Wednesday, February 24, 2016

கன்னையா குமார் உணர்ச்சிப் பேருரை!!

இந்த தேசத்தை நாங்கள் நேசிக்கிறோம்!
வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரிகள் நாங்கள்!
ஆர்.எஸ்.எஸ். நற்சான்றிதழ் எமக்குத் தேவையில்லை!!

  
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (JNU) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார். அவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை (AISF) சேர்ந்தவர்.
 பிப்ரவரி 11ஆம் நாள் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். மறுநாள் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். சங் பரிவாரத்தினர் மற்றும் அவர்தம் வழக்குரைஞர்களால் கடுமையான தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் ஆளானார் அந்த தேசபக்திமிக்க மாணவர் தலைவர்.
  கன்னையா குமார்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எத்தனை அநீதியானவை என்பது பின்வரும் உரையிலிருந்து தெளிவாகும்.
  இந்தியில் அவர் ஆற்றிய உணர்ச்சிமிகு உரையை ‘தி டெலகிராஃப்’ ஆங்கில நாளேட்டின் பத்திரிகையாளர் ஜே.பி.யாதவ், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
  பொருள் பொதிந்த அந்த உரை இங்கே தமிழில் தரப்படுகிறது. தமிழாக்கம்: எஸ்.துரைராஜ்.
  வர்கள்தான் [சங் பரிவாரத்தினர்] தேசியக் கொடியை எரித்த புண்ணியவான்கள். பிரிட்டிஷ்காரர்களிடம் மன்னிப்புக் கேட்ட சவர்க்காரின் வழித்தோன்றல்கள் இவர்கள். அரியானா மாநிலத்தில் ஒரு விமானநிலையத்தின் பெயரை மாற்றிய மகானுபாவர்கள் இவர்கள். அங்கே அந்த விமானநிலையத்துக்கு பகத் சிங்கின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அங்கே இருக்கும் கட்டார் அரசு, அதை மாற்றி, அந்த விமானநிலையத்துக்கு இப்போது ஒரு சங்கியின் பெயரை (ஆர்.எஸ்.எஸ்காரரின் பெயரை) வைத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். சர்டிஃபிகேட் தேவையில்லை
  நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஆர்.எஸ்.எஸிடமிருந்து தேசபக்தர்கள் என்கிற நற்சான்றிதழ் எமக்குத் தேவையில்லை. ஆர்.எஸ்.எஸிடமிருந்து நாங்கள் தேசியவாதிகள் எனும் நற்சான்றிதழ் பெறத் தேவையில்லை. நாங்கள் இந்த தேசத்துக்கு உரியவர்கள். இந்த தேசத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த நாட்டிலுள்ள 80 சதவீத ஏழை மக்களுக்காகப் போராடுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, இதுதான் தேசத்துக்கு வந்தனை செலுத்துவது!
  பாபாசாஹேப் (அம்பேத்கர்) அவர்களின்பால் நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்திய அரசியல் சட்டத்தின்மீது நாங்கள் பரிபூரண பற்றுறுதி கொண்டுள்ளோம். அரசியல் சட்டத்துக்கு யாரேனும் சவால்விட்டு நிற்பார்களேயானால், அவர்கள் சங்கிகளாக [ஆர்.எஸ்.எஸ்காரர்கள்] இருந்தாலும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூற விரும்புகிறோம். 
  எங்களுக்கு அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், (டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான) ஜண்டேவாலனிலும், நாக்பூரிலும் அரசியல்சட்டம் என்று போதிக்கப்படுகிறதே அதன்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனுசாஸ்திரத்தின்மீது எமக்கு நம்பிக்கை கிடையாது. இந்த நாட்டில் நிலவுகின்ற ஜாதி முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
  திருத்திக்கொள்கிற நடவடிக்கைகளைப்பற்றி அரசியல் சட்டமும் பேசுகிறது; பாபாசாகேப் அம்பேத்கரும் பேசுகிறார். அதே அம்பேத்கர், மரணதண்டனையை ஒழிப்பதுபற்றிப் பேசுகிறார். கருத்து சுதந்திரம் பற்றியும் அவர் பேசுகிறார். நமது அரசியல் சட்டத்தை உயர்த்திப்பிடிக்க விரும்புகிறோம். நமது உரிமையைப் பேணிக்காக்க விரும்புகிறோம். ஆனால், ஏபிவிபி (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) ஆசாமிகள், அவர்தம் ஊடக நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடாத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.
  உயர்கல்வி  உதவித்தொகைகளுக்காக நாம் போராடுவதாக ஏபிவிபி இணைச் செயலாளர் நேற்று சொல்லியிருக்கிறார். என்ன வினோதம் பாருங்கள்! அவர்களுடைய அரசாங்கமும், மனுஸ்மிருதி இரானி அம்மையாரும் உயர்கல்வி உதவித்தொகைக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உயர்கல்வி உதவித் தொகைகளுக்காகப் போராடுவதாக நம்மீது குற்றம் சுமத்துகிறார்கள். உயர்கல்விக்கான பட்ஜெட்டை 17 சதவீதம் குறைத்திருக்கிறது அவர்களது அரசாங்கம்.
  கடந்த நான்கு ஆண்டுகளாக நமக்கு விடுதி கட்டப்படவில்லை; வைஃபை வசதியும் செய்துதரப்படவில்லை. பிஎச்இஎல் (BHEL) அத்தகையதொரு வசதியை நமக்கு அளித்திருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துவதற்கு நிர்வாகத்திடம் பணம் இல்லை. ஆயினும், ஏபிவிபி ஆசாமிகள் தேவ் ஆனந்தைப் போல தோற்றமளித்துக் கொண்டு, விடுதிகளைக் கட்டித்தரச் செய்வோம்; வைஃபை வசதியைப் பெற்றுத் தருவோம்; உயர்கல்வி உதவித்தொகையை உத்திரவாதம் செய்வோம் என்றெல்லாம் சவடால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்திகளுக்கு ஒரு சவால்
  இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைப்பற்றி ஒரு விவாதம் நடத்தப்படுமேயானால், அவர்கள் அம்பலமாகிப் போவார்கள். இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைப்பற்றி நாம் பேசியும் விவாதித்தும் வருவதால், ஜேஎன்யூவைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்த நாட்டிலுள்ள பெண்கள், தலித்துகள், பழங்குடிமக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் கண்ணியம் குறித்த பிரச்சனைகளை நாம் எழுப்பிவருகிறோம். அதனால்தான், அவர்களின் சுவாமி (சுப்ரமணியன் சுவாமி), ஜேஎன்யூவில் ஜிகாதிகள் வசிக்கிறார்கள் என்றும், ஜேஎன்யூ மாணவர்கள் வன்முறையைப் பரப்பிவருகிறார்கள் என்றும் பிதற்றுகிறார்.
  ஆர்.எஸ்.எஸ். சித்தாந்திகளுக்கு, ஜேஎன்யூ சார்பாக நான் சவால் விடுக்க விரும்புகிறேன். எங்களை அழைத்து விவாதம் நடத்துங்கள். வன்முறை எனும் கருத்தைப்பற்றி நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். ஏபிவிபியினரின் வெறிபிடித்த கோஷங்களை, ரத்தத்தால் திலகமிடுவோம் என்றும் துப்பாக்கி ரவைகளால் ஆரத்தி எடுப்போம் என்றும் அவர்கள் இடுகின்ற கோஷங்களைப்பற்றி நாங்கள் வினாக்களைத் தொடுக்க விரும்புகிறோம். யாருடைய குருதியை அவர்கள் கொட்ட விரும்புகிறார்கள்? அவர்கள், பிரிட்டிஷ்காரர்களுடன் அணிசேர்ந்து நின்று இந்த நாட்டின் விடுதலைப் போராட்டவீரர்களின்மீது குண்டுகளைப் பாய்ச்சினார்கள். ஏழை மக்கள் ரொட்டி வேண்டுமென்று கோரியபோது, துப்பாக்கிக் குண்டுமழை பொழிந்தார்கள் அவர்கள்; பட்டினியால் மாய்ந்துகொண்டிருந்த மக்கள், தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபோது, தோட்டக்களைப் பரிசாக அளித்தார்கள் அவர்கள்; முஸ்லீம்களுக்கு எதிராகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள் அவர்கள்; சம உரிமை வேண்டுமெனப் பெண்கள் கோரியபோது அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பாய்ச்சினார்கள் அவர்கள்.
  ஐந்து விரல்கள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என வியாக்கியானம் பேசுகிறார்கள் அவர்கள். பெண்கள், சீதையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அக்னிப்பரீட்சைக்குத் துணியவேண்டும் என்றும் பிரலாபிக்கிறார்கள் அவர்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது; மாணவராக இருந்தாலும், தொழிலாளராக இருந்தாலும், ஏழையாக இருப்பினும், செல்வந்தராக இருப்பினும், அம்பானி அல்லது அதானியாக இருந்தாலும் அனைவர்க்கும் சம உரிமையை அளிக்கிறது ஜனநாயகம். பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்று நாம் பேசினால், இந்தியக் கலாச்சாரத்தை நாசமாக்குவதாக நம்மைப் பழிசொல்கிறார்கள் அவர்கள்.
சுரண்டல், ஜாதி கலாச்சாரத்தை நிர்மூலமாக்குவோம்
  சுரண்டல் கலாச்சாரத்தை, ஜாதி கலாச்சாரத்தை, மனுசாஸ்திர, பிராமணீய கலாச்சாரத்தை நிர்மூலமாக்கவே நாம் விரும்புகிறோம். இதுநாள்வரையிலும் கலாச்சாரம் என்பதற்கான வியாக்கியானம் தீர்ந்தபாடில்லை. இந்த நாட்டிலுள்ள மக்கள், ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதும், செவ்வணக்கத்தோடு சேர்த்து நீலவணக்கத்தைத் தெரிவிப்பதும், மார்க்சுடன் சேர்த்து அம்பேத்கரைப் பற்றிப் பேசுவதும், (விடுதலைப் போராட்ட வீரரான) அஸ்ஃபகுல்லா கானைப்பற்றிப் பேசுவதும் அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. அவர்களால் இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியவில்லை. அது அவர்களுடைய சதிகாரத்தனம். அவர்கள், பிரிட்டிஷ்காரர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். முடிந்தால் எனக்கு எதிராக அவதூறு வழக்குப் போடுமாறு அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.ன் வரலாறு, பிரிட்டிஷ்காரர்களுடன் அணிசேர்ந்து நின்ற வரலாறுதான் என்கிறேன் நான். இந்த துரோகிகள்தான் இன்று தேசியவாதிகளுக்கான நற்சான்றிதழ்களை இன்று விநியோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
  நண்பர்களே, எனது செல்பேசியை எடுத்துப் பாருங்கள். அதில் எனது அன்னைக்கும் சகோதரிக்கும் எதிராகப் பொழியப்பட்ட எத்துணை அசூசையான வசவுகள்! பாரதமாதா என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள் அவர்கள்? அவர்களது பாரதமாதாவில் எனது தாயும் அங்கம் எனும் நிலை இல்லாத பட்சத்தில், அவர்தம் பாரதமாதா எனும் கருத்தமைவு எனக்கு ஏற்புடைத்தன்று.
  எனது தாய் ஓர் அங்கன்வாடி சேவகி; அவர் ஈட்டுகின்ற 3000 ரூபாய் ஊதியத்தில்தான் எங்கள் குடும்பம் நடக்கிறது; அந்தத் தாயை நிந்திக்கிறார்கள் அவர்கள். இந்த நாட்டில், ஏழைகளின், தலித் விவசாயிகளின் அன்னையர் பாரதமாதாவின் அங்கமில்லை என்பதை எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன். நான், இந்த நாட்டின் அன்னையரைப் போற்றுவேன்; இந்த நாட்டின் தந்தையரைப் போற்றுவேன்; இந்த நாட்டின் தாய்மார்களையும் சகோதரிகளையும் போற்றுவேன்; ஏழை விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், தொழிலாளர்களைப் போற்றுவேன்.
  அவர்களுக்கு [ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு] வீரம் இருக்குமேயானால், ‘புரட்சி ஓங்குக’ என்று முழங்கட்டும் அவர்கள்; ‘பகத்சிங் வாழ்க’ என்று வாழ்த்தட்டும் அவர்கள்; ‘சுக்தேவ் வாழ்க’ என்று போற்றட்டும் அவர்கள்; ‘அஸ்ஃபகுல்லா கான் வாழ்க’ என்று கோஷிக்கட்டும் அவர்கள்; ‘பாபாசாகப் அம்பேத்கர் வாழ்க’ என்று போற்றட்டும் அவர்கள். அவ்வாறு செய்யும்பட்சத்தில்தான் அவர்கள் இந்த நாட்டின்மீது பற்றுகொண்டுள்ளார்கள் என நான் நம்புவேன்.
ஆர்.எஸ்.எஸ். கபட நாடகம்
  அம்பேத்கரின் 125வது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக அவர்கள் கபடநாடகம் நடத்துகிறார்கள். அவர்களுக்குத் திராணி இருக்குமேயானால், அம்பேத்கர் எழுப்பிய பிரச்சனைகளை எழுப்பவேண்டும். ஜாதி அமைப்புமுறை நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. ஜாதி முறையைப்பற்றிப் பேசட்டும்; ஒவ்வொரு துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவரட்டும்; தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவரட்டும். இந்தப் பிரச்சனைகளையெல்லாம் அவர்கள் எழுப்பும்பட்சத்தில், இந்த நாட்டின்மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்பேன் நான்.
  இந்த தேசம் என்றுமே உங்களுடையதாக இருந்ததுமில்லை; ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை. ஜனசமூகத்தால் உருவானதுதான் தேசம்; பசித்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேசமெனும் உங்கள் கருத்தில் இடமில்லை என்றால், அது தேசமாகவே இருக்காது.
  நேற்று நடைபெற்றதொரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, இடர்மிகு நிலையில் நாம் இருப்பதாக நான் குறிப்பிட்டேன். நாட்டில் பாசிசம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கையில், ஊடகங்கள்கூட தப்புவதற்கில்லை. நெருக்கடி நிலை காலத்தில், காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து எப்படி எதைப் பிரசுரிக்கவேண்டுமெனப் பத்திரிகை செய்திக் குறிப்புகள் எழுதப்பட்டு வந்தனவோ அதேபோன்று, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு செய்திக் குறிப்புகள் எழுதி அனுப்பப்படும்.
  மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில்தான் ஜேஎன்யூ நடக்கிறது என்று சில ஊடக நண்பர்கள் கூறினார்கள். மானியத்தில் ஜேஎன்யூ நடக்கிறது என்பது வாஸ்தவம்தான். இருப்பினும், இங்கே நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: பல்கலைக் கழகங்கள் எதன்பொருட்டு நடத்தப்படுகின்றன? சமுதாயத்தின் கூட்டு மனசாட்சியை விமர்சனபூர்வமான ஆய்வு செய்வதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அத்தகைய விமர்சனபூர்வமான ஆய்வு ஆதரிக்கப்படவேண்டும். பல்கலைக்கழகங்கள் தமது பணியில் தவறிவிட்டனவென்றால், தேசமே இருக்காது. மக்கள் தேசத்தின் அங்கமாக இல்லையெனில், சுரண்டலுக்கும், கொள்ளையடிப்பதற்கும் பணக்காரர்களின் வேட்டைக்காடாக அது ஆகிவிடும்.
  மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை நாம் ஸ்வீகரிக்கவில்லையெனில், ஒரு தேசமென்பதே உருவாகாது. தேசத்தோடு நாம் உறுதியாக நிற்கிறோம்; பகத் சிங், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் கனவுகளுக்காக நாம் நிற்கிறோம். சம உரிமைகளுக்காக நாம் நிற்கிறோம். வாழ்வுரிமைக்காக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளுக்காக நிற்பதன்பொருட்டே ரோஹித் (வெமுலா) தன் உயிரைத் துறந்தார்.
  “உங்கள் அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று சங்கிகளுக்கு நாம் சொல்ல விரும்புகிறோம். மத்திய அரசுக்கு நாம் சவால்விட்டுக் கூற விரும்புகிறோம்—ரோஹித் விஷயத்தில் அது என்னவேண்டுமானாலும் செய்திருக்கலாம்; ஆனால், அது ஜேஎன்யூவில் நடக்க நாம் அனுமதிக்க மாட்டோம். இங்கே ரோஹித் தன் உயிரைத் துறக்கமாட்டார். ரோஹித்தின் தியாகத்தை நாம் மறக்கமாட்டோம். கருத்துச் சுதந்திரத்துக்காக நாம் நிற்போம்.
மனிதகுலத்தை நேசிக்கிறோம்
  பாகிஸ்தானும் வங்கதேசமும் இருக்கட்டும்; உலகெங்கிலுமுள்ள ஏழைகள், உழைப்பாளி மக்கள் அனைவரின் ஒற்றுமைக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதகுலத்தை நாம் போற்றுகிறோம்; இந்திய மனிதகுலத்தைப் போற்றுகிறோம்.
  மனிதகுலத்துக்கு எதிராக இருப்பவர்களை நாம் இனங்கண்டு கொண்டோம். இதுதான் நம் முன்னே உள்ள ஆகப்பெரிய பிரச்சனை ஆகும். ஜாதியின் முகத்தைக் கண்டுகொண்டோம்; மனுவாதத்தின் முகத்தைக் கண்டுகொண்டோம்; பிராமணீயத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே உள்ள கள்ளத் தொடர்பைக் கண்டுகொண்டோம். இந்த முகங்களை  நாம் அம்பலப்படுத்த வேண்டும். உண்மையான சுதந்திரத்துக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும்; அது அரசியல் சட்டத்தின்மூலமாக வருகின்ற சுதந்திரம்; நாடாளுமன்றத்தின் மூலமாக வருகின்ற சுதந்திரம். நாம் அதை அடைந்தே தீருவோம்!
  நண்பர்களே, நான் உங்களை அறைகூவி அழைக்கிறேன்: நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், கருத்து சுதந்திரத்தை நாம் காப்பாற்றியாகவேண்டும்; நமது அரசியல் சட்டத்தைக் காப்பாற்றியாகவேண்டும்; இந்த நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றியாகவேண்டும். இதன்பொருட்டு நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்; நமது நாட்டைத் துண்டாட எத்தனிக்கும் சக்திகளை, பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கொடுக்கின்ற சக்திகளைப் போரிட்டுச் சாய்க்கவேண்டும்.
  எனது உரையை நிறைவுசெய்வதற்குமுன் ஒரு பிரச்சனைபற்றிக் குறிப்பிடவேண்டும். யார் இந்த கசாப்? யார் இந்த அஃப்சல் குரு? தமது உடல்களைச்சுற்றி குண்டுகளைக் கட்டிக்கொண்டு கொன்றழிக்கிறார்களே யார் இவர்கள்? இந்தக் கேள்விகளையெல்லாம் பல்கலைக் கழகங்களில் எழுப்பவில்லையெனில் பல்கலைக் கழகங்களின் ஜீவிதமே அர்த்தமற்றதாகிவிடும். நீதியை நாம் வரையறுக்கவில்லையெனில், வன்முறையை வரையறுக்கவில்லையெனில்... நாம் வன்முறையை எப்படிப் பார்க்கிறோம்? வன்முறை என்பது யாரேனும் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதுமட்டுமன்று. தலித்துகளின் அரசியல்சட்டரீதியான உரிமைகளை ஜேஎன்யூ நிர்வாகம் மறுக்கின்றபோது அது வன்முறையாகிறது. இது நிறுவனரீதியான வன்முறை.
  அவர்கள் நீதியைப்பற்றிப் பேசுகிறார்கள். எது நீதி என்று யார் தீர்மானிப்பது? தலித்துகள் கோவில்களில் நுழைவதை பிராமணீயம் அனுமதிப்பதில்லை. உணவு விடுதிகளில் நாய்களும் இந்தியர்களும் நுழைவதை பிரிட்டிஷ்காரர்கள் அனுமதிக்கவில்லை. அது அன்றைய [அ]நீதியாக இருந்தது. அன்று அந்த [அ]நீதியை நாம் எதிர்த்தோம்; இன்று நமக்கு நீதியை அளிக்காத ஏபிவிபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் [அ]நீதியை எதிர்த்துச் சவால்விட்டு நிற்கிறோம். அவர்தம் [அ]நீதி நமக்கு நீதி அளிக்காத நிலையில் அவர்களது அந்த [அ]நீதியையும், இந்த சுதந்திரத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோம். ஒவ்வொரு நபரும் தனது அரசியல்சட்டபூர்வமான உரிமையைப் பெறும்போது இந்த சுதந்திரத்தை நாங்கள் ஏற்போம். அனைவருக்கும் சம உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படுகின்ற நிலையில் நீதியை நாங்கள் ஏற்போம்.
வன்முறை, பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்
  நண்பர்களே, நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் ஜேஎன்எஸ்யூ (ஜேஎன்யூ மாணவர் சங்கம்) எத்தகு வன்முறைக்கும், எந்த பயங்கரவாத, பயங்கர சம்பவத்துக்கும் இந்திய-விரோத நடவடிக்கைக்கும் ஆதரவளித்தலாகாது. அடையாளம் தெரியாத சில நபர்கள் எழுப்பிய “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷத்தை ஜேஎன்யூ மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறதென நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். 
  நண்பர்களே, உங்களுடன் ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது ஜேஎன்யூ நிர்வாகம் மற்றும் ஏபிவிபி தொடர்புடைய விஷயம். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. தற்போது ஏபிவிபி எழுப்புகின்ற கோஷங்களை உற்று கவனியுங்கள். நம்மை ‘கம்யூனிஸ்ட் நாய்கள்’ என்று அவர்கள் ஏசுகிறார்கள். ‘அஃப்சல் குருவின் ஏவல்நாய்கள்’ என்று அவர்கள் நம்மை நிந்திக்கிறார்கள்.
  ‘ஜிகாதிகளின் புத்திரர்கள்’ என்று அவர்கள் நம்மை அழைக்கிறார்கள். இந்த நாட்டின் பிரஜைகள் என்கிற உரிமையை அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள நிலையில், நமது பெற்றோரை நாய்கள் என்று அவர்கள் தூஷிப்பது நமது அரசியல்சட்ட ரீதியான உரிமையின்மீது அவர்கள் தாக்குதல் தொடுப்பதாகாதா? இந்தக் கேள்வியை ஏபிவிபி மற்றும் ஜேஎன்யூ நிர்வாகத்தின்முன் வைக்க விரும்புகிறோம். யாருக்காக, யாருடன் சேர்ந்துகொண்டு, எந்த அடிப்படையில் ஜேஎன்யூ நிர்வாகம் வேலை செய்கிறது என அதனைக் கேட்க விரும்புகிறோம். [ஒரு நிகழ்ச்சிக்கு] முதலில் அனுமதி கொடுக்கிற ஜேஎன்யூ நிர்வாகம், [ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள] நாக்பூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறது. முதலில் அனுமதி கொடுப்பதும் பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வதும் என்கிற பாணி தீவிரமாகியுள்ளது. முதலில் அவர்கள் உயர்கல்வி உதவித் தொகையை அறிவிப்பார்கள்; அதை வாபஸ் வாங்கிவிட்டதாகப் பின்னர் சொல்வார்கள். இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏபிவிபி பாணி; இந்த வழிமுறையில்தான் நாட்டைக் கொண்டுசெல்ல அவர்கள் விரும்புகிறார்கள்.
  ஜேஎன்யூ நிர்வாகத்திடம் நாம் கேட்க விரும்புவது இதுதான்: (இந்திய எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் பிப்ரவரி 9 ஆம் தேதிய நிகழ்ச்சிக்கு) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதியை அளித்துவிட்டு, யாருடைய உத்தரவின்பேரில் அது திரும்பப்பெறப்பட்டது? ஜேஎன்யூ நிர்வாகத்திடம் நாம் இதனைக் கேட்க விரும்புகிறோம்.
ஆட்டம் போடுகிறது ஏபிவிபி
  அதே நேரத்தில் இந்த (ஏபிவிபி) ஆசாமிகளின் சுயரூபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை வெறுக்காதீர்கள். அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். (புனேயில் உள்ள ஃபிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவராக) கஜேந்திர செளஹான் நியமிக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அவரைப்போன்ற ஆட்களைப் புகுத்திவிடலாம் என்ற நினைப்பில் அவர்கள் இப்போது துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கிறார்கள். செளஹானைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் பொறுப்பில் இருக்கும்பட்சத்தில், தமக்கு வேலை கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கு வேலைகிடைத்த உடனே தேசத்தை வணங்குவதையும், பாரத மாதாவையும் மறந்துவிடுவார்கள். அவர்கள் என்றுமே மதிக்காத தேசிய மூவர்ணக் கொடியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை! காவிக் கொடியையும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள்.
  அவர்கள், தேசத்தைத் துதித்தல் என்று கொக்கரிக்கின்றார்களே, அந்தத் துதி எத்தகையது என நான் அறிய விரும்புகிறேன். முதலாளியொருவர் தனது சிப்பந்திகளிடம் முறையாக நடந்துகொள்ளவில்லையெனில், விவசாயி ஒருவர் தனது விவசாயத் தொழிலார்களுக்கு நீதி வழங்கவில்லையெனில், ஓர் ஊடக நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்குகிற தலைமை நிர்வாக அதிகாரி, மிகக் குறைவான ஊதியம் பெறுகின்ற நிருபர்களிடம் முறையாக நடந்துகொள்ளவில்லையெனில், இந்த தேசத்துதி என்பதற்கு என்னதான் அர்த்தம்?
  அவர்களுடைய தேசத்துதி, ஒரு இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிந்துவிடக்கூடியது. இதன் பின்னர், சாலையில் செல்லும் அவர்கள், வாழைப்பழம் விற்கிறவரிடம்போய் முறைகேடாக நடந்துகொள்வார்கள். ஒரு டஜன் வாழைப்பழம் 40 ரூபாய் என்று அந்த நபர் சொன்னால், வாடிக்கையாளர்களிடம் அவர் கொள்ளையடிப்பதாக அவரை இழித்தும் பழித்தும் பேசுவார்கள். டஜன் பழம் 30 ரூபாய்க்கு வேண்டும் என்பார்கள்.
  வாழைப்பழம் விற்கும் அந்த மனிதர் நிமிர்ந்து நின்று, அவர்களைப் பார்த்து, உண்மையில் நீங்கள்தான் கொள்ளையடிக்கிறவர்கள் என்று சொன்னால், அந்த எளிய மனிதரை தேசவிரோதி என்று அவர்கள் சாடுவார்கள். [அவர்களது] தேசத்துதி என்பது வசதி வாய்ப்புகளில் தொடங்கி அவற்றிலேயே முடிந்துவிடுகிறது.
  எனக்குப் பல ஏபிவிபி ஆட்களைத் தெரியும்; தேசிய உணர்வு அவர்களை உத்வேகமூட்டியிருக்கிறதா? என்று அவர்களை நான் கேட்டிருக்கிறேன். “என்ன செய்வது சகோதரரே, இந்த அரசின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள்தான்; அதில் இரண்டு ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. எஞ்சியிருப்பது மூன்று ஆண்டுகள்தான்; அதற்குள் எதையெல்லாம் செய்துமுடிக்க வேண்டுமோ அதனைச் செய்துமுடிக்க வேண்டும்” என்கிறார்கள் என்னிடம்.
  நான் அவர்களைக் கேட்க விரும்புவது இதுதான்: நாளைக்கு, ரயிலில் பயணிக்கும் அவர்களுடைய உறுப்பினர்களிலேயே ஒருவர், யாரேனும் மாட்டுக்கறி வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும்போது, அவர்களின் காலரைப்பிடித்து, ஜேஎன்யூவைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் நீங்கள் தேசத்துரோகிகள் என்று பழிசொல்ல நேர்ந்தால் என்னாகும்? வன்முறைக் கும்பலால் நீங்கள் கொல்லப்படக்கூடும். இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா? என நான் அவர்களைக் கேட்கிறேன்.
  தாம் இந்த ஆபத்தை உணர்வதாகவும் அதனால்தான், #ஜேஎன்யூவுக்கு மூடுவிழா நடத்துவது (ட்விட்டர் குறியீடு) என்பதைத் தாம் எதிர்ப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். முதலில் ஜேஎன்யூவுக்கு எதிராக ஒரு சூழலை உருவாக்கிவிட்டுப் பின்னர், எவ்வாறாயினும் இறுதியில் அவர்கள் ஜேன்யூவில்தான் வாழவேண்டும் என்பதை உணர்ந்தவுடன் அந்த சூழலை எதிர்க்கிறார்கள்.
ஜேஎன்யூவினர்க்கு ஒரு வார்த்தை
  அதனால்தான் அனைத்து ஜேஎன்யூவினருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: மார்ச் மாதத்தில் தேர்தல்கள் வரவிருக்கின்றன. “ஓம்” கொடியை ஏந்திக்கொண்டு, உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள் ஏபிவிபி ஆசாமிகள். “நாங்கள் ஜிகாதிகள்; நாங்கள் பயங்கரவாதிகள்; நாங்கள் தேசவிரோதிகள்; எங்களுடைய வாக்குகளை ஏற்பதன்மூலம் நீங்களும் தேசவிரோதிகள் ஆகிவிடமாட்டீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள். இந்தக் கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது, “நீங்கள் தேசவிரோதிகள் இல்லை; ஒருசிலர்தான் அப்படிப்பட்டவர்கள்” என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையில், “இதை ஏன் அப்போதே நீங்கள் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை” என்று அவர்களிடம் கேளுங்கள். “ஏன் அவர்களது துணைவேந்தரும், பதிவாளரும்கூட அப்போதே இதனைச் சொல்லவில்லை?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
  அவர்கள் குறிப்பிடுகிற சிலரும்கூட “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பவில்லை; அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். [நிகழ்ச்சிக்கு] ஏன் முதலில் அனுமதி வழங்கப்பட்டது; பின்னர் ஏன் திரும்பப்பெறப்பட்டது? இது ஜனநாயக உரிமையின்மீதான தாக்குதல் ஆகாதா? என்பதைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்கள். எங்கேனும் ஜனநாயகத்திற்கான போராட்டம் நடைபெறுமேயானால் அதனைத் தாம் ஆதரித்து நிற்போம் என்பதைத்தான் அந்த சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
  அவர்கள் [ஏபிவிபியினர்] ஒருபோதும் இதனைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால், குறைந்த கால அவகாசத்தில் இங்கே கூடியிருப்பவர்கள் இந்தப் பிரச்சனயைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் பல்கலைக்கழக வளாகமெங்கும் சென்று, நாட்டை மட்டுமின்றி ஜேஎன்யூவையும் சின்னாபின்னமாக்குவதற்கு ஏபிவிபி முயன்றுகொண்டிருக்கிறது; ஆனால் அவ்வாறு நிகழ்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மாணவர்களிடம் எடுத்துச் சொல்வார்கள்.
  ஜேஎன்யூ நீடூழி வாழ்க! நாடெங்கிலும் நடைபெறும் அனைத்து ஜனநாயகப் போராட்டங்களிலும் ஜேஎன்யூ தொடர்ந்து ஊக்கத்துடன் பங்குகொள்ளும்; தொடர்ந்து ஜனநாயகத்தின் குரலை, சுதந்திரத்தின் குரலை, கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தும். நாம் போராடுவோம், வெற்றி பெறுவோம்; இந்த நாட்டிற்கெதிரான தேசத்துரோகிகளை முறியடிப்போம். இந்த வார்த்தைகளுடன், உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்; ஒன்றுபட்டு நிற்க அறைகூவல் விடுக்கிறேன்.
  ஜெய் பீம்! லால் சலாம்!!

Read more...

தோழர் ஜெயகாந்தன் பேட்டி

“எந்த தீமையும் நிரந்தரமானதல்ல!”

[தோழர் ஜெயகாந்தன், ஞானபீட விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து “ஃப்ரண்ட்லைன்” (FRONTLINE) ஆங்கில மாதமிருமுறை ஏட்டின் சிறப்புச் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.எஸ்.விசுவநாதனுக்கு பேட்டி அளித்தார். 2005 மார்ச் (12-15)  “ஃப்ரண்ட்லைன்” இதழில் அவரது பேட்டி, முன்னுரையுடன் வெளியானது. அதன் தமிழாக்கம், இங்கே தரப்படுகிறது.]  
  பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த காலத்திலேயே 1950களில் இலக்கிய உலகில் பிரவேசித்த த.ஜெயகாந்தன், அடித்தட்டு மக்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் குறித்து மட்டுமல்லாது, அவர்களது வாழ்வின் துல்லியமான அம்சங்கள் பற்றியும் ஆற்றல்மிகு கதைகளை எழுதினார்.     
  எந்தவொரு நல்ல கதையையும் போன்றே அந்தக் கதைகள் அவரது  நடுத்தரவர்க்க வாசகர்களின் மனத்தை பாதித்தன; ஏழைகளின் அவல வாழ்வுகுறித்த அவர்களது மனசாட்சியையும் தட்டி எழுப்பின.
   சில ஆண்டுகளுக்குப்பின், நடுத்தர மக்களின் வாழ்க்கையின்பால் அவரது கவனம் திரும்பியது; அதே இலகுவுடன் அந்த வர்க்கத்தினரின் பிரத்தியேகப் பிரச்சனைகள்பற்றி அவர் எழுதலானார்.
  இதற்கிடையே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து அவர் விலகினார்; இருப்பினும், பல்லாண்டுக்காலம் ஓர் இடதுசாரி எழுத்தாளர் எனும் ஆளுமை கொண்டிருந்தார்.
  பின்னர், இந்திய ஆன்மிகத் தத்துவத்தை  அவர் அதிகம் சார்ந்திருப்பதாகவும், ஆன்மீக விஷயங்களத் தனது கதைகளின் கருவாக எடுத்துக் கொள்வதாகவும் உணரப்பட்டதால், அவர் ஒரேயடியாக வலதுசாரி முகாமுக்குச் சென்றுவிட்டதாக மார்க்சிய விமர்சகர்கள் கூறத்தலைப்பட்டனர்.
  இருப்பினும், தான் இன்னும் ஒரு மார்க்சியவாதியாகவே இருப்பதாகத் தன் கருத்தை அண்மையில் பதிவுசெய்திருக்கிறார் ஜெயகாந்தன். ”கம்யூனிஸ்ட் என்றாகிவிட்டவர் எப்போதும் கம்யூனிஸ்டாகவே இருப்பார்” என ஒரு பத்திரிகையில் அவர் கூறியிருக்கிறார்.  ஒருவர் ஏக காலத்தில் மார்க்சியவாதியாகவும் ஆன்மிகவாதியாகவும் இருப்பதில் எந்த முரணும் இல்லை என்று எஸ்.விஸ்வநாதனுக்கு அளித்த கீழ்க்காணும் பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். பேட்டியின் சில பகுதிகள் இதோ:
கேள்வி: 1950களில் தங்களது டீன் ஏஜ் பருவத்திலேயே  எழுதத் தொடங்கினீர்கள். இலக்கிய உலகில் 50 ஆண்டுகளையும் கடந்துவிட்ட நிலையில், மனநிறைவு எய்திவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஜெயகாந்தன்:  ஆமாம், நிச்சயமாக. பொதுவாகவே நான் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிடமாட்டேன்.  அப்படியே செய்தாலும்கூட, மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளதால், சிறிது மகிழ்ச்சியே விளைகிறது.    
  என்னைச் சுற்றிலும் எத்தனை மாற்றங்கள்! எங்கு நோக்கினும் மாற்றங்கள்-பல விஷயங்களில் அவை நல்ல மாற்றங்களாகவும், சில விஷயங்களில் மோசமானவையாகவும் இருக்கக்கூடும். எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.
  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதத் தொடங்கியபோது, வறுமை என்பது மக்களிடம் மிகப் பரவலாக இருந்தது. மக்களின் துன்ப துயரங்களோ அநேகம். கல்வியறிவு அற்றவர்களும் எழுத்தறிவு இல்லாதவர்களும் எண்ணிலடங்காதவர்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கையோ சொற்பம். அது வேறு இந்தியா. ஆகவே, வேறுவிதமான மக்களை நாம் காணமுடிந்தது. அவர்களைப்பற்றி இப்போது ஏதேனும் கூறப்புகுந்தால், இன்றைய தலைமுறையினர் அதனை நம்புவதற்கு சிரமப்படுவார்கள். மகாத்மா காந்தியைப் பற்றி மட்டுமே நாம் இப்போது பேசுகிறோம். [அன்று] வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பல மகாத்மாக்கள் இருந்தனர்.
   ஆனால் இப்போது நாம் காண்பதோ வேறு வகையான காட்சி. ஒரு வேளை சிறிது ஆன்மிகத் தேக்கம் ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வளர்ச்சிகளும், அவாக்களும், வாய்ப்புகளும் பெருகும்போது ஆன்மிகத் தாகமும், ஆன்மிகத் தேடலும் குறைந்துவிடும்போலும். அதனால் என்ன? ஆன்மிகம் என்பது ஏதோ மதம் அல்லது கடவுள் சம்பந்தமானதன்று; சொல்லப்போனால், அது மனிதனின் எல்லைக்குள் இருப்பதுதான். அது மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியது.
  அனைவருக்கும் இந்த ஆன்மிகத் தாகம் இருத்தல் தேவையின்றிப் போகலாம். ஆனால், குறைந்தபட்சம் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஆட்சி நடத்துகிறவர்கள், அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருக்காவது இந்த தாகம் இருத்தல் அவசியம். இந்தப் பகுதியினரிடையே இத்தகு ஆன்மிகத் தாகம் இன்றி அவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக ஆகிவிடும் பட்சத்தில் மெய்யாகவே அது படுநாசம்தான்.
  இந்த நிலைமை மாறும் என்று நம்புவோமாக. எந்தத் தீமையும் நிரந்தரமானதல்ல என்கிற நம்பிக்கையை உருவாக்குவது எழுத்தாளர்களின் கடமை. எனது எழுத்துக்களின்மூலம் இதனைச் செய்ய நான் முயற்சித்திருக்கிறேன்.
  கேள்வி: இன்றைய தமிழ் இலக்கிய உலகினை நீங்கள் எவ்விதம் காண்கிறீர்கள்?
 ஜெயகாந்தன்: வேண்டாம். மன்னிக்கவும். நான் நல்லதொரு விமர்சகனும் அல்ல; ஆர்வமிகு வாசகனுமல்ல. மேலும், நிகழ்காலத்தைப் பற்றி எதிர்காலம்தான் தீர்ப்பு கூறமுடியும். அதுமட்டுமே முறையானதாக இருக்கும். இருந்தபோதிலும், தற்கால இலக்கியத்தில் பல போக்குகளைக் காண்கிறேன்; அவற்றில் சில சரியானவையாகவும், சில தவறானவையாகவும் இருக்கலாம்; அவற்றில் மிகச்சில விரைவில் பயனற்றதாகிவிடக்கூடும்.
   ஆனால், இதைக்காட்டிலும் சிறந்த இலக்கிய சூழலுடன்கூடிய சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அது, என்னிலிருந்தே தொடங்கும். நானே முடிவல்ல. சுப்ரமண்ய பாரதியிடமிருந்து நாமனைவரும் உருவானதைப்போன்றே [என்னிலிருந்து] மேலும் பலர் உருவாகி வளர்வார்கள். ஒவ்வொரு தலைமுறையும் நம்பிக்கையுடன் மறுமலர்ச்சியை எதிர்நோக்கலாம்.  
  கேள்வி: இன்றைய தமிழ் இலக்கிய உலகில் காணப்படும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காக ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் படைப்புகள் பலவும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில் அது நல்லதுதான். ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் வேறு இந்திய மொழிகளுக்கும் மொழியாக்கம் என்பது மிகச் சொற்பமானதாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளதே? மொழியாக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியான படைப்புகள் தமிழில் இருந்தும் இந்த நிலை உள்ளது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஜெயகாந்தன்: இதுவெல்லாம் [மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கான] தேவையைப் பொறுத்துள்ளது. ஒருவேளை, பிறரைக் காட்டிலும் தமிழ் வாசகர்கள் இத்தகு மொழியாக்கங்களுக்கான தேவையை அதிகம் உணர்ந்துள்ளனர் போலும். வேறு நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் தமிழ்ப்படைப்புகளின்பால் இதே போன்ற ஆர்வம் இல்லாதிருக்கலாம். ஆயினும், உங்களது அனைத்து நாவல்களையும் படிக்க வேண்டுமென ஆங்கில வாசகர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. அது உங்களின் பேராசை மட்டுமே. அவர்கள் ஏன் அவற்றைப் படிக்கவேண்டும்? இதோ பாருங்கள், உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், ‘கீதாஞ்சலி’ காவியத்துக்காக மட்டுமே ரவீந்திரநாத் தாகூர் உலகமுழுவதிலும் அறியப்பட்டுள்ளார். இருப்பினும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மொழியாக்கம் செய்யத் தகுந்தவையே. அத்தகு மொழியாக்கங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  மேலதிகமான தமிழ்ப் படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுதல் நல்லது.  விரும்பத்தக்க அளவு இல்லாவிடினும், இதுவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஞானபீட விருது மேலும் இத்தகு வாய்ப்புகளை நல்கும் என நம்புகிறேன்.
  இருப்பினும், வெவ்வேறு மொழிகளைப் பேசுகிற மக்களிடையே கருத்துப்பரிமாற்றம் அதிக அளவில் நடைபெறவேண்டும் என்பது இதைவிட முக்கியமானதாகும். இத்தகு கருத்துப்பரிமாற்றம் இல்லாவிடினும் அவர்களிடையே மோதல்கள் இல்லாதிருக்கட்டும்.
  கேள்வி: ஒரு கம்யூனிஸ்டாக நீங்கள் எழுதத் தொடங்கினீர்கள்.  பின்னர், கட்சியிலிருந்து  விலகினீர்கள். பின்னாளில் நீங்கள் எழுதிய கதைகளில் சில ஆன்மிகத்தின்பால் உங்கள் ஆர்வத்தைக் காட்டின. நீங்கள் ஒரு மார்க்சியவாதியாகத் தொடர்வதாக அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். சோவியத் யூனியன் வீழ்ந்துபடுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, “கம்யூனிசம் தோற்குமா?”எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதினீர்கள்...
  ஜெயகாந்தன்: உலகில் கம்யூனிசத்தின் ஒரே பிரதிநிதி சோவியத் யூனியன் அல்ல. சோவியத் யூனியனில் நடந்தேறியிருப்பது ஒரு தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அல்லது அதன் மறு நிர்மாணமும் மட்டுமே. ஒரு கோட்பாடு எனும் வகையில், கம்யூனிசத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மார்க்சியம், ஜீவித்திருக்கும் சித்தாந்தம்.
  கம்யூனிசத்தின் வலிமை எது என்று உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க சிப்பாய்கள் சதாம் ஹுசைனை எப்படி சித்திரவதை செய்து சிறுமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அண்மையில் பார்த்தோம். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்ததன் தார்மீக அம்சங்கள் இன்னமும் விவாதிக்கப்பட்டுவருகிறது. ஃபிடெல் காஸ்ட்ரோவின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தமுடியுமா? அவ்வாறு செய்வதற்கு அமெரிக்காவுக்கு தைரியம் உண்டா? வியத்நாமிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டதை நாம் பார்க்கவில்லையா? அல்லது சீனாவைத் தொடுவதற்கு அவர்களுக்குத் திராணிதான் உண்டா? இதுதான் கம்யூனிஸ்ட் அரசுகளின் தார்மீக பலம். இந்தியத் தத்துவத்தின் வெளிச்சத்தில் மார்க்சியத்தையும் சோஷலிசத்தையும் நாம் புரிந்துகொண்டோம். 1917-ல் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி நிறைவடைவதற்கு முன்பே, கம்யூனிசம் சோவியத் யூனியனில் நிதர்சனமாவதற்கு முன்பே, இந்தியாவில் முப்பது கோடி ஜனங்களின் நன்மைக்குப் பொதுவுடைமை அவசியம் என்கிற பாரதியின்  தொலைநோக்கு எங்ஙனம் தோன்றியது? இந்திய வேர்களிலிருந்து, இந்திய தத்துவத்திலிருந்து அது விளைந்தது.
கேள்வி: ஒரு மார்க்சியவாதியாகவும், அதே நேரத்தில் ஆன்மிகவாதியாகவும் இருப்பதில் நீங்கள் முரண்பாட்டைக் காணவில்லையா?
ஜெயகாந்தன்: ஒரு ஹிந்து எனும் பொருளில் அல்லது இந்திய தத்துவ நோக்கில் காரல் மார்க்சும்கூட ஆன்மிகவாதிதான். மார்க்சியத்தைப் போன்றே ஆன்மிகமும் மிகவுயர்ந்த மனிதாபிமானமேயன்றி வேறில்லை: இரண்டுமே மக்களுக்கு சேவைபுரிபவை.
  கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிலும் உறுப்பினராக இல்லாவிட்டாலும் கம்யூனிஸ்டாகவே இருக்கிறேன் நான். சில குறிப்பிட்ட பிரச்சனைகளில் கட்சியின் நிலைபாடுகளில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான் கட்சியிலிருந்து நான் விலக நேர்ந்தது.
Courtesy: FRONTLINE/March 12-25, 2005.
தமிழில்: எஸ்.துரைராஜ்



Read more...

Sunday, February 21, 2016

அமர்த்தியா சென் பார்வையில்…

ஆடம் ஸ்மித், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்

[நோபல் பரிசு வென்றவரும் தலைசிறந்த பொருளாதார மேதையுமான அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு`தி கண்ட்ரி ஆஃப் ஃபர்ஸ்ட் பாய்ஸ்’ (The Country of First Boys) என்ற பெயரில் நூல் வடிவில் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
வளர்ச்சி, நீதி, கல்வி, முக்கிய நிகழ்வுகள், கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், நாடகத்தின் முக்கியத்துவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
இதில் கூறியுள்ள கருத்துகள் தொடர்பாகவும், மற்ற பல விஷயங்கள் குறித்தும் தி ஹிண்டு (The Hindu) ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஜி.சம்பத்துக்குச் சிந்தனையாளர் அமர்த்தியா சென் அளித்த பேட்டி இங்கே தரப்படுகிறது:]


கேள்வி: மனிதர்களின் பாதுகாப்புக்கும் தேசத்தின் பாதுகாப்புக்கும் உள்ள வெவ்வேறு முன்னுரிமைகள் பற்றி உங்கள் நூலில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். மனிதர்களின் பாதுகாப்புக்காகப் போதிய அளவு செலவு செய்யாமல் இருப்பதற்காக, தேசப்பாதுகாப்பு என்பது பெரும்பாலும் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: நல்லது. இதில் மூன்று விஷயங்கள் உள்ளன. முதலாவது, மனித வாழ்க்கையைச் சுற்றியே நமது முதன்மையான அக்கறை இருக்கவேணடும் என்பதுதான் பாதுகாப்பின் அடிப்படையான விஷயமாக அமைந்திருக்கவேண்டும். எனவே, நாம் பாதுகாப்பு என்று பேசும்போது, அது மனிதர்களின் பாதுகாப்பாக இருக்கவேண்டும். வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு என்பதும்கூட இதற்குப் பொருளாகும். தேசப்பாதுகாப்பு என்று நாம்அழைப்பது, மனிதர்களின் பாதுகாப்பு என்பதில் அடங்கியுள்ள ஒருஅம்சம் மட்டுமே.
இரண்டாவது, மனிதர்களின் பாதுகாப்பு சார்ந்திருக்கும் கல்வி, உடல்நலம், சமூகப்பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்கு, தேசப்பாதுகாப்பு என்ற பெயரில், பெரும்பாலும் ஆதாரவளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. சிலநேரங்களில், அரசியல் பின்புலத்தில் தேசப்பாதுகாப்பு என்பதைப் பார்க்கும்போது, மனிதர்களின் பாதுகாப்பை வளர்ப்பதற்கான ஓர் உள்ளடக்கக்கூறு என்பதைக் காட்டிலும் அது ஒரு தடைக்கல்லாகவே தோன்றுகிறது. அதே வேளையில், தேசப்பாதுகாப்புக்கான பட்ஜெட்டைக் குறைப்பதுபற்றிப் பரிசீலிக்கும்போது, மற்ற விளைவுகளைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே ஏன் மோதல் இருக்கவேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
மூன்றாவது, கல்வி, உடல்நலம், சமூகப்பாதுகாப்பு ஆகியவை புறக்கணிக்கப்படுவது நம் நாட்டில் அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. இது, சமுதாயத்தின் வர்க்கக் கட்டமைப்பில் ஆழமாக வேரோடி இருக்கிறது.
எனவே, எல்லாவற்றுக்கும் தேசப்பாதுகாப்பைப் பழிசொல்வது தவறாகிவிடும்.
கேள்வி: பொருளாதார வளர்ச்சி என்பதில் இருந்து, மனித வாழ்க்கைத்தர வளர்ச்சி என்பதை நோக்கி, வளர்ச்சியின் கவனத்தைத் திருப்புவதற்கு உங்கள் பணி உதவியிருக்கிறது. மேலும், அதிக வளர்ச்சி அடைந்த சமுதாயம் என்பதை நோக்கி தேசம் முன்னேறுவதற்கு ஒரு மெய்யான அளவுகோல் என்றவகையில, மனித வாழ்க்கைத்தர மேம்பாடு என்பதில் இருந்து சமூகநீதி என்பதை நோக்கி இப்போது இன்னொரு திருப்பம் ஏற்படுவதற்கு இது சரியான தருணம் என்று கருதுகிறீர்களா?
பதில்: மனித வாழ்க்கைத்தர மேம்பாட்டுக் குறியீடு (HDI) என்பது வந்தபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP)  புள்ளிவிவரங்களைக்காட்டிலும் நிலவரத்தைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டக்கூடிய எளிய குறியீடாக அது இருக்கவேண்டும் என்பதுதான் கருத்தோட்டமாக இருந்தது. முதன்முதலாக 1990-ல் வெளியான மனித வாழ்க்கைத்தர மேம்பாட்டு அறிக்கையில் (HDR) பல இடங்களில் நீதி என்ற கருத்தோட்டத்தை முன்வைத்தோம். மனித வாழ்க்கைத்தர மேம்பாடு என்பது தனித்துறையாக வளரும்போது, நீதி என்பது அதிக அளவில் ஒரு மிகப் பெரிய உள்ளடக்கக்கூறாக மாறும்.
கேள்வி: வளர்ச்சிப் பொருளாதார இயலைக் குறைகூறும் அந்துரோ எஸ்கோபார், மஜீத் ரஹ்நேமா போன்றவர்கள், வளர்ச்சி என்று பேசுவதே, பின்தங்கியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் மத்தியில் அதிகாரமற்ற, சுதந்திரமற்ற ஓர் ஆட்சிமுறையை நிறுவும் குற்றத்தைப் புரிவதற்கு வழிவகுக்கும் என்றும், பின்னர் அவர்கள், மேற்கத்திய மாடல் தொழில்மயமாக்கத்தையும், சந்தையால் வழிநடத்தப்படும் வளர்ச்சி மாடலையும் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: மனிதவாழ்க்கையைப் பற்றியும், விநியோகத்தைப் பற்றியும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளிபற்றியும், திறமையாகப் பண்டங்களை உற்பத்தி செய்வதில் சந்தையின் பங்குபற்றியும், கல்வி, உடல்நலம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் அரசாங்கத்தின் பாத்திரம்பற்றியும் பொருளாதாரமேதை ஆடம் ஸ்மித் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்.  (அவரது முக்கியபடைப்பான The Wealth of Nations/1776—ல் வெளியானது).
இந்தப் பாடம் இப்போதும் பொருந்தும் என்று கருதுகிறேன். இதை மேற்கத்திய மாடல் என்று அழைப்பது இதைக் குறைத்து மதிப்பிடுவதாகும். சந்தைப் பொருளாதாரம் என்பது முற்றிலும் மேற்கத்திய நாடுகளின்  கண்டுபிடிப்புஅல்லஎகிப்துக்கும் பாபிலோனுக்கும் இடையே வர்த்தகம் இருந்திருக்கிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோவிலும் வணிக முத்திரைகளைக் காணலாம்.
கேள்வி: ஆனால் அப்போது முதலாளித்துவம் என்பது இல்லையே
பதில்: அது உண்மைதான். ஆனால், முதலாளித்துவம் என்பது ஒரு விநோதமான சொல். ஏழைமக்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விதத்தை  நாம் முதலாளித்துவம் என்று அழைப்போமெனில், அந்தவிதமானஅமைப்பைநான்எதிர்க்கிறேன். இந்த அர்த்த்த்தில், ஆடம் ஸ்மித் பலவகையிலும் முதலாளித்துவ எதிர்ப்பாளராக விளங்குகிறார். மூலதனத்தின் தனிஉடைமையை அவர் ஆதரித்தபோதிலும், பணக்காரர்கள் எப்போதெல்லாம் ஒன்றுகூடுகிறார்களோ அப்போதெல்லாம், ஏழைமக்களை ஏமாற்றுவது எப்படி என்பதுபற்றியே திட்டம்தீட்டுகிறார்கள் என்று  அவர் கருதினார். முதலாளித்துவம் என்ற வார்த்தையை அவர் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. மூலதனத்தின் அளவுக்குமீறிய அதிகாரத்தை அவர் எதிர்த்தார். நானும் அப்படித்தான். கார்ல் மார்க்சும் அப்படித்தான்.
கேள்வி: நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வருவோம். அதன் துணைவேந்தராக முனைவர் கோபா சபர்வால் நியமிக்கப்பட்டதைப் பலரும் குறைகூறுகிறார்கள். அவருக்கு புத்தமத ஆய்வுப் பின்புலம் எதுவும் இல்லை. ஒரு பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு விதித்துள்ள தகுதியும் அவருக்கு இல்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பதில்: அவர் மிகச் சிறந்த துணைவேந்தர். இந்தியாவில் உள்ள சாதிய அமைப்புமுறையை வைத்துப்பார்க்கும்போது, சாதி போன்ற பிரச்சினைகள் எழுவதில் ஆச்சரியம் இல்லை. துணைவேந்தர் பதவிக்கு ஒருவர் பேராசிரியர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்ரீடர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது; நிச்சயம், விரிவுரையாளர் சாதியாக இருக்கக்கூடாது என்று பலரும் சொல்வதில் ஆச்சரியம் இல்லை.
இரண்டாவது, நாளந்தா பல்கலைக் கழகம் புத்தமதஇயல் பல்கலைக் கழகம் அல்ல. பழங்காலத்து நாளந்தா பல்கலைக் கழகமும் அப்படி இல்லை. எனவே, ஒரு புத்தமதத் துறவிதான் அந்தப் பல்கலைக் கழகத்தை வழிநடத்தவேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் அது தவறு. நமக்கு வேண்டுவது அதுவல்ல.
இப்போது புதிய துணைவேந்தராக சிங்கப்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் இயோ வந்திருக்கிறார். திருமதி கோபா சபர்வால் பொருத்தமான துணைவேந்தர் என்றும், அவர் தொடரவேண்டும் என விரும்புவதாகவும் ஜார்ஜ் இயோ பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கோபா சபர்வாலுக்கு எதிரான பிரச்சாரம் முற்றிலும் திட்டமிட்ட ஒன்றாகும்.
கேள்வி: உங்கள் நூலில், ஏகாதிபத்தியம் பற்றிய பழைய புரிதலுக்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற நினைப்பே எப்போதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய இடதுசாரிகளை நீங்கள்  கேலி செய்திருக்கிறீர்கள். அமெரிக்காவுக்கு 130 நாடுகளில் 900 ராணுவதளங்கள் உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை என்று நினைக்கிறீகளா?
பதில்: அமெரிக்கா உலகம் முழுவதும் ஏராளமான ராணுவ தளங்களை வைத்திருப்பது நிச்சயம் சமபலம் அற்ற நிலைதான். அதைப்பற்றிக் கவலைப்படுவது நியாயம்தான். ஆனால், அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பது தவறு. அமெரிக்காவுடன் இந்தியாஅணு ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக, [ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1] ஆட்சியைக் கவிழ்க்க இடதுசாரிக் கட்சிகள் முடிவுசெய்த அந்த வேளையை நான் குறிப்பாக நினைத்துப் பார்க்கிறேன்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருக்கிறதா?  சில வகையில் அது இருக்கிறது. சொற்ப அளவில் இந்திய ஏகாதிபத்தியமும் இருக்கிறது. கொஞ்சம் சீன ஏகாதிபத்தியமும் இருக்கிறது. பிரான்ஸ், இங்கிலாந்து ஏகாதிபத்தியங்களும் கொஞ்சம் இருக்கின்றன. இவற்றைவிட அமெரிக்க ஏகாதிபத்தியம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த்து என்பது உண்மைதான். ஆனால் அந்த ஒரு விஷயம் அவர்களை முழுமையாக ஆட்டிப்படைப்பதால், இடதுசாரிகள் சுதந்திரமாகச் சிந்திக்கமுடியாமல் இருக்கும் ஒரு நிலவரத்தைதான் நான் எதிர்க்கிறேன்.
  இப்போது சீதாராம் யெச்சூரியின் புதிய தலைமையின்கீழ் மார்க்சிஸ்ட் கட்சி வந்திருக்கிறது. இனி அறிவார்ந்த சிந்தனை அதிகரிக்கும் என்று நம்புவோம். நான் மனிதகுலத்துக்கும், சமத்துவத்துக்கும், நீதிக்கும் ஆதரவாக இருக்கிறேன். அறிவாற்றலுக்கும் ஆதரவாக இருக்கிறேன்.

தமிழில்: ஜெயநடராஜன்

Read more...

பசு வருடம் (2015)!

-ஜி.சம்பத்-
சீனர்களுக்கு 2015-ஆம் ஆண்டு செம்மறி ஆட்டு வருடம். ஆனால், அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தியாவுக்கோ பசுவருடமாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 2015ல் தலைப்புச் செய்திகளில் பொருளாதாரமோ, அரசியலோ இடம் பெறவில்லை. அப்படியான முக்கிய இடத்தைப் பெற்றது கலாச்சாரம்தான். 2015ம் ஆண்டின் கலாசார சாராம்சத்தை ‘மாட்டிறைச்சி’, ‘சகிப்பின்மை’ என்ற இரண்டே சொற்களில் சுருங்கச் சொல்லிவிடலாம்.
  2015ல் வாழ்வா-சாவா என்ற விஷயமாகக் கலாச்சாரம் ஆகிவிட்டது. இந்தியாவில் எம்.எம்.கல்பர்கி, முகமது அக்லக், வங்கதேசத்தில் அவிஜித் ராய், ஆனந்த பிஜய்தாஸ், வாஷிகர் ரஹ்மான் ஆகியோர் கொலைசெய்யப்பட்டதைக் ‘கலாசாரக் கொலைகள்’ என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களெல்லாம் கொல்லப்படுவதற்குமுன், பெருமாள் முருகன் தனது எழுத்துலக வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்த ஓர் இலக்கிய மரணமும் நிகழ்ந்தது.
  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி  நிறுவனத்தின் தலைவராகப் பாண்டவர்களில் மிக மூத்தவரான ‘யுதிஷ்ட்ரர்’ [கஜேந்திர செளகான்] நியமிக்கப்பட்டபோது தேசிய அளவில், மற்ற விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு கலாச்சாரம் மீண்டும் முன்னுக்கு வந்தது; அவரது நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பல வாரங்களுக்கு நீடித்தது. இந்தியாவிலுள்ள முதன்மையான கலாச்சார, கல்வி நிறுவனங்களில் இந்துத்வா கொள்கைத் திட்டத்தின்பால் பரிவுகொண்ட காவிச் சிந்தனையாளர்களுக்கு வழியேற்படுத்தித் தரும்பொருட்டு மதச்சார்பற்ற, இடதுசாரி அறிஞர்கள் வெளியேற்றப்பட்டதுபோல், புதுரத்தம் பாய்ச்சுவது போன்ற கலாச்சார யுத்தங்கள் பல துறைகளுக்கும் பரவின. அடுத்து, ‘விருதுகளைத் திருப்பிக் கொடுத்தல்’ என்றழைக்கப்படும் சம்பவமும் நடந்தேறியது. பேச்சுரிமையையும், சமூக நல்லிணக்கத்தையும் சீரழிக்கின்ற சூழலை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் தமக்கு அளிக்கப்பட்ட அரசு விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இதனை ‘உற்பத்தி செய்யப்பட்ட கலகம்’ எனப் புறக்கணிக்க முயன்றபோதிலும், அது ‘சகிப்பின்மை பிரச்சனை’ குறித்த, தேசிய அளவிலான விவாதத்திற்கு வழிகோலியது.
  சகிப்பின்மையின் மையமாக ‘மாட்டிறைச்சி’ விஷயம் இருந்தது என்றாலும், அந்த மையத்தை விட்டு விலகி, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது; காதலர் தினம் கொண்டாடுவது; மதத்திற்கு வெளியே திருமணம் செய்வது, கலாச்சாரக் காவலர்களிடமிருந்து மாறுபட்டு மிக மென்மையாகவேனும் ஒரு கருத்தைச் சொல்வது (இது குறித்து அமீர் கான்/ஷாருக் கான்-ஐக் கேளுங்கள்)—இப்படியாகத்தானே பல எல்லைகளுக்கும் அது பரவி, கலாச்சாரக் காவலர்களின் கோபத்தைக் கிளறியது.
  கலாச்சார யுத்தங்களின் முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருந்த அதே வேளையில் பேச்சுரிமை, கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை என்ற அடிப்படை உரிமைகளை, கலாச்சார சுதந்திரத்தின் அடிப்படை ஆதாரங்களை அரசு ஆக்கிரமிக்க முனைந்தது. எடுத்துக்காட்டாக, 2015 அக்டோபர் மாதம் தமிழக அரசின் காவல்துறை, எஸ்.கோவன் என்கிற நாட்டுப்புறப் பாடகரைக் கைது செய்து, மாநில அரசை விமர்சித்துப் பாடல்கள் பாடியதாக ராஜத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியது. (நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி) 2015ல் மட்டும் தேசிய அளவில் 844 வலைதளப் பக்கங்களை முடக்கி சமூக ஊடகங்களைத் தணிக்கை செய்யும் காட்டுதர்பார் நடந்தேறியது.
  ஆனால், நம்பிக்கையை வற்றடிக்கும் இவ்வாறான நிகழ்ச்சிகள் மட்டுமல்ல; 2015ல் பேச்சுரிமையின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமும் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அபாயகரமான 66-A எனும் பிரிவின் பிடியிலிருந்து அவர்கள் விடுபெற்றனர். ஒரு மின்னணுக் கருவியைப் பயன்படுத்தி (மின்னஞ்சல் போன்று) பரப்பப்படும் ஒரு செய்தி குற்றத்தன்மை பொருந்தியது எனக் கண்டறியப்பட்டால் அச்செய்தியைப் பரப்பியவரை மூன்றாண்டுகள்வரை சிறையில் அடைக்க வழிவகை செய்தது இந்தக் கொடூரமான சட்டப்பிரிவு. 2014-ல் 66-Aன்படி  மொத்தம் 4192 வழக்குகள் பதியப்பட்டன; 2423 பேர் கைது செய்யப்பட்டனர்; 125 பேருக்குக் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது; 42 பேர் தண்டிக்கப்பட்டனர். இவையெல்லாம், இணையத்தின் மூலம் ‘குற்றத்தன்மை’ பொருந்திய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதற்காக. ஆனால், இந்த 2015ம் ஆண்டின்  மார்ச் மாதத்தில் உச்ச நீதி மன்றம் இந்தப் பிரிவை நீக்கியதன் மூலமாக, ஏற்கனவே இந்தப் பிரிவால் தண்டிக்கப்பட்டவர்களும், எதிர்காலத்தில் தண்டிக்கப்பட அதிக வாய்ப்பிருந்தவர்களும் ஆறுதல் அடைந்தனர்.
  ஒரு கட்டத்தில், கலாச்சார வெளிப்பாட்டின் மீதான கட்டுப்பாடுகள் கேலிக்கூத்தான வடிவமெடுத்தன. சமீபத்தில் வெளியான ‘ஸ்பெக்டர்’ (Spectre) என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளைத் தணிக்கை செய்த பஹ்லாஜ் நிஹலானி தலைமையிலான மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் செயல் சமூக ஊடகங்களின் எள்ளல்களுக்கு இலக்கானது. இதனால், பல கட்டுப்பெட்டி வகையறா ஜேம்ஸ் பாண்ட் தொடர்கள் உருவாகிப் பரவின. அதில் ஒன்றில், நீச்சல் உடையணிந்த நடிகை உர்சுலா ஆண்ட்ரெசுக்குப் பதிலாக சேலை சுற்றிய பாண்ட் பெண் இடம் பெற்றிருந்தாள்.
  ‘கோபக்கார இந்தியப் பெண் தெய்வங்கள்’ (Angry Indian Goddesses) என்ற பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பட விஷயத்தில் மத்திய தணிக்கைக் குழு மேற்கொண்ட அறிவுக்குப் பொருந்தாத நடவடிக்கைகளும் கிண்டலுக்குரியனவாய்ப் போயின. சாதாரணமாகத் தகாத வார்த்தைகள்தான் ‘பீப்’ ஒலி மூலம் மறைக்கப்படும். ஆனால், இந்தப் படத்தில் ‘மதிய உணவு’,  ‘சர்க்கார்’, ‘இந்திய வடிவம்’ என்ற பதங்கள்கூட மெளனப்படுத்தப்பட்டன. காளி தேவியின் உருவங்களும் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளில் அடங்கும்.
   2015ம் ஆண்டு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தபோதிலும், சகிப்பின்மை என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கனவே 2013ம் ஆண்டில் திரண்ட, 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பரப்பப்பட்ட , வலதுசாரி அரசின் பட்டவர்த்தனமாய் வெளிப்படாத வஞ்சகப் பார்வையின்கீழ் மண்டிவளர்ந்த போக்குகளின் ஒருங்கிணைந்த வடிவத்தைத்தான் இந்த 2015ல் கண்டோம்.
  ஆயினும், இதற்காக சங் பரிவாரம் வழிநடத்தும் தேசிய ஜனநாயக அணி அரசை மட்டும் நாம் குற்றம் சொல்வது தவறாகும். உலகெங்கும் தாராளமயச் சந்தை ஜனநாயகங்களில் பரவலாகக் காணப்படும் போக்கின் ஒரு பகுதியைத்தான் நாம் இந்தியாவில் கண்டுகொண்டுள்ளோம். இந்தப் போக்கை ஸ்லோவேனியன் சித்தாந்தியான ஸ்லவாஜ் சிசெக் (Slavoj Zizek), ‘அரசியலைக் கலாச்சாரமாக்குதல்’ (culturalisation of politics) என்று குறிப்பிடுகிறார்.
  பொருளாதாரக் கொள்கையின் அரசியல் பிரச்சனைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிபுணர்களிடமும், சர்வதேச வர்த்தக உடன்பாடுகளிடமும் விடப்பட்டுவிட்டதால் ஜனநாயகத் தேசிய அரசியல் போதிய உள்ளடக்கமின்றி வெற்றிடமாகக் கிடக்கும் போக்கு நிலவுகிறது. நீதி, சமத்துவம், சுரண்டலுக்கு முடிவுகட்டுதல்—இப்போது இவையெல்லாம் கண்டிப்பாகக் கருதப்பட வேண்டிய விஷயங்களே அல்ல என்றாகிவிட்ட நிலையில்—ஆகியவற்றுக்காக நடத்தப்பட்ட மரபார்ந்த அரசியல் போராட்டங்களின் இடங்களை, எதைப் பேசவேண்டும்; எதை உண்ண வேண்டும்; எங்ஙனம் உடுத்த வேண்டும்; யாரை மணம் செய்ய வேண்டும் என்கிற கலாச்சாரப் பிரச்சனைகள் ஆக்கிரமித்துள்ளன.
  எங்கெல்லாம் ஜனநாகயக அரங்கத்தில் உண்மையான, அர்த்தபூர்வமான அரசியல் தேர்வு மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தக் கலாச்சாரமயமாக்குதல் பொதுப் போக்காகக் கொழிக்கிறது. அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான [குடியரசுக் கட்சியின்] ட்ரம்ப் (Trump) தொடங்கி, கிரீசின் கோல்டன் டான் (Golden Dawn), பிரான்சின் ஃப்ரண்ட் நேஷனல் (Front National) இன்னபிற இயக்கங்கள் வரை இவ்விரிவான போக்கின் அடையாளங்களாக உள்ளன.
  இந்தியாவில், 2015ல் ஏற்பட்ட பணவீக்கம், குறிப்பாக பருப்பு விலையேற்றம் என்ற திடீர் மாற்றங்கள் பேசப்படவேண்டிய விஷயங்களாக ஆகியிருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டிருந்தால் அது தீவிரமான அரசியல் விவாதத்திற்கு அடிகோலியிருக்கும். சாதிவாரிக் கணெக்கெடுப்பு, சமத்துவம் ஆகியவற்றின் பின்புலத்தில் உணவுப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் குறித்த விவாதமாக அது ஆகியிருக்கும். ஆனால், சாவி கொடுத்து முடுக்கி விட்டவர்களேபோல் சில பரிவாரக் கலகமூட்டிப் பேச்சாளர்கள் கோபமூட்டக்கூடிய எதையேனும் கிளறிவிட்டதும் பொதுமக்களின் கவனம் மீண்டும் கலாச்சாரப் பகுதி நோக்கித் திரும்பியது.
   2015ம் ஆண்டின் இறுதி நாட்களில் சகிப்பின்மைக் கலாச்சார அரசியலின் சீற்றம் பெருகக் கண்டோம். பாரதீய ஜனதாக் கட்சி ஆட்களின் நெருக்கடி காரணமாக புனேயில் ஒரு நவீன திரையரங்கில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படம் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டு ரத்தானதும், ‘மெய்யான சகிப்பின்மை’ என்பது என்ன என்று ஷாருக் கானுக்குக் காட்ட விரும்பிய விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆட்கள், மங்களூரில் அவர் நடித்த ‘தில்வாலே’ திரைப்படத்தைத் திரையிடவிடாமல் தடுத்ததும் அத்தகைய போக்கினுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.
  ஆயினும் அந்த ஆண்டு [2015], நம்பிக்கைக்கு இடமற்ற ஆண்டாக இருந்துவிடவில்லை. பசு வருடத்தில், ஜெய்ப்பூரில் கடந்த [நவம்பர்] மாதம் ஒரு பசு பொம்மை காரணமாக ஏற்பட்ட சிறிய சச்சரவில் ஆச்சர்யப்படத்தக்க வகையில் பசு நேசர்கள் தோற்றது ஒரு வேளை, முக்கியமான சமிக்ஞையாக அமைந்துவிட்டது போலும்.
  இளஞ்சிவப்பு நகரான ஜெய்ப்பூரில், கடந்த நவம்பர் 21ம் தேதியன்று பிரகாசமான காலைப் பொழுதில், ஜவகர்லால் கேந்திரத்துக்கு மேலே, நீலவானில் ஒரு கருப்பு-வெள்ளைப் பசு மிதந்தது. அதற்கு முந்தைய மாதங்கள், 2015ம் ஆண்டு பசுவோடு ‘விளையாடு’பவர்களுக்கு ஒரு மோசமான வருடம் என்று உணர்த்தியிருந்தன.
  ஆயினும், ஜெய்ப்பூர் கலை மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு தைரியசாலியான கலைஞர், வாயு நிரப்பிய ஒரு ‘ஸ்டைரோஃபோம்’ பசுவைக் காற்றில் மிதக்கவிடுவது அவசியம் எனக் கருதினார். கைவிடப்பட்ட பசுக்கள் எங்ஙனம் பிளாஸ்டிக் பொருட்களைத் தின்று மூச்சுத் திணறி மடிந்துபோகின்றன என்பதுகுறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்தக் கலைவடிவம் உருவாக்கப் பட்டிருந்தது. அந்தப் பசு பொம்மை விண்ணில் உயரத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தனர்; பிறரது உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாகக்கூறி, அந்த பசு பொம்மையை நிர்ப்பந்தமாகக் கீழிறக்கினர். அந்தக் கலை உருவாக்கத்துடன் தொடர்புடைய இரண்டு கலைஞர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
  விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நோக்கமெனில், அந்த இரண்டு கலைஞர்களும் கட்டுரை எழுதியிருக்கலாம்; ஓவியங்கள் தீட்டியிருக்கலாம்; அதனைவிடுத்து பசுவைக் காற்றில் பறக்கவிடலாமா என அந்தக் கலைஞர்களுக்குப் போலீஸ்காரர்கள் அறிவுரை பகன்றனர். பின்னர், வானத்தில் பறந்த அந்த ஸ்டைரோஃபோம் பசுவுக்குத் தக்க மாலை மரியாதைகள் செய்யப்பட்டு சிறிய அளவில் பூஜையும் நடத்தப்பட்டது. இத்தோடு கதை முடிந்திருந்தால் அந்த நாள் பசு ராஜ்யத்தின் இன்னொரு வெற்றித் திருநாளாக ஆகியிருந்திருக்கும். ஆனால் அங்ஙனம் ஆகவில்லை.
  துரிதமாய்ச் செயல்பட்ட மாநில அரசு நிர்வாகம், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களை அந்தப் பகுதியிலிருந்து இடம் மாற்றியது. காவல்துறை ஆணையாளர், கலைஞர்களிடம் மன்னிப்புக் கோரினார். ராஜஸ்தானின் பா.ஜ.க. முதலமைச்சர் வசுந்தரா ராஜே இந்த சம்பவம் குறித்து வருந்துவதாக ‘ட்விட்டரில்’ கருத்து வெளியிட்டார். இப்படியாக, இந்த ஒருமுறையேனும் கலை அந்த மூர்க்கத்தனத்தைத் திருப்பி அடித்து விரட்டியது. பசுப்பட்டாளத்தைத் திருப்பியடிக்க ஒரு பிளாஸ்டிக் பசு—இது பொருத்தமான அங்கதம்தான்!
  சீனர்களின் நாட்காட்டியில் 2016 குரங்கு வருடம். இந்தியாவில், புதிய ஆண்டில் எந்த மிருகம் ஆட்சி செய்யப் போகிறதோ, அறியோம். ஆயினும், மீண்டும் அது பசுவாக இராது என்று நம்புவோமாக!
தமிழில்: சந்திரகாந்தன்

(Courtesy: THE HINDU/December 27, 2015/ The Year of the Cow/G.Sampath)

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP