 11, 2013

தொழிலாளி வர்க்கம்

-->மிகவும் புரட்சிகரமான வர்க்கம்: -->
மார்க்சின் கண்டுபிடிப்பு
 
-->
அனில் ரஜிம்வாலே


இவ்வாண்டு (2013) மே 5 காரல் மார்க்சின் 195-வது பிறந்த நாள். அந்த அழியாப் புகழ்கொண்ட புரட்சியாளரின் நினைவைப் போற்றும் வகையில், ’மெயின்ஸ்ட்ரீம்’ ஆங்கில வார ஏட்டின் மே 11, 2013 தேதியிட்ட இதழில், மார்க்சீய சிந்தனையாளரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தோழர் அனில் ரஜிம்வாலே எழுதிய கட்டுரையின் (MARX’S DISCOVERY OF THE MOST REVOLUTIONARY CLASS) தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.


  ற்பனாவாத சோஷலிசத்தை விமர்சனம் செய்ததன்மூலம், சோஷலிசத்தை விஞ்ஞானபூர்வமான தளத்துக்குக் கொணர்ந்த மகத்தான அறிவியல் ஜாம்பவான் காரல் மார்க்ஸ். அவரது விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளைக் கவனத்தில்கொண்டு நோக்கும்பொழுது, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன், இன்னபிற இயற்பியல் மற்றும் சமூக விஞ்ஞானிகளின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராகத் திகழ்கிறார் அவர். உண்மையில், மற்ற எல்லா சிந்தனையாளர்களையும், விஞ்ஞானிகளையும்விட அதிக அளவில் கண்டுபிடிப்புகளைச் செய்தவர் காரல் மார்க்ஸ். அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள் பலவும் நம்முடைய சிந்தனைப் போக்குகளை என்றென்றைக்குமாக மாற்றி அமைத்துவிட்டன. அவரது மகத்தான பல கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது, தொழிலாளி வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் வகிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரம் பற்றியதாகும். பல சந்தர்ப்பங்களில், மார்க்சின் இந்த கருத்தாக்கங்களும், நிர்ணயிப்புகளும், அவற்றின் விஞ்ஞானபூர்வமான உள்ளடக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் மேம்போக்கான முறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவரது கண்டுபிடிப்பு விஞ்ஞானபூர்வமானது என்பதையும், அது துளியும் கற்பனைகலவாதது; உணர்ச்சி ததும்பும் அறிக்கைபோல அல்லாதது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். விஞ்ஞான முறைகளைக் கையாண்டு, மிகத்துல்லியமாகத் தொழிலாளிவர்க்கம் ஏன், எவ்வாறு மிகவும் புரட்சிகரமான சக்தியாக உள்ளது என்பதை மார்க்ஸ் தீர்மானித்திருக்கிறார். ஆகையால், ‘புரட்சிகரமான’ என்கிற பதம், வெறும் விழைவைக் குறிப்பதாக அல்லாமல், எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
  வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு நிறைவேற்றிய நீண்ட நெடிய பணி இது. தொழிலாளர்களின் மோசமான வாழ்நிலையைக்கண்டு இரங்கி, அவர்கள்மீது கொண்ட அனுதாப உணர்வின் அடிப்படையில் விளைந்ததல்ல இந்தக் கண்டுபிடிப்பு. விஞ்ஞானபூர்வமற்ற அணுகுமுறையால் உருவாகும் தவறான அபிப்ராயம் இது. தொழிலாளர்களின் இத்தகு வாழ்நிலைகள் இருந்ததும், இருப்பதும் உண்மைதான்; தொழிலாளர்கள் மற்றும் சுரண்டப்படுவோர்மீது மார்க்சும் எங்கெல்சும் மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மையே. ஆனால், இதுவே, இவ்விரு சிந்தனையாளர்களையோ அல்லது தொழிலாளர்களையோ புரட்சியாளர்களாக்கிவிடவில்லை. சுரண்டல் உட்பட முதலாளித்துவத்தின் சில போக்குகள் விளைவாகத் தோன்றியவையே வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, துயர்மிகு வாழ்க்கை, பட்டினி போன்ற நிலைமைகளாகும். வேலையின்மையில் உழல்பவர்கள், மிகவும் ‘புரட்சிகரமான’ வர்க்கமாகவோ அல்லது பிரிவினராகவோ விளங்குவார்கள் என்று மார்க்ஸ் காலத்தில் சிலர் தவறான கருத்துகொண்டிருந்தனர். இன்றும்கூட அந்தக் கருத்து நிலவுகிறது. பிரெளதான், லாசல்லெ, பாகுனின் போன்றவர்களுடன் நடத்திய விவாதத்தின்போது அவர் குறிப்பிட்டதைப்போன்று, இந்தக் கருத்துக்கள, “தத்துவத்தின் வறுமை” என்றுகூறி எதிர்த்தார் மார்க்ஸ். உற்பத்தி இயங்கு முறைகளுக்கு வெளியில் உள்ளவர்களைப் ‘புரட்சிகரமான வெகுஜனங்கள்’ எனக் காண்பது என்றும் அராஜகவாதத்தின் நிலையாகும்.
