Wednesday, May 8, 2013

தமிழர்களின் எண்ணங்களை, இதயங்களை வென்றெடுங்கள்!

  
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு:

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பங்காற்றட்டும்!

தோழர் சந்திரப்பன் வாழ்த்துரை!!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து, கட்சியில் பல்வேறு பொறுப்புக்களில் செயலாற்றி, கேரள மாநிலக் குழுவின் செயலாளராகவும் கடமையாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் தோழர் சி.கே.சந்திரப்பன். இவர்,கடந்த ஆண்டு (2012) மார்ச் 22-ஆம் நாள் அமரரானார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் செயலாளராக அவர் பொறுப்பு வகித்தபோது, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு, 2010 ஆகஸ்ட் 27-29 தேதிகளில் கொழும்புவில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக அந்த மாநாட்டில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார் தோழர் சந்திரப்பன்.


நம்மிரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே சகோதர உறவு இருப்பதைக்கூட வசதியாக மறந்துவிடுகின்றனர் சிலர். உண்மையை உணர்ந்துகொள்ள, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டை வாழ்த்தி தோழர் சந்திரப்பன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்கே சஞ்சிகை வாசகர்களுக்காகத் தரப்படுகிறது:


தமிழர்களின் எண்ணங்களை, இதயங்களை வென்றெடுங்கள்!

"இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு கொழும்பு நகருக்கு வந்துள்ளேன். இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எமது அண்டை நாடுகளில் உள்ள நெருங்கிய சகோதரக் கட்சிகளில் ஒன்று இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி. அது தோன்றிய காலந்தொட்டு பல தசாப்தங்களாக எங்களது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆழமான, நட்புறவுகளைக் கொண்டுள்ளது.

"புதிய வாழ்க்கை, ஒளிமிகு எதிர்காலம் ஆகியவற்றுக்காகப் போராடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நம்மிரு நாடுகளின் மக்களையும், நமது பொதுவான வரலாறு, பாரம்பர்யம் மற்றும் கலாசாரம் ஆகியவை ஒன்றுபடுத்தியுள்ளன.


"விடுதலை பெறவும், சுதந்திரக்கனியைப் பறிக்கவும், இந்தியாவும் இலங்கையும் காலனியாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துச் சமர்புரிந்தன. புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகள் மற்றும் அவற்றின் மக்கள், ஸ்திரத்தன்மை கொள்ளவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடவும், வளம்தனைப் பெருக்கவுமான சூழலை உருவாக்கும் வகையில், அணிசேராமை, சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றில் ஒருமைப்பாடு கொண்டு நம்மிரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.


"சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சோஷலிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சி, அதன் விளைவாக சோஷலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு போன்றவை, ஏகாதிபத்தியம்
இறுமாப்பு கொள்ளவும், மேலும் அதிக நம்பிக்கைகொண்டு மூர்க்கத்தனமாகப் பாயவும் காரணிகளாக அமைந்தன. உலகமுழுவதும் நவீன தாராளமயக் கொள்கையைத் திணிப்பதற்கு ஏகாதிபத்திய சக்திகள் காட்டுகின்ற மும்முரத்திலிருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தப் புதிய நிலைமை, ஏகாதிபத்தியத்தை மேலும் மூர்க்கத்தனம் கொள்ளச் செய்திருக்கிறது; பயங்கரவாதத்தை முறியடிப்பது என்கிறபெயரால், நாடுகளின்மீது யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடுமளவுக்கு அது முரட்டு தைரியம் பெறச்செய்திருக்கிறது.

"அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொடங்கி, ஐரோப்பாவையும், கனடாவையும் கவ்விப்பிடித்துள்ள புதிய நிதி நெருக்கடியானது, உலகின்மீது பேராதிக்கம் செலுத்த ஏகாதிபத்தியம் கண்ட பெருங்கனவைத் தகர்த்துத் தரைமட்டமாக்கும் பேரிடியாக அமைந்தது. உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் தருணங்களில், முதலாளித்துவ அமைப்பு தாக்குப்பிடிக்கமுடியாமல் வலுவிழந்து போவது இப்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. முதலாளித்துவம் வெல்லற்கரியது என்னும் மாயை சுக்குநூறாகச் சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறது.


"இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த [2009] பொதுத்தேர்தலின்போது இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்தபோதிலும், தீவிரமான சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும் வகையில், புதிய வளர்ச்சிப்போக்குகள் அங்கு தோன்றியிருக்கின்றன. புதியதோர் ஆரோக்கியமான வளர்ச்சியாக, தொழிலாளிவர்க்க ஒற்றுமை, கிட்டத்தட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களையும் ஒரு பொதுமேடைக்குக் கொண்டுவந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் ஊதிய அமைப்பு, வாழ்க்கை மற்றும் பணி நிலைமைகளில் முன்னேற்றம் காண்பது போன்ற அம்சங்களில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரும்பொருட்டு ஒன்றுபட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் மற்றும் இயக்கங்களுக்கு அவை தலைமையேற்றுநடத்திவருகின்றன. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அவர்களைத் திரட்டுவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மற்றொரு முக்கியமான விஷயமாகும். இவை, நம்பிக்கையூட்டுகின்ற வளர்ச்சிகள்.


"மறுபுறத்தில், வெறிகொண்ட வகுப்புவாத, பிற்போக்கு சக்திகள், தமது பிடிமானத்தை இழந்துவருகின்றன. ஆனால், அண்மைக்காலத்தில், இடது மற்றும் வலது அதிதீவிர சக்திகள், பயங்கரவாதத்தைத் தோற்றுவித்திருப்பது ஒரு அச்சுறுத்தலாகும். இதை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. இந்தப் பிரச்சனைகளுக்கான வேர்களைக்கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும். விவசாய நெருக்கடி, பெருமளவிலான வேலையின்மை, பழங்குடி மக்களின், பின்தங்கிய பகுதிகளின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவது போன்றவை இதற்கான காரணங்களாகும்.


"இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுவருவது ஒரு நல்ல வளர்ச்சியாகும்.தற்போதுள்ள நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்துவதற்கு இடதுசாரிகளும், மற்றபிற முற்போக்கு சக்திகளும் முன்வரவேண்டும்.


"தொடுவானில் புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் தோன்றியுள்ள இந்த சூழலில், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு நடைபெறுகிறது. அதே நேரத்தில், சவால்களும் காத்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் (எல்.டி.டி.இ) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்திருப்பது முக்கியமான அம்சம். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் இதயங்களையும் எண்ணங்களையும் வென்றெடுப்பது இப்போதுள்ள சவாலாகும்.


"ஒரு வலிமையான, ஒன்றுபட்ட, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை உருவாக்கப்பட வேண்டும்; அங்கு முக்கியமான சிறுபான்மை இனமாக உள்ள தமிழ்மக்களின் அபிலாசைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; இதற்கான சட்டபூர்வமான உத்திரவாதங்களை, அர்த்தமுள்ள அதிகாரப்பரவல் மூலமாகவும், நிறுவனபூர்வமான உறுதிப்பாடுகள் மூலமாகவும் ஏற்படுத்துவது அவசியம்.இதை ஈடேற்ற, அரசுக்கு உறுதியான அரசியல் திண்மையும், இலங்கையில் உள்ள தமிழ்ச்சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான இதயசுத்திகொண்ட அணுகுமுறையும் தேவை.


"இதற்கு முன்னதாக, இடம்பெயர்ந்த தமிழ்க்குடும்பங்கள் எங்கே வாழ்ந்தார்களோ, அதே இடத்தில் அவர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவதற்கு விரைவான, காலவரம்புடன்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிட்டத்தட்ட நாடற்ற அகதிகள் போல் பல லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்தம் பிரச்சனைகளைத் தீர்க்கும்பொருட்டு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட வேண்டும். கச்சத்தீவுப்பகுதியில், மீனவர்களின் இயல்பான, அமைதிபூர்வமான மீன்பிடி உரிமைகளை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதும் அவசியமாகும்.


"இலங்கையில் தமிழ்ச்சிறுபான்மை மக்களின் நிலைகுறித்து இந்தியாவில் நியாயபூர்வமான கவலைகள் அதிகம் உள்ளன. இந்த முக்கியமான பிரச்சனையை இலங்கை அரசு தீர்க்கும்பொருட்டு,இந்தியா ராஜீய மற்றும் பொருளாதார உதவிகளை நல்கி வருகிறது.


"இலங்கையில் உள்ள முற்போக்குசக்திகள், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் முக்கியமான பங்காற்றும் என இந்திய மக்களும், இந்திய அரசும் எதிர்பார்க்கிறார்கள். இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கே இது அத்தியாவசியமானதாகும்.


"இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே அக்கரைகொண்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி அர்த்தமுள்ள பாத்திரம் வகிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.


"இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாடு பரிபூரண வெற்றிபெறுமாறு மீண்டும் வாழ்த்துவதற்கு என்னை அனுமதிக்கக் கோருகிறேன்.


"இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!


"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!!"


நன்றி: நியூ ஏஜ்/தமிழில்: விதுரன்


Courtesy: NEW AGE, Central Organ of the CPI/october 7, 2010




0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP