Tuesday, April 22, 2014

பல்லாண்டு பல்லாண்டு-4

பல்லாண்டு பல்லாண்டு-4
திருப்பத்தூர் பாரதி விழா
பி.ச.குப்புசாமி

  ஞாயிற்றுக்கிழமை பாரதி விழா. சனிக்கிழமை வருவதாக ஜெயகாந்தன்
சொல்லியிருந்தார். வியாழக்கிழமை இரவு பூராவும் வையவனும் நானும் விழாவிற்கான
சுவரொட்டிகளை ஒட்டினோம்.  விடியும் நேரம் நெருங்கியபோது, நாலு மணி அளவில், “சரிப்பா .... போய்த் தூங்கலாம்... நல்லா காலைல பத்துமணி வரைக்கும் தூங்குவோம்.... நான் பத்தரை மணிக்கு மேல் வரேன்!என்று வையவன் விடைபெற்றுச் சென்றார்.
  நானும் வீட்டிற்குப் போய்ப்படுத்து அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.
  அதிகாலை ஆறே கால் மணிக்கெல்லாம், வையவன் கூப்பிடுவதாக அம்மா வந்து
எழுப்பினார். எனக்குத் தூக்கக் கலக்கமும் குழப்பமும்! பத்தரைமணிக்குத் தானே வருவதாகச் சொன்னார்! இவ்வளவு சீக்கிரம் எதற்கு வந்து எழுப்புகிறார்!என்று
தெரியாமல் கண்ணைக் கசக்கியவாறே தெரு வாசலை எட்டிப்பார்க்கப் போனேன். எங்கள் உள் வீட்டுக்கும், தெரு வாயிற்படிக்கும் இடையில் அறுபது அடி நீளம், மூன்றரை அடி அகலத்துக்குச் சந்து போல் இருக்கும்.
  அங்கே போய்ப் பார்த்தபோது ஏற்பட்ட ஆச்சரியத்தில் தூக்கமும் சோர்வும் பளிச்சென அகன்றன.
  தெருவாயிற்படியின் நாலடி சதுரக்கடைசிக் கல்லின் மீது வையவனோடு ஜெயகாந்தனும் நின்றிருந்தார்.
  சனிக்கிழமை வருவதாகச் சொல்லியிருந்தவர் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே வந்து நிற்கிறாரே!
  ஓடிப்போய், வணக்கம் சொல்லி, வாங்க ... வாங்க....என்று வரவேற்றேன்.
  திருப்பத்தூர் வருகிற ஒரு பாசஞ்சர் ரயிலில் பிரயாணப்பட்டு வந்து, பொழுது நன்கு விடியும் முன் வெள்ளவாய்க்கால் தெருவிலிருந்த வையவன் வீட்டுக்கு
வழி விசாரித்துச் சென்று சேர்ந்து விட்டிருக்கிறார். அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
  இப்படி முன்கூட்டி வருவார் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
இதில் எங்கள் ஆச்சரியத்தை விட சந்தோஷமே அதிகமாக இருந்தது. சொன்னதற்கு ஒரு நாள் முன்னதாகவே நிகழ்ந்த அந்த வருகை, ஒரு மாபெரும் பரிசுப் பொருளை மறைமுகமாகக் கொண்டு வந்ததைப் போன்ற சங்கேதத்தை உட்கொண்டிருந்தது.
  சென்னையில் பார்த்துவிட்டு வந்து, சில நாட்கள் பிரிவுக்குப் பின்பு, மறுபடியும் அவரைக் கண்களால் காண்பதென்பது, நெடுநாள் பிரிவும் உறவும் ஒத்த உணர்ச்சிகளை உண்டாக்கின.
  அவரை எங்கே தங்க வைப்பது என்று யோசித்தோம்.
  அப்புறம் எங்கள் தெருவுக்கும் வீட்டுக்கும் அருகேயிருந்த, எல்லார்க்கும் அறிமுகமாயிருந்த அந்தக் கால நண்பர் ஒருவரின் அறையில் கொண்டுபோய், தரையில் விரித்த பாயின் மீது அவரை உட்கார வைத்தோம். நண்பர், பிரம்மசாரித் தனிக்கட்டை என்பது தான் அங்கேயிருந்த தொரு பெருஞ்சௌகரியம்! அவர், நேருவை வெறுக்கும் லோகியாவின் சீடர்! அதுதான் அங்கிருந்த ஓர் அசௌகரியம்!
  நண்பர்களுக்குத் தகவல் பறந்து ஒவ்வொருவராக வந்து குழுமினர்.
  அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் இப்பொழுது நான் விவரமாகச் சொல்ல முற்படவில்லை. பின்னால் வரும் அத்தியாயங்களில் தகுந்த இடங்களில் அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்வோம்.
  இப்பொழுது அவர்களை, ஒரு சிறுநகரின், இலக்கியம் மற்றும் மாறுபட்ட அரசியல் கருத்துக்களில் ஆர்வங் கொண்டு, ஆனாலும் இணக்கமாக இயங்கும் ஒரு சிறுகுழு என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம்.
  அவர்கள் எல்லாருமே ஜெயகாந்தனை நேரடியாக இப்போதுதான் சந்திக்கிறார்கள்.
சரஸ்வதியின் கதைகள் அவரை ஓர் அதிசயப் பிறவி போலவே பார்க்க வைத்தன.
அதே நேரத்தில், அனுபவமின்மையால், அவரிடம் எப்படி விசாரிப்பது, என்னவெல்லாம் கேட்பது என்று தெரியாமல் சில அசட்டுக்கேள்விகளைக் கேட்பவர்களாகவும் இருந்தார்கள்.
  கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் பென்சில் சீவுவது போல் இருந்தது.
  கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுபடாத காலம் அது. கேரளாவில், முதல் கம்யூனிஸ்டு ஆட்சியை நேரு கலைத்து விட்ட பாவத்தைத் தோழர்கள் எல்லாரும் வெளியில் பேசிக் கொண்டிருந்த காலம். எங்கள் எல்லாரிலும் மூத்தவரும், உள்ளூர் கம்யூனிஸ்டுமான தோழர் கிருஷ்ணசாமி--எங்களில் அவரைத் தவிர வேறு யாரும் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இல்லை - கேரளா பற்றிப் பிரஸ்தாபித்து அலங்கலாய்த்தார். கம்யூனிஸ்டுகளுக்கே, தாங்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதே நல்லது என்று உள்ளூர ஒரு கருத்து இருந்த உண்மை நிலவரத்தை ஜெயகாந்தன் அவருக்கு எடுத்து ஓதிப்பதிலளித்தார்.
  தமிழாசிரியர் ஒருவர் வந்து, பிற மொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது பற்றியும், தனித்தமிழ் பற்றியும் பிரஸ்தாபித்தார். இவ்வாறான போக்குகளுக்கு எதிரான கருத்து நிலைகள் எங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டிருந்தன. எனவே, இத்தகையோரின் கேள்விகளுக்கு ஜெயகாந்தன் அளித்த விளக்கமான பதில்கள் எங்களால் ஆர்வமாகக் கவனிக்கப்பட்டன.
  ஜோஸப் சைகிளில் போனான்! டயர் பஞ்ச்சராகி விட்டது!! என்பதைத் தனித்தமிழில் எப்படி எழுதுவீர்கள்?” என்று அவர் கேட்ட போதும், குடிக்கிற காபியையும், கட்டுகிற டையையும், கொட்டை வடிநீர்என்றும், “கழுத்துக்கோவணம்என்றும் குறிப்பிடப்படுவதை அவர் கிண்டலடித்த போதும் நாங்கள் அடக்க முடியாமல் சிரித்தோம்.
  குதர்க்கமான கேள்விகளுக்கு அவரது கோபமான எதிர்வினைகள், அவ்வாறானவர்களை வாயடைக்க வைத்தன.
  காலை உணவாகவும் மதிய உணவாகவும் அவருக்கு என்னென்ன வழங்கினோம்,
எவ்வாறு உபசரித்தோம் என்பதெல்லாம் அதிகம் ஞாபகத்தில் இல்லை.
  ஆனால், ஆடம்பரத்தை விரும்புதல், உபசாரத்தில் குறை காணுதல் முதலிய
இடைஞ்சலான பண்புகள் எதுவும் அவரிடம் அறவே இல்லை என்பதை அவர் வந்த முதல் நாளிலேயே அவர் நிரூபித்து விட்டார். சொல்லப்போனால், அதீதமாக உபசரிப்பதைத்தான் அவர் ஒரு தொல்லையாகக் கருதினார்.
  ஒரு சிறிய அறையிலேயே நாள் முழுக்கவும் இரவு பூராவும் அடைபட்டிருக்க
வேண்டாம் என்று, நாங்கள்தான் அன்று மாலை அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி, திருப்பத்தூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கும் அருகில் இருந்த வெங்களாபுரம் என்கிற கிராமத்துக்கு அழைத்துச் சென்றோம்.
  அந்த ஊரில், எங்கள் நண்பர்களில் ஒருவரான மாணிக்கம் இருந்தார், அவர் அப்பொழுது ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர். எழுத்துபத்திரிகைக்கு எங்கள் ஊரில் சந்தா கட்டிய முதல் நபர் அவர்தான். ஆனந்த விகடனில் இராமாஎன்கிற புனை பெயரில் ஒரு கதை கூட எழுதினார். பிற்காலத்தில், திருப்பத்தூரில் பிரபலமானதும் வெற்றிகரமானதுமான பல வியாபார நிறுவனங்களை நடத்துபவராகத் திகழ்ந்தவர் அவர்.
  பல சகோதரர்களைக் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பம் அது. ஒரு பெரிய வாசலில், ஓர் ஓரமாக, நண்பர் மாணிக்கத்தின் படிப்பறையான தனியறை இருந்தது. குயவர் ஓடுகளால் வேயப்பட்ட கூரை கொண்டது அது. அங்கே தங்கியிருப்பதென்பது சுகமாக இருந்தது. அந்த வாணிய சமூகத்து வீட்டின் விருந்தில், சுத்தமான எள்ளெண்ணெயின் ஆட்சி நிலவியது. மாணிக்கத்தின் வயது முதிர்ந்த தாயார் பார்த்துப் பார்த்து உபசரிக்க நாங்கள் பெரிய பெரிய வாழையிலைகளில் உணவருந்தினோம். இரவின் பெரும் பகுதியைப் பேசிப்பேசிக் கழித்தோம். ஜெயகாந்தனைப் பாடவும் வேண்டினோம்.
  இந்தமுறை, சென்னையில் அவர் பாடாத பல புதிய பாடல்களும் சேர்ந்தன. ஆலமரம்.... ஆலமரம்” “முட்டை உடைந்து கண் மொட்டு மலர்ந்த மோனச் சிறுகுருவி”, ”அழுதகண்ணீரும் பாலாகுமா!என்கிற அவரது சொந்தப் பாடல்கள் எங்களுக்கு அறிமுகமாகின. அதிலே, “மனக்குருவிமட்டும் நாங்கள் தாமரையில் பார்த்திருந்தோம்.

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP