இடதுசாரிகளுக்கு அறைகூவல்!
பாரதத்தின் தேர்தல் போர்:
நீங்கள் எந்தப் பக்கம்?
இடதுசாரிகளுக்கு ஓர் அறைகூவல்!
பாரதத்தின் தேர்தல்
போர் உச்ச
கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியத் திருநாட்டின் அடிப்படை
நெறிமுறைகளான மதச்சார்பின்மை,
ஜனநாயகம் ஆகியவற்றைக்
கட்டிக்காக்கவேண்டிய சக்திகளுக்கும்,
அவற்றை எப்படியேனும் குழிதோண்டிப்
புதைத்துவிடத் துடியாய்த்
துடிக்கும் மதவெறி,
எதேச்சாதிகார சக்திகளுக்கும் இடையேதான்
இந்தப் போர்
என்பதில் இருவேறு
கருத்துக்கள் இருக்கமுடியாது.
மதவெறி
சக்திகள், தம்
தீய நோக்கத்தை
ஈடேற்றிக்கொள்ள ஒருமுகமாய்
கச்சைவரிந்து களத்தில்
இறங்கியுள்ளன. அவற்றைத்
தடுத்து நிறுத்தவேண்டிய முற்போக்கு
ஜனநாயக சக்திகளோ
மிக மோசமாய்ப்
பிளவுபட்டு நிற்கின்றன.
ஊர்
இரண்டுபட்டுக் கிடப்பதைப்
பயன்படுத்திக்கொண்டு, ‘ஊழலை
ஒழிக்கிறேன் பேர்வழி’
என்று ஜனநாயகத்தில் நம்பிக்கை
இல்லாத ஆம்
ஆத்மி போன்ற
சில சக்திகள்
சந்துமுனையில் சிந்துபாடத்
தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க.வை
எதிர்ப்பதுபோல் நாடகமாடிக்கொண்டு தேர்தல்
கோதாவில் குதித்துள்ள
அக்கட்சியின் பிரதான
நோக்கம், பா.ஜ.க.-எதிர்ப்பு
வாக்குகளைச் சிதறடிப்பதே
ஆகும்.
துரதிருஷ்டம்
என்னவென்றால், ‘மதச்சார்பற்ற சக்திகளெல்லாம்
ஓரணியில் திரள்வோம்
வாரீர்’ எனும்
காங்கிரசின் அழைப்பை
உதாசீனப்படுத்தும் சில
இடதுசாரிகள், ஆம்
ஆத்மி கட்சிமீது
அளவிலா நேசம்
கொண்டிருப்பதுதான். உங்களுக்கு
சித்தாந்தம்-அரசியல்
நிலைபாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை;
நாங்கள் உங்களோடு
அணிசேரத் தயார்
என அந்த
இடதுசாரிப் பகுதியினர்
யுத்த தந்திரம்
வகுப்பது வினோதமே!
இத்தகு
சூழலில், இந்தத்
தேர்தல் போரில்,
இடதுசாரிகளும் மதச்சார்பற்ற சக்திகளும்
எந்தவிதமான நிலை
எடுக்கவேண்டுமெனெ முற்போக்கு
சிந்தனையாளர்களும், கலைஞர்களும்,
எழுத்தாளர்களும், மனித
உரிமை ஆர்வலர்களும் ஓர்
அறைகூவல் விடுத்துள்ளனர்.
2014 பிப்ரவரி 11-ஆம்
நாள் விடுக்கப்பட்ட அந்த
அறிக்கையின் முழுவடிவம்
தமிழில் இங்கு
தரப்படுகிறது.
இந்த
அறைகூவலை விடுத்தவர்கள்:
கே.என்.பணிக்கர்
(வரலாற்றாசிரியர்), எஸ்.ஜனகராஜன்
(மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப்
டெவெலப்மென்ட் ஸ்டடீஸ்),
சுபாஷ் கட்டடெ
( நியூ சோஷலிஸ்ட்
இனிஷியேடிவ்), சுமி
கிருஷ்ணா (பெண்ணிய
ஆய்வாளர், எழுத்தாளர்),
அனில் பாட்டியா
(பத்திரிகையாளர்), அஞ்சும்
ராஜாபாலி (திரைக்கதை
எழுத்தாளர், ஆசிரியர்),
அருணா புர்தெ
(பெண்ணிய சமூக
ஆர்வலர்), ஹசீனா
கான் (முஸ்லிம்
விமன்ஸ் ரைட்ஸ்
நெட்வொர்க்), இர்ஃபான்
என்ஜினியர் (ஆல்
இண்டியா செக்குலர்
ஃபோரம்), ஜாவெத்
மாலிக் (பல்கலைக்
கழகப் பேராசிரியர்),
கமயானி பாலி
மஹாபால் (பெண்ணிய,
மனித உரிமை
ஆர்வலர்), கண்ணன்
சீனிவாசன் (பத்திரிகையாளர் மற்றும்
ஆராய்ச்சியாளர்), மங்களூரா
விஜய் (எழுத்தாளர்,
சமூக ஆர்வலர்),
மனோகர் எலவர்தி
(பிரஜா ராஜக்கியா
வேதிகே), எம்.கே.பிரசாத்
(கேரள சாஸ்த்ர
சாஹித்ய பரிஷத்),
பிரதீப் எஸ்டீவ்ஸ்
(ஆராய்ச்சியாளர், ஆலோசகர்),
ராம்தாஸ் ராவ்
(பியுசிஎல்-பெங்களூரு),
ராம் புன்யானி
(ஆல் இண்டியா
செக்குலர் ஃபோரம்),
ஆர்.கிறிஸ்டோஃபர் ராஜ்குமார்
(நேஷனல் கவுன்சில்
ஆஃப் சர்ச்சஸ்
இன் இண்டியா),
ரெபெக்கா குரியன்
(வகுப்பு வெறிக்கு
எதிரான சமூக
ஆர்வலர்), ரோஹினி
ஹென்ஸ்மேன் (சுயேட்சையான
ஆய்வாளர், எழுத்தாளர்),
ஷப்னம் ஹஸ்மி
(ஆக்ட் நவ்
ஃபார் ஹார்மனி
அண்டு டெமாக்ரசி),
ஷேக் உபைது
(மனித உரிமை
ஆர்வலர்), உதய்
சந்திரா (அரசியல்
விஞ்ஞானி), உமா
வி.சந்த்ரு
(பியுசிஎல்-பெங்களூரு)
மற்றும் ஜாகீர்
அகமது சயீத்
(நரம்பியல் வல்லுநர்).
அறிவுஜீவிகளின் அறைகூவல்
லோக்சபா தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மோடியும், பாரதீய ஜனதாக் கட்சியும் தோற்கடிக்கப்படுவதை உத்தரவாதம் செய்வதுதான் அனைத்து இடதுசாரி இயக்க மற்றும் வகுப்புவாத எதிர்ப்பு இயக்கச் செயல்வீரர்களின் முழுமுதல் கடமையாகும்.
மோடியின்
அரசியல்:
மோடியின் அரசியல் பாசிசத் தன்மைகொண்டது என்று வகைப்படுத்தினாலும் வகைப்படுத்தாவிட்டாலும், நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்கள், மத்தியில் நிஜமாகவே பாசிச அபாயம் வராமல் தடுப்பதற்கான வாய்ப்பு என்ற பார்வை கொண்டிருந்தாலும் கொண்டிருக்காவிட்டாலும்
அவர் [மோடி] ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஜீவாதார உரிமைகளும் சட்டத்தின் ஆட்சியும் மிதிபட்டு துவம்சமாகிவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
தற்போது, குஜராத் வழக்குகளில் தன்மீது குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமலிருப்பதை
உறுதிசெய்யவும், தீஸ்தா செடல்வாட் (Teesta Setalvad) மற்றும் பிற சமூக சமூக ஆர்வலர்கள்மீது பொய்வழக்குகளைப் புனையவும் குஜராத் அரசு எந்திரத்தை அவர் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார். அரசு எந்திரத்தின்மீதான அவரது ஒட்டுமொத்த ஆதிக்கம், சொந்த விவகாரங்களில்கூட அதனைப் பயன்படுத்துதல் ஆகியவை ஸ்னூப்கேட் ஊழல்மூலம் அம்பலமாகியுள்ளது. லோக் ஆயுக்தாவைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் பொருட்டு, மக்களின் பணம் கோடிக்கணக்கான ரூபாயை அள்ளித்தெளித்து செலவிட்டதன்மூலம் தன்னிலிருந்து சுயேட்சையாக இயங்கத்தக்க எந்த அமைப்பையும் நிர்மூலமாக்குவதற்கு அவர் கங்கணம்கட்டிச் செயல்படுபவர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவரது ஜம்பம் சாயவில்லை.
அவர் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டால், தன்மீதும், அமீத் ஷா மீதும், இந்துத்வா பயங்கரவாதிகள் மீதும் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் மூடுவிழா காணுதல், அவர்களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருப்பவர்களையும்,
அவரை ஏதாவதொரு வகையில் எதிர்த்துப்பவர்களையும்
நசுக்கி அழித்தல், நாடுதழுவிய வகையில் அரசு எந்திரத்தின்மீதான தனது கொடும்பிடியை இறுக்குதல், நீதித்துறை உட்பட அனைத்து சுயேட்சையான அமைப்புக்களையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருதல் ஆகியவைதான் அவரது முதல் வேலையாக இருக்கும்.
ஊர்
இரண்டுபட்டால்…
மதச்சார்பற்ற கட்சிகள் (தேசிய அளவிலும், மாநிலங்களிலும்) மோசமானவகையில் இரண்டுபட்டு கிடப்பதும், ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக முரணி நிற்பதும்தான் இத்தகைய நிலைமை நம் முன்னால் பூதாகாரமாக நிழலாடுவதற்கான காரணங்களாகும். சமூக தளத்திலும், அரசியல் அரங்கிலும் பா.ஜ.க.வை முழுமூச்சுடன் எதிர்க்கின்ற சக்திகள், தமக்குள்ளாகவே பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்துக்கொள்ளும் நிலை உத்திரப்பிரதேசத்தில்
காணப்படுவதுபோல் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது; இது அதிர்ச்சியூட்டத்தக்கவகையில்
அரசியல் தப்புக்கணக்காக முடிந்துவிடக்கூடும்.
காங்கிரஸ்
உள்ளிட்ட அணி:
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்தாமல், மோடி ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்த இயலாது; இதை சாதிப்பதற்கான ஒருவழி, காங்கிரஸ் உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தனிநபர்களையும் கொண்ட தேர்தல் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்குப் பணியாற்றுவதாகும். கடுமையான போட்டி அரசியலின் விளைவாக (எடுத்துக்காட்டாக, ஐக்கிய ஜனதா தளத்துக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் ஏற்பட்டுள்ளதுபோன்ற நிலையால்) தேர்தல் அணி அமைக்கும் சாத்தியம் இல்லாமல் போனாலும், இருகட்சிகளுக்குமே பயனளிக்கும் வகையில் சம்பிரதாயபூர்வமற்ற தொகுதி உடன்பாடுகளை செய்துகொண்டால், ’சில தொகுதிகளில் மட்டுமே போட்டி-அதிகமான தொகுதிகளில் வெற்றி’ எனும் நிலை ஏற்பட வழியேற்படும். இப்படிப்பட்ட கூட்டணி சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்டிருக்குமேயானால், அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அது வெற்றிவாகை சூடியிருக்கும்.
கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு
வார்த்தை:
காங்கிரஸ் உள்ளிட்ட
கூட்டணியை ஏறத்தாழ
இடதுசாரிகள் அனைவரும்
ஒட்டுமொத்தமாக மறுதலிக்கின்ற
நிலை, 1930களின் தொடக்கத்தில், நாஜிகளால்
ஏற்பட்டிருந்த அபாயத்தை
கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஜெர்மன் கம்யூனிஸ்டுகள், சமூக
ஜனநாயகவாதிகளைக் குறிவைத்துத்
தாக்கிக் கொண்டிருந்ததைத்தான் நினைவூட்டுகிறது. காங்கிரசையும் பா.ஜ.க.வையும் ஒரே
நிலையில் வைத்துவிட்டு,
'மூன்றாவது அணி'
அமைத்தே தீருவது
எனும் நிலையை
அவர்கள் மேற்கொள்வது,
நாஜிகளுக்கு எதிரான
சக்திகளைப் பிளவுபடுத்தி அதிகாரத்தை இட்லர் கைப்பற்றுவதற்கு வழிவகுத்த 'சமூக பாசிசம்'
(social fascism) எனும் தற்கொலைத்
தத்துவத்தைதான் நினைவூட்டுகிறது.
பிழைகொண்ட ஜனநாயகத்தில் நவ-தாராளமயத்தை (neo-liberalism) எதிர்த்துப் போராடுவது
கடினமென்றாலும் அதற்கு
இன்னும் சாத்தியமுண்டு;
ஆனால், பாசிச ஆட்சியிலோ தொழிற்சங்கத்தினர்,
தகவல் அறியும்
சட்டத்தைக் கையாண்டு
பயனுறச்செய்பவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இன்னபிறர் என
இன்று போராடிக்கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும்
‘சிறைவாசம் அல்லது சாக்காடு’
எனும் நிலைதான்
ஏற்படும்.
மதச்சார்பற்ற வேட்பாளர்கள் பிளவுபட்டு
நிற்கும் நிலையில்,
மோடிக்கு எதிரான
மதச்சார்பற்ற வேட்பாளர்களில் எவர் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும்
வாய்ப்பு பெற்றுள்ளாரோ
அவருக்கே வாக்களித்தல்
எனும் போர்த்தந்திரத்தை வாக்காளர்கள் வகுத்துச் செயல்படவேண்டும்.
மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிராகத்
தீவிரமான பிரச்சாரத்தை
முடுக்கிவிடுவதும், அவர்களுக்கு
எதிராக மதச்சார்பற்ற
தேர்தல் அணியை
உருவாக்குவதும் இன்று
அவசர அவசியமாகும்.
ஆம் ஆத்மியின் பங்கு:
இந்தப் பின்னணியில், ஆம்
ஆத்மி கட்சி
(ஆ.ஆ.க.)
யின் பங்கு
என்ன? தேர்தலில் மோடியையும் பா.ஜ.க.வையும் வீழ்த்துவதற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது
ஆ.ஆ.க.
எனும் காரணம்
காட்டி அந்தக்
கட்சியில் இணைகிற
அல்லது அதனை
ஆதரிக்கிற இடதுசாரியினரும் மதவெறிக்கு எதிரான செயல்வீரர்களும் வினோதமான புதிரை எதிர்நோக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்த நோக்கத்தை சாதிப்பது
எங்ஙனம்? ஆ.ஆ.க.
தனது சொந்த
பலத்தில் மத்தியில்
ஆட்சி அமைப்பது
ஒரு வழி-ஆனால் எதார்த்தத்தில் இதற்கான வாய்ப்பு இல்லை.
பா.ஜ.க.
வை விலக்கிய
மத்திய கூட்டணி
ஆட்சியில் அக்கட்சி
ஓர் அங்கமாக
ஆகுதல் மற்றொரு
வழி-ஆனால், அத்தகைய கூட்டணியை ஆ.ஆ.க.
பகிரங்கமாகவே நிராகரித்துவிட்டது.
மூன்றாவது வழி-பா.ஜ.க.வுக்குப் போய்விடக்கூடிய வாக்குகளையும் இடங்களையும் வெல்வதன்மூலம்,
பா.ஜ.க.
ஆட்சி அமைக்க
இயலாமல் செய்துவிடுவது.
இது முற்றிலும்
சாத்தியமானது; உண்மையில்
டெல்லியில் இதுதான்
நடந்தது.
ஆ.ஆ.க.வுக்கு வாக்காளிக்காத
பட்சத்தில் பா.ஜ.க.வை ஆதரிக்கக்கூடிய வாக்காளர்கள் என்பவர்கள் யார்?
குஜராத்தில் படுகொலைகளை
நிகழ்த்துவதற்குத் தலைமைதாங்கியவர்
(அதில் அவர்
எப்படிப்பட்ட பாத்திரம்
வகித்தார் என்பது
அவர்களுக்குத் தெரிந்தாலும்,
தெரியாவிட்டாலும்) பிரதமராவதைப்
பற்றிக் கவலைப்படாதவர்கள்தான் அவர்கள்
என்று விளக்கலாம்.
இங்குதான் ஆ.ஆ.க.
ஆதரவாளர்களும் பா.ஜ.க.
ஆதரவுப் பகுதியினரும்
அதே ஆட்களாக
உள்ளனர்.
ஆனால், இந்த வாக்காளர்கள்
தம் நிலையில்
மாறக்கூடியவர்கள். தனது
தேர்தல் பிரச்சாரத்தின்போது,
முசாஃபர் நகரில்
நடந்த வன்முறைகுறித்து அக்கட்சி ஒரேயொரு அறிக்கை
வெளியிட்டதுதான் தாமதம்-தெற்கு டெல்லியின்
புறநகர் மாவட்டங்களில்
வலிமையான வாக்கு
வங்கியாக இருக்கக்கூடிய
ஜாட் சமுதாயத்தைச்
சேர்ந்த பெரும்பகுதியினர்,
பா.ஜ.க.வை ஆதரிக்கத்
துணிந்துவிட்டனர். வேறு
வார்த்தைகளில் சொல்வதானால்,
ஆ.ஆ.க.
அதிகமாக மதவெறிக்கு
எதிரான அறிக்கைகளை
வெளியிடும்போதும் அல்லது
இடதுசாரி சார்பு
நிலைகளை மேற்கொள்ளும்போதும்,
அக்கட்சி குறைந்த
அளவுக்கே பா.ஜ.க.வுக்கு அச்சுறுத்தலாகிறது.
பா.ஜ.க.-எதிர்ப்பு வாக்குகள் சிதறும் அபாயம்:
இவ்வாறாக, மோடியைத் தோற்கடிக்கும்
நோக்கில் ஆ.ஆ.க.வில் இணையும்
ஜனநாயக ஆதரவு
மற்றும் வகுப்புவெறி
எதிர்ப்பு ஆர்வலர்களின்
நடவடிக்கைகள் தர்க்கரீதியில் தவறானவை; ஏனெனில், அவர்தம் தலையீடானது, வலதுசாரி
ஆ.ஆ.க.
ஆதரவாளர்கள் மோடிக்கு
உதவிசெய்யும் வகையில்
பா.ஜ.க.வை நாடி
ஓடவே வழிவகுக்கிறது.
தற்போதைய நிலையில்
மோடியையும் பா.ஜ.க.வையும் தோற்கடிக்க
ஆ.ஆ.க.
உதவப்போகிறதா அல்லது
அவர்கள் ஆட்சிக்குவர
வழிவகுக்கப் போகிறதா
என்பது தெளிவாகப்
புரியவில்லை. மோடியை
இதுகாறும் ஆதரித்துவந்த
நகர்ப்புற மத்தியதரவர்க்கத்தினருக்கு ஆ.ஆ.க.வின்பால் ஈர்ப்பு
ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது;
ஆயினும், காங்கிரஸ் மற்றும் பகுஜன்
சமாஜ் வாக்குகளில்
பெருமளவுக்கு சரிவினை
ஏற்படுத்தியுள்ளது அக்கட்சி
என்பதை டெல்லி
தேர்தல் முடிவு
உணர்த்துகிறது. ஆ.ஆ.க.
போட்டியிடத் திட்டமிட்டுள்ள உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம்:
அங்கே, பா.ஜ.க.
வாக்குகள் ஸ்திரப்படுத்தப்பட்ட நிலையில், மதச்சார்பற்ற வாக்குகள்-சமாஜ்வாதிக்கட்சி, பி.எஸ்.பி.,
காங்கிரஸ், ஆ.ஆ.க.
என்று பிரியும்
நிலையில், பல இடங்களில் பா.ஜ.க.
வெற்றிபெறுவதற்கு உதவுவதாகவே
ஆ.ஆ.க.
செயல்பாடு அமையும்.
நெறிப்படுத்த முடியுமா ஆ.ஆ.க.வை?
ஆ.ஆ.க.
ஓர் இடதுசாரி-மத்தியத்துவ வெகுஜனக்
கட்சியாக உருவாகும்பட்சத்தில் அதில் இணைவது அர்த்தமுடையதாக இருக்கலாம்; ஆனால், மிக அண்மைக்காலத்தில் அது
நிகழ்வதற்கான சாத்தியக்கூறு
இருப்பதாகத் தோன்றவில்லை.
காஷ்மீர் குறித்த
பிரஷாந்த் பூஷனின்
அறிக்கை மிக
மிக மென்மையானது-இந்தியாவின் ஒரு
பகுதியாக அது
இருக்கவேண்டுமா என்பது
குறித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று அவர்
கூறவில்லை; உள்நாட்டுப் பாதுகாப்புக்காக அங்கு
ராணுவத்தை நிறுத்தவேண்டுமா என்பது குறித்துதான் அவ்வித
வாக்கெடுப்பு தேவை
என்று கூறினார். இருப்பினும், ‘தேசப்பாதுகாப்பு’ எனும்
பிரச்சனையை எழுப்பி
அக்கருத்தை உடனடியாக
மறுதலித்தார் அர்விந்த்
கெஜ்ரிவால்.
ஆப்பிரிக்கப் பெண்களைக் குறிவைத்து
இனவெறி வன்முறைக்
கும்பல் தாக்குதல்
நடத்தியதில்
[டெல்லி மாநில]
சட்ட அமைச்சரான
சோம்நாத் பாரதி
பங்கேற்றது குறித்து
அந்தப் பெண்களிடம்
மன்னிப்பு கோரவேண்டுமெனவும்,
இனவாதக் கருத்துக்களை
வெளியிட்டதிலிருந்து
கட்சி விலகி
நிற்கவேண்டுமென்பதை வலியுறுத்தியும் யோகேந்திர யாதவ் தலைமையில்
நடைபெற்ற ஆ.ஆ.க.தேசியக் கவுன்சில்
கூட்டத்தில் அந்தக்
கட்சியின் நிறுவன
உறுப்பினர் மது
பாதுரி ஒரு
தீர்மானத்தை முன்மொழிய
முயற்சிசெய்த போது
அவருக்கு எதிராகக்
கூச்சல் எழுப்பப்பட்டு,
அவரிடமிருந்த ‘மைக்’
பறிக்கப்பட்டது. பூஷன்,
பாதுரி போன்ற
மூத்த தலைவர்களாலேயே
ஆ.ஆ.க.வின் நிலைபாடுகளை
நெறிப்படுத்த இயலவில்லையெனில், அதனைத்
தம்மால் செய்யமுடியும்
என்று புதிதாக
அக்கட்சிக்கு வந்தவர்கள்
எப்படி நம்பிக்கை
கொள்ள முடியும்?
அந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோராமல் இருந்தது
ஒருபக்கம் இருக்க,
சம்பந்தப்பட்ட ஆப்பிரிக்கப்
பெண்கள் தமக்கு எந்த
போலிசார் பாதுகாப்பு
அளித்ததாகச் சொன்னார்களோ
அவர்களைப் பணி
இடை நீக்கம்
செய்யவேண்டுமென வலியுறுத்தி
தர்ணா போராட்டத்தில்
இறங்கவும் செய்தார்!
‘விபச்சாரமும் போதை மருந்துக்
கடத்தலும்’ தான் வன்புணர்ச்சிக்குக் காரணம்
என்ற கெஜ்ரிவாலின்
வாதம், ஊழல்தான் வன்புணர்ச்சிக்கு வழிகோலுகிறது
என்றும், ஷீலா தீட்சித் இடத்துக்கு
கெஜ்ரிவால் வரும்போது
அதெல்லாம் மறைந்துபோகும்
என்றும் தம்பட்டமடிக்கும் ஆ.ஆ.க.வின் சுவரொட்டியைத்தான் நினைவுபடுத்துகிறது: இது,
மனதை சங்கடப்படுத்தக் கூடியவகையில் பாலியல் பலாத்காரத்துக்கு அளிக்கப்படும் விளக்கவுரை! தேர்தல்
ஆதாயத்துக்காக, அதன்
காரணங்களை அறிந்துகொள்ளும் திறனற்ற கருத்து!
ஆ.ஆ.க.வில் வலதுசாரிகள்:
ஆ.ஆ.க.வின் மற்றொரு
தலைவரான குமார்
விஷ்வாஸ், இனவாத மற்றும் பாலியல்
அடிப்படையிலான கருத்துக்களை
வெளியிட்டமைக்காக அடிக்கடி
பத்திரிகையில் அடிபடுகிறார்;
உண்மையில், ‘கறுப்பு அவலட்சணம்-வெளுப்பு அழகு’
எனும் அவரது
கருத்து, ஆண்களுக்கான பாலுணர்வு கருவிகளாக
அவர்களைத் தாழ்த்துவது
மட்டுமின்றி, அவரது
மனதில் ஆழமாக
உறைந்துகிடக்கும் மேல்
ஜாதி சார்புத்தன்மையையும் அம்பலமாக்குவதாக அமைந்துள்ளது. வகுப்புவாத,
வெறியுணர்வுமிக்க, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான,
திருநங்கைகள்
போன்றோரைப்பற்றிய நையாண்டிகளிலும் ஈடுபட்ட அவர்,
பாப்ரிமசூதி இருந்த
இடத்தில் ராமர்கோயிலைக்
கட்டவேண்டுமென்பது ‘ஒவ்வொரு
இந்தியனின்’ விருப்பம்
என்று ட்வீட்
செய்ததுடன், மோடியைப்
புகழ்ந்தும் தள்ளியிருக்கிறார்.
இத்தகைய கருத்துக்களில் சிலவற்றுக்காக நேர்மையற்ற மன்னிப்பை
அவர் கேட்டிருந்தாலும்,
அவரது அணுகுமுறையில்
எந்தவொரு மாற்றத்தையும்
அது ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், உத்திரப்பிரதேசத் தேர்தல் களத்தில் பிரதானமாகக்
காட்சிதரும் அவர்,
பலசமயம் கெஜ்ரிவாலின்
பின்புலத்தில் காணப்படுகிறார்.
டெல்லி மாநிலத்தில் ஆட்சியில்
இருந்த காலத்தின்
முதல் பத்து
நாட்களில் ஆ.ஆ.க.
செய்த சாதனைகளில்
ஒன்றாக அது
தம்பட்டமடித்துக் கொள்வது,
பா.ஜ.க.வினால் குறிவைத்து
தாக்கப்படுகிறவர்களான வங்கதேசத்திலிருந்து ஊடுருவல்
செய்து டெல்லியில்
தங்கியிருப்போரைப்பற்றி ஒரு குறும்பட்டியல் தயாரித்தமையாகும். (இவ்வாண்டு ஜனவரி
26-ஆம் தேதிவரை
அவர்களது இணைய
இதழில் இந்த
விஷயம் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து எதிர்ப்பு
கிளம்பியதும், அது
ஒன்றும் எங்களின்
அதிகாரபூர்வமான கருத்து
அல்ல; மாறாக, சில உறுப்பினர்களின் விருப்பப்படியே இடம் பெற்றது
என்ற அர்த்தம்
தொனிக்கும் வகையில்
அந்த செய்தி
அவர்களது இணைய
இதழிலிருந்து நீக்கப்பட்டது.)
மோசமான ஊழலில் இறங்கவல்ல கட்சி:
ஆ.ஆ.க.
ஆட்சியிலிருந்த குறுகிய
காலத்தில், அது எடுத்துக் காட்டிய
விஷயங்கள்: ‘மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம்’
என்பதில் மனித
உரிமைகளுக்கு இடமில்லை;
அது சட்டத்தின்
ஆட்சியுமல்ல; மாறாக,
பெரும்பான்மைக் கும்பலின்
ஆட்சியே அது
என்பது அவர்களின்
பார்வை. வாக்குகளை அள்ளவும், பிரபலமடையவும் நலிவுற்ற மக்களுக்கு
எதிராக வஞ்சனை
உணர்வையும் வன்முறையையும்
ஏவுதல் என்கிற
மோசமான ஊழலில்
இறங்கவல்லது அந்தக்
கட்சி என்பதையும்
நிரூபித்துள்ளது.
அதனுடைய அரசியல், நடுத்தர வர்க்கத்திலுள்ள வலதுசாரிப் பகுதியினரை ஈர்க்கவல்லதாக
இருப்பதால்தான் பா.ஜ.க.வுக்கு அது
ஓர் அச்சுறுத்தலாக
உள்ளது. இந்த மக்கள் பகுதியினரை
ஈர்க்கும் வகையில்தான்
அதன் கொள்கைகள்
மிக ஜாக்கிரதையாக
வெளிப்படுத்தப்படுகின்றன: வகுப்புவாதத்துக்கு எதிரான நிலை எடுக்க
அது மறுக்கிறது; தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலை
எடுக்கவும் மறுக்கிறது.
(எடுத்துக்காட்டாக, அரசாங்கத்தின்
கதையை அப்படியே
ஒட்டுமொத்தமாக ஏற்று, [தொழிலாளர்களை நோக்கி], ‘கம்பெனி நிர்வாகியை உயிருடன் எரித்தவர்களல்லவா
நீங்கள்?” எனச் சொல்லி, மனேசாரில் உள்ள
மாருதி சுசுக்கி
தொழிலாளர்களின் போராட்டத்தை
ஆதரிக்க மறுத்த அக்கட்சி, தேசிய
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் விளைவாக விவசாயத்
தொழிலாளர்களின் கூலி
அதிகரித்துவிட்டதாகவும் அதன் விளைவாக
அவர்களுக்கு வேலைகொடுக்கும் விவசாயிகளுக்குப் பிரச்சனைகள் ஏற்படுத்துவதாகவும் சங்கடப்பட்டிருக்கிறது; மக்களிடையே நிலவும்
பாலியல் சமத்துவமற்ற
அணுகுமுறைகளை அது
ஏற்று நிற்கிறது.
(எடுத்துக்காட்டாக, ‘காப்’
கட்டபஞ்சாயத்துக்கள் படுமோசமான
ஆண் ஆதிக்கத்தன்மை
கொண்டவை என்கிற
உண்மையையும் அலட்சியப்படுத்திவிட்டு அத்தகு
ஜாதிப் பஞ்சாயத்துக்களை அது நியாயப்படுத்துகிறது).
ஆ.ஆ.க.விடமிருந்து எட்ட நில்லுங்கள்:
இதிலிருந்து எட்டப்படும் முடிவு
என்னவாக இருக்குமெனில்,
நடைபெறவுள்ள தேர்தலில்
மோடியைத் தோற்கடித்தேதீரவேண்டும் என்பதில்
தீவிரமாக உள்ள
இடதுசாரி இயக்க
செயல்வீரர்களும் வகுப்புவெறிக்கு எதிரான ஆர்வலர்களும் ஆ.ஆ.க.விடமிருந்து தள்ளி
நிற்கவேண்டும்; அதற்கு
ஆதரவாகப் பிரச்சாரம்
செய்வதைத் தவிர்க்க
வேண்டும். (ஏனெனில், அவர்களுக்கு அளிக்கும்
ஆதரவு என்பது,
பா.ஜ.க.வுக்கு எதிரான
வாக்குகளைச் சிதறடித்தும்,
ஆ.ஆ.க.வில் உள்ள
வலதுசாரி ஆதரவாளர்கள்
பா.ஜ.க.
வுக்கு வாக்களிக்க
வழிசெய்தும் பா.ஜ.க.வுக்கு உதவுவதாகவே
அமையும்); குறிப்பிட்டதொரு தொகுதியில், ஆ.ஆ.க.
வேட்பாளர் மட்டுமே
மதச்சார்பற்ற வேட்பாளராக
இருக்கும் பட்சத்தில்,
பா.ஜ.க./தேசிய ஜனநாயக
அணி
(என்.டி.ஏ)
யை வீழ்த்துவதற்கான சிறந்த வாய்ப்பை அவர்
கொண்டிருக்கும் பட்சத்தில்
அந்தத் தொகுதியில்
அவருக்கு வாக்களிக்கவேண்டும்.
முதல் பணி-பா.ஜ.க.வை முறியடிப்பதே:
ஆ.ஆ.க.வில் ஏற்கனவே
சேர்ந்துள்ளவர்கள், அந்தக்
கட்சியை இடதுசாரி
திசைவழிக்குக் கொண்டுசெல்லும் வகையிலும், பெண்களின் பிரச்சனைகள்
போன்ற இன்ன
பிற பிரச்சனைகளிலும் உணர்வூட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளத்
தேர்தல்களுக்குப் பின்னர்
நல்ல அவகாசம்
கிடைக்கும்; தற்போது
அதற்கு நேரமில்லை.
மோடிக்கு எதிராகவும்,
பா.ஜ.க.வுக்கு எதிராகவும்
பிரச்சாரம் மேற்கொள்ளுதல்,
பரந்துபட்ட மதச்சார்பற்ற
தேர்தல் அணியை
உருவாக்கப் பணியாற்றுதல்,
பா.ஜ.க.வுக்கு எதிராகப்
போர்த்தந்திரம் வகுத்து
வாக்களிக்க ஏற்பாடு
செய்தல் ஆகியவைதான்
இப்போது முன்னுரிமை
கொடுத்து செயல்படுத்தவேண்டிய விஷயங்கள். தமிழில்: விதுரன்
0 கருத்துரைகள்:
Post a Comment