Sunday, June 8, 2014

மோடிக்கு ஆறு கேள்விகள்


நரேந்திர மோடிக்கு
ஆறு கேள்விகள்
 -ஷம்சுல் இஸ்லாம்-
  [நரேந்திரபாய் தாமோதர்தாஸ் மோடி அவர்கள், இந்தியாவின் 15-வது பிரதமராக 2014 மே 26-ஆம் நாள் பதவிப்பிரமாணம் செய்விக்கப்பட்டுள்ளார்.
  தனது சொந்த மற்றும் பொதுவாழ்வில் பல விஷயங்களை மூடி மறைத்துள்ளதாக அவர்மீது விமர்சனக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. ஆனால், ஒரு விஷயத்தில் அவர் எந்த முகமூடியும் அணியாமல் அரசியல் அரங்கில் செயல்பட்டு வந்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்துடன் அவருக்குள்ள தொடர்பே அது. தான் ஆர்.எஸ்.எஸ்.-ஆல் பயிற்றுவிக்கப்பட்டதொண்டர்என்பதையோ, ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாகபுரியிலிருந்து வரும் உத்தரவுகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தும்விசுவாசிஎன்பதையோ அவர் என்றுமே மறைத்ததில்லை.
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சார உத்திகள் தொடங்கி, வெற்றிக்கனியைப் பறித்து நாகபுரித் தலைவர்களின் காலடியில் சமர்ப்பிக்கும் வரை, அமைச்சரவை உருவாக்கம் முதல், இலாகாக்கள் ஒதுக்கீடுவரை, விடுக்கும் அறிக்கைகள், வெளியிடப்படும் பிரகடனங்கள் உள்பட சகலமும் சங்கின் உத்தரவின்றி அணுவும் அசையாது என்பதில் தெளிவாக இருக்கிறார் மோடி.
  ஆனால், இந்த சஷணத்திலிருந்து மோடி அவர்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது, அவர் கோடானுகோடி இந்தியர்களின் பிரதமர்; சங்கப்பரிவாரத்தின் பிரதமர் அல்ல என்பதை. அதனை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்பதை நாடு அறிந்துகொள்ள, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு ஜீவாதாரமான ஆறு கேள்விகளை அவர்முன் வைத்திருக்கிறார் கல்வியாளர் ஷம்சுல் இஸ்லாம்.
   ஷம்சுல் இஸ்லாம் நாடறிந்த நாடக ஆசிரியர்; கல்வியாளர். டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சத்யவதி கல்லூரியின் அரசியல் விஞ்ஞானத் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘நரேந்திர மோடிக்கு ஆறு கேள்விகள்’ (Six Questions for Narendra Modi) எனும் தலைப்பில் மே 10, 2014 தேதியமெயின்ஸ்ட்ரீம்ஆங்கில வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது:]
  ரசியல்சட்ட ரீதியாக ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சோஷலிசம், நீதி ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய தேசத்தை ஆட்சிபுரியக் கனவுகொண்டிருக்கிறார் பிரதமருக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் நரேந்திர மோடி. 
  இருப்பினும், இந்தியத் திருநாட்டின் மேற்கூறப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்கும், இந்துத்வா அரசியலின் மிகவும் பிரபலமான ஆதரவு அமைப்பான ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தினால் (ஆர்.எஸ்.எஸ்) கட்டுப்படுத்தப்பட்டு, அதன் உத்தரவுகளால் இயக்கப்படுகின்ற மோடியின் உலகப் பார்வைக்குமிடையே தீவிரமான மோதல் நிகழத்தான்போகிறது.
  தன்னை ஆர்.எஸ்.எஸ்-ன் உறுப்பினர் என்று பகிரங்கமாக மோடி ஒப்புக்கொள்வதால் இது மிகவும் முக்கியமானதொரு விஷயமாகிறது. ஜனநாயக-மதச்சார்பற்ற இந்தியாவின் அனைத்து அடிப்படைக் கோட்பாடுகளையும் வெறுத்தொதுக்குகிற, இழிவுபடுத்துகிற அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  இந்த இருவேறு நிலைகளில், தான் எந்தப்பக்கம் இருக்கிறோம் என்பதை நாடு நன்கறியும் வகையில், [இங்கு முன்வைக்கப்படுகிற] ஆறு முக்கியமான கேள்விகளுக்கு நரேந்திர மோடி உடனடியாக பதில்கூற வேண்டியது அவசியம்.
  கேள்வி-1: நம் தேசியக் கொடியாம் மூவர்ணக்கொடியை அவமதிக்கிற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.. இருப்பினும் நமது மூவர்ணக் கொடியை மதித்துப் போற்றுகிறாரா மோடி?
 கேள்விக்கான காரணம்: இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்துக்கு ஒரு நாள் முன்னதாக (ஆகஸ்ட் 14, 1947) வெளிவந்த ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (Organiser) பத்திரிகை, இந்தியாவின் புதிய தேசியக் கொடியின்மீது பின்வருமாறு வெறுப்பைக் கக்கியிருந்தது:
  “விதிவசத்தால் ஆட்சிக்கட்டிலில் ஏறியவர்கள், நம் கரங்களில் இந்த மூவர்ணக்கொடியைச் சேர்ப்பிக்கக்கூடும்; ஆனால், ஒருபோதும் அதனை ஹிந்துக்கள் ஏற்கவும் மாட்டார்கள்; அங்கீகரித்து ஏற்கவும் மாட்டார்கள். [இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தியிருக்கிறதுஆர்கனைசர்பத்திரிக்கை]. மூன்று எனும் சொல்லே தீமைபயக்கக்கூடியது; மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடி நிச்சயம் உளரீதியில் படுமோசமான விளைவை ஏற்படுத்தும்; நாட்டின் நலனுக்குக் குந்தகம் விளைவித்துவிடும்என்கிறது அந்த ஏடு.
  கேள்வி-2: ஜனநாயகத்தை எதிர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அப்படி இருந்தாலும், ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவரா மோடி?  
 கேள்விக்கான காரணம்:  அரசியல் சாசனரீதியில் இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு. ஆனால், இதனை மிகக் கடுமையாக எதிர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பது அந்த அமைப்பின் மிகப் பிரபலமான தத்துவப்பிதாமகரான குரு கோல்வால்கரின் பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும். 1940-ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த 1350 முக்கியமான ஊழியர்கள் மத்தியில் பேசுகையில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்:
  “ஒரே ஜண்டா. ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம் எனும் நிலையால் உத்வேகம்பெற்ற ஆர்.எஸ்.எஸ்., இந்த மாபெரும் தேசத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஹிந்துத்வா எனும் தீபத்தை ஏற்றும்” [என்று திருவாய் மலர்ந்தார் கோல்வால்கர்.]
 ‘ஒரே ஜண்டா, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம்என்கிற இதே கட்டளைதான் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பிய பாசிச, நாஜி கட்சிகளின் யுத்த முழக்கமாக இருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
  கேள்வி-3: இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின்மீது ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை உமிழ்ந்தபோதிலும், அந்தத் தத்துவத்தின்பால் மோடிக்கு நம்பிக்கை உள்ளதா?
  கேள்விக்கான காரணம்:  இந்திய ஜன நாயகத்தின் மற்றுமொரு அடிப்படை அம்சமும், இந்திய அரசியல் சாசனத்தில் வகைசெய்யப்பட்டுள்ளதுமான கூட்டாட்சி அமைப்புக்கு ஜென்மப் பகையாக விளங்குகிறது ஆர்.எஸ்.எஸ்.. 1961-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்றபோது, [ஆர்.எஸ்.எஸ். பிதாமகரான] எம்.எஸ்.கோல்வால்கர் அனுப்பிய பின்வரும் அறிக்கையின்மூலம் இது தெள்ளத் தெளிவாகிறது:
 “இன்றைய கூட்டாட்சி அரசாங்க அமைப்பானது, பிரிவினை எண்ணங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அதற்கு உரம் போட்டு வளர்க்கிறது; ஒரே தேசம் என்கிற உண்மையை அது ஒருவகையில் அங்கீகரிக்க மறுக்கிறது: அழிக்கவும் செய்கிறது. இந்தக் கூட்டாட்சி அமைப்பை வேரோடு பெயர்த்தெறிய வேண்டும்; அரசியல் சாசனத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்; ஒற்றை அரசமைப்பை நிறுவியாகவேண்டும்” [என்கிறார் கோல்வால்கர்.]
  கேள்வி-4: ஹிந்து ராஷ்டிராவை அமைக்க ஆர்.எஸ்.எஸ். துடித்தாலும், மதச்சார்பற்ற இந்திய அரசைப் போற்றிக் காப்பாரா மோடி?
  கேள்விக்கான காரணம்:  சட்டரீதியாக, அனைவரின் நலனையும் உள்ளடக்கிய நாடாக விளங்குகிற இந்தியாவில், எல்லா மதங்களையும் சேர்ந்த மக்கள் சம உரிமைகளும், சம அந்தஸ்தும் பெற்றிருக்கிறார்கள்.
    ஆனால், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இன்னபிற மதங்களைச் சேர்ந்த அனைவரும் ஒன்றாகச் சேர்ந்ததுதான் இந்த தேசம் என்னும் கருத்தை எப்போதுமே நிராகரித்து வந்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.. அந்த அமைப்பின் ஆங்கில ஊதுகுழலானஆர்கனைசர்’, இந்தியா சுதந்திரம் பெறும் தருவாயில் (ஆகஸ்ட் 14, 1947) “எதிர்காலம் என்னவாகும்?” என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், இந்தியா என்பது ஓர் இந்து தேசம் எனும் தன் கருத்தை அழுத்தந்திருத்தமாகக் கூறியது.
  தேசத்தின் தன்மைகுறித்த பொய்யான கற்பனைகள் நம்மீது செல்வாக்கு செலுத்த இனியும் அனுமதிக்காமல் இருப்போமாக. ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள்தான் தேசத்தின் அங்கம்; இந்த பாதுகாப்பான, வலுவான அடித்தளத்தின்மீது தேச அமைப்பு கட்டப்பட வேண்டும்ஹிந்துக்கள், ஹிந்து மரபுகள், கலாசாரம், கருத்துக்கள், அபிலாசைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்னும் எளிய உண்மையை உடனடியாக அங்கீகரிப்பதன்மூலம் மனக்குழப்பங்களுக்கும், இன்றைய மற்றும் எதிர்காலப் பிரச்சனைகளுக்கும் விடைகொடுத்துவிடலாம்என்கிறது ஆர்.எஸ்.எஸ்.-ன் தலையங்கம்.
  கேள்வி-5: இந்தியாவின் ஜனநாயக-மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., மனு சாஸ்திரத்தை இந்த நாட்டின் சட்டமாக்கவேண்டும் என்று கோருகிறது. ஆர்.எஸ்.எஸ். இத்தகு நிலை எடுத்தபோதிலும், இந்திய ஜனநாயக-மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கட்டிக்காப்பாரா?
 கேள்விக்கான காரணம்:  இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கும் குரு கோல்வால்கர், ‘சிந்தனைக் கொத்து(Bunch of Thoughts) எனும் தனது நூலில், நமக்குச் சொந்தமான என்று சொல்லக்கூடிய  எதுவுமே கிடையாதுஎன்கிறார்.
  உண்மையில், இந்திய அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் குறித்துக் கேவலமான, மனிதாபிமானமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பதில் பிரக்யாதிபெற்ற மனுஸ்மிருதி அல்லது மனுசாஸ்திரத்தைப் பின்பற்றவேண்டுமெனத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்..
  அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சட்டத்தை இறுதி செய்தபோது ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சி கொள்ளவில்லை. அதன் ஊதுகுழலானஆர்கனைசர்’, 1949 நவம்பர் 30-ல் எழுதிய தலையங்கத்தில், பின்வருமாறு மோலாசு செய்தது:
 “ஆனால், பழங்கால பாரத நாட்டில் நிலவிய தனிச்சிறப்புவாய்ந்த அரசியல் சட்டரீதியான வளர்ச்சிகுறித்து நமது அரசியல் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. புராதன சட்ட நிபுணர்களான [பழங்கால கிரேக்க நகர்] ஸ்பார்டாவின் லைகர்கஸ், பெர்ஷியாவின் சோலோன் ஆகியோருக்கு வெகு காலத்துக்கு முன்பே மனுவின் சட்டங்கள் எழுதப்பட்டுவிட்டன. மனுசாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் இன்றைய உலகில் அரசு நிர்வாகிகளை வியப்பிலாழ்த்துகின்றன; தன்னெழுச்சியாக அவற்றைப் பணிந்து ஏற்கவும், பின்பற்றவும் அவர்களை ஆகர்ஷிக்கின்றன. ஆனால், நமது அரசியல் சட்ட வித்தகர்களைப் பொறுத்தவரை அது [மனு சாஸ்திரம்] அர்த்தமற்றதாம்!” [என்கிறது  ‘ஆர்கனைசர்தலையங்கம்.]
  கேள்வி-6: ஆர்.எஸ்.எஸ். என்னதான் மறுத்தபோதிலும், காந்திஜியின் படுகொலைக்கு அந்த அமைப்புதான் காரணம் என்கிற சர்தார் படேலின் கருத்தில் மோடி உடன்படுகிறாரா?
  கேள்விக்கான காரணம்:  இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் படேல், 1948 செப்டம்பர்11-ஆம் நாள் கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
  “இந்துக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவதும் அவர்களுக்கு உதவி செய்வதும் ஒன்று; ஆனால் அவர்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்காக ஆதரவற்ற ஆடவர், பெண்டிர், குழந்தைகளைப் பழிதீர்க்க எத்தனிப்பது முற்றிலும் வேறானதுஅதுமட்டுமின்றி, தனிப்பட்டவர்களின் உணர்வுகளுக்கும், பொது நாகரிகம், பண்புகளுக்கும் கொஞ்சமும் மதிப்பளிக்காமல், இத்துணை மூர்க்கத்தனமாக அவர்கள் [ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்] காங்கிரசின்பால் காட்டுகின்ற எதிர்ப்பு, மக்களிடையே ஒருவிதமான கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களின் பேச்சுக்கள் அனைத்திலும் மதவெறி எனும் நஞ்சு நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப்படுத்தவும் அவர்தம் பாதுகாப்புக்காக அவர்களை ஸ்தாபனரீதியாகத் திரட்டவும் மதவெறி விஷத்தைப் பரப்பவேண்டிய அவசியமில்லை. இத்தகு மதவெறி விஷத்தின் உச்சகட்டமாக, காந்தியடிகளின் விலைமதிப்பற்ற உயிரை நாடு தியாகம் செய்யவேண்டிய கொடுந்துயருக்கு ஆளாகவேண்டியதாயிற்று. அரசாங்கத்தின் அல்லது மக்களின் அனுதாபம் ஆர்.எஸ்.எஸ்.-சுக்குக் கடுகளவும் கிடையாது.உண்மையில், அந்த இயக்கத்தின்மீது எதிர்ப்புதான் வளர்ந்தது. காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் குதூகலித்து இனிப்பு வழங்கியபோது அந்த இயக்கத்தின்மீதான எதிர்ப்பு மேலும் தீவிரமானது. இப்படிப்பட்ட சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-ன்மீது நடவடிக்கை எடுப்பது அரசுக்குத் தவிர்க்கமுடியாததாயிற்றுஇது நிகழ்ந்து ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த காலகெடுவுக்குப் பின்னால், முழுவதுமாக முறையான ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு சரியான பாதைக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் வருவார்கள் என்று நம்பினோம். ஆனால், அவர்கள் தமது அதே பழையபாணி செயல்பாடுகளுக்குப் புத்துயிரூட்டவே பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு வரும் அறிக்கைகள் மூலம் தெளிவாகிறதுஎன்று எழுதினார் படேல்.
  தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் படுகொலைக்கு இந்து மகாசபாவும் ஆர்.எஸ்.எஸ்.-சும்தான் கூட்டுப்பொறுப்பு என்கிற உண்மை, இந்து மகாசபாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு சர்தார் படேல் எழுதிய கடிதத்தின்மூலம் மேலும் உறுதியாகிறது. 1948 ஜூலை 18-ஆம் நாள் எழுதிய அந்தக் கடிதத்தில் சர்தார் பின்வருமாறு எழுதுகிறார்:
   “காந்திஜி படுகொலை வழக்கு நீதிமன்றத்தின் முன்னே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து மகாசபா ஆகியவற்றின் பங்கு குறித்து நான் எதுவும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன்; ஆனாலும், இந்த இரண்டு அமைப்புகளின் நடவடிக்கைகள், குறிப்பாக முதலாம் ஸ்தாபனத்தின் [ஆர்.எஸ்.எஸ்] செயல்பாடுகள், இத்தகைய கொடுந்துயர் அளிக்கின்ற காரியம் சாத்தியமாகிற சூழலை நாட்டில் ஏற்படுத்திவிட்டன என்பதை எமக்குக் கிடைத்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஹிந்து மகாசபாவில் உள்ள அதிதீவிரப் பகுதியானது, இந்தப் படுகொலைச் சதியில் பங்குகொண்டுள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசாங்கம் மற்றும் அரசு ஆகியவை நிலைகொண்டிருப்பதற்கு ஓர் அச்சுறுத்தலாக ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தடைசெய்யப்பட்டபின்னரும்கூட அதன் அத்தகைய செயல்பாடுகள் மங்கி மறைந்துவிடவில்லை என்பதை எமக்குக் கிடைத்த செய்திகள் சுட்டியுணர்த்துகின்றன. உண்மையில், காலம் செல்லச்செல்ல ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் மேலும் அடங்காமல் நடந்துகொண்டு, அவர்களின் சதிவேலைகள் மென்மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன” என்கிறார் படேல்.
  வெளிப்படையான அரசியலை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் மோடி இந்த புதிர் வினாக்களுக்கு விடையளிப்பார் என்று நம்புவோமாக!
(Courtesy: MAINSTREAM, VOL LII, NO 20, MAY 10, 2014).  தமிழில்: விதுரன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP