பல்லாண்டு பல்லாண்டு-2
பல்லாண்டு பல்லாண்டு-2
பி.ச. குப்புசாமி
1960 செப்டம்பரில் - தேதி கவனமில்லை - நானும் நண்பர் வையவனும் ஜெயகாந்தனை எங்கள் ஊர்
பாரதி விழாவில் பேசுவதற்கு அழைப்பதற்காக, சென்னைக்கு ரயிலில் புறப்பட்டோம்.
எனக்கு அப்போது பதினேழு வயது. பி.யூ.சி.
செலக்ஷன் தேர்வில் கோட்டை விட்டு விட்டு, அந்த செப்டம்பரில் அடுத்தத்தேர்வை எழுதி முடித்திருந்தேன்.
குமுதத்தில் முதல் கதையும், அடுத்து கல்கியில் ஒரு கதையும் ஆனந்த விகடனில் இரண்டு
கதைகளும் அப்பொழுது எழுதிவிட்டிருந்ததேன்.
வையவன், எழுத்திலும் வயதிலும்
என்னைவிட மூத்தவர். என்னைவிட நானகு வயது பெரியவர். பத்திரிகைகளிலும் அவருடைய பல கதைகள்
வெளிவந்துவிட்டிருந்தன.
திருப்பத்தூரில், இரட்டையர்கள்
போல நாங்கள் எப்பொழுதும் திரிந்து கொண்டிருப்போம்.
எங்கள்
ஊரில், சுந்தரமூர்த்தி நாயனார் என்று ஒரு வக்கீல் இருந்தார். மெலிந்த தேகமுடையவர்.
அவர் கேஸ் கட்டுகளைப் படிப்பதைவிடவும் இலக்கியம் படிப்பதைத்தான் நாங்கள் அதிகம்
பார்த்திருக்கிறோம். சி.சு. செல்லப்பாவின் கல்லூரித் தோழர் அவர் என்று கூறியதாக
நினைவு.
"ஜெயகாந்தன் கூட கூட்டங்களில் பேசுகிறானாம்பா! இந்த வருஷம்
அவனைக் கூப்பிடுங்களேன்!" என்று அவர்தான் முதலில் யோசனை கூறியவர்.
"சரஸ்வதி" பத்திரிகையில் வந்த ஜெயகாந்தன் கதைகளை நாங்கள் அப்போது படித்துவிட்டிருந்தோம்.
ஆனந்த விகடனிலும் அவர் எழுதுகிற கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன.
அதிகாலை நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில்
இறங்கி, அங்கிருந்து
பிராட்வேயில் இருந்த "ஜனசக்தி" அலுவலகத்துக்குச் சென்றோம். எங்கள் இரண்டு நாள்
சென்னைப் பயணத்தில், இரவு தங்குவதற்கு அதைத்தான் நாங்கள் வரித்தோம்.
வையவன்தான் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி. என்னை விடவும் அவருக்குத்தான் சென்னை அதிகம்
பரிச்சயம். "ஜனசக்தி" வாராந்திர மலரில் அவர் கதைகள்
எல்லாம் எழுதியிருந்தார். தோழர் மாஜினி அவருக்குப் பழக்கமாயிருந்ததார். அவரது
சிபாரிசில், இரவு நேரத்தில் தங்கிக்கொள்ள அங்கே எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
சென்னையில் முதல் நாள்
பூராவும், சில பத்திரிகை அலுவலகங்களில் வையவன்
அவர்களுக்கு வேலையிருந்ததால், அங்கெல்லாம் அவருடன்
நானும் சென்றேன். சில எழுத்தாளர்களையும் சந்தித்தோம். அவர்களெல்லாம், நாங்கள் சென்னைக்கு என்ன வேலையாக வந்திருக்கிறோம் என்று
விசாரித்தார்கள். எங்கள் ஊர் பாரதி விழாவிற்கு ஜெயகாந்தனை அழைப்பதற்காக வந்திருக்கிற விவரத்தைக் கூறினோம்.
அதிலே மூன்று நான்கு
பேருக்கு மேல் சொல்லி வைத்தாற்போல, "ஜெயகாந்தனையா? அவர் ரொம்ப முரடராமே? கெட்ட வார்த்தையெல்லாம் பேசுவாராமே?"
என்று எங்களுக்குப் பயம் காட்டினார்கள்.
பகலெல்லாம் சென்னையில்
அலைந்து திரிந்துவிட்டு, இரவு படுப்பதற்கு "ஜனசக்திக்கு" வந்துவிட்டோம்.
குளியலறையின் எதிரே பெரிய
பெரிய பேப்பர் பண்டல்களை அடுக்கியிருந்தார்கள். அதுதான் எங்களுக்குக் கட்டில் போல்
ஆயிற்று. முன்னிரவில் ரயிலில் வந்தபோது
நஷ்டமாகியிருந்த தூக்கத்தாலும் பகலின் அலைச்சலிலும் அயர்ந்துபோய் நன்கு தூங்கிவிட்டோம்.
காலையில் வையவன்தான்
முதலில் கண்விழித்து எழுந்து குளித்துத் தயாரானார்.
அன்றுதான் ஜெயகாந்தன் அவர்ககளைப் போய்ப் பார்ப்பதாகத் திட்டம்.
"ஏம்ப்பா, சீக்கிரம் எழுப்பா! அவன்
எங்கேயாவது போய்விடப் போகிறான்" என்று வையவன் என்னை அவசரப்படுத்தினார். நான் எழுந்து உட்கார்ந்து
கண்களைக் கசக்கிக் கொண்டே, "அந்த ஆளைப் பத்தி
எல்லோரும் சொல்றதப்பார்த்தா, அவர் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து வீட்டை விட்டு
வெளியே போற ஆளாத்தெரியலே!" என்று வையவனின் அவசரசத்துக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு, நான் என் வேலைகளை முடித்தேன். டவுன் பஸ் ஏறி எழும்பூரில்
இறங்கி, "26- எக்மோர் ஹைரோடு" என்று முகவரி குறிக்கப்பட்ட வீட்டை, காலை எட்டரைமணிக்கெல்லாம் அடைந்தோம்.
குறுகிய நுழைவாயிலும், வெளியே இருபுறமும் ஒட்டுத்திண்ணைகளும் கொண்ட வீடு, கதவிலே பொறிக்கப்பட்டிருந்தத
வீட்டு எண்ணை இருபத்தாறுதான் என்று உறுதி செய்து கொண்டோம் . ஒண்டுக்குடித்தன வீடு. உள்ளே ஜனநடமாட்டம்
தெரிந்தது. நாங்கள் வாயிலில் நிற்பததைப் பார்த்த ஒரு பெண்மணி, "யார் வேணும்?" என்று கேட்டார்.
"எழுத்தாளர் ஜெயகாந்தனைப்
பார்க்க வந்தோம்!" என்று பதில் சொன்னோம். அந்தப் பெண்மணி, "இவங்களைக் கேளுங்க" என்று ஒருவரைக் காட்டினார்.
அவர் எங்களுக்கு முகம்
காட்டி "யாரு?" என்றுகேட்டார்.
அவர்தான் ஜெயகாந்தனின்
தாயார். தோற்றத்திலும் குரலிலும் ஒரு கம்பீரம் துலங்கிற்று.
பவ்யமாக, "திருப்பத்தூரிலிருந்து வரோம்.
ஜெயகாந்தனைப்பார்க்கனும்!" என்றோம்.
"வாங்க" என்று எங்களை அழைத்தவர், தாங்கள் குடியிருந்த பகுதியின் பக்கமாகத் திரும்பி, "காந்தா, உன்னைப் பார்க்க யாரோ
வந்திருக்காங்க பார்!"என்று குரல் கொடுத்தார்.
அதற்குள் நாங்கள் உள்ளே
போய் அவர்கள் அறை வாயிலில் நின்றிருந்தோம்.
இரண்டே அறைகள் கொண்ட
சிறிய குடித்தனப் பகுதி அது. முதல் அறையின் நடுவே, கார்ட்போர்டினால்ஆன ஒரு ஸ்டாண்ட் நிற்க வைக்கப்பட்டும், சுமார்
மூன்றடி அகலத்துக்குத் துணித்திரை ஒன்று தொங்கவிடப்பட்டும்,
அவ்வறையைப் படுக்கை
அறையாகவும் வரவேற்பறையாகவும் பிரித்தன.
அம்மாவின் குரல்
கேட்டதும், துணித்திரையை ஒரு கரம் சிறிதே விலக்கியது. பள்ளிகொண்டநாதனைப் போல், படுத்த வாக்கில், அடர்ந்த சிகையோடு கூடிய
ஒரு பருத்த முகம் தெரிந்தது. அப்போதுதான் தூக்கம் கலைந்த கண்கள்
தீட்சண்யமாகத்துலங்கின. தொடர்ந்து, "வாங்க!" என்று அவர் குரலும் வந்தது.
கண்களை ஒரு
நடுவிரலால்துடைத்துக் கொண்டு, இடுப்பில் கட்டிய லுங்கியைச் சரிசெய்தவாறு, ஜெயகாந்தன் திரையை விலக்கிக்
கொண்டு வெளியே வந்தார். அந்த வயதின் ஆரோக்கியத்தாலும் தூங்கி எழுந்ததாலும் அவரது
முகம் நன்கு மதர்த்துப் போய்த் தெரிந்தது.
"உட்காருங்கள்!" என்றார். இரண்டு சிறிய ஆசனங்களில் அமர்ந்ததோம். அவரும்
அமர்ந்தார்.
"வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து வரோம்!" என்று வையவன் தன் பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான்
என் பெயரைச் சொன்னேன். முந்தின வாரம்தான் நான் ஆனந்த விகடனில், "அறுபத்திரண்டு வருஷங்கள்!" என்று ஒரு கதை
எழுதியிருந்தேன்.
"நீங்க போன வாரம் ஆனந்த விகடன்லே அறுபத்திரண்டு வருஷங்கள்னு ஒரு கதை
எழுதியிருந்தீங்க இல்லே?" என்று கேட்டார். நான் பவ்யமாகத் தலையாட்டினேன்.
"நல்லாயில்லை!" என்றார். அதற்கும் பேசாமல் நான் தலையாட்டிக் கொண்டேன்.
வையவனைப்பார்த்து, "நீங்க எனக்கு ஒரு கடிதம்
எழுதியிருந்தீங்க இல்லே?" என்று கேட்டார்.
வையவன் ஆமாமென்று
தலையாட்டினார்.
"கொஞ்சம் இருங்க... வரேன்!"என்று ஜெயகாந்தன் எழுந்து உள்ளே போனார்.
என்ன நடக்கப்போகிறதோ என்ற திகைப்பில், உதட்டைப்பிதுக்கிய ஒரு
குறுஞ்சிரிப்போடு வையவனும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
இங்கே ஒரு
ரஸமானவிஷயத்தைச்சொல்ல வேண்டும்:
நண்பர் வையவன் புதிய நடைகளைவிரும்புபவர். அது, அவர்
எழுதுகிற கடிதங்களிலும் புலப்படும்.
இதற்கு முன்
அவர் ஜெயகாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "துர்க்கை" என்ற கதையைப்பற்றித் தனது விமரிசனத்தை அதில்
எழுதியிருந்தார். என்ன எழுதியிருந்தார் என்பது எனக்கு இப்போது ஞாபகமில்லை. ஆனால், அந்தக் கடிதத்தை எல்லாரும் போல் அவர் சாதாரணமாக
ஆரம்பிக்கவில்லை. "தமிழ்நாட்டின் சிறுகதை
மன்னனே தான்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தோழர் ஜெயகாந்தன்!" என்கிற
அந்தக் கடிதத்தின் விளிப்பு வரி மட்டும் இன்றளவும் எனக்கு மறவாமல் இருக்கிறது.
அந்தக் கடிதத்தை எடுத்து
வரத்தான் ஜெயகாந்தன் எழுந்து அந்தத் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே போனார்.
நாங்கள் பின்னால்
எல்லார்க்கும் சொன்னபடியே, எங்கள் இருவருக்கும் திக்திக் என்றுதான் இருந்தது. ஏற்கெனவே, நேற்று
சென்னைப்பட்டினத்தில் பார்த்தவர்கள் பெரும்பாலோர் 'முரடன்' என்று பயமுறுத்தியிருந்த
காரணத்தால், ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகை புரிந்து கொண்டோம்.
ஜெயகாந்தன் அந்தக்
கடிததத்தை எடுத்துக் கொண்டு வந்து அமைதியாக எங்கள் எதிரில் உட்கார்ந்தார்.
அந்தக் கடிதத்தை அவரே
படித்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.
"தமிழ்நாட்டின் சிறுகதை மன்னனேதான்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தோழர்
ஜெயகாந்தன்!"என்று படித்து நிறுத்தினார். அப்புறம் நிமிர்ந்து பார்த்துச் சொன்னார்!
"நான் எப்பொழுதும் என்னைச் 'சிறுகதை மன்னன்' என்று சொல்லிக்கொண்டதில்லை. அது
மட்டுமல்ல, அவ்வாறு கோஷம் போடுபவர்கள் மீது கோபித்துக்கொண்டும் இருக்கிறேன்!"
பொறுமமையாக இதை அவர் சொன்ன
விதம், அவரைப்பற்றி
எங்களிடம் சொல்லப்பட்ட மாறுபட்ட
விமரிசனங்களை எல்லாம் ஒரு நொடியில் ஒரேயடியாக அடித்துப்புறந்தள்ளிவிட்டது.
எங்களிடம் ஓர் ஆசுவாசமான புன்னகை மலர்ந்தது.
பிறகு, அந்தக் கடிதத்தின் உள்
விவரங்களுக்குள் புகுந்து, நண்பர் வையவனின் விமரிசனங்களுக்கு எல்லாம்
தர்க்கபூர்வமாக விளக்கமளித்தார். இவ்வளவுதான் எனக்கு ஞாபகம். அவர் சொன்னது எங்களுக்கு
ஒப்புக்கொள்வதாக இருந்தது.
ஒப்புக் கொள்வது என்றால்
என்ன அர்த்தம்? சொன்ன ஒன்றை நன்றாக உணர்ந்து கொண்டுவிட்டோம் என்பதுதானே அது?
அப்புறம் வேறு
விஷயங்களுக்கு மாறி, நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பது பற்றிக்கூறினோம்.
எங்கள் ஊர் பாரதி விழாவில் பேசுவதற்கு அவரை அழைத்தோம். அவர்
தயங்காமல் ஒப்புக்கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
இடையிடையே கொஞ்சம்
இலக்கிய விசாரம் நடத்தினோம் என்பதும் நினைவுக்கு வருகிறது.
அப்புறம்
ஜெயகாந்தன் எழுந்துபோய்க் குளித்தார். குளித்து முடித்துவிட்டு வந்து, எங்கள் இருவரையும் அவரோடு
சேர்ந்து சாப்பிடுவதற்கு அழைத்தார்.
சந்தித்த
முதல்சந்திப்பிலேயே அவர் வீட்டில்அவரது தாயார் பரிமாற, நாங்கள் உண்ட அந்தக் காலை உணவு என்றென்றும் மறக்க
முடியாததாகும்.
இப்பொழுது நினைத்துப்
பார்க்கும்போது, எங்கள் மீது அவர் கொண்ட அன்பின் குறியீடாகவே
அது எப்பொழுதும் தோன்றுகிறது!
பிறகு, அவர் உடையணிந்து கொண்டு
வர, நாங்கள் வெளியே
புறப்பட்டோம்.
ஜெயகாந்தன், பேண்ட் அணிந்து
வந்ததார்.
பதினேழுவயதுப் பையனான நான், அவருடைய "சரஸ்வதி" கதைகளைப் படித்துவிட்டு, எதனாலோ, பேண்ட் அணிகிற நவநாகரிக
நபர்களை எல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் கிழிகிழி என்று கிழிப்பவர் என்று
கருதிக் கொண்டிருந்தேன். அவர்பேண்ட் அணிந்து வந்தது எனக்கு
ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. நாங்கள் என்னவோ
வேஷ்டிதான் கட்டியிருந்தோம். "சரஸ்வதி" அலுவலகம் சென்று
திரு.விஜயபாஸ்கரன் அவர்ககளைச் சந்தித்தோம். இருவரும் சிறிது நேரம்
பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் பேசாமல் கவனித்துக் கொண்டிருந்தோம்.
அடுத்து
தமிழ்ப் புத்தகாலயம் சென்று திரு. கண.முத்தையா அவர்களையும் பார்த்தோம். அங்கே
எங்களுக்கு இன்னுமோர் ஆச்சர்யம் உண்டாயிற்று. பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய பெண் குழந்தை, கற்பூரம் எரிந்து
கொண்டிருக்கிற ஒரு பூஜைத்தட்டுடன் வீட்டின் உள்ளிருந்து வந்தது. அதை
எங்களுக்கெல்லாம் நீட்டியது. அந்தத் தட்டிலிருந்த விபூதியை ஒரு விரலால் கொஞ்சமாகதத்
தொட்டு, ஜெயகாந்தன் தன்
நெற்றியில் இட்டுக்கொண்டார். அது, பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்லாமல், ஆச்சரியமாகவும் இருந்தது.
அடடே, நீட்டப்படுகிற பூஜைத்தட்டைத்
தொட்டு வணங்குவதும், கொஞ்சம் நீறு இட்டுக்கொள்வதும் தப்பில்லை என்கிற தடையற்றதோர்
சுதந்திர வெளிக்கு அது என்னை இட்டுச் சென்றது.
பச்சையப்பன் கல்லூரி
எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தபோது ஒரு பிச்சைக்காரன் வந்து
கையேந்தினான். சில்லறை ஏதும் இல்லாததால் நாங்கள் அவனைப்போகச் சொன்னோம். ஆனால் அவன்
போகாமல் அங்கேயே நின்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஜெயகாந்தன், சற்றுக் கடுமை காட்டிய
குரலில், "இல்லேனு சொல்றோமில்லே?" என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதுவவும் எனக்கு ஓர்
ஆச்சர்யம். பிச்சைக்காரர்களுக்கு ஈயாதவர்களை அவர்
காராக்கிருஹத்தில் அடைத்துவிடுவார் என்பதுபோல் எனக்கு ஏனோ ஒரு நினைப்பு இருந்தது.
இவ்விதம், அவரைச் சந்தித்த அந்த
முதல் நாளில், நாங்கள் கருதிக் கொண்டிருந்த உண்மைக்கு மாறான இறுக்கமான கட்டுகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் அவிழ்ந்தன.
நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் "39 ஸ்டெப்ஸ்" என்று ஓர் ஆங்கிலப் படம்
பார்த்தோம்.
திருவல்லிக்கேணியில் ஒரு
ஹோட்டலில் மாலைச் சிற்றுண்டி அருந்தினோம்.
அப்புறம்
கடற்கரைக்குச்சென்றோம். அந்த அனுபவத்தை ஒரு தனி அத்தியாயமாகவே எழுதுவதுதான்
சரி!