Sunday, March 27, 2016

மார்க்சியம் பற்றி டெர்ரி ஈகிள்டன்

வன்முறையாளர்களா மார்க்சீயவாதிகள்?
    -டெரி ஈகிள்டன்-

[மார்க்சீயம், விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்ட மெய்ஞ்ஞானம். ஆனால்,  எதனிடமோ சிக்கிய பூமாலை போன்று சிலரின் கையில் சிக்குண்டு அது படாதபாடு படுகின்றது. சோவியத் நாட்டில், ஜோசஃப் ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்த நெஞ்சம் பதறவைக்கும் கொடுஞ்செயல்கள்; செஞ்சீனத்தில் மா-சே-துங் மேற்பார்வையில் ‘கலாசாரப் புரட்சி’ எனும் பெயரில் நடந்தேறிய அலங்கோலங்கள்; கம்பூச்சியாவில் போல் பாட் தலைமையின்கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகார அட்டூழியங்கள்; ஏன் –இந்தியாவிலும்கூட தலைமறைவு காலத்தில் அரங்கேற்றப்பட்ட தீச்செயல்கள் என அனைத்துமே மார்க்சீயத்தின் பெயரால்தான் நடத்தப்பட்டன.

எந்தவொரு விஞ்ஞானத் தத்துவமும் கோட்பாடும் தார்மீக நெறி நின்று செயலாக்கப்படுத்தப் படவில்லையெனில் அது இதே நிலையைத்தான் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம்.

ஒப்பில்லாத அந்த சமூகவிஞ்ஞானத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், அதனை மெய்யாகப் பின்பற்றுபவர்களுக்கு அவப்பெயரைப் பெற்றுத் தந்ததுடன், மார்க்சீயத்தின் எதிரிகள், தமது விஷப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்குத் தூண்டுகோல்களாகவும் ஆகிவிட்டன எனில் அது மிகையாகாது.

ஆனால், மார்க்சீயத்திற்கு எதிரான பிரச்சாரத்தை நேர் எதிர்கொண்டு, முறியடிக்க வேண்டியது எப்போதைக்காட்டிலும் இப்போது அவசர அவசியமாகிறது. அந்த தர்மயுத்தத்தில் முன்னணி வீரராக நின்று மார்க்சீய தத்துவ வாளைச் சுழற்றுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் டெரி ஈகிள்டன். நாற்பதுக்குமேற்பட்ட தத்துவார்த்த, இலக்கிய விமர்சன நூல்களை எழுதியுள்ள அவர், இன்றைய உலகின் ஈடுஇணையற்ற இலக்கிய, பண்பாட்டுத் துறைகளில் கோட்பாட்டாளராகத் திகழ்கிறார்; உலகின் தலைசிறந்த பல பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

2011 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘மார்க்சீயம் சரியான பாதையே-ஏன்?’ (Why Marx was right) எனும் நூல், மார்க்சீயத்தின் எதிரிகளை எதிர்கொள்வதற்குப் பேராயுதமாக விளங்குகிறது. மார்க்சீயத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளைப் பத்து கேள்விகளுக்குள் அடக்கி, அவை எவ்வளவு ஆதாரமற்றவை என்பதை மிகச்சாதுர்யமாக அம்பலப்படுத்தியுள்ளார் இந்த நூலில்.

(1). அனைத்தையும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகத் தாழ்த்திவிடுகிறது மார்க்சீயம்.
  
(2). மார்க்சீயம் இன்றைய நிலைக்குப் பொருந்தாதது; கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாகிவிட்டது.

(3). தத்துவம் என்ற அடிப்படையில் அது சிறந்ததாக இருந்தாலும் செயல்படுத்த லாயக்கற்றது.

(4). வரலாற்றின் கருவிகளாகத்தான் மக்களை மார்க்ஸ் காண்கிறார்; அவர்களின் தனித்துவத்தைப் பறித்துவிடுகிறார்.

(5). மார்க்சீயம் ஒரு கற்பனாவாதக் கனவு

(6). பொருள்முதல்வாதியான மார்க்சுக்கு மனிதகுலத்தின் ஆன்மிக அம்சங்களில் ஈடுபாடில்லை

(7). வர்க்கத்தைப் பற்றியே சதாசர்வகாலமும் எண்ணிக்கொண்டிருப்பதால் இன்றைய உலகிற்கு மார்க்சீயம் லாயக்கில்லாததாகிவிடுகிறது

(8). மார்க்சீயவாதிகள் பெரும்பாலும் வன்முறையையே ஆதரித்து நிற்பவர்கள்

(9). சர்வ அதிகாரம் படைத்த அரசு நிர்மாணிக்கப்படுவதை மார்க்சீயம் ஆதரிக்கிறது

(10). அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அனைத்து முற்போக்கு இயக்கங்களும் மார்க்சீயத்திற்கு வெளியிலிருந்தே முகிழ்த்துள்ளன.

மேற்கண்ட இந்த பத்து அவதூறுகளையும் இந்த நூலின்மூலம் தகர்த்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார் பேராசிரியர் ஈகிள்டன்.

இதில் எட்டாவதான மார்க்சீயத்தையும் வன்முறையையும் இணைத்துப் பரப்பப்படுகின்ற அவதூறை நிர்மூலமாக்கும் அவரது பதில் இங்கே நமது வாசகர்களுக்குத் தமிழில் தரப்படுகிறது.

1943 பிப்ரவரி 22ஆம் நாள் பிறந்த ஈகிள்டன் இவ்வாண்டு 71 வயதை நிறைவு செய்கிறார். அவருக்கு வாழ்த்துகூறும் வகையில் இது பிரசுரமாகிறது. கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுவோமாக! தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், விதுரன்]



  “மார்க்சீயவாதிகள், வன்முறைசார்ந்த அரசியல் நடவடிக்கையை ஆதரிப்பவர்கள்.  அவர்கள், நிதானமிக்க, படிப்படியாக சீர்திருத்தம் கொண்டுவருகிற விவேகமிக்க பாதையை நிராகரிக்கிறார்கள்; இதற்கு மாறாக, ரத்தக்களரியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் புரட்சிப்பாதையைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு சிறிய குழுவினரான புரட்சியாளர்கள் கிளர்ந்தெழுந்து, அரசைத் தூக்கியெறிந்து, தமது விருப்பத்தைப் பெரும்பான்மை மக்கள்மீது திணிக்கிறார்கள். மார்க்சீயமும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமாக வாளை உருவி நிற்பதற்கான அநேக காரணங்களில் இதுவும் ஒன்று. ஒழுக்கநெறியினை வெற்று சித்தாந்தமாக வெறுத்தொதுக்குகின்ற மார்க்சீயவாதிகள், குறிப்பாகத் தமது அரசியலானது மக்கள்மீது எத்தகைய பேரழிவினைக் கட்டவிழ்த்துவிடும் என்பதை எண்ணி மனங்கலங்குவதில்லை. இறுதி லட்சியம், அதை எட்டுவதற்கான பாதையை நியாயப்படுத்தட்டும்; இதில் எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற நிலையெடுப்பவர்கள் அவர்கள்.”—[இது மார்க்சீயவாதிகளுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று.]

  புரட்சி என்றதுமே வன்முறையும் குழப்பமும்தான் வழக்கமாக மனக்கண்முன் தோன்றும் காட்சிகள். இதற்கு மாறாக, அமைதிபூர்வமாகவும், நிதானமிக்கதாகவும் படிப்படியாகவும் நடைபெறக்கூடியது சமூக சீர்திருத்தம் என்று கருத முனைவது நம் இயல்பு. ஆனால், இது தவறான எண்ணப்போக்கு. பல சீர்திருத்த இயக்கங்கள், அமைதிபூர்வமற்ற வழியிலேயே அரங்கேறியுள்ளன. அமெரிக்காவின் சிவில் உரிமைப் போராட்டம்பற்றி எண்ணிப்பாருங்கள்: புரட்சிக்கும் அதற்கும் வெகுதூரம் என்றாலும், அதில்தான் எத்தனை மரணங்கள்; எத்துணை தாக்குதல்கள்; கொலைகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள்! காலனியாதிக்கத்தின்கீழ் சிக்குண்டிருந்த லத்தீன் அமெரிக்காவில், பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், மிதவாத சீர்திருத்தத்துக்கான ஒவ்வொரு முயற்சியும் வன்முறைமிகுந்த சமூக மோதல்களுக்கு வழிவகுத்தன.

போல்ஷெவிக் புரட்சி-நடந்தது என்ன?

   இவற்றுடன் ஒப்புநோக்குகையில், சில புரட்சிகள் அமைதிவழியிலேயே நடந்துள்ளன. வரலாற்றில் மென்மையாக நடந்தேறிய புரட்சிகளுமுண்டு; வன்முறைவழிப் புரட்சிகளுமுண்டு. அயர்லாந்துக்கு ஓரளவு சுதந்திரம் கிட்டுவதற்கு அடிகோலிய 1916 டப்ளின் புரட்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. 1917-ல் ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில் மிகக் குறைந்த அளவே குருதி சிந்தப்பட்டது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். சொல்லப்போனால், மாஸ்கோவின் கேந்திரமான தளங்களைக் கைப்பற்றும் காரியம், துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாகூட வெளியேறாமலேயே செய்துமுடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. கிளர்ச்சியாளர்களுக்கு மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது; இதனால், [போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்மிக்க மார்க்சீய சிந்தனையாளரான] ஐசக் டாய்ஷர் கூறியதைப்போன்று, 'மெதுவாக நெட்டித் தள்ளியதுமே பொத்தென்று வீழ்ந்துபட்டது அரசாங்கம்'. மூர்க்கத்தனமான மோதல் வரலாற்றைத் தன்னகத்தேகொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பில், எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் அமைப்புமுறையானது பொலபொலவென வீழ்ந்தபோது, அது நிர்மாணிக்கப்பட்ட நாளில் சிந்திய குருதியைக்காட்டிலும் மிகக் குறைந்த அளவே ரத்தம் சிந்தப்பட்டது.

   போல்ஷெவிக் புரட்சியைத் தொடர்ந்து ரத்தக்களரி ஏற்படுத்திய உள்நாட்டுப்போர் வெடித்தது உண்மையே. ஆனால், வலதுசாரி சக்திகளும், அந்நிய படையெடுப்பாளர்களும், அங்கு உதயமான புதிய சமூகமுறைமைக்கு எதிராகத் தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்தான் இதற்குக் காரணம். பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் படைகள், எதிர்ப்புரட்சியாளர்களாம் வெண்படையை ஆனமட்டும் ஆதரித்து நின்றனர். 

சமுதாய மாற்றம் நெடிய பணி
 
எந்த அளவுக்கு வன்முறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதைவைத்துப் புரட்சியின் தன்மையை மார்க்சீயம் தீர்மானிப்பதில்லை. அதனை சர்வாம்சம் கொண்ட திடீர் மாற்றமாகவும் அது பார்ப்பதில்லை. போல்ஷெவிக் புரட்சி நடந்த மறுநாள் விடிந்தவுடனேயே, சந்தை உறவுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுவுடைமை ஆகிவிடவில்லை. மாறாக, போல்ஷெவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் கணிசமான காலம் சந்தைகளும், தனியுடைமையும் பிழைத்திருந்தன; படிப்படியாக அவற்றைக் களைவதற்கான அணுகுமுறையை போல்ஷெவிக்குகள் மேற்கொண்டனர். விவசாயிகள் விஷயத்திலும் இதேபோன்றதோர் அணுகுமுறையைத்தான் அக்கட்சியின் இடதுசாரிப் பிரிவு மேற்கொண்டது. கூட்டுப்பண்ணைகளில் விவசாயிகளை விரட்டிக்கொண்டுபோய்விடுதல் என்ற பேச்சுக்கே அவர்கள் இடமளிக்கவில்லை; மாறாக, படிப்படியாகவும், அவர்களிடம் கருத்தொற்றுமை, மனமாற்றம் ஏற்படுத்துவதன்மூலமும் இதனை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
   வழக்கமாகப் புரட்சிகள் கருவாகி உருவெடுப்பதற்கு நீண்ட நெடுங்காலமாகும்; அவை தம் லட்சியத்தை எட்டுவதற்கோ நூற்றாண்டுகள் ஆகலாம். ஐரோப்பிய மத்தியதரவர்க்கம், நிலப்பிரபுத்துவத்தை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பது குறுகிய காலத்தில் நடக்கக்கூடியது; ஆனால், ஒரு சமுதாயத்தின் மரபார்ந்த நெறிமுறைகள், நிறுவனங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் மாற்றம் கொணர்வது நீண்டகாலம் பிடிக்கின்ற காரியமாகும். அரசாங்க ஆணையின்மூலம் நீங்கள் ஆலைகளை சமூகத்தின் உடைமையாக்க இயலும்; ஆனால், தமது முன்னோர்களின் பழக்கவழக்கங்களிலிருந்து மாறுபட்ட ஆண்களையும் பெண்களையும் சட்டத்தின் மூலமாக மட்டுமே உருவாக்கிவிடமுடியாது. கல்வியிலும், கலாசாரத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருகிற நீண்ட நெடிய பணியாக அது உள்ளது.

   இத்தகைய மாற்றம் சாத்தியம்தானா என்று சந்தேகம் கொள்பவர்கள் தம்மைத்தாமே உற்று நோக்கிக்கொள்ள வேண்டும். இன்று நவீன பிரிட்டனில் வாழ்கின்ற நாம், பதினேழாம் நூற்றாண்டில் வெடித்த நீண்ட நெடிய புரட்சியின் தோன்றல்கள்; அந்தப் புரட்சி வெற்றிபெற்றதன் பிரதானக் குறியீடு, அதை நாம் முற்றிலும் அறியாதவர்களாக இருப்பதுதான். எந்தப் புரட்சிகள், தாம் உருவானதன் சுவடுகள் அனைத்தையும் துடைத்தெடுத்து விடுகின்றனவோ அவைதான் வெற்றிகரமான புரட்சிகள். அவ்வாறு செய்வதன்மூலமாக, எத்தகைய நிலைமையை உருவாக்க அவை போராடினவோ அந்த நிலைமை இயல்பானதாகத் தோற்றம்கொள்ளச் செய்கின்றன. இந்தவகையில், அவை மகப்பேறு போன்றவை. இயல்பான'  மனிதர்களாக நாம் செயல்பட வேண்டுமேயானால், பிறக்கும்போது நாம் பட்ட வேதனையையும், துன்பத்தையும் மறந்தேயாகவேண்டும். தனிமனிதனாக இருந்தாலும் அல்லது அரசுகளாக இருந்தாலும் பிறப்பு என்பது துயர்மிகுந்ததாக இருப்பது இயல்பே. விவசாயிகளாக இருந்து தொழிலாளர்களாக மாறியவர்களைக் கொடும் சுரண்டலுக்கு ஆளாக்கி, அந்தச் சுரண்டல் அஸ்திவாரத்தின்மீது கட்டப்பட்ட நவீன பிரிட்டிஷ் அரசு உருவானபோது அதன் சருமத்தின் வியர்வைத்துளை ஒவ்வொன்றிலிருந்தும் ரத்தமும் அழுக்கும் கசிந்ததை 'மூலதனம்' நூலில் நினைவுபடுத்துகிறார் மார்க்ஸ். ரஷ்ய விவசாயிகளை நிர்ப்பந்தமாக நகர்மயமாக்கலுக்கு ஆளாக்கிய ஸ்டாலினின் திட்டத்தைக் கண்டிருந்தால் அவர் துடிதுடித்துப் போயிருப்பார் என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பெரும்பாலான அரசுகள், புரட்சி, படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, தட்டிப்பறித்து தனதாக்கிக்கொள்வது அல்லது (அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற சமூகங்களில் நிகழ்ந்தது போன்று) மனிதர்களைப் பூண்டோடு அழித்தல் ஆகியவற்றின் மூலமே உருவாகின. இந்த ரத்தக்கறைபடிந்த வரலாற்றை மக்களின் நினைவிலிருந்து அகற்ற முடிந்த அரசுகளே வெற்றிகரமான அரசுகள். இது சாத்தியமாகாத அளவு மிக அண்மையில் அநீதியில் பிறந்த—எடுத்துக்காட்டாக, இஸ்ரேல், வடக்கு அயர்லாந்து போன்ற—அரசுகள், அரசியல் மோதல்களால் துயரத்துக்கு ஆளாகக்கூடும்.

    மிகவுயர்ந்த வெற்றியை ஈட்டிய புரட்சியில் விளைந்தவர்கள் நாம் என்ற நிலையிருக்கும் பட்சத்தில், அனைத்துப் புரட்சிகளும் தோல்வியைத்தான் தழுவும் என்றும், முன்னர் இருந்த அதே நிலைமைக்கே அவை நம்மைக் கொண்டுசெல்லும் என்றும், முன்னர் இருந்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மோசமான நிலைமையை ஏற்படுத்திவிடும் என்றும், தன் மகவுகளையே காவு கொள்ளும் என்றும் பழமைவாதிகள் கொட்டிமுழக்குகின்ற குற்றச்சாட்டுகளுக்கு நமது வெற்றியே தக்க பதிலாக அமையும். ஆனால், நிலப்பிரபுத்துவ கனதனவான்களை பிரான்ஸ் அரசாங்க சிம்மாசனத்தில் மீண்டும் அமரவைத்ததாகவோ அல்லது ஜெர்மனி, நிலவுடைமை பெருந்தனக்காரர்களை ஆட்சிபீடத்தில் மறுபடியும் கொண்டு அமர்த்தியதாகவோ தெரியவில்லை. ஒருவேளை இதுபோன்ற அறிவிப்புகளைப் பத்திரிகைகளில் நான் சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டேனோ என்னவோ! பிரபுக்களின் சபை முதல் அரசகுடும்பத்தால் செய்யப்படும் ‘பிளாக் ராட்’ (Black Rod) எனும் அதிகாரியின் நியமனம் வரை மற்றெந்த நவீன நாடுகளைக்காட்டிலும் பிரிட்டனில், நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச-சொச்சங்கள் அதிகமாக இருப்பது உண்மைதான்; ஆனால், ஆளும் மத்தியதர வர்க்கத்தினர்க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதுதான் பெரும்பாலும் இதற்குக் காரணம். மன்னராட்சியைப் போன்றே, மக்களில் பெரும்பாலோரை ஓர் எல்லைக் கோட்டுக்கு வெளியே நிறுத்தியும், மிரட்சிகொள்ளச் செய்யவுமான ஒரு நிலையை அது தோற்றுவிக்கிறது. ஆயினும், பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் இளவரசர் ஆண்ட்ரூவிடம் கவர்ந்திழுக்கக்ககூடிய ரகசியத்தையோ புதிரையோ காணாத நிலையில், ஆட்சியிலிருப்பவர்கள், தமது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு மேலதிக நம்பகமான வழிகள் இருக்கக்கூடும்.

ஐரோப்பிய மக்களின் இரட்டை நிலை

   இன்று ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தாம் புரட்சிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை அவர்கள், சில புரட்சிகளுக்கு எதிரானவர்கள்; மற்றவர்களின் புரட்சிகளுக்கு ஆதரவானவர்கள் என்பது இதன் பொருளாக இருக்கலாம். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது, நம் சொந்த உணவைக் காட்டிலும் பிறரது உணவு கவர்ச்சிகரமானதாகத் தோன்றுவதுபோல், பிற மக்களின் புரட்சியும் அப்படித்தான் நமக்குத் தோன்றும். இந்த மக்களில் பெரும்பாலானவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிந்த புரட்சியை அல்லது காலனியாதிக்கத்திலிருந்த அயர்லாந்து, இந்தியா தொடங்கி கென்யா, மலேசியா வரை நாடுகள் இறுதி விடுதலை அடைந்ததையும் அங்கீகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், சோவியத் முகாம் வீழ்ந்தபோது, அவர்களில் பலர் கசிந்துருகி கண்ணீர்விட்டிருக்க மாட்டார்கள்.
ஸ்பார்டகஸ் தொடங்கி, அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் நடந்ததுவரை அடிமைகளின் எழுச்சியை அவர்கள் அங்கீகரித்திருக்கக்கூடும்.
ஆனால், இந்தக் கிளர்ச்சிகள் யாவற்றிலும் வன்முறை இருந்தது; இவற்றுள் சில போல்ஷெவிக் புரட்சியைக்காட்டிலும் அதிகமான வன்முறையைக் கொண்டிருந்தன. எனவே, இத்தகைய நிலையெடுப்பவர்கள், தாமாகவே முன்வந்து, தாங்கள் எதிர்ப்பது சோஷலிஸ்ட் புரட்சியைத்தான் என்றும், அடிப்படையில் புரட்சியையே அல்ல என்றும் ஒப்புக்கொள்வது இன்னும் நேர்மையானதாக இருக்குமல்லவா?

   வன்முறையை ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்ற, சாத்வீகக் கொள்கையாளர்கள் என்று அறியப்பட்ட ஒரு சிறுபான்மை மக்கள் பகுதியினர் இருக்கத்தான் செய்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையான சாடுதலுக்கு ஆளானபோதிலும், அவர்கள் தம் கொள்கையில் தீரத்துடனும், மனவுறுதியுடனும் இருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், சாத்வீகக்கொள்கை உடையவர்கள் மட்டும் வன்முறையை வெறுக்கிறார்கள் என்றில்லை. மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் கொடியவர்கள், மக்களைத் தாக்கித் துன்புறுத்துகின்ற மன நோய்க்கு ஆளானவர்கள் சிலரைத்தவிர மக்கள் ஒவ்வொருவருமே வன்முறையை நிராகரிக்கிறார்கள். சாத்வீகக் கொள்கை விவாதிக்கத்தக்கதாக தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டுமெனில், போர் என்பது மனவெறுப்பைத்தருகின்றது என்கிற புனிதமான பிரகடனத்தைச் செய்வதோடு நின்றுவிடக்கூடாது. எவ்வளவுதான் சரியானதாக இருப்பினும் இதுபோன்ற நிலைபாடுகள் மனதிற்கு சலிப்பை ஏற்படுத்துபவை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். வன்முறையை முற்றும் முழுவதுமாக நிராகரிக்கின்ற சாத்வீகக் கொள்கையாளர் எவரோ அவர் மட்டுமே விவாதிக்கத் தகுதியானவராகிறார். யுத்தங்களையும் புரட்சிகளையும் நிராகரிக்கிறவராக மட்டுமின்றி, சிறையிலிருந்து தப்பிய கொலைகாரன் ஒருவன், சின்னஞ்சிறு குழந்தைகள் இருக்கின்ற வகுப்பறையில் நுழைந்து தன்னிடமுள்ள எந்திரத்துப்பாக்கியை இயக்கமுயலும்போது அவனைக் கொல்லாமல் அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துமளவுக்குமட்டும் கபாலத்தில் ஒரு அடிகொடுக்கக்கூட மறுப்பதற்கு இணையாகும் இது. இத்தகைய நிலைமையை எதிர்கொண்ட எவனாவது இப்படிக் கடமை தவறியிருப்பானேயானால், அடுத்த பெற்றோர்-ஆசிரியர் கழகக்கூட்டத்தில் அவன் விரிவான விளக்கம் சொல்லவேண்டியிருக்கும்.  எந்தக் கறாரான அர்த்தத்தில் பார்த்தாலும், சுத்த சாத்வீகம் என்கிற பதம் மிகமோசமான வகையில் அறநெறிகளுக்கு எதிரானதாகும். நிலைமை எல்லைகடந்து போகிறபோது, தவிர்க்கமுடியாத சூழலில் வன்முறையைப் பிரயோகிக்கவேண்டியுள்ளது என்பதை அநேகமாக அனைவருமே ஏற்றுக்கொள்வர். ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் மக்கள், ஆக்கிரமித்த நாட்டுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுவதை ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் அனுமதிக்கிறது. அத்தகைய ஆக்கிரமிப்புகள் எதுவாயினும், சில கடுமையான நிபந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட வேண்டியுள்ளது.  பிரதானமாக, அது ஆக்கிரமிப்பு செய்த நாட்டின் தற்காப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்; எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பலனில்லாமல் போனதால் கடைசியில் இந்த வழியில் இறங்கவேண்டியதாயிற்று என்றிருக்கவேண்டும்;  குறிப்பிட்டதொரு பேராபத்தைக் களைவதற்கு இது ஒன்றுதான் வழி என்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும்; அது தேவைக்கு ஏற்ப பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும்; அதன்மூலம் ஓரளவு வெற்றியை ஈட்டத்தக்கதாக இருக்கவேண்டும்; அப்பாவி மக்களைக் கொன்றுகுவிப்பதாக அது ஆகிவிடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

ரத்தக்கறை படிந்த காலம்

   மார்க்சீயத்தின் வாழ்க்கைப் பயணத்தில் ரத்தக்கறைபடிந்த காலம் மிகக் குறுகியதெனினும், அது மிகக் கோரமான வன்முறையைக் கொண்டது. ஸ்டாலின், மா-சே-துங் இருவருமே அநேகமாக, கற்பனைக்கு எட்டாத வகையில் பெருமளவுக்கு மக்களைக் கொன்றுகுவித்தவர்களாவர். இருப்பினும், நாம் ஏற்கனவே கூறியவாறு, மிகச் சில மார்க்சீயவாதிகளே இன்று இந்தக் கோரக் கொலைகளை நியாயப்படுத்த முனைவார்கள்; ஆனால், மார்க்சீயவாதிகளல்லாதவர்கள் பலரும், ட்ரெஸ்டன் அல்லது ஹிரோஷிமா நகரங்களில் நிகழ்த்தப்பட்ட பேரழிவினை நியாயப்படுத்துவர். ஸ்டாலின் போன்றவர்களால் நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்கள் எதனால் ஏற்பட்டன; அவை மீண்டும் நிகழாமல் தடுப்பது எங்ஙனம் என்பதுகுறித்தெல்லாம் வேறு எந்த தத்துவத்தைப் பின்பற்றுபவர்களைக் காட்டிலும், மார்க்சீயவாதிகள், மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் என்பதனை நான் முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.  ஆனால், முதலாளித்துவம் இழைத்த கொடுமைகளை என்னென்று சொல்வது?
ஏகாதிபத்திய நாடுகள், பிரதேசங்களைக் கைப்பற்றும் அகோரப்பசிக்காக முதலாம் உலகப்போர் எனும் கொடூரமான ரத்தக் களரியில், தொழிலாளிவர்க்கத்து ராணுவ வீரர்களை உயிர்ப்பலி வாங்கிய கொடுமையை ஏதென்று சொல்வது? உலகுதழுவிய யுத்தம், காலனியாதிக்கச் சுரண்டல், இனப்படுகொலை, தவிர்த்திருக்கக்கூடிய பஞ்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதையும் முதலாளித்துவத்தின் சரித்திரத்தில் அடங்கும். மார்க்சீயத்தின் திரிபால் விளைந்தது ஸ்டாலினிச அரசு என்றால், முதலாளித்துவத்தின் அதிதீவிர மரபியல் மாற்றத்தால் ஜனித்ததல்லவா பாசிஸ்ட் அரசு? 1840களில் அயர்லாந்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்துக்குப் பத்து லட்சம் ஆண்களும் பெண்களும் பலியானார்கள் எனில், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், தனது மோசமான நிவாரணக் கொள்கையில், தாராள சந்தை சட்டங்களைப் பின்பற்றவேண்டும் என வற்புறுத்தியதுதான் அதற்குப் பெருமளவு காரணம். இங்கிலாந்தின் விவசாயிகள் எவ்வாறு ரத்தம் சிந்தவைக்கப்பட்டனர்; இழுத்தடிக்கப்பட்டு தம் நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்பதைக் கண்டு வெகுண்டெழுந்த காரல் மார்க்ஸ், தன் கோபத்தைக் கொஞ்சமும் மறைக்காமல் அதுகுறித்து மூலதனத்தில் எழுதுகிறார் என்பதை நாம் கண்டோம். வன்முறைமூலம் உடைமை பறிக்கப்பட்ட இந்த வரலாறுதான் இங்கிலாந்தின் கிராமியப் பசுமைவெளிகளில் நிலவும் அமைதிக்குக் கீழே படுத்துறங்குகிறது. நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த இந்த கொடூர சம்பவத்தோடு ஒப்பிட்டால் கியூபாவின் புரட்சிபோன்றதொரு சம்பவம் தேநீர் விருந்தையொத்த மிகச் சிறிய நிகழ்வேயாகும்.    

வன்முறைக்கு முற்றுப்புள்ளிவைப்பவர்கள்

   மார்க்சீயவாதிகளைப் பொறுத்தவரை, பகை முரண் (antagonism) என்பது முதலாளித்துவத்தின் இயல்பிலேயே பொதிந்து கிடப்பதாகும். அதிலிருந்து உதயமாகிற வர்க்க மோதலில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ நாடுகள் உலகளாவிய வளங்களைக் கைப்பற்றவும், ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அவை நடத்துகின்ற யுத்தங்களிலும் இந்த உண்மை அடங்கியுள்ளது. இதற்கு மாறாக, சர்வதேச சோஷலிஸ்ட் இயக்கத்தின் உடனடி லட்சியங்களில் ஒன்றாக இருப்பது சமாதானமாகும். போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்ததுமே, முதல் உலகப்போரின் கொலைபாதகச் செயல்களிலிருந்து ரஷ்யாவை அவர்கள் விலக்கிக்கொண்டனர். யுத்தவெறி, குறுகிய வெறியுணர்வுகள் ஆகியவற்றின்பால் வெறுப்புகொண்டதால் சோஷலிஸ்டுகள்,  நவீன வரலாறு முழுதும், பல சமாதான இயக்கங்களில் முக்கிய பாத்திரம் வகித்துவந்துள்ளனர். தொழிலாளிவர்க்க இயக்கம் என்பது வன்முறைக்கான இயக்கமல்ல; அது வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இயக்கமாகும்.

   தான் செய்கின்ற காரியத்தின் விளைவைப்பற்றிக் கவலைகொள்ளாமல், அரசின் மிகப்பெரும் படைகளுக்கு எதிராகப் புரட்சியாளர்களின் சின்னஞ்சிறு குழுவைக் கொண்டு நிறுத்தும் “சாகசத்திருவிளையாடலை” யும் மார்க்சீயவாதிகள் காலங்காலமாக எதிர்த்துவந்துள்ளனர். போல்ஷெவிக் புரட்சியை நடத்தியது, சதிகாரர்களைக் கொண்ட சின்னஞ்சிறு ரகசியக் குழுவன்று; சோவியத்துக்கள் எனும் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்குப் பகிரங்கமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட தனிநபர்கள்தான் அதை நடத்தினார்கள். டாங்கிப் படைகளுக்கு எதிராகக் கோபக்கனல் தெறிக்கும் முகத்துடன், கையில் வைக்கோல்வாரும் கம்புகளை ஏந்திச்செல்லும் போராளிகளைக் கொண்ட போலித்தனமான வீரஎழுச்சிகளைத் தீர்மானகரமாக எதிர்த்து நின்றவர் மார்க்ஸ். வெற்றிகரமான புரட்சிக்குக் காரியசாத்தியமான சில முக்கியமான முன்தேவைகள் அவசியம் என்பது அவரது கருத்து. இதற்கு உருக்கு போன்ற உள்ளமும் மிக அதிகமான வீரமும் இருந்தால் மட்டும் போதாது. அரசாங்கம் செழிப்பிலும், அதற்கு எதிரான சக்திகள் நாடிதளர்ந்துபோய் சுக்குநூறான நிலையிலும் இருக்கின்ற சந்தர்ப்பத்தைக்காட்டிலும், பெரும் நெருக்கடியான சூழலில் சிக்குண்ட ஆளுகின்ற வர்க்கம் வலுவிழந்து பிளவுபட்ட நிலையிலும் சோஷலிஸ்ட் சக்திகள் வலிவுடன், மிக நல்லமுறையில் திரட்டப்பட்ட நிலையிலும் இருக்கின்றபோது புரட்சிகர சக்திகள் நல்லமுறையில் சாதிக்கமுடியும் என்பது வெள்ளிடைமலை. இந்த வகையில், மார்க்சின் பொருள்முதல் வாதத்திற்கும்-சமூகத்தில் செயல்படும் பொருளாதய சக்திகளைப்பற்றிய ஆய்வு அவசியம் என அவர் வலியுறுத்துவது-புரட்சிகர வன்முறைபற்றிய பிரச்சனைக்கும் தொடர்பு உள்ளது.
  சார்ட்டிஸ்டுகள் இயக்கம் முதலாக, 1930-களில் நடைபெற்ற பட்டினிப் பேரணிகள் ஈறாக
பிரிட்டனில் நடந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதிபூர்வமாகவே நடந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஆத்திரமூட்டலுக்கு ஆட்படுத்தப்பட்டால் அல்லது மிகவும் அவசியத் தேவை ஏற்பட்டால் அல்லது அமைதிபூர்வமான போராட்டமுறைகள் சுத்தமாகத் தோல்வியைத் தழுவினால்மட்டுமே தொழிலாளி வர்க்க இயக்கங்கள் வன்முறையில் இறங்கியுள்ளன.  இதே உண்மை, [பிரிட்டனிலும் அமெரிக்கவிலும் 19-20 ஆம் நூற்றாண்டுகளில் வாக்குரிமைகோரி நடந்த] 'சஃப்ராகெட்ஸ்' (Suffragettes) இயக்கத்துக்கும் பொருந்தும்.   குருதி சிந்தப்படுவது கூடாது என உழைக்கும் மக்கள் உறுதிகாட்டும் அதே நேரத்தில், அவர்களின் எஜமானர்கள், சாட்டைகளைச் சுழற்றவும், துப்பாக்கிகளை இயக்கவும் முனைப்புகாட்டுவது பட்டவர்த்தனமான முரண்பாடாகும். முதலாளித்துவ அரசுகளின்வசம் இருக்கின்ற சக்திவாய்ந்த ராணுவ வசதிகள் எதுவும் உழைக்கும் மக்களிடம் இருப்பதில்லை. அமைதியாக வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவோர்மீது தனது ஆயுதங்களை ஓர் அடக்குமுறை அரசு கட்டவிழ்த்துவிடுவது உலகில் நாம் சர்வசாதாரணமாகக் காணும் காட்சியாகும். ஜெர்மானிய தத்துவவியலாளரான வால்டர் பெஞ்சமின் கூறுவதைப்போல, புரட்சி என்பது தறிகெட்டு ஓடுகின்ற ரயில்வண்டியல்ல; அது அத்தகைய ஓட்டத்தைத் தடுக்கின்ற அவசரத் தடை (emergency brake) போன்றதாகும். சந்தைப் பொருளாதார சக்திகளால் உந்தித் தள்ளப்படுகிற முதலாளித்துவம்தான் தனது கட்டுப்பாட்டை இழந்து செல்கிறது; வெறியாட்டம் போடுகின்ற இந்த விலங்கை நேர்த்தியாகக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான மக்களின் கூட்டு முயற்சியில் சோஷலிசம்தான் ஈடுபடுகிறது.

புரட்சி, ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல
   
  பொதுவாக, சோஷலிஸ்ட் புரட்சிகள் வன்முறை வடிவம் எடுப்பதற்குக் காரணம், சொத்துடைய வர்க்கத்தினர் போராட்டத்தில் இறங்காமல் தமது பிடிமானங்களை விட்டுக்கொடுக்கப் பெரும்பாலும் முன்வராததேயாகும். இருப்பினும், இத்தகைய பலாத்காரத்தை மிகக் குறைந்த அளவு கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஏனெனில், மார்க்சீயத்தைப் பொறுத்தவரை புரட்சி என்பது ஆட்சிக்கவிழ்ப்பு போன்றதோ அல்லது மனவெறுப்பினால் தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்புவதோ அல்ல. புரட்சிகள், ஆட்சியைக் கீழே இறக்குவதற்கான முயற்சிகள் மட்டுமல்ல. வலதுசாரி ராணுவக் கிளர்ச்சி இதனை செய்யக்கூடும்; ஆனால் மார்க்சீயவாதிகள், புரட்சி என்று கருதுவது இதை அல்ல. முழுமையான அர்த்தத்தில் கூறுவதானால், ஒரு சமூக வர்க்கம், மற்றொரு வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அது இருந்த இடத்தில் தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டும்போதுதான் புரட்சி கைகூடுகிறது.

   
   ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம், தனது பல்வேறு நேசசக்திகளுடன் இணைந்து, பூர்ஷ்வா வர்க்கத்திடமிருந்து அல்லது முதலாளித்துவ மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஆட்சியைக் கைக்கொள்வதுதான் சோஷலிஸ்ட் புரட்சியாகும். முதலாளித்துவ சமுதாயத்தில் இருக்கும் ஆகப்பெரிய வர்க்கமாகத் தொழிலாளி வர்க்கத்தைக் கருதினார் மார்க்ஸ். ஆக, இங்கே நாம் பெரும்பான்மையாக உள்ளவர்களின் செயல்பாடுகளைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோமேதவிர, கலகக்காரர்களின் சிறியதோர் குழுவின் நடவடிக்கைகளை அல்ல. சோஷலிசம் என்பது மக்களின் சொந்த அரசாங்கம் பற்றிய விஷயமாதலால், உங்கள் சார்பில் யாரும் சோஷலிஸ்ட் புரட்சியை நடத்த இயலாது; சீட்டு விளையாட்டில் எவ்வாறு உங்கள் சார்பில் எவரும் விளையாடி வல்லுநர் ஆகமுடியாதோ அதேபோலத்தான் இதுவும். மக்களின் இத்தகைய சுய-தீர்மானம், “ஒருவர் தனது காதல் கடிதத்தைத் தானே எழுதுவது போன்றது; தனது நாசியை தானே சுத்தப்படுத்திக் கொள்வதையொத்தது. எவ்வளவுதான் மோசமான முறையில் இந்தக் காரியங்களை ஒருவர் செய்தாலும் அதை அவரேதான் செய்ய வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம்”  என்கிறார் ஆங்கில எழுத்தாளர் ஜி.கே.செஸ்டெர்டன் (G.K.Chesterton). என்னைக்காட்டிலும் என்னுடைய உதவியாள் மிக மிக நேர்த்தியாக எனது மூக்கை சுத்தப்படுத்தக்கூடும்; ஆனால், எனது கண்ணியம் கருதி அந்த வேலையை நானே செய்துகொள்வதுதான் சரியாக இருக்கும் அல்லது (நான் இளவரசர் சார்ல்ஸ் ஆக இருக்கும்பட்சத்தில்) குறைந்தபட்சம் அவ்வப்போதாவது அதை நான் செய்துகொள்ள வேண்டும். கட்டுக்கோப்பாகச் செயல்படுகின்ற சதிகாரர்களின் முன்னணிப்படையினரால் உங்கள் கைகளில் சமர்ப்பிக்கப்படக் கூடியதல்ல புரட்சி. இதல்லாமல், லெனின் சுட்டிக்காட்டியதைப்போல அது வெளிநாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு—கிழக்கு ஐரோப்பாவில் ஸ்டாலின் செய்ததுபோன்று—துப்பாக்கிமுனையில் திணிக்கப்படக் கூடியதுமல்ல. பதப்படுத்தப்பட்ட சுறாமீனைக்கொண்டு செய்யப்படும் சிக்கலான கலைப்படைப்பைத் தன் பெயரில் உருவாக்கிடத் தனது உதவியாளர்களை ஏவிவிடுகின்ற கலைஞரைப் போலன்றி (நாவலாசிரியர்களும்கூட சீக்கிரத்தில் இதே காரியத்தைச் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை) நீங்களே இதனை [சோஷலிஸ்ட் புரட்சியை] உருவாக்குவதற்குத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால்தான், ஒருகாலத்தில் ஒப்புநோக்கில் சக்தியற்றவர்களாக இருந்தவர்கள் அனுபவம் பெற்று, நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தன்னம்பிக்கை கொண்டு சமுதாயம் முழுவதையுமே மாற்றியமைப்பதற்கு முன்னோக்கி நடைபோடச் செய்ய இயலும். சோஷலிஸ்ட் புரட்சிகள் ஜன நாயகரீதியிலானவையாக மட்டுமே இருக்கமுடியும். ஆளும் வர்க்கம்தான் ஜன நாயகமற்ற சிறுபான்மையாக உள்ளது. அதீதமாகப் பிரயோகிக்கப்படும் பலாத்காரத்துக்கு எதிரான அரணாக இதுபோன்ற எழுச்சிகளில் ஈடுபடுத்தப்படும் பெருமளவிலான வெகுஜனங்கள் இருப்பது இயல்பே.
இந்த அர்த்தத்தில் நோக்கும் போது, வெற்றிகரமாக அமையக்கூடிய புரட்சிகள், மிகக்குறைவான வன்முறையையே கொண்டிருக்கும்.

   புரட்சிகளுக்கு எதிராக பயங்கரத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடத் தயாராக இருக்கும் கிலிகொண்ட அரசாங்கங்களிடமிருந்து எதிர் விளைவாக ரத்தக் களரி ஏற்பட அந்தப் புரட்சிகள் காரணமாக அமைந்துவிடாது என்று இதற்குப் பொருளல்ல. எவ்வளவுதான் மனவெறுப்பு கொண்டதாகவும், தற்காலிகத்தன்மை கொண்டதாகவும் இருந்தபோதிலும், தம்மால் ஆளப்படுகின்றவர்களின் செயல்முனைப்பற்ற ஓரளவு சம்மதத்தை சார்ந்துதான் சர்வாதிகார அரசுகள்கூட இயங்கவேண்டியுள்ளது. ஆட்சிக்கு எதிரான வெறுப்புணர்வு நிரந்தரமாகக் குடிகொண்டது மட்டுமல்லாமல், ஆட்சியின்மீதான நம்பிக்கை கிஞ்சிற்றும் இல்லாத நிலையில் எவரும் ஒரு நாட்டை தேவையான அளவு சிறப்பாக நிர்வகிக்கமுடியாது. சிலரை சிலகாலம் சிறையில் அடைக்கலாம்; ஆனால், எல்லா மக்களையும் எல்லா காலத்திலும் அவ்வாறு காரக்கிருகத்தில் தள்ளமுடியாது. நீண்ட காலத்திற்கு அத்தகைய அவப்பெயர் அடைந்த அரசுகள் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது சாத்தியமே. எடுத்துக்காட்டாக இன்று பர்மாவில் அல்லது ஜிம்பாப்வேயில் இருக்கும் அரசுகளை நினைத்துப்பாருங்களேன்.
கொடுங்கோலர்களுக்கும் கூட இறுதியில் சுவரில் எழுதப்பட்டிருப்பது என்னவென்று தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிடும். எவ்வளவுதான் கொடூரமானதாகவும் கொலைகாரத்தனம் கொண்டதாகவும் தென்னாப்பிரிக்க நிறவெறி தாண்டவமாடியபோதிலும், அது இனிமேலும் நீடிக்கமுடியாது என்பதை இறுதியில் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. போலந்து, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா மற்றும் சோவியத் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிற தேசங்களின் சர்வாதிகாரங்களுக்கு 1980களின் இறுதியில் நிகழ்ந்ததும் இதற்குப் பொருந்தும். பல்லாண்டுகளாக ரத்தம் சிந்தியதற்குப்பின்னர் [வடக்கு அயர்லாந்தின்] உல்ஸ்டர் யூனியனிஸ்டுகள் பலரும்கூட கத்தோலிக்கப் பிரஜைகளை ஒதுக்கிவைப்பது இனிமேலும் சாத்தியமற்றது என்பதை அங்கீகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளதும் உண்மையே.

புரட்சியை நாடுவது ஏன்? 

   இதெல்லாம் இருந்தாலும், நாடாளுமன்ற ஜனநாயகம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றைக் காட்டிலும் மார்க்சியவாதிகள், புரட்சியை நாடுவதற்குக் காரணம் என்ன? அவர்கள் அப்படி செய்வதில்லை அல்லது குறைந்தபட்சம் அவர்கள் அனைவருமே அப்படிச் செய்வதில்லை என்பதுதான் இந்தக் கேள்விக்கான விடை. அதிதீவிர இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டுமே அத்தகைய நிலையை மேற்கொள்கின்றனர். ரஷ்யாவில் போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த சட்டங்களில் ஒன்று மரணதண்டனையை ரத்து செய்வதற்கானதாகும். சமூக சீர்திருத்தவாதியாகவோ அல்லது புரட்சியாளராக இருப்பதென்பது [இங்கிலாந்தில் எதிரும் புதிருமாகக் கால்பந்தாடும்] எவர்டன் அல்லது ஆர்சனல் டீம்களை ஆதரிப்பது போன்ற செயலல்ல. புரட்சியாளர்கள் விழைவது ஏதோ பத்தாம்பசலி சீர்திருத்தத்தையோ அல்லது அரசியல் சர்வரோக சஞ்சீவினியாக சீர்திருத்தவாதத்தையோ அல்ல; மாறாக, நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ மாற்றம் எந்த அளவு வேகமாக ஏற்பட்டதோ அந்த அளவு விரைவாக சோஷலிச மாற்றம் வரவேண்டுமென்பதையே புரட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்கே அவர்கள் சீர்திருத்தவாதிகளிடமிருந்து வேறுபடுகிறார்கள் என்று பார்க்கையில், எடுத்துக்காட்டாக, முக்கியமானதான புரட்சியிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடும் என்பதால், மருத்துவமனைகளுக்கு மூடுவிழாசெய்வதை எதிர்த்துப் போராடமாட்டோம் என்ற நிலை எடுத்து அவர்கள், கருத்துவேறுபாடு கொள்வதில்லை. உண்மையில் சொல்வதானால், அத்தகைய சீர்திருத்தங்களைத் தொலைநோக்குப் பார்வைகொண்டு, முற்போக்கான புரிதலுடன் அவர்கள் அணுகுகிறார்கள். சீர்திருத்தம் அத்தியாவசியமானதுதான்; ஆனால், தற்போதுள்ள சமூக அமைப்பு அதற்கு இடம் தர மறுக்கிற முட்டுச் சந்தாக இருப்பதை ஒருகட்டத்தில் உணர்வீர்கள்; உற்பத்திமுறையில் உள்ள சமூக உறவுகள் என இதைத்தான் மார்க்சிசம் சொல்கிறது. இதைவிட இன்னும் நளினமும் நுட்பமும் குறைவான வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதாய வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு ஆதிக்க வர்க்கம், அவற்றைத் தருவதற்கு மிகவும் முரண்டுபிடிக்கும். அந்த கட்டத்தில்தான், சீர்திருத்தமா அல்லது புரட்சியா-இவற்றில் எதனைத் தேர்வு செய்வது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால், [ஆங்கிலேய] சமூக வரலாற்றாசிரியரான ஆர்.எச்.டாவ்னி ( R.H.Tawney) குறிப்பிட்டதைப்போன்று வெங்காயத்தை நீங்கள் அடுக்கடுக்காக உரித்துவிடலாம்; ஆனால், புலியின் நகத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடுக்கமுடியாது. வெங்காயத்தை உரிப்பது என்று கூறுகையில், சீர்திருத்தம் என்பது மிகவும் எளிதான காரியம் என்பதுபோல் தொனிக்கிறது. ஆனால், இன்று தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக்கொண்ட மிதவாத சமுதாயத்தின் மிகவும் போற்றிப் பாதுகாக்கத்தக்க அம்சங்களாக நாம் கருதும்-வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, அனைவருக்கும் கல்வி, பத்திரிகை சுதந்திரம், தொழிற்சங்க உரிமை, இன்னபிற உரிமைகள் உட்பட-பெரும்பாலான சீர்திருத்தங்கள், ஆளும்வர்க்கத்தின் கொடூரமான தாக்குதல்களை எதிர்த்து நடத்தப்பட்ட மக்களின் போராட்டங்களால் வென்றெடுக்கப் பட்டவையாகும்.

   புரட்சியாளர்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்தேயாக வேண்டுமென்பதுமில்லை.அவர்தம் லட்சியங்களை எட்டுவதற்கு அது உதவும் பட்சத்தில், அந்த அளவுக்கு அதனை ஏற்பது நல்லது. இருப்பினும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின்பால் மார்க்சீயவாதிகள் தயக்கம் காட்டுவதற்கு அதன் ஜனநாயகத்தன்மை காரணமல்ல; மாறாக, அது போதுமான அளவு ஜனநாயகத்தன்மை கொண்டிருக்கவில்லை என்பதுதான் காரணம். நாடாளுமன்ற அமைப்புகள், தமது அதிகாரத்தை நிரந்தரமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அமைப்புகள் என மக்களுக்கு நம்பிக்கையூட்டப்படுகிறது; எனினும், அவற்றின்மீது அவர்கள் மிகச்சொற்பமான கட்டுப்பாடே செலுத்தமுடியும். பொதுவாக, புரட்சி என்பது ஜனநாயகத்துக்கு நேர் எதிரானதென்றும், பெரும்பான்மையினரின் விருப்பத்தை சீர்குலைப்பதற்காகத் தலைமறைவாக இயங்கும் சிறுபான்மை மக்களால் நடத்தப்படுகின்ற தீய நோக்கம்கொண்ட சதிவேலை அது என்றும் கருதப்படுகின்றது. உண்மையில், ஆடவரும் பெண்டிரும் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளான கவுன்சில்கள் மற்றும் அசெம்பிளிகளின் மூலமாக அதிகாரத்தை மேற்கொள்ளுதல் என்பதுதான் தற்போதுள்ள நிலையில், எதைக்காட்டிலும் மிகவும் ஜனநாயக வாய்ப்பாகும். போல்ஷெவிக்குகளைப் பொறுத்தவரை, அவர்தம் அணிகளுக்குள்ளேயே கருத்துவேறுபாடுகளை பகிரங்கமாக விவாதித்தல் எனும் போற்றத்தக்க வரலாறு உண்டு; மேலும், தாம் மட்டுமே நாட்டை ஆளுகின்ற ஒரே அரசியல் கட்சியாக இருக்கவேண்டுமெனும் கருத்து அவர்களது மூலத்திட்டத்தில் இல்லை. அதுமட்டுமின்றி, பின்னர் நாம் விவாதிக்கவிருப்பதைப் போன்று, நாடாளுமன்றங்கள் அரசின் அங்கம்; பெரும்பாலும் உழைப்பின்மீதான மூலதனத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதே அதன் பணியாக உள்ளது. இது மார்க்சீயவாதிகளின் கருத்து மட்டுமல்ல. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு விமர்சகர் எழுதியதைப் போன்று, ஆங்கிலேய நாடாளுமன்றம்,  “உடைமையைக் கட்டிக் காக்கும் அரணாக” உள்ளது. இறுதியில், தனியுடைமையின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்குப் பொதுமக்களின் நலனை நாடாளுமன்றமோ அல்லது அரசோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்கிறார் மார்க்ஸ்.  [நாம் ஏற்கனவே இந்த நூலில் குறிப்பிட்டவாறு] சிசெரோவும் (Cicero) இந்தக்கருத்தை இதயபூர்வமாக அங்கீகரிக்கிறார்.  சுயநல சக்திகளின் பேரதிகாரத்தை எதிர்கொள்வதற்கு முதலாளித்துவ அமைப்பிலுள்ள எந்த நாடாளுமன்றமும் துணியாது. மிகவும் முற்போக்கான முறையில் தலையிடப்போவதாக அது அச்சுறுத்தும் பட்சத்தில், அதற்கு விரைந்து கல்தா கொடுக்கப்பட்டுவிடும். அப்படியிருக்கையில், இத்தகு விவாத மன்றங்களை, தமது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பல வழிகளில் ஒன்றாகக் கொள்ளாமல், அவற்றை அத்தியாவசியமான கருவியாக சோஷலிஸ்டுகள் கருதுவது வினோதமாகத் தோன்றும்.

மார்க்ஸ் காட்டிய அமைதி வழி                                                                                                
  
ஆயினும், இங்கிலாந்து, ஹாலந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், அமைதிவழிகளின் மூலமாகவே சோஷலிஸ்டுகள் தமது லட்சியங்களை எட்டமுடியுமென்று மார்க்சும் கருதியதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றத்தையோ சமூக சீர்திருத்தத்தையோ தேவையற்றவை என அவர் நிராகரித்துவிடவில்லை. தொழிலாளிவர்க்கத்தில் பெரும்பாலானோரின் ஆதரவுடன்தான் சோஷலிஸ்டு கட்சி ஆட்சியில் அமரமுடியும் என்றும் அவர் கருதினார். தொழிலாளிவர்க்க அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கங்கள், கலாசார அமைப்புகள் மற்றும் அரசியல் செய்தித்தாள்கள் போன்ற சீர்திருத்தவாத அங்கங்களை அவர் உற்சாகமாக ஆதரித்தார். வாக்குரிமையை விரிவாக்குதல், வேலை நேரத்தைக் குறைத்தல் போன்ற குறிப்பிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். வயதுவந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டால், அதுவே முதலாளித்துவ ஆட்சியைப் படிப்படியாக பலவீனப்படுத்திவிடும் என உண்மையில் ஒருகட்டத்தில் நம்பிக்கைமிகு கருத்துகொண்டிருந்தார் அவர். அவரது சகதோழரான ஃப்ரெடரிக் எங்கெல்சும்கூட அமைதிபூர்வமான சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார்; வன்முறையற்ற புரட்சி ஈடேற விழைந்தார்.
சோஷலிஸ்ட் புரட்சியின் பிரச்சனை
   சோஷலிஸ்ட் புரட்சிகளின் பிரச்சனைகளில் ஒன்று என்னவெனில், தாக்குப்பிடித்து நிற்பதற்கு மிகவும் கடினமான இடங்களில் அவை வெடிப்பதற்கான சாத்தியக்கூறு கொண்டிருப்பதேயாகும். போல்ஷெவிக் எழுச்சி விஷயத்தில் இந்த முரண் நிலையைக் குறிப்பிடுகிறார் லெனின். குரூரமான ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்ட, அரைப்பட்டினியால் அவதியுறுகின்ற ஆடவரும் பெண்டிரும், புரட்சியில் ஈடுபடுவதால் தாம் இழப்பதற்கு எதுவுமில்லை என எண்ணக்கூடும். மாறாக, நாம் கண்டவாறு, அவர்கள் எழுச்சிகொள்வதற்குக் காரணமாக அமைந்த பின்தங்கிய சமூக நிலைமைகள் சோஷலிசக் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு மிகவும் சாத்தியமில்லாத இடமாக அமைந்துள்ளன. இத்தகு நிலைமைகளில், ஒரு அரசைத் தூக்கியெறிவது சுலபமாக இருக்கலாம்; ஆனால், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதோர் மாற்று அமைப்பை உருவாக்குவதற்கு வழிவகைசெய்கின்ற வளங்கள் அங்கிருப்பதில்லை. தாம் இருக்கும் நிலையில் திருப்தி கொண்ட மக்கள் புரட்சியை நடத்துவதற்கில்லை. நம்பிக்கை வறண்டுபோன மக்களும் இதைச் செய்யப்போவதில்லை. நிலவும் சூழலில் இன்னும் தமக்கென்று ஏதேனும் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையில் அந்த சூழலை மாற்றுவதற்கு ஆடவரும் பெண்டிரும் மிகமிகத் தயக்கம் காட்டுவார்கள் என்பது சோஷலிஸ்டுகளுக்கான கெட்ட செய்தியாகும்.
   தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பாராமுகத்தை சுட்டிக்காட்டி சிலசமயம் மார்க்சீயவாதிகள் ஏளனத்துக்கு ஆளாக்கப்படுவதுண்டு. தம்மை அலட்சியப்படுத்துகின்ற அரசின் அன்றாட அரசியலை சாதாரண மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது இயல்பே. ஆனால், அவர்களுக்கான மருத்துவமனைகளை மூடிவிடவும், அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளை அயர்லாந்தின் மேற்குப்பகுதிக்கு மாற்றிவிடவும், அவர்களது புறக்கடைத் தோட்டம் இருக்கும் பகுதியில் ஒரு விமான நிலையத்தைக் கட்டவும் அரசு முனையுமேயானால், அவர்கள் கொந்தளித்து செயலில் இறங்கக்கூடும். ஒருவிதத்தில் மக்களிடம் காணப்படும் அலட்சியமானது, முற்றும் முழுவதுமாக பகுத்தறிவுக்கு உகந்ததாகவே இருக்கக்கூடும் என்பதை வலியுறுத்துவது அவசியம். ஒரு சமூக அமைப்பானது தனது பிரஜைகளுக்கு சில குறைந்தபட்ச திருப்தியளிக்கும் காரியங்களை செய்துதரும்வரை, நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் ஆபத்துகளை எதிர்கொண்டு பாய்வதைக் காட்டிலும், அந்த அமைப்பினையே ஒட்டி ஒழுகுவது அவர்களைப் பொறுத்தவரையிலும் நியாயமற்றதாகாது. இத்தகைய பழமைவாதத்தை நாம் ஏளனப்படுத்திவிடமுடியாது.

      எப்படியிருப்பினும், தாக்குப்பிடித்து நிற்பதற்கான முயற்சிகளில் அநேகம்பேர் மூழ்கியிருப்பதால், எதிர்காலத்தைப் பற்றிய லட்சிய நோக்கங்களில் கவனம் செலுத்துவதில் அவர்கள் நாட்டம் கொள்வதில்லை. சமூக அமைப்பில் ஏற்படும் நிலைகுலைவுகளை ஆரத்தழுவிக்கொள்வதற்குப் பெரும்பாலான ஆடவரும் பெண்டிரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது நமக்குப் புரியத்தான் செய்கிறது. சோஷலிசம் என்பது நல்ல கருத்துபோன்று தோன்றுகிறது என்பதால் மட்டும் அவர்கள் நிச்சயம் அதனை ஏற்கமாட்டார்கள். தீவிரமான மாற்றத்தினால் ஏற்படுகின்ற கஷ்டநஷ்டங்களைக் காட்டிலும், தற்போதுள்ளதைவிட வறுமையடைதல் என்பது மோசமானது என்பதை உணரும் நிலை தோன்ற ஆரம்பித்ததும், நல்ல எதிர்காலத்திற்குள் பிரவேசித்தல் நியாயமான யோசனை என்பது புலப்படத்தொடங்கும்.
தற்போதுள்ள சமூக அமைப்புக்கு எந்த மாற்றாக இருந்தாலும் அது ஏற்கத்தக்கதே எனும் நிலைமையை கிட்டத்தட்ட நெருங்கும்போதுதான் புரட்சிகள் வெடிக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமையில், கிளர்ந்தெழாமல் இருப்பது அறிவுக்கு ஒவ்வாதது.
நூற்றாண்டுகளாக சுயநலத்தின் மேலாதிக்கத்தைக் கவர்ந்திழுத்த முதலாளித்துவம், அதன் ஏவலாளிகள், ஒரு மாற்றத்திற்காக வேறு உபாயத்தைக் கையாள முனைவதில்தான் தமது ஒட்டுமொத்த சுயநலமும் அடங்கியுள்ளது என்பதை அங்கீகரிக்கும்போது குறைபட்டுக்கொள்ள முடியாது.

     சீர்திருத்தமும், சமூக ஜனநாயகமும் நிச்சயம் புரட்சியை விலைகொடுத்து வாங்கிவிடமுடியும். விக்டோரியா காலத்து பிரிட்டனில் இத்தகைய போக்கின் தோற்றங்களை மார்க்ஸ் தானே காணும் காலம் வரை வாழ்ந்திருந்தார்; ஆயினும் அதன் தாக்கம் முழுவதையும் பதிவு செய்யும் அளவுக்கு நீண்டகாலம் அவர் வாழ்ந்திருக்கவில்லை. வர்க்க சமுதாயமொன்று, தனது கைத்தடிகளுக்கு ஓட்டை உடைசல்களையும், மிச்ச மீதங்களையும் தேவையான அளவு அள்ளித் தருமானால், தற்காலிகமாக அது பாதுகாப்பாக இருக்கக்கூடும். அதைச் செய்யத் தவறும்பட்சத்தில் (இது எந்தவகையிலும் தவிர்க்க இயலாது என்று சொல்லமுடியாவிட்டாலும்) தோல்விமுகத்தில் இருப்பவர்கள், நிர்வாகத்தைக் கைப்பற்ற எத்தனிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
அவர்கள் அப்படி செய்யக்கூடாதா என்ன? ஓட்டை உடைசல்களும், மிச்சமீதங்களும்கூட இல்லாததைக் காட்டிலும் ஏதேனும் மோசமான நிலை இருக்கக்கூடுமோ? இந்தக் கட்டத்தில், ஒரு மாற்று எதிர்கால நிலைக்காகத் துணிந்து இறங்குதல் மிகச்சிறந்த அறிவுபூர்வமான முடிவாகும்அறிவுபூர்வமான நிலை மனிதர்கள் மத்தியில் அடியாழம்வரை செல்லாவிட்டாலும், எதிர்காலத்துக்காகத் தற்போதைய அமைப்பைக் கைகழுவுதல் தமது நலனுக்கு உகந்ததே என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு அது திடமாகவே உள்ளது.
    
 
முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவது யார் என்ற வினாவை எழுப்புபவர்கள், ஒருவகையில் இந்தக் கேள்வி தேவையற்றது என்பதை மறந்துவிடுகிறார்கள். அதன் எதிரிகள், லேசாகப்பிடித்துத் தள்ளாமலேயே, தனது சுய முரண்பாடுகளின் விளைவாகப் பொலபொலவென வீழுகின்ற பெருமை முதலாளித்துவத்துக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய நிலையை சந்திக்கக்கூடிய சூழலை அது மிக நெருங்கிவந்தது. ஒரு மாற்று அமைப்பை உருவாக்கித் தருவதற்கான ஸ்தாபனரீதியில் அமைக்கப்பட்ட அரசியல் சக்தி இல்லாத நிலையில், இருக்கின்ற அமைப்பு ஒட்டுமொத்தமாக உள்ளார்ந்த தகர்வுக்கு ஆளாக்கப்படுமேயானால், சோஷலிசம் வராதது மட்டுமல்ல; காட்டுமிராண்டித்தனமான நிலைமை ஏற்படவே அது வழிவகுக்கும். முதலாளித்துவம், சர்வ வல்லமை கொண்ட நெருக்கடியை சந்திக்கின்றபோது, சிலர் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகவும், அனைவருக்கும் நன்மைதருகின்ற புதியதோர் அமைப்பு [முதலாளித்துவத்தின்] இடிபாடுகளிலிருந்து முகிழ்த்தெழவும் வழிவகுக்கின்ற அத்தகு ஸ்தாபன அமைப்பு அவசர அவசியமாகிறது.

தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், விதுரன்





Read more...

மகாத்மா காந்தி குறித்து தோழர் டாங்கே

வாழ்க நீ எம்மான்!
காந்தி மகாத்மா வாழ்க வாழ்க!!

எஸ்.ஏ.டாங்கே


[தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமான அதே பரிவாரங்கள் அவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க இன்றளவும் தொடர்ந்து பலவடிவங்களில் எத்தனிக்கின்றன. இவர்களின் விஷப்பிரச்சாரம், முறியடிக்கப்பட வேண்டும். இந்தியா, மென்மேலும் இளைய தேசமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முற்போக்கு ஜனநாயக சக்திகள் இந்தப் பணியை
செய்யவேண்டியது அவசர அவசியமாகிறது. அந்தக்கடமையின் ஒரு  பகுதியாக, மகாத்மாவின் பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்ட 1969-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், பாட்டாளிவர்க்க இயக்கத்தின் பீஷ்ம பிதாமகராகவும் விளங்கிய, வரலாற்று நாயகர் தோழர் எஸ். ஏ. டாங்கே அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அப்படியே தரப்படுகிறது.]
  
  வ்வாண்டு (1969) அக்டோபர் மாதம், மகாத்மா காந்தியின் பிறந்த நூற்றாண்டினை நம் தேசத்து மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
  1857 சுதந்திரப்போரில் நம் வீரர்கள் வீழ்ந்துபட்டதனாலும், அந்தப் போரில் இந்தியாவின் தோல்வியினாலும் நாடு பெருந்துயரில் இன்னும் ஆழ்ந்திருந்த காலத்தில்தான் அவர் பிறந்தார். அந்த மாபெரும் போராட்டம் நடந்து முடிந்து 12 ஆண்டுகளுக்குப்பின் அவதரித்த அந்தக் குழந்தை, செல்வச் செழிப்பும் பக்தியும் மிகுந்ததொரு இந்துக் குடும்பத்தில் வளர்ந்தது. அது, ஒரு புறம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தொண்டூழியம் செய்துவந்த சுதேச சமஸ்தானப் பகுதியில் ஆழ்ந்தும், மறுபுறத்தில், விக்டோரியா மகாராணியின் சாம்ராஜ்யத்து செல்வாதாராத்தைக் கட்டும்பொருட்டு லட்சோப லட்சம் மக்களைக் கொடும் பஞ்சத்துக்குத் தாரைவார்த்த, பரம ஏழைகளைக் கொண்ட இந்தியாவால் சூழப்பட்டுமிருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இதயமான லண்டனில் ஆகச்சிறந்த கல்வியை அவர் பெறவும், பிரிட்டிஷ் சட்டத்தினடிப்படையில் விசுவாசமாக வாதாடும் வழக்கறிஞராக உருவாகவும் அவரது குடும்பத்தின் செல்வம் வழிவகுத்தது.
  ஆனால், அவர் தென்னாப்பிரிக்கா சென்று அங்கு ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் நலனுக்காக அதே சட்டத்தினடிப்படையில் வாதாடியபோது, வெள்ளை ஆட்சியாளர்களின் ஆணவம், அடக்குமுறை ஆகியவற்றின் முன்னே சமத்துவம், சரிநிகர்-சமானம் எனும் கற்பனைக் கோட்டைகளெல்லாம் காற்றில் கரைந்து மறைந்துபோகலாயின. சமத்துவம், மானுடத்தின் கண்ணியம் ஆகியவற்றுக்காகவும் இனவெறியை எதிர்த்தும் நடைபெறும் போராட்டத்திற்கான பாலபாடத்தை அங்குதான் அவர் கற்றுக்கொண்டார். இருப்பினும், சாம்ராஜ்யத்தின் விசுவாசியாகவே அவர் தொடர்ந்தார்; பண்பாடு, நீதி, முன்னேற்றம் ஆகியவற்றின் சின்னமாகவே அன்று அது விளங்கியதாக எண்ணினார்.  
  எனவேதான், முதல் உலக யுத்தம் வெடித்தபோது, சாம்ராஜ்யத்தின் விசுவாச ஊழியர் என்றமுறையில், அதனைக் காக்க இந்தியாவின் இளைஞர்களைத் திரட்டலானார்; தன்னாட்சி எனும் தனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில் இத்தகு பாதுகாப்புப் பணிகளில் இறங்கப்போவதில்லை என்று முடிவெடுத்த லோகமான்ய திலகருடன் அவர் கருத்துவேறுபாடு கொண்டார்.
 
யுத்தத்தின் இறுதியில், சுதந்திரம், தேசவிடுதலை ஆகியவற்றுக்காக மக்கள் வேட்கைகொண்டபோது, முதலில், ரௌலட் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை ஏவியும், பின்பு பயங்கர ரத்தக்களரிகளைக் கட்டவிழ்த்துவிட்டும், ஜாலியன்வாலாபாக் சம்பவம்போன்று மக்களைக் கொன்றுகுவித்த கொடுமைகளை நிகழ்த்தியும், கிளர்ந்தெழுந்த பஞ்சாபின் அமைதியான நகரங்கள் மற்றும் கிராமங்களின்மீது குண்டுவீசித் தாக்குவதன் மூலமாகவும் மக்களின் கோரிக்கைகளை அடக்கி ஒடுக்கிவிட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துணிந்தபோது, [சாம்ராஜ்யத்தின்] விசுவாசியாகவும், பிரிட்டிஷ் சட்டத்தின் வக்கீலாகவும், பிரிட்டிஷ் நீதியில் நம்பிக்கை கொண்டவராகவும் அதுவரை இருந்த காந்தி, நெஞ்சுறுதிகொண்ட, தர்மாவேசமிகு கலகக்காரராக மனமாற்றம்கொண்டார்; அதன்பிறகு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மாபெரும் ஒருங்கிணைப்பாளராகவும், சுதந்திரம் மற்றும் தேசவிடுதலை ஆகியவற்றுக்கான மக்கள் எழுச்சியின் தலைவராகவும் அவரே உருவானார்.
  அவரது தலைமையின்பால் தேசத்தின் நம்பிக்கை பேரலையாய் எங்கும் வீசியதாலும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக மக்கள் கொண்ட மகத்தான கோபாவேசத்தாலும் மக்கள் இயக்கத்தின் உன்னதமிகு தளபதியாக அவர் உயர்ந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தை, சைத்தானின் ராஜ்யம் என்று வர்ணித்த அவர், அதனை முற்றாக நிர்மூலமாக்கவேண்டும் என அறைகூவல் விடுத்தார். சைத்தானோடும், கயமையுடனும் சமரசத்துக்கு இடமேயில்லை என்றார் அவர்.
  நாடுமுழுதும் லட்சோபலட்சம் மக்களை ஒன்றுபடுத்தி, கட்டுக்கோப்புடன் அவர்களைக் களமிறக்குவதன்பொருட்டு, அகில இந்திய ஹர்த்தால் எனும் போர்வாளை அவர் சுழற்றினார்; அதுவே இன்றைய 'பந்த்' எனும் போராட்ட வடிவத்தின் முன்னோடியாயிற்று. பகிஷ்காரம், மறியல் எனும் கோஷங்களுடன் லட்சோப லட்சம் மக்களை வீதியில் இறங்கிப் போராடச் செய்தார் அவர்; பிரிட்டிஷ் நிர்வாகத்தினருடனும் அவர்தம் சட்டம் ஒழுங்கினைப் பரிபாலிக்கும் சேனைகளுடனும் மக்களின் போர்க்குணமிக்க மோதல்களுக்கு இது வழிவகுத்தது. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை; பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை இந்திய மக்கள் அனைவரும் மனதாலும் செயலாலும் விஸ்வரூபம்கொண்டு எழுந்து நிற்கவேண்டும்; இந்த சைத்தானின் ராஜ்யத்திற்கு ஒத்துழைப்பு நல்கக்கூடாது என்றும் அதைக் கவிழ்த்தெறிய வேண்டுமென்றும் அவர் அறைகூவல் விடுத்தார். அந்த சாம்ராஜ்யத்திற்காக உழைக்க மாட்டோம்; அதற்கு வரி செலுத்தமாட்டோம்; அதனிடம் கல்வி பயிலமாட்டோம்; அதற்குப் பணிந்துகிடக்கமாட்டோம் என அறுதியிட்டுக் கூற ஒன்றுபட்ட இந்திய மக்களை அவர் அறைகூவி அழைத்தார். அதுமட்டுமின்றி, இந்தியாவின் சுதந்திரத்தை விழைகின்ற, சுதந்திரத்திற்காக உறுதியான செயலில் இறங்குகிற மக்கள் தேசிய முன்னணியின் மேடையாகவும் அமைப்பாகவும் காங்கிரஸ் கட்சியைக் கட்டினார்.
  மக்களை செயலுக்குக் கொண்டுவரவும், சில சமயம் (இந்து-முஸ்லிம் கலவரங்கள் போன்ற) தவறான நடவடிக்கைகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும் அல்லது தன்னைப் பின்பற்றுகிறவர்கள் நெறிதவறிப்போகாமல் காக்கவும் சில சந்தர்ப்பங்களில் தனது உயிரைப் பணயம் வைத்தும்கூட அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு, அதனை சுதந்திரப்போரில் ஓர் ஆயுதமாகச் சேர்த்தார். எல்லா சந்தர்ப்பங்களில் இல்லாவிட்டாலும்கூட, அவர் நல்கிய இந்த ஆயுதம், அவரது மகத்தான புரட்சிகர ஆளுமையின் விளைவாகவும், ஒழுக்கத்தினாலும் பயன்மிக்கதாயிற்று.
இந்தியாவில் அவர் மேற்கொண்ட முதல் போராட்டமான சம்பாரண் போராட்டத்தின்போது, இந்திய விவசாயிகளின் நிலைமையையும், பிரிட்டிஷ் தோட்டமுதலாளிகளின் ஒடுக்குமுறையையும் மிக நெருங்கி நோக்கினார். இண்டிகோ தோட்ட முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கர ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தீர்க்கமான நிலையை எடுத்ததன் விளைவாக, பிரிட்டிஷ்காரர்களைப் பின்வாங்கச் செய்தார் அவர். போருக்குப் பின்னைய காலத்தில் அகமதாபாத் மில் தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தலைமைதாங்கியபோது, தொழிலாளர்களையும், தியாகம்புரிய, துன்பங்களை அனுபவிக்க, போராட அவர்களுக்குள்ள திராணியையும் அவர் கண்டுணர்ந்தார். அதுபோன்றே லட்சாதிபதிகளிடம் விரவிக்கிடக்கின்ற லாப வேட்கையையும், அவர்தம் சுயநலத்தையும் உணர்ந்த அவர், தானும், தொழிலாளர்களும் படுகின்ற துயரங்களைக்கண்டும், "கடவுளின் விருப்பத்தினாலும்" அவர்கள் சாந்தகுணமும், பரிவும் கொள்வர் என்று நம்பினார்.
  ஆயினும், அவரது பிரதான லட்சியத்தை எட்டுவதற்கான முயற்சியைத் தொடரும்பொருட்டு, தனது போராட்டத்தின் இந்த பரிமாணங்களைக் கைவிட்ட அவர், ஒத்துழையாமை யுத்தத்தைத் தொடங்கும் தருவாயில், "சிங்கம் பிடரி சிலிர்த்து எழுந்துவிட்டது" என்னும் புகழ்மிகு கட்டுரையை எழுதினார்; பர்தோலியை நோக்கிப் பயணம் தொடங்கியபோது, "மரணத்தின் நடனம்" என்று அதனை வர்ணித்தார்.
கோபாவேசம் கொண்ட விவசாயிகளின் திரள்மீது குண்டுமழை பொழிந்த சில போலீஸ்காரர்கள் சவுரி-சவுராவில் கொல்லப்பட்ட சம்பவம், மகாத்மாவை தடுமாறச்செய்தது. "மரணத்தின் நடனத்தை" விலக்கிக்கொண்ட அந்த "சிங்கம்" ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று காராக்கிருகம் புகுந்தது. மக்களின் எதிர்ப்பு எவ்வளவுதான் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்தாலும், ஒடுக்குமுறையாளர்கள் எத்தனை அநீதியாளர்களாக, தவறானவர்களாக இருந்தாலும் [பிரிட்டிஷ்] சாம்ராஜ்யமெனும் தீமையை வன்முறையற்ற வழியில்தான் களையவேண்டுமென அவர் வலியுறுத்தலானார்.
  மகாத்மா காந்தி சிந்தனையின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு அவரது பெயரை ஆதாயத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் அல்லது அவர் நடத்திய மகத்தான போராட்டங்களினால் சுய அதிகாரததையும், செல்வத்தையும் பெற்றவர்கள், அவரது சாத்வீக வழிமுறை, பிர்லாவிடம் அவரது மென்மையான அணுகுமுறை அல்லது கடவுள், மதம், கைராட்டை ஆகியவற்றின்பால் அவர் கொண்ட நெருக்கமான ஈடுபாடு என்பதைமட்டுமே கிளிப்பிள்ளை போல் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
  ஆனால், வெகுஜனங்கள் வன்முறையில் இறங்கியதால் மகாத்மா காந்தி தனது இயக்கத்தை விலக்கிக்கொண்ட போதிலும், 1930 அல்லது 1942 மற்றும் 1945-ஆம் ஆண்டுகளில் அவர் முன்னெடுத்து நடத்திய, இறுதியில் இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்கக் காரணமாக அமைந்த போராட்டங்களின்போது அந்தத் தவறை அவர் செய்யவே இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
  அந்தப்புதிய காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஒடுக்குமுறையாளர்கள் மக்களின் வன்முறைசார்ந்த, போர்க்குணமிக்க தாக்குதல்களைச் சந்திக்க நேர்ந்தபோது, அவற்றை அவர் கண்டனம் செய்யவேண்டுமென பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்தபோதிலும், அவற்றுக்கு அவர் செவிமடுக்க மறுத்துவிட்டார். சாத்வீக சிந்தனைக்கு ஆட்பட்டிருந்தபோதிலும், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் "மிருகத்தனமான வன்முறை" தான் மக்களின் பதிலடிக்குக் காரணம் எனும் நிலையெடுத்தார் அவர்.
அவரது தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை, ஸ்தாபனத்தின்மீதும் மக்களின் துடிப்புமிகு போராட்டத்தின்மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று, எவையெல்லாம் மனிதனை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதாகவும், தரம் தாழ்த்துவதாகவும், மனிதாபிமானமற்றதாகவும் இருக்கின்றனவோ அவற்றின்பால் கொண்ட அளவற்ற வெறுப்பு ஆகியவைதான் மகாத்மாவின் மிகவுயரிய பண்புகள் என்பதை அவரது பிறந்த நூற்றாண்டு தினத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் நினைவில்கொள்ள வேண்டும். தீமையை வீறுகொண்டு எதிர்க்க வேண்டும்; அதற்குத் தாழ்ந்து பணிந்துவிடக்கூடாது என்றார் அவர்.
  ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிக்கவும், இந்திய மக்களைப் பிளவுபடுத்த அது மேற்கொள்ளும் தந்திரோபாயங்களைத் தகர்த்தெறியவும், இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற பிரதான முழக்கமாக இந்து-முஸ்லிம் ஒற்றுமை உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டுமென, தீர்க்கதரிசனத்துடன் கூறினார் அவர்.
விசுவாசமான இந்து என்றமுறையில், இந்து சமூகத்தின் வர்ணாசிரமத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தபோதிலும், தனக்கு முன்னதாக, எந்தக் கருத்தை முன்மொழிந்ததால் சுரண்டும் வர்க்கத்தினர் மற்றும் சாதியினரின் நிந்தனைக்கு எண்ணற்ற இந்து மனிதநேயத் துறவிகள் ஆளானார்களோ அதே கருத்தான, தீண்டாமையை ஒழித்தல் என்பதை, மகத்தான மனிதாபிமானியான அவர் வலியுறுத்தினார்.
  கைத்தொழில், கிராம வாழ்வு என்கிற பழைய உலகுக்கு இந்தியாவைக் கொண்டு செல்ல வேண்டும்; நவீன யந்திர உலகை விட்டொழிக்க வேண்டுமென ஆரம்பத்தில் அவர் கனவுகண்டாலும், கடந்த காலத்திற்குத் திரும்பவேண்டுமெனும் அந்தக் கருத்திலிருந்து விடுபட்ட அவர், இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் அவருக்கு உதவும் பட்சத்தில் மட்டுமே, நவீன தொழிற்சாலைகளை உருவாக்கவும், நல்ல நாணயப்பரிவர்த்தனை கிட்டவும், தொழிற்சாலை அதிபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் முன்வந்தார்.
  அவர் வாழ்ந்து, காங்கிரசுக்குத் தலைமையேற்ற காலத்திலேயே கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இன்னபிறர் உள்ளிட்ட பலரும், அவருடனும், அவரது சித்தாந்தம், சில வர்க்க சேர்மானங்கள் மற்றும் வழிமுறைகளின்பால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். இருப்பினும், நாடு சுதந்திரம் அடையும் பொருட்டு, மக்களின் போராட்டத்திற்கான அமைப்பாகவும், தலைமைதாங்கும் ஸ்தாபனமாகவும் மகாத்மாவால் உருவாக்கப்பட்ட காங்கிரசின் வடிவிலிருந்த தேசிய முன்னணியில் அவர்கள் அனைவரும் செயலாற்றினர்.
  போராட்ட வழிமுறைகள், பின்பற்றப்படவேண்டிய தந்திரோபாயங்கள் ஆகிய பிரச்சனைகளில் கருத்துவேறுபாடுகள் மேலோங்கியபோது, புதிய சிந்தனைப் போக்குகளுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்றும், புதிய கட்சிகள் காங்கிரசிலும் இயக்கத்திலும் பங்கேற்க அனுமதிக்கலாகாது எனவும் பிற்போக்குப்பழமைவாதிகள் கோரினர்.
  ஆனால், இத்தகைய கருத்துவேறுபாடுகளின் காரணமாகக் கட்சிகள் அல்லது குழுக்களுக்குத் தடைவிதிக்கவேண்டுமெனும் இந்தக் கோரிக்கையை மகாத்மா ஏற்க மறுத்தொதுக்கினார். பிற்போக்குப் பழமைவாதத்தை எதிர்த்துச் சமர்புரிந்ததோடு மட்டுமல்லாமல் அவர், தன்னைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பதவி அதிகாரத்திற்கான மோகத்தையும் சாடினார்; அவர்களிடம் ஊழலைக் கண்டபோதெல்லாம் அதனை அம்பலப்படுத்தினார்.
ரஷ்ய நாட்டின் மகத்தான மனிதாபிமானியாகவும், ஜனநாயகவாதியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் விளங்கிய டால்ஸ்டாயுடன் அவர்கொண்ட நட்பு, 1905-ல் நிகழ்ந்த புரட்சிகுறித்துக் கேள்விப்பட்டதும் ரஷ்யா நலம்பெற அவர் வாழ்த்துவதற்கு வழியேற்படுத்தியது; போல்ஷெவிக்குகளின் நாத்திகத்தை அவர் விரும்பாவிடினும், ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்து 1917-ஆம் வருடத்திய மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியைச் சாடியவர்களுடன் அணிசேர மறுத்துவிட்டார் அவர்.
  அவரது பல நடவடிக்கைகளும், கருத்துக்களும் தெளிவற்றதாகத் தோற்றம் கொண்டாலும், உலகம் உருவாக்கிய மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டக்காரர்களில் ஒருவர் மகாத்மா காந்தி; மனிதகுல வரலாறு தோற்றுவித்த மகத்தான மனிதாபிமானி அவர்; தேசவிடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான இந்தியப் புரட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் அவர் என்பதும் நிச்சயமே.
சுதந்திரச் சமரிலும், இனவெறி, சமத்துவமின்மை, ஒடுக்குமுறை, தீண்டாமை, மக்களைப் பிளவுபடுத்தி ஒற்றுமையைச் சீர்குலைத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில், தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில் தூய்மையை நிலைநாட்டுவதற்காக நடந்த போரில் உயிர்நீத்த தியாகிகளின் புரட்சிகர நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் இந்த விஷயங்கள், நம்மை எழுச்சிகொள்ளச் செய்ய அவரது பிறந்ததின நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும்.
  அரசு அதிகாரம் மற்றும் செல்வ ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்த அவரது போர்க்குணம், மனிதனின்-குறிப்பாக ஏழைகள், தரித்திரநாராயணர்கள், ஒடுக்கப்பட்டவர்களின்-கண்ணியத்தைக் காக்க அவர் எடுத்த நிலை ஆகியவற்றை எண்ணிப்பார்த்துப் பின்பற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உழைப்பின் மகத்துவத்தைப் போற்றிய அவர், அதன் குறியீடாக தினமும் கைராட்டையில் நூல் நூற்றார்.
  இன்று சுதந்திரத்தை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் சோஷலிசத்திற்காகப் போராட வேண்டும்; அதுதான் பணமூட்டைகளின் அதிகாரத்திற்கு இறுதியாக முடிவுகட்டி, சுதந்திர இந்தியாவின் வயல்வெளிகளிலும், தொழிற்சாலைகளிலும் கரத்தாலும் சிரத்தாலும் உழைத்து வாழ்கின்ற கோடானுகோடி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும்.
  1869-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்தபோது, இந்தியாவின் [முதல்] சுதந்திரப் போரில் பங்கேற்ற சக்திகள் பின்னடைவை சந்தித்திருந்தன; பிரஞ்சு-ஜெர்மானிய போர் மேகங்கள் ஐரோப்பாவைச் சூழ்ந்து, அதிலிருந்து ஏகாதிபத்தியம் முளைத்தெழுந்து உலகமுழுவதற்கும் தீங்கு ஏற்படுத்திய காலம் அது.
  ஆனால், 1948-ல் அவர் மறைந்தபோது, ஏகாதிபத்தியம் புறமுதுகிட்டோடத் தொடங்கியிருந்தது; உலகின் மூன்றில் ஒருபகுதியில் சோஷலிசம் மலர்ந்திருந்தது; காலனியாதிக்க சாம்ராஜ்யங்கள் கலகலத்துக்கொண்டிருந்தன. இந்தியா போன்றதொரு கேந்திரமான பகுதியில், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சியில் அவர் மகத்தான பங்கு வகித்தார். இந்தியா முற்போக்கான பாதையில் நடைபோடுவதையும் ஜனநாயகப் புரட்சியில் முன்னேறுவதையும் தடுக்கவேண்டும் எனும் தீய நோக்கத்துடன், கேடுகெட்ட ஒரு கொலைகாரன் அவரது உயிரைப் பறிக்கும் வரை இந்தப் பணியைச் செய்தார்.
  மகாத்மா காந்தியெனும் தன்னலமற்ற தலைவரின் புரட்சிகரமான, ஜனநாயகபூர்வமான, முற்போக்கான, மனிதகுலத்தை ஒன்றுபடுத்துகின்ற கொள்கைகள் அனைத்தையும், தீரமிகு அந்தப் போராட்டக்காரரின் அடிபணியாமை எனும் பண்பையும் முன்னெடுத்துச் செல்ல அவரது இந்த நூற்றாண்டு பிறந்த தினத்தில் சபதமேற்போமாக!

தமிழில்: விதுரன்

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP