மரணம் ஒரு தண்டனை அல்ல...
மரணம் ஒரு தண்டனையல்ல...
எல்லாத் தரப்பிலும். எல்லா நிலைகளிலும் வன்முறை தவிர்த்த சமுதாயத்தில்தான் இந்த மரணதண்டனை ஒழிப்பு என்கிற மகத்தான சித்தாந்தம் செயல்பட முடியும்.
இதைத் தனிப்பட்ட கொலைகாரர்களுக்கும், கொலைகாரச் சமூகத்துக்கும், தங்களுக்கு வேண்டியவர்களைத் தப்புவிக்கும் மார்க்கமாகக் கொள்ளுகிற சாதுர்யம் முதலில் ஒழிதல் வேண்டும்.
வன்முறை சார்ந்த இயக்கங்கள் இருக்கிறவரை, வன்முறையைச் சித்தாந்தமாகக் கொண்ட போராட்ட வடிவங்களும், வீரப்பிரதாப அரசாங்கங்களும் இருக்கிற வரை ரஜோகுணமான கொலைப்பண்பு இந்த சமூகத்தில் கூடுதலாகத்தான் இருக்கும்.
சாத்வீகப் பண்பையே சமுதாயப் பண்பாகக் கொள்ளுகிற ஒரு சூழ்நிலை இந்தியாவில்தான், மானுடகுல வரலாற்றிலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
மன்னிக்கும் பண்பை மனிதர்கள் மட்டுமல்ல சமுதாயமே ஒரு பண்பாகக் கொள்ள வேண்டும். தனித்தனியாக, அமைதியிலும் நட்பிலும் மகிழ்ச்சியுறுகிற மனிதர்கள் கும்பலாகக் கூடி விட்டால் கொடிய விலங்குகளாக ரசமாற்றம் பெறுகிற கொள்கைகளிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.
அல்லாத பட்சத்தில், "கொல்லுபவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே!" என்று கீதோபதேசம் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
நினைவிருக்கட்டும்: கீதை, போர்க்களத்தில் வாளெடுத்து நிற்கிற க்ஷத்திரிய சகோதரர்களுக்கு உபதேசிக்கப்பட்டது. இன்றைக்கு க்ஷத்ரியர்களும் இல்லை; க்ஷத்ரிய தர்மமும் இல்லை. கொலை மட்டும் நடக்கிறது.
இது குறித்து எந்த மனிதனின் மனசாட்சியும் மரண தண்டனையை அங்கீகரிக்க முடியாது. அங்கீகரிப்பதும் இல்லை.
ஆனால் நடக்கிறது; நடக்கட்டும்! எதுவரை நடக்கிறதென்று பார்ப்போம்!
கொல்லாமலே சாவது மனிதனின் விதி.
மரணத்துக்குப் பயந்தல்ல; மரணம் ஒரு தண்டனையுமல்ல! மானுடகுல மேன்மைக்கேனும் மரண தண்டனை, இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்!
இன்ஷா அல்லாஹ்!
- ஜெயகாந்தன்
0 கருத்துரைகள்:
Post a Comment