  இரங்கத்தக்க நிலையில் இருப்பதுவே ஒருவரைப் புரட்சிவாதியாக ஆக்கிவிடாது.
வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்:
  இது, மார்க்சின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது; சமுதாயத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை (இயக்கத்தை) அது விளக்குகிறது. அவரது இந்தக் கருத்தாக்கம், மிக எளிமையானது; ஆனால், பொருள் பொதிந்தது. விலங்குகளைப் போல அல்லாமல், மனிதன் தனக்குத் தேவையான உணவை முதலில் உற்பத்திசெய்தாக வேண்டும். அவ்வாறு உற்பத்தி செய்வதற்கு, மனிதர்களையும் உள்ளடக்கியபின் உற்பத்தி சக்திகள் என்று பரவலாக அறியப்பட்ட கருவிகளையும், உற்பத்தி சாதனங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டும். இந்த வளர்ச்சிதான், ‘சமுதாயம்’ என்ற அமைப்பு முளைத்தெழுவதற்கு வழிகோலுகிறது. உச்சபட்ச ஆய்வில், அதன் அமைப்புக்களும், வாழ்வியல் முறைகளும், உற்பத்தி சக்திகளாலும், அடிப்படையில்-கருவிகளாலும், அவை உருவாக்கிய பொருளாதார உறவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. ஆக, உற்பத்தி சக்திகள் என்று பொதுவாக அறியப்பட்ட உற்பத்திக் கருவிகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. இந்த மோதல் அல்லது முரண்பாடு சமுதாயத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கிறது.
  இது காரல் மார்க்சின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும். உற்பத்தி சக்திகளும், அதன் விளைவாக உற்பத்தி உறவுகளும் மாறிக்கொண்டே இருப்பதால், சமுதாயம் நிலைகுத்திப்போவதில்லை. இவற்றில், முன்னது [உற்பத்தி சக்திகள்] தொடர்ந்தும், பின்னது [உற்பத்தி உறவுகள்] கட்டம் கட்டமாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பிட்டதொரு கட்டத்தில், உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் மாற்றம் காண்பதற்கான சூழல் முழுமை அடைவதால், பழைய உற்பத்தி உறவுகள் இருந்த இடத்தில், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவது தேவையாகிறது.
  இவ்வாறாக, சமுதாயம் தேங்கிப்போகாமல், எவ்வாறு இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சமுதாயத்தில், குறிப்பிட்ட கட்டங்களில், கேந்திரமான வளர்ச்சிப்போக்குகளும், மாற்றங்களும் நிகழ்கின்றன. வர்க்கங்கள், குடும்பம், தனிச்சொத்து, அரசு, அரசாங்க அமைப்புகள், உறவுகள், ஜனநாயகம், யந்திரமுறையிலான உற்பத்தி, தொழிற்புரட்சி, தேசங்கள், இத்யாதி என இந்தமுறையில் குறிப்பிட்ட கட்டங்களில் வளர்ச்சி பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் இல்லாத சுரண்டல், பின்னர், சமுதாயம் குறிப்பிட்ட அளவு தேவையான உபரிமதிப்பை உருவாக்கியபோது தோன்றலாயிற்று. குறிப்பிட்ட காலகட்டங்களில், சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் எனப் பல வர்க்கங்களும் உருவாகின்றன. பணம்படைத்தோர், ஏழைகள் எனும் பிரிவுகளும் தோற்றம் கொள்கின்றன. ஆக, பணக்காரர்கள்-ஏழைகள் என்ற பிரிவுகள் என்றென்றும் நிலையாக இருப்பதில்லை; சமுதாயம் தோன்றிய காலத்தில் அவை இருந்ததில்லை; சமூக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவை மறைந்துபோய்விடும் அல்லது அப்போது உருவாகின்ற நிலமைகளில் சிறிது சிறிதாகக் கரைந்துபோய்விடும்.
  எனவே, சமுதாயப் பிரிவினைகளுக்கு ஒருவிஞ்ஞான ரீதியிலான வரலாற்று அடிப்படை உண்டு என்பதையும், குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் உருவாகும் அவை, மற்றொரு கட்டத்தில் நீங்கிவிடும் என்பதையும் முதன்முதலில் உணர்த்தியவர் மார்க்ஸ். சமுதாயத்தில் நிகழும் அடிப்படையான மாற்றங்களைப் புரட்சிகுறித்த அவரது தத்துவம் உள்ளடக்கியிருக்கிறது; சுரண்டலற்ற, வர்க்கங்கள் இல்லாத சமுதாயம் உருவாவதுதான் மிகவும் அடிப்படையான புரட்சி என்பது அதன் நிலை. உற்பத்தி சக்திகள், குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்குவம் பெறும்போது, வர்க்கப்போராட்டத்தின் மூலம் இத்தகைய பிரிவுகளுக்கு முடிவு ஏற்படும்.
புரட்சிகர சக்திகள்:
  வரலாறும் சமுதாயமும் தமது பரிணாம வளர்ச்சி மற்றும் இயக்கத்தின் போக்கில், குறிப்பிட்ட வர்க்கங்களையும் பிரிவுகளையும் தோற்றுவித்துவிடுகின்றன; சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தும் கருவிகளாக அவை ஆகிவிடுகின்றன. புரட்சி என்பது நிச்சயமாக உள்ளுணர்வு சார்ந்த ஒரு செயல்தான்; ஆனால், சமுதாயத்தின் பொதுவான முன்னோக்கிய வளர்ச்சிப் பயணத்துக்கு அது எதிரானதல்ல; சமுதாய வளர்ச்சியின் எதார்த்த நியதிகளை மீறியதுமல்ல.
  வரலாற்றின் முந்தைய காலகட்டங்களில், சோஷலிசத்துக்கான அல்லது கம்யூனிசத்துக்கான புரட்சி ஏன் நடைபெறவில்லை என்பதுபற்றிச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் கிளர்ந்தெழுந்த அடிமைகளின் புரட்சி, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான பிரெஞ்சுப் புரட்சி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற புரட்சிகள் போன்ற பல பெரிய புரட்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. அவை பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டன; சமுதாயத்தை முன்னோக்கிக் கொண்டு சென்றன. அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.
  ஆயினும், மனிதகுலத்துக்கு எதிரான சுரண்டல் தொடர்ந்தது; இன்றளவும் தொடர்கிறது. அடிமைத்தனத்துக்கு எதிரான புரட்சிகள், மென்மையான அடிமைத்தனத்தை மறு நிர்மாணம் செய்தன அல்லது நிலப்பிரபுத்துவத்துக்கு இட்டுச்சென்றன. நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான பெரிய புரட்சி, யந்திரங்களைக்கொண்டு பொருள் உற்பத்திசெய்யும் ஒரு முதலாளித்துவ அமைப்புக்குச் சாதகமான சூழலை உருவாக்கிட, தடைகளை நீக்கி, மதகுகளைத் திறந்துவிட்டது. ஆனால், அத்தகைய மாற்றங்களால், சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரமுடியவில்லை; அதற்கான காலம் அப்போது கனியவில்லை.
  சுரண்டலை விட்டொழிப்பதற்கு உகந்த பொருளாதய, உற்பத்தி சூழல்கள் அப்போது தலைகாட்டத்தான் தொடங்கியிருந்தன. முதலாளித்துவ-தொழில் யுகத்தில்தான் இதற்கான சூழல்கள் உருவாகின. பல கட்டங்களாக நடைபெறும் புரட்சிகர மாற்றங்களின்மூலம் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை மாற்றி, சுரண்டல் இல்லாத புதிய சமுதாய அமைப்பை உருவாக்குவதை முன்னோக்கியே கண்டுணர்ந்து, அதற்கான தயாரிப்புகளிலும் பணிகளிலும் ஈடுபடத்தக்கவகையில் உற்பத்தி சக்திகளும், அவற்றை இயக்குகிற வர்க்கங்களும் அமைந்துள்ளன. தொழிலாளர்களின் பெரும்பகுதி (பாட்டாளிகள் அல்லது தொழிலாளிவர்க்கம்)யினரால் இயக்கப்படுகின்ற உற்பத்தி சக்திகளை முதன் முதலாக வரலாறு உருவாக்கியது. ‘உழைப்பின் தொகுப்பு’தான் பண்டங்களின் மூலாதாரம் எனும் கண்டுபிடிப்பைத் தனது புகழ்மிக்க, ஆக்கபூர்வமான ‘மூலதனம்’ நூலில் விளக்குகிறார் மார்க்ஸ். கைவினைஞர் அல்லது விவசாயியின் தனிப்பட்ட உழைப்பிலிருந்து இது மாறுபட்டது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு பண்டத்தை சிருஷ்டிக்கிறார்கள். அதனை உருவாக்கியது இன்னார் அல்லது இன்னொருவர் என்று இனம்காண முடியாது.
  இத்தகைய உழைப்பில் இருக்கும் முரண்பாட்டுத் தன்மையை, ‘மூலதனம்’, ‘கற்பனாவாத சோஷலிசமும், விஞ்ஞான சோஷலிசமும்’ உட்பட பல நூல்களில் மிக நேர்த்தியாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கான தொடக்கத்தைத் தமது ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யில் செய்தனர். பொருள் உற்பத்தியில், உழைப்பு ஒரே நேரத்தில், ஸ்தூலமாகவும், கண்ணுக்குப் புலப்படாமலும் இருக்கிறது: முன்னது, ஒரு பொருளின் உபயோக மதிப்பை உருவாக்குகிறது; பின்னது, அதன் மதிப்பை நிர்ணயிக்கிறது. எண்ணிக்கையில் வளரும் தொழிலாளர்களின் உழைப்பு மேலதிகமாக, மிகச்சில (இன்று ஏகபோகம் என்று அழைக்கப்படுகின்ற) பெருக்கமடையும் பெரிய முதலாளிகளின் கைகளில் சென்றடைகிறது. இந்த மோதல், என்றென்றும் தொடரமுடியாது. இது இப்போது நிலவுகின்ற உற்பத்தி உறவுகளைத் தூக்கியெறிந்து, உற்பத்தி சாதன்ங்களைச் சமுதாயம் தன்வசப்படுத்திக்கொண்டு நிர்வகிக்க வேண்டியிருக்கும். ஆகப்பெரிய முதலாளிகள் தொடங்கி, தொழிற்சாலை முதலாளிகள், படிப்படியாகத் தமது சொத்துடைமையை இழக்கச் செய்யப்படுவார்கள். கூட்டு உழைப்பும், அதன் பயனைத் தனியார் அபகரித்துக் கொள்வதும் ஒன்றுக்கொன்று முரணானது.
தொழிலாளி வர்க்கம்:
  வரலாற்றின் மையத்தில் தொழிலாளி வர்க்கத்தை முதன்முதலில் கொண்டு அமர்த்தியவர் காரல் மார்க்ஸ்தான். யந்திரப் பொருள் உற்பத்திமுறை, உழைப்பின் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்தமான, சிக்கல்மிகுந்த அமைப்பில் இந்த வர்க்கத்தின் நுணுக்கமான, மையப்பாத்திரம் கருதித்தான் அவர் இவ்வாறு செய்தார். ஆக, இறுதியில் வரலாறு ஒரு அமைப்பைக் கண்டுபிடித்தது; அது, உற்பத்திக் கருவிகள் மற்றும் உழைப்பின் தொகுப்பைச் சமூகக்கூட்டு ஏற்றுக்கொள்கிற அமைப்பு; ஒட்டுமொத்தமான உற்பத்திக் கருவிகளை அல்லாமல், அடிப்படையில் உழைப்பின் தொகுப்பைக் கொண்டு பெருமளவில் செய்யப்படும் முதலாளித்துவ உற்பத்திமுறையில் ஈடுபடுத்தப்படுகின்ற சாதனங்களை ஏற்றுக்கொள்கிற அமைப்பு. ஆனால், சிறிய அல்லது தனி நபர்  உடைமை என்பது வரலாற்றில் நெடுங்காலம் தொடரும்.
  ஒட்டுமொத்தமான உற்பத்தி அமைப்பில், நேரடியாகக் களத்தில் இறங்கி, கூட்டு உழைப்பின்மூலம் இயக்கப்படுகின்ற ஆலை இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள உற்பத்திக் கருவிகளைத் தன்வசமாக்குகிற ஒரு வர்க்கம், தொழிற்புரட்சியின் ஊடாகவும், அப்புரட்சியின் விளைவாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. ‘பாட்டாளி வர்க்கம்’ அல்லது தொழிலாளிவர்க்கம் என்பதுதான் அது. தான் இயக்குகிற அல்லது கையாளுகிற உற்பத்திக் கருவிகளைப் பறிகொடுத்த வர்க்கம் என்கிற பொருளில்தான், ‘பாட்டாளி வர்க்கம்’ என்கிற பதம் மார்க்சீய அகராதியில் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றின் போக்கில், ஸ்தாபன ரீதியாக, ஆக்கபூர்வமாகத் திரள்கிற உணர்வுமிக்கத் தன்மையைக் குறிக்கும் வகையில், ‘தொழிலாளி வர்க்கம்’ என்கிற சொல் மேலதிகமாகப் பயன்படுத்தப்படலாயிற்று. தொழிலாளி வர்க்கம், வரலாற்றில் ஆக்கபூர்வமான சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இன்றைய சமுதாயத்தில், பொருளாதய ரீதியிலும், கலாசார ரீதியிலும் மதிப்பீடுகளை அது உருவாக்குகிறது. எனவே, அது இன்றைய சமுதாயத்தை சிருஷ்டிக்கிறது; மறுநிர்மாணம் செய்கிறது.
  புதியதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு மிகவும் உகந்தது இந்த வர்க்கமே. விவசாயிகள் மற்றும் குட்டிபூர்ஷ்வா வர்க்கம் ஆகியவற்றைப்போல் அல்லாமல், தொழிலாளி வர்க்கம் எப்படி மிகவும் முன்னேறிய, மிகவும் புரட்சிகரத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதற்குப் பல காரணிகளை மார்க்சும் லெனினும் விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள். ‘உற்பத்தியில் அது வகிக்கும் ஸ்தானம்’ தான் அதற்கு அடிப்படையான காரணமாகும். ‘இயல்பாகவே’ கூட்டு உடைமைக்காகத் தொழிலாளி வர்க்கம் போராடுகிறது; அது அவ்வாறு செய்யவேண்டியது அவசியம். எனவே, சோஷலிசம் பற்றிய அதன் அணுகுமுறையும் கூட்டாக மேற்கொள்ளப்படுகிறது. சிறு அளவில் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களான விவசாயிகள், கைவினைஞர்கள், இன்னபிறர் ஏன் அந்த அளவு புரட்சிகரத்தன்மை கொண்டவர்களாக இல்லை; முழுமையாக முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு எதிரானவர்களாக இல்லை’ என்பதை மார்க்ஸ், தன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் தெளிவாக்குகிறார்; பின்னர் லெனின் இதுகுறித்து விரிவாக விளக்குகிறார். தமது தனிப்பட்ட தனியார் உற்பத்திக் கருவிகளை முதலாளித்துவத்திடமிருந்து விடுவிக்கவேண்டுமென்று மட்டுமே போராடுவதுதான் இதற்குக் காரணம். இவ்வாறு செய்வதன்மூலம், புதிய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு அவர்களே தோற்றுவாயாக ஆகிவிடுகின்றனர். ‘குட்டிபூர்ஷ்வா உற்பத்தி, ஒவ்வொரு நிமிடமும் முதலாளித்துவத்தை ஜனிக்கச் செய்கிறது’ என்றார் லெனின். எனவேதான், சோஷலிசம் பற்றிய குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் பார்வை சுருங்கிப்போய், இறுதியில் ஏதாவதொரு வகையான முதலாளித்துவத்துடன் அது ஐக்கியமாகிவிடத் துடிக்கிறது. ஒரு வர்க்கத்தின் இயல்பும், கட்டுக்கோப்பும் இங்கே தீர்மானமாகிவிடுகிறது. உற்பத்தியில் அவை வகிக்கும் பாத்திரத்தையே இயல்பு என்கிறார் மார்க்ஸ்.
  முந்தைய வரலாற்று வளர்ச்சிப்போக்கின் விளைவாக, இறுதியில் சுரண்டல் உற்பத்தி உறவுகளைத் தூக்கியெறிவதற்கான ஸ்தானத்தில் தொழிலாளிவர்க்கத்தை சரித்திரம் இருத்தியிருக்கிறது. சமுதாயத்தின் அடிப்படையாக எது விளங்குகிறதோ, அந்த நவீன உற்பத்தியின் மையத்தில் அதுவே ஒருங்கிணைந்த வர்க்கமாகவும் அமைந்துள்ளது. முதலாளித்துவத்தை நேரடியாக எதிர்கொண்டு அதனை எதிர்க்கிற வர்க்கமாக அது திகழ்கிறது. எனவே, சோஷலிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் அது மிகவும் உகந்ததாக உள்ளது.
  வேலையின்மை, யாசகம், ஏழ்மை, துயர்மிகு வாழ்க்கை, இன்னபிறவும் புரட்சிகரத் தன்மையைத் தீர்மானிப்பவை என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தவில்லை. முதலாளித்துவ அமைப்பின் சுழற்சியில் தூக்கியெறியப்படுபவர்கள் வேலையின்மைக்கு ஆளாகிறார்கள்; அவர்களில் குறிப்பிட்ட அளவில் குறைவான பகுதியினரை ‘ரிசர்வ் படையாக’ அந்த அமைப்பு வைத்துள்ளது. வெகுஜன இயக்கங்களுக்கு அவர்கள் அவசியம் என்பது மட்டுமின்றி, முக்கியமான பாத்திரமும் அவர்களுக்கு உண்டு என்பதில் ஐயமில்லை. ஏழ்மையில் உழல்கிறார்கள் என்தால் மட்டுமே தற்போதைய சமுதாயத்தையோ, எதிர்கால சமுதாயத்தையோ நிர்மாணிப்பவர்களாக அவர்கள் ஆக்விடுவதில்லை. அதுமட்டுமல்லாமல், சமுதாயத்தில், ‘ஒட்டுண்ணிகளாக’ பிற வர்க்கத்தினரைச் சார்ந்து வாழப்பழகிப்போன கழிசடைப்பகுதியினர் மற்றும் நோக்கமின்றித் திரிபவர்களின் பாத்திரத்தை மார்க்ஸ் விமர்சித்துள்ளார். லெனின் குறிப்பிடுவதைப்போல, பிற்போக்கின் அதிரடிப்படையாக அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் செயல்படுகிறார்கள்.
  இப்படிச் சொல்வதனாலேயே, வேலையின்மையில் உழல்பவர்கள் முக்கியத்துவமற்றவர்கள் என்று பொருளல்ல; உண்மையில், ‘உற்பத்தியில் வகிக்கும் இடம்’ என்ற நிலையில் அல்லாமல், அவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்தான். வேலைவாய்ப்புக் கோரிப் போராடவும், புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கவும் அவர்களைத் தொழிலாளிவர்க்கம் அணிதிரட்டவேண்டியுள்ளது. ஆனால், ’புதிய இடதுசாரிகள்’ 1970-களிலும், அதன்பிறகும் செய்ததைப்போன்று, தொழிலாளிவர்க்கத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களின் [வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களின்] பாத்திரத்தைத் தவறாகக் கணிப்பது, சரித்திரத்தில் அவர்களைத் தவறான இடத்தில் இருத்திவிடும்.
  மார்க்ஸ், தனது கம்யூனிஸ்ட் அறிக்கையில் பல்வேறு வர்க்கங்களின் பாத்திரத்தையும் ஸ்தானத்தையும் அலசி ஆராய்ந்துள்ளார்.
விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சியும் தொழிலாளி வர்க்கமும்:
 விஞ்ஞான-தொழில்நுட்பப்புரட்சி (STR) தொழிலாளி வர்க்கத்தின் பல அம்சங்களை மாற்றியுள்ளது. இந்த விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சி கொண்டுவந்திருக்கும் மாற்றங்களை மார்க்சீயவாதிகளும் விஞ்ஞான சோஷலிஸ்டுகளும் அலட்சியப்படுத்திவிடமுடியாது. தொழிலாளி வர்க்கத்தின், பிற மக்கள் பிரிவினரின் இயல்பிலும், கட்டமைப்பிலும், விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சி, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பல புதிய பிரிவுகளை உருவாக்கிவருகிறது. எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகின்றபோதிலும், உற்பத்தி என்பதிலிருந்து, சேவை, தகவல் ஆகியவற்றுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் கட்டுக்கோப்பு மாறிக்கொண்டிருக்கிறது. இதுவும், இதர மாற்றங்களும், மார்க்சும் லெனினும் தமது காலத்தில் செய்ததைப்போன்று சமூக மற்றும் விஞ்ஞான வளர்ச்சிப்போக்குகளை முற்றிலுமாக அலசி ஆராயவேண்டிய அவசியத்தைச் சுட்டுகின்றன.
  விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சியானது, சமுதாயத்தின் கட்டுக்கோப்பிலும், உட்கூறுகளிலும் ஆழமான மாற்றங்களைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது; என்றுமில்லாத அளவு வெகுவேகமாக நகரமயமாக்கத்தை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது; உற்பத்திக் கருவிகளிலும், தகவல்தொடர்பு போன்றவற்றிலும் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் இல்லாத அளவு, தொடர்பு மற்றும் தகவல் துறைகளின் பங்கு இன்று அதிகரித்திருக்கிறது; இதன் விளைவாக, இவற்றைக் கையாளும் மக்கள் பகுதியினர் மற்றும் வர்க்கங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
  தகவல் தொழில்நுட்பமானது, உற்பத்தி முறைகளில் மிக முக்கியமான அம்சமாகப் பிரவேசித்திருக்கிறது.
  காரல் மார்க்ஸ் செய்ததைப்போன்று, அறிவியல் தத்துவங்களை உருவாக்க, விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ள புதிய புரட்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த விஞ்ஞானபூர்வமான ஆய்வு தேவை; எனவே, அவரது விஞ்ஞானபூர்வமான ஆய்வுமுறைகளைக் கற்றுத் தேர்வது அவசியம்.
தமிழில்: மு.கோபாலகிருஷ்ணன்
Courtesy: MAINSTREAM, MAY 11, 2013


 

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